86, 87களில்… செம்பூர் 20த் ரோட்டிலிருந்து ஆபீசுக்கு காலை 8 மணிக்கு ட்ரெய்னைப்பிடிக்க ஓடும்போது கீதாபவன் எதிரே பிரைவேட் பஸ்ஸுக்காக காத்திருக்கும் அவரை பார்ப்பேன் (‘இவரை’ அல்ல.. ‘அவரை’ என கனத்த இதயத்தோடு குறிப்பிடுகிறேன்). அவருக்கு பிரபாதேவி வொர்லி பக்கம் அயன் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் உயர் பதவி. கையில் ப்ரீஃப் கேஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா சகிதம் நட்புப் புன்னகையை வீசுவார்.
ஹிந்திப்பட ஹீரோ போல உயரம், சிவந்த மேனி, மழமழ சவரப்பச்சை என படு ஹாண்ட்ஸமான அம்சங்களுக்கு சொந்தக்காரர். ஆருயிர் பால்ய நண்பன் Ganapathi Subramanian யின் அத்திம்பேர் சங்கரன் அவர். மாலையில் அவரது இல்லத்திற்கு கணபதியுடன் ஸ்டேஷனுக்கு அந்தப்பக்கம் ஶ்ரீநகர் பகுதி செல்லும்போது ஃபில்டர் காபியுடன் கணபதியின் சகோதரி சந்திராக்கா (Chandra Sankaran) பின்னால் மலர்ந்த முகத்துடன் காலையில் பார்த்த அதே புத்துணர்ச்சியுடன் வரவேற்கும் சங்கரன்.
அவருக்கும் திருச்சி பொன்மலை தான். நாற்பதைத் தாண்டாத வயது. ஆரவாரமில்லாமல் சன்னமான குரல். சின்ன குழந்தைகளை அதட்டாமல் செல்லமாக கையாளும் குழந்தை மனசு. அவர்களுடன் அரட்டை, விடுமுறையில் பொன்மலை ரயில்வே காலனியில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, குழந்தைகள் சந்தோஷத்திற்காக அவர்கள் போடும் பந்தில் தானே அவுட் ஆகி கிரிக்கெட் விளையாடுபவர் மீது மாமனாரான கணபதியின் அப்பாவுக்கு மிகுந்த மரியாதை.
68இல் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிட்யூட்டில் Lisenciate in Mechanical Engg முடித்து ரிசல்ட் வரும் முன்பு அந்தக்காலத்திலேயே கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான ஒரே மாணவனாக பம்பாய் L&T நிறுவனத்தில் பணியைத்துவங்கி, மற்ற பெருநிறுவனங்களில் பணியாற்றி, பெண்ணின் கல்யாணம், பையனின் அமெரிக்க வேலை மற்றும் திருமணம் என வெற்றிகரமாக முன்னுக்கு வந்து ஆகச்சிறந்த சாதனை படைத்தவர்.
இரக்கம், கனிவு, தயாள குணம் கொண்ட சங்கரன், தனது தம்பி ரமணி (Venkataramani Krishnamurthy ) டிகிரி படிப்பை திருச்சியில் முடிக்க, அவரையும் பம்பாய் அழைத்து வந்து, அவர் விருப்பப்பட்ட முதுகலை கணிதப் படிப்பை பொவாய் ஐ.ஐ.டியில் தொடர ஊக்குவித்தவர். அடுத்தடுத்து ரமணி தனது தொழிலில் உயரத்தைத்தொட்டு காட்கோபர் வித்யவிஹார் சோமையா கல்லூரி பேராசிரியர், பிறகு கல்லூரி முதல்வராக உயர்ந்து, அடுத்து டாக்டர் D.Y.Patil யுனிவர்சிடி மற்றும் பிரபல பம்பாய் யுனிவர்சிட்டியின் ரிஜிஸ்த்ரார் போன்ற பெரும்பதவிகளில் அமர்ந்தது கண்டு அகமகிழ்ந்தவர் சங்கரன்.
நமது பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கையையும் விடாமல், வயதான அப்பா அம்மா (28 வருடங்களாக), தம்பி ரமணியின் சிறிய குடும்பம், தனது பொன்மலை அக்காவின் 2 பசங்கள் என எல்லோரையும் தனது குடும்பத்துடன் சேர்த்து, 2 பெட்ரூம் ஃப்ளாட்டில் 12 பேர் கொண்ட பெரிய கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர் சங்கரன். வெள்ளியன்று குமார் சானு & அனுராதா போட்வாலின் ‘Nazar Ke Saamne Jigar Ke Paas’ பாடலை சித்ரஹாரில் முழு குடும்பமும் கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும். அந்த பாடல் வரிகளுக்கேற்ப ( ‘எனது கண்களுக்கு முன்னே, எனது இதயத்திற்கு அருகே’ ) அந்த பெரிய குடும்பத்தை தன் இதயத்திற்கும் நெருக்கமாக வைத்துக் கொண்டு வெற்றிகரமாக வழி நடத்தியவர் சங்கரன்.
இதில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி நெகிழச்செய்தது என்னவென்றால் சந்திரா அக்கா சற்றும் முகம் கோணாமல் இன்முகத்துடன் அந்த 12 பேருக்கும் மத்தியில் போலியோவால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மூத்தவன் ஶ்ரீராமையும் பார்த்துக்கொண்டது தான். இறைவன் கொடியவனோ என அச்சப்படுமளவிற்கு சிறுவன் ஶ்ரீராமை இழந்தது இந்த தம்பதியினருக்கு நிகழ்ந்திருக்கக்கூடாத ஒரு சோக சம்பவம்.
அக்கா பசங்கள் நானி & ரகு பெற்ற நல்ல உயர்படிப்பையடுத்து நானி (Narayan Srinivas) அமெரிக்காவில் செட்டிலானாலும், தந்தை ஸ்தானத்தில் இருந்து தங்களை வளர்த்த மாமாவின் உதவியை இன்றும் மறக்காமல் அவருடன் தொடர்பிலிருப்பதும், இந்தியா வரும்போதெல்லாம் அவருடன் இருப்பதும், அவரது பிறந்தநாளுக்கு அற்புத வாழ்த்து மடல் அளித்து அவரது பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கிறான்.
இந்த சகோதரர்கள் தங்கள் பூர்வீகத்தில் சிதலமடைந்த மூன்று கோவில்களின் புணரமைப்புக்கு முழு நிதி உதவியளித்தும் கோவில் அர்ச்சகரின் மாத சம்பளத்திற்கும் பொறுப்பேற்றியிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
மற்ற மூன்று ஷட்டகர்களுடன் சகோதரப்பாசத்துடன் பழகும் சங்கரன், குடும்பத்தில் அனைவராலும் விரும்பப்பட்டவர், குறிப்பாக நண்பன் கணபதி (வீட்டில் அம்பி)யிடம் நெருக்கமும் அக்கரையும் கொண்டவர்.
கடந்த ஒரு வருடமாக நுரையீரல் சார்ந்த நோயினால் அவதியுற்ற சங்கரன் (75) சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும், கடந்த ஒரு மாதகாலமாக படுக்கையில் இருந்தபடியே மூச்சு விட முடியாமல் தன் வழக்கமான சன்ன குரலில் பேசிக்கொண்டிருந்தாலும், சென்ற வாரம் யாருக்கும் ஸ்ரமம் வைக்காமல்…
வாழ்க்கையில் சுயநலமில்லாது, ஒரு ஏழைக்குழந்தையின் படிப்பிற்கோ, ஒரு வழிபாட்டுத்தலத்தின் மராமத்து பணிக்கோ, ஒரு நோயாளியைக் காப்பாற்றவோ நம்மால் இயன்ற பண/பொருளுதவியைச் செய்ய வேணுமென்ற உறுதிமொழியை புதிய ஆண்டில் எடுத்து அதை நடைமுறைப்படுத்தும் அனைவரும் சங்கரன்களே! 
No comments:
Post a Comment