Sunday, June 22, 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் TRS

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

முகநூல் தொடங்கியது முதலே எனது ஆரம்ப காலத்திய நண்பர் இவர்.
பட்டையக்கணக்காளரான இவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேற்படிப்பு படித்தவர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான Shell எனப்படும் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
அதையடுத்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து அங்கும் அமெரிக்காவிலும் தனது சொந்த முதலீட்டு நிறுவனங்களை துவங்கி, உலகளவில் எல்லா பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கிறார். பெருமளவு முதலீட்டாளர்களையும் ஈர்த்திருக்கிறார்.
உலக அளவில் பங்குச்சந்தை மற்றும் பங்குகள் (shares) பற்றி விரிவான பதிவுகள் எழுதி அலசுபவர்.
இந்திய/உலக அரசியல் மற்றும் பொருளாதாரம், அதுசார்ந்த புள்ளி விபரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர்.
வானியல் அதாவது விண்மீன்கள், கிரகங்கள் மற்றும் பிற வானப் பொருட்களைப் பற்றிய அறிவியல் ஆய்வான வான சாஸ்திரம் பற்றி விரிவாக எழுதுபவர்.
புத்தகப்பிரியர். ஏராளமான கதை, கட்டுரைகள் படிப்பவர். நிறைய எழுத்தாளர்களைப்பற்றி எழுதி சிலாகிப்பவர். அவ்வப்போது தமிழ் கவிதைகள் மற்றும் செய்யுள்களை மேற்கோள் காட்டி இலக்கியம் பக்கமும் போய் வருகிறவர். இராமன் என்ன நிறத்தவன் என்பது பற்றி கம்பன் எழுதிய வரிகளை குறிப்பிடுகிறார். இதோ அந்த செய்யுள்:
வெய்யோன் ஒளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடும் இளையாளடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
‘ஐயோ’ இவ(ன்) வடிவென்பதோர் அழியா அழகுடையான்.
பள்ளி பிராயத்து நண்பர்களை அவ்வப்போது சந்தித்து அளவளாவி மகிழ்பவர். ஆடல் பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகளை வெகுவாக ரசிப்பவர்.
தன்னைப்பற்றி குறிப்பிடும்போது தான் ஒரு தனி ஆள் (private person) என்றும், தனது பதிவுகளை தன் பெயருடன் இணைத்து மற்றவர்களுடன் பகிர்தலை விரும்புவதில்லை எனவும், வேண்டுமென்றால் தன் பெயரை குறிப்பிடாமல் பகிரலாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார். காரணம் அது தனது முதலீட்டு நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் பாதிக்கும் என்பதால்.
தனது பதிவுகளுக்கு மாற்றுக்கருத்து இருந்தால், அதை மென்மையாக எடுத்துக்கூறுங்கள் என்கிறார், வித்தியாசமான கருத்துக்கள் உள்ள முகநூல் ஒரு போர்க்களமல்ல என்கிறார்.
மனைவியை அழைத்துக்கொண்டு வருடம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு உலக நாடுகளைச் சுற்றிப்பார்க்கிறவர். வாய்க்கு ருசியான விதவிதமான நல்ல உணவுகளை விரும்பி உண்பவர்.
மகள்கள் மற்றும் பேரன் பேத்திகளுடன் பொழுதைக் கழிப்பவர்.
பத்து வருடங்கள் முன் விடுமுறையில் நான் பஹ்ரைனிலிருந்து சென்னை வந்திருந்தபோது அடையார் பார்க் (தற்போது க்ரௌன் ப்ளாசா) ஹோட்டலில் நண்பர் Jay Raghu வுடன் என்னை காலை உணவிற்கு அழைத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடி மகிழ்ந்தது மறக்க முடியாதது. முப்பது வருடங்களுக்கு மேல் தனக்கு பரிச்சயமான அந்த ஹோட்டலின் தலைமை சமையல்காரரையும் (Head Chef) அழைத்து எங்களை அறிமுகப்படுத்தினார்.
எனது ஓவியங்களையும் எழுத்துக்களையும் ரசித்து பாராட்டு தெரிவிப்பவர்.
சரியான குறும்புக்காரர் கூட.. பித்துக்குளி முருகதாஸின் ‘நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை’ பாடலில் அந்த ‘கந்தன் ஒரு மந்திரத்தை…’ வரியை மட்டும் அவர் மாற்றி மாற்றி நாலைந்து டியூன்களில் பாடியதை எதனுடன் ஒப்பிட்டார் என்பதை இங்கு நான் குறிப்பிட்டால் அரசியலாகி விடும். வேணாம் வம்பு 😂
எழுத இன்னும் ஏராளமான நற்குணங்கள் கொண்டவர் என் இனிய நண்பர் TRS.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் Tr Santhanakrishnan 🎉🎉🎉

No comments:

Post a Comment