திருச்சி புதுக்கோட்டை ரோடு, ஏர்போர்ட்டைத் தாண்டி சில கிலோமீட்டர்களில் இடது பக்கம் திரும்பினால் அட்டகாசமான குறுக்கு சாலை. அடுத்த பதினைந்து கிலோ மீட்டர் நேர்க்கோடு போல ஒரே சாலை நம்மை திருச்சி-தஞ்சாவூர் ரோட்டில் சேர்க்கிறது. மனைவி Usharani Sridhar மற்றும் என் மூத்த அக்காள் Hemalatha Manohar உடன் ஒரு நாள் வேலையாக கும்பகோணம் நாச்சியார் கோவில் பக்கம் வண்டியை விரட்டினோம். திருநறையூர் எனும் திவ்யதேசம் கொண்ட இடம் அது. ஊர் முழுக்க பாத்திரக்கடைகள் மற்றும் பாத்திரம் தயாரிக்கும் மெட்டல் ஃபாக்டரிகள். கிராண்ட் நவரசா எனும் சிறிய சுகாதாரமான உணவகம் படுசுத்தமாக இருந்தது. ட்ரேயில் சுடச்சுட பாதாம் அல்வாவை சாதம் கரண்டியால் அள்ளி அள்ளி மதியம் ஒரு மணிக்கே அமோக விற்பனை.
‘இங்கேர்ந்து ஒரு மணி நேரத்துல மன்னார்குடி போயிர்லாம்’ என அங்கே சொன்னார்கள். ஆஹா! மத்யமர் புகழ் மற்றும் எனது அத்தை மகனுமான ராஜு ( Rajagopal Venkatesan ) அங்கே தொழிலதிபரா இருக்கார். முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டு திறம்பட தனது இன்டேன் காஸ் ஏஜென்சி முப்பது நாற்பது வருடங்களுக்கு மேல் இளம் வயதிலிருந்தே நடத்தி வருகிறார்.
‘இப்பிடி குறுக்கால ரோட்ல போனீங்கன்னா பத்து நிமிசத்துல திப்பிராஜபுரம் வந்துடும். அங்கர்ந்து மெயின் ரோடு புடிச்சா நேரா மன்னார்குடி போயிட்லாம்’ என கடைக்காரர் ஒருவர் சொல்லவும், குறுகலான கிராமப்புற சாலைகளில் புகுந்து கும்பகோணம்-மன்னார்குடி சாலையை பிடித்தோம். போக்குவரத்து குறைவாக சூப்பரான ரோடு. வலங்கைமான், ஆலங்குடி, பன்னிமங்கலம், பரப்பனாமேடு போன்ற சிறு டவுன்கள் வழியாக ‘அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா’ ரேடியோ எஃபெம் பாடல் கேட்டபடி மிதமான வேகத்தில் வாகனம் செலுத்துவது பரம சுகம். நடு நடுவே பாதாம் அல்வா ஏப்பம்.
நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னை எக்மோர் போலிஸ் கமிஷனர் ஆபிஸ் ரோட்டில் மாமா வீட்டிற்கு விடுமுறைக்கு போவதுண்டு. மன்னையிலிருந்து ராஜு அண்ணாவும் சென்னை வந்துடுவார். செத்த காலேஜ், உசுரு காலேஜ், மெரினா பீச், இம்பாலா காபி என வெயிலில் சென்னை முழுக்க எங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார். நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டியில் படிக்கும்போதே ஒருதலைராகம் சங்கர் போல நெற்றி, காதை மறைக்கும் நீண்ட கேசத்துடன் படு ஹாண்ட்சமாக இருப்பார் ராஜு அண்ணா. இப்பவும் தான். கல்லூரியில் பெல்பாட்டம், கூலிங் கிளாஸ் என வளைய வரும் அவரை நிறைய மாணவிகள் காதலுடன் பார்த்து நீளமாக மூச்சை இழுத்து படக்கென விடுவார்கள் பானுப்ரியா போல.
மன்னார்குடி டெம்பரரி பஸ்டாண்டை கடந்து அவர் வீடு வந்து சேர்ந்தோம். சமீபத்தில் அவரது மூத்த மகள் திருமணத்திற்கு போக இயலாமைக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு, இவ்வருட இறுதியில் அடுத்த பெண் திருமணத்தில் கலந்து கொள்ள ப்ராமிஸ் செய்தபடி அவளே தயாரித்த இஞ்சி டீயை உறிஞ்சினேன். மாடியில் தான் அண்ணா தபலா அல்லது மிருதங்கம் வாசிப்பது வழக்கம். பிச்சு உதறுவார். அப்பப்ப வீடியோ போடுவார்.
திரைத்துறை, சின்னத்திரை என எதையும் விட்டு வைக்காமல் குறும்படங்கள் தயாரிப்பு, நடிப்பு, ஜிக்ரி தோஸ்த்தான டெல்லி கணேஷ் சாருடன் (Ganesan Delhi Ganesh ) குறும்படம் என கலக்கி வந்தவர். கோடம்பாக்கம் ஆரம்ப திரை வாழ்க்கையில் நடிகர் செந்திலின் அறைநண்பர். லயன்ஸ் க்ளப், ரோட்டரி சங்கத்தலைவர் பதவி, இலவச மருத்துவ முகாம், கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினர் என குளிர் கண்ணாடியுடன் நிறைய சேவை செய்பவர்.
அண்ணா வீட்டிலிருந்து கிளம்பி நேராக மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில். 1100 அடி நீளமும் 800 அடி அகலம் கொண்ட ஹரித்ரா நதி என அழைக்கப்படும் மிகப்பெரிய தலதீர்த்தம். நண்பர் ஆர்விஎஸ் (Venkatasubramanian Ramamurthy ) அவர்களின் ‘ஹரித்திரா நதி’ புத்கத்தின் முகப்பு அட்டைக்கு இக்குளத்தின் படத்தை வரைந்தது நினைவுக்கு வந்தது. பிரம்மாண்டமான ராஜகோபுர நுழைவாயிலை வியந்து பார்த்தபடி கடந்து தலமூர்த்தியான ராஜகோபால ஸ்வாமி மற்றும் செங்கமலத்தாயாரை தரிசித்து விட்டு திருச்சி நோக்கி பயணம்…
நீண்டநாள் கழித்து ராஜு அண்ணா, வதினைகாரு மற்றும் அவர்களது செல்ல மகள் மூவரையும் சந்தித்ததில் மிக்க சந்தோஷம்.
No comments:
Post a Comment