Sunday, June 22, 2025

கனகபுரா ரோட்டில் ஒரு திருமணம்

 பெங்களூர் கனகபுரா ரோட்டில் உள்ள அந்த உல்லாச ரிசார்ட்டில் நம்மை பிரமிக்க வைக்கும் விசேஷம் என்னவென்றால் அகழி போன்ற அமைப்புடன் முகூர்த்த மேடையைச்சுற்றி தண்ணீர், எதிர் மற்றும் பின் பக்கம் உயரமான கேலரியில் மக்கள் உட்கார்ந்துகொண்டு திருமணத்தை காணும்படி வித்தியாசமான ஏற்பாடு.

டென்ஷனுடன் ஓடிக்கொண்டு இல்லாமல் படு கூலாக சம்மந்திகள், குறைந்த அளவு உறவினர்கள், ஏராளமான நண்பர்கள் என அந்த திருமணம் நடந்தது. பஹ்ரைன் நண்பன் சுரேஷ்/லதா (Suresh Kv & Latha Suresh) தம்பதியின் மகள் ஷ்ரேயாவின் destination wedding எனப்படும் 2 நாள் கோலாகல வைபவத்தைப்பற்றி தான் இப்போது பேசுகிறோம். சுரேஷ்/லதா எங்களது நெருங்கிய நண்பர்கள். ‘இதோ உங்க வீட்டுக்கு வர்றோம்’ என போனில் சொல்லிவிட்டு கிளம்பினால் மாலை டிபன் காபியுடன் எங்களது அரட்டை துவங்கி டின்னர் கழிஞ்ஞு ( அவனுக்கு கல்பாத்தி பூர்விகம்) பாதி ராத்திரி வீடு திரும்புவோம். அவர்கள் இல்லத்திருமணம் என்றால் சும்மாவா! பஹ்ரைனில் 25 வருடங்களுக்கு மேலாக வங்கிகளில் சீனியர் வைஸ் பிரெசிடென்ட் போன்ற பதவிகளில் இருந்துவிட்டு தாயகம் திரும்பி பெங்களூரில் செட்டிலான சுரேஷின் நண்பர்கள் பெரும்பாலோர் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், துபாய், ஒமானிலிருந்து திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.
பஞ்சவடி எனும் அந்த விஸ்தாரமான ரிசார்ட்டில் ஏராளமான வாகனங்களுக்கான நிறுத்தம், ஒரே நேரத்தில் 500 பேர் அமர்ந்து சாப்பிட உணவுக்கூடம் என வசதிகள். மாப்பிள்ளை வட இந்தியர் என்பதால் மாப்பிள்ளை அழைப்பு/பராத் நடத்த நீண்ட பாதை, மலர் அலங்கார மேடையில் மணமக்களின் வரவேற்பு என ஏற்பாடுகள். அங்கங்கே மலர்த்தோட்டங்களில் நண்பர்கள் குழுக்களாக போட்டோ எடுத்துக்கொண்டோம்.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு சுரேஷின் ஜெயநகர் இல்ல மாடியில் மெஹந்தி எனப்படும் மருதாணி விழாவில் எல்லா பெண்களும் இரண்டு கைகளிலும் மருதாணி பூசிக்கொள்ள, அவர்களின் கணவர்கள் ஆசையாக மனைவியருக்கு பானிபூரி, பேல்பூரி ஊட்டி விட்டது கண்கொள்ளா காட்சி. அப்படியும் சில கணவர்கள் சரியாக ஊட்டி விடாமல் மீட்டா சட்னியை மனைவியரின் சுடிதாரில் சிந்தி விட ‘எப்பனாச்சும் ஹெல்ப் செஞ்சா கூட உருப்படியா செய்யாம சரியா ஊட்டி விடமாட்டீங்களே!’ என டோஸ் வாங்கிக்கொண்டார்கள்.
முதல் நாள் மதியமே சாப்பாடு களை கட்டியது. வட/தென்னிந்திய பதார்த்தங்கள் கலந்த தால் பட்டி சுர்மா, பதாம் கத்லி, ரஸ்மலாய், இளநீர்ப்பாயசம், பர்வா பெண்டி (வறுத்த வெண்டைக்காய்), கல்யாண ரசம் என சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் அங்கங்கே சரிந்து உட்கார்ந்திருந்தோம். மாலை பராத் நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன் நம்மவர்கள் எல்லோருக்கும் வட இந்திய பாணியில் தலைப்பாகை கட்டிவிட்டு ‘சிரித்து வாழவேண்டும்’ எம்ஜியார் காபூலிவாலா போல சுற்றிக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். என் தலையில் அந்த மார்வாடிப்பையன் சுமார் 30 சுற்றுக்கள் சுற்றி தலைப்பாகையை இறுக்கிக் கட்டி கண்களை சிவக்க வைத்தான். வட இந்திய ஆண்கள் பெண்களுடன் ஷ்ரேயாவும் ஆஷிஷும் பராத்தில் ஆடித்தீர்த்து விட்டார்கள். பையன் கொஞ்சம் சாதுவாகவும் ஷ்ரேயா இயற்கையாக செம்ம அரட்டையுடன் நடனங்கள், குத்தாட்டம் என கலக்குகிறாள்.
‘ஜும்கா கிரா ரே பரேலி கா பஜார் மே’ பாடல் ஒன்று போதும் நம்மவர்கள் ஹிந்திப்பாடலுக்கு வெளுத்துக்கட்டி ஆடக்கூடியவர்கள் என. ‘லுங்கி டான்ஸ்’ பாடலுக்கு வடக்கர்கள் சிந்தாதிரி பேட்டை ஸ்டைலில் டப்பாங்குத்து ஆடி அசத்தினார்கள். ஆடிய களைப்பில் செம்ம பசி. டின்னருக்கு சில்லி சீஸ் பந்துகள், ஆறு வகை பதாம் அல்வாக்கள், லைவ் ஜிலேபி ரப்டி, டோக்ளா, பாஸ்தா, நூடுல்ஸ், கார்லிக் நான், தால் மக்னி என்பவை முக்கியமான ஐட்டங்கள் தவிர ஏராளமான உணவுவகைகள்.
விசேஷம் என்னவென்றால் இளைஞன் ஒருவன் கொசு மருந்தடிக்கும் மிஷின் போல ஒன்றை முதுகில் சுமந்துகொண்டு கையில் குழாயுடன் வலம் வந்தான். அது என்னவென உற்றுப்பார்த்தால் பானிபூரிக்காரனாம் அவன். முதுகில் புளித்தண்ணீர் கேனிலிருந்து வரும் டியூப் வழியாக எல்லோருக்கும் பானியை சர்ரென பூரியில் பீய்ச்சி நிரப்பி கொடுத்துக்கொண்டு வந்தான். சந்தீப் வஷிஷ்ட்டின் சாக்ஸஃபோன் மற்றும் குழல் இசை லேசாக காற்றில் மிதந்து வர ரம்மியமாக இருந்தது.
மறுநாள் காலை தென்னிந்திய வழக்கப்படி ஊஞ்சல் நலுங்கு, காசி யாத்திரை மற்றும் எல்லாம் அமர்க்களமாக நடந்தன. காலை டிபனுக்கு காசி அல்வா, ஜிலேபி+ மசாலா பால், தாவங்கரே பெண்ணெ தோசே போன்ற பிரதான ஐட்டங்கள் தவிர இட்லி, மெதுவடை, பொங்கல், நிலக்கடலை சட்னி என பெரிய்ய லிஸ்ட். சக்க பிரதமன், அடப்ரதமன், இளநீர் பாயச வகைகள். முதல் நாள் முழுக்க வட இந்திய உணவுவகைகள் மற்றும் மறுநாள் தென்னிந்தியர்களுக்கென ப்ரத்யேகமாக ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும் வட இந்தியர்களுக்காகவும் நிறைய ஐட்டங்கள்.
திருமண வைபவங்களை இரண்டு தொகுப்பாளினிகள் நகைச்சுவையுடன் தொகுத்து அளித்தனர். முதல் நாள் வட இந்திய ஜெயின் முறைப்படி சடங்குகள் நடந்ததால் முகூர்த்தம் தென்னிந்திய முறைப்படி நடந்தது. நாங்கள் உயரமான கேலரிகளில் ஆராம்சாக உட்கார்ந்திருக்க, சுரேஷ் லதா தம்பதி படு கூலாக உலா வந்து சாப்டீங்களா, காபி குடிச்சீங்களா என கவனித்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிதானமாக முகூர்த்த சடங்குகள் திருப்திகரமாக நடைபெற்றன.
ரிசார்ட்டின் ஒரு பகுதியில் இஞ்சி, செம்பருத்தி, சங்குபுஷ்பம், எலுமிச்சை, இலவங்கம் மசாலா, புதினா, பைனாப்பிள், ரோஸ், துருக்கி என விதவிதமான ஃப்ளேவர்களில் டீ தயாரித்து கொடுத்தார்கள். தவிர பழரசங்கள், இளநீர், கோலி சோடா, காலாகட்டா சர்பத் என தனி கௌண்ட்டர்கள். பழங்கள் மற்றும் காய்கறி துண்டங்களுடன் சலாட் வகைகளுக்கென தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருமணத்திற்கு பல மாதங்கள் முன்பே சுரேஷ்/லதா பட்டியல்கள் தயார் செய்து, புடவைகள், வேட்டிகள் என உறவினர்களுக்கு ரிடர்ன் கிஃப்ட்டுக்கு துணிமணிகள் வாங்குவது, பல கல்யாண மண்டபங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பார்வையிட்டு தேர்வு செய்வது, எத்தனை பேர் நிச்சயமாக வருவார்கள் என்ற லிஸ்ட் தயார் செய்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு, சாப்பாடு வகைகளின் பட்டியல், குறிப்பாக ஜெயின் மக்களுக்கென பட்டு கலக்காத புடவை வேட்டிகள், வெங்காயம், பூண்டு கலக்காத உணவு வகைகள் என பார்த்து தேர்வு செய்தது பாராட்டுக்குறியது.
விருந்தினர்கள் தங்கும் வசதிக்காக கனகபுரா ரோடு பகுதியில் நிறைய அறைகள் புக் செய்திருந்தான் சுரேஷ். பையன் வீட்டாருக்கு ஏர்போர்ட்/ரயில்வே/ஹோட்டலிருந்து ரிசார்ட்டுக்கு போக வர டாக்சிகள் ஏற்பாடு என எல்லாமே கச்சிதம். இரண்டு நாட்கள் ஆடல் பாடல், விதவிதமான உணவுவகைகள் சாப்பிட்டு, நீண்ட நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து, பேசி, சிரித்து மகிழ்ந்து, புகைப்படங்கள் பகிர்ந்து தத்தம் இல்லத்திற்கு திரும்பினோம்.
ஸ்பஷ்டமாக தமிழ் பேசும், வட இந்திய ஜெயின் சமூகத்தைச்சேர்ந்த சௌக்கார் பேட்டைவாசியான ஆஷிஷ்ஷும் தென்னிந்திய பிராமணப்பெண்ணான ஷ்ரேயாவும் திருச்சி NITயில் இஞ்சினீயரிங் ஒன்றாக படித்து பிறகு அமெரிக்க Duke பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்தபின் அங்கேயே பணியில் சேர்ந்த பால்ய நண்பர்களாம். சுமார் 40 நண்பர்கள் அமெரிக்காவிலிருந்தும் நாலைந்து பேர் இங்கிலாந்திலிருந்தும் திருமணத்திற்காக வந்திருந்தனர்.
சனாதன முறைப்படி சாதிமத பேதமின்றி கலப்புத்திருமணங்கள் தற்போதெல்லாம் நிகழ்வது வரவேற்புக்குறியது. காரணம் நமது தலைமுறை போல இல்லாமல் நம் குழந்தைகள் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாடுகளில் பணியிலிருக்கும்போதும் இந்தியாவிலிருக்கும்போதும் சரி, தாம் இந்தியர் என்ற ஒரே அடையாளத்துடன் மட்டுமே பழகுகிறார்களே தவிர ஜாதி மதங்கள் பார்ப்பதுமில்லாமல், அதுபற்றி தெரிந்துகொள்ளவும் முனைப்பதில்லை என்பது பாராட்டிற்குறியது.

No comments:

Post a Comment