Sunday, June 22, 2025

பெங்களூர் வி.வி புரம் திண்டி ஸ்ட்ரீட்.

 

சிவனே என டிவி பார்த்துக்கொண்டிருந்த சமயம் பனஸ்வாடி பகுதியிலிருந்து பஹ்ரைன் நண்பர் ஹரி-சுதா தம்பதி வீட்டிற்கு வருவதாக ஃபோன் செய்து விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார்கள். மதியம் வரை செம்ம அரட்டை, சாப்பாட்டிற்குப்பிறகு பெங்களூர் வி.வி புரம் திண்டி ஸ்ட்ரீட் (Food street) போகலாமென முடிவு செய்தோம். அதென்ன அங்கே விசேஷம்! பிரபலமான வி.வி ஸ்ட்ரீட் முழுக்க இருபுறமும் கடைகள். பெங்களூரின் மற்ற பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து நொறுக்குத்தீனி சாப்பிடும் ஸ்தலம்.
சுமார் நாலு மணியளவில் வீட்டை விட்டுக்கிளம்பி செயின்ட் ஜோசஃப்ஸ் யுனிவர்சிட்டியில் காத்திருந்த ஹரி-சுதாவின் பெண் ப்ரீஷாவை காரில் பிக்கப் செய்துகொண்டோம். ஹரி-சுதா தம்பதி பற்றி கொஞ்சம்…
ஹரி முப்பது வருடங்கள் பஹ்ரைன் வாசி. என்னைப்போல பாரத் திரும்பியவர். பக்கா பாலக்காடுக்காரர். “நான் நேரத்தே (அப்பவே) சொன்னேன் கேட்டேளா!”… “இவனாக்கும் ஆத்யம் (முதலில்) வந்தவன்”.. “இதுல ப்ரஷ்னம் (பிரச்னை) ஒந்நும் இல்லை” என தமிழ்-மலையாளம் 80/20 சிக்கரி மாதிரி கலந்து பேசுவார். சுதாவுக்கு நம்ம திருச்சி பூர்வீகம். காவிரித்தமிழ். திருச்சியும் பாலக்காடும் எப்படி சேர்ந்தது தெரியவில்லை.. சுதா சரியான அரட்டைப்பேர்வழி.. “நான் டர்ராயிட்டேன்” போன்ற பாஷைகள் அவ்வப்போது எடுத்து விடுவார். இருவருமே கொஞ்சம் ஃபாஸ்ட்டாக பேசக்கூடியவர்கள். மனதில் நினைப்பதை சொல்லும்போது பேசுவதை விட நினைப்பதன் வேகம் அதிகமென்பதால் அவர்களது வேகமான தமிழே கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கும். இவர்களின் ஒரே பெண் ப்ரீஷா. பி.காம் மற்றும் ACCA (London) முடிக்கப்போகிறாள். ”ஆமா! நீங்க மூணு பேரும் ஏன் ஃபாஸ்ட் ஃபாஸ்ட்டா பேசறீங்க?” என நான் கேட்க, “அங்கிள்! நாங்க பேசும்போது நிறைய கன்டென்ட்டை சீக்கிரமா, முழுசா சொல்லனும்னு நினைக்கறதாலயோ என்னவோ ‘அவ்டிசீரம்பேசிரோங்கிள்’ (அப்பிடி சீக்கிரம் பேசிடறோம் அங்கிள்) என்பாள். நல்ல குடும்பம் நீங்க! என அவர்களை கலாய்த்தபடி வண்டியை திண்டி ஸ்ட்ரீட் மொகனையில் நிறுத்தினோம்.
சௌகார் பேட் போல குறுகலான தெரு. மாலை நாலு மணிக்கு கடைகள் திறக்க ஆரம்பித்தார்கள். இனிப்பாக ஏதோ ஒன்றை நிலக்கடலையுடன் சேர்த்து பாவ்வுக்குள் வைத்து பெரிய இரும்பு கல்லில் வெண்ணெயில் புரட்டி தந்த தபேலி செம்ம டேஸ்ட். இந்த தபேலியை பம்பாயில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். பெரிய மசாலா பாப்பட் (உள்ளே ஏகத்துக்கும் வெங்காயம், தனியா, சோளம் பரப்பி), விதவிதமான ஃப்ளேவர்களில் பானி பூரி, பெரிய வெடிகுண்டு சைஸ் காப்ஸிகம் பஜ்ஜியை நாலாக வெட்டி உள்ளே மி.தூள், நறுக்கிய வெங்காயம் நிரப்பி எலுமிச்சை பிழிந்து கொடுக்கிறார்கள். தால் வடா, நீளமான மிளகாய் பஜ்ஜி, வாழக்கா பஜ்ஜி என காத்திருந்து வாங்கிச்செல்லும் கூட்டம்.
பதர்பேனி, ரப்டி ஜிலேபி, போளி, பதாம் பால், அக்கி ரோட்டி, பச்சை அவரைப்பருப்பு தூவிய மசால் தோசை, பெரி பெரி எனும் சுருள் சுருளாக பொறித்த உ.கிழங்கு, பனியாரம், பேல்பூரி, கரும்புச்சாறு, ஜஸ்க்ரீம் என எல்லாவற்றையும் சாப்பிட முடியாதென்பதால் நாலைந்து ஐட்டம் வாங்கி ஐந்து பேரும் மொஸ்க்கினோம். எல்லா பதார்த்தங்களும் ரூபாய் நாற்பதிலிருந்து எழுபதிற்குள் தான். ஆனால் எங்களை உறுத்தியது அவர்கள் கலக்கும் அந்த ரத்த சிவப்பு கலர் தான்.
ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்ததும் கொதிக்கும் வெந்நீரை குடித்து விட்டு டின்னர் இல்லாமல் படுக்கப்போகும் முன் அவசரமாக இந்த பதிவு…

No comments:

Post a Comment