நண்பர் எல்லே (லாஸ் ஏஞ்சல்ஸ்) ராமை ( Ram Ramachandran) திடீரென பெங்களூரில் சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
சமீபத்தில் தேவனஹள்ளி பகுதியில் எனது நெருங்கிய நண்பரும், முன்னாள் உதவி தலைமை கணக்குத் தணிக்கையாளர்( Ex Dy Comptroller & Auditor General of India) திரு. சத்தியமூர்த்தி ஐ.ஏ.ஏ.எஸ் அவர்கள் தனது இல்லத்தில் நண்பர்களுக்கு அளித்த விருந்தில் கலந்துகொண்டேன்.
சிக்கஜலா பகுதியில் சாருக்கு பிடித்த பால்கோவா கொஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த கேட்டட் கம்யூனிட்டி வளாகத்தில் மேலும் 3,4 கி.மீ சுற்றி அவரது இல்லத்தில் நுழையும்போது நிறைய அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபர்கள். நடுவே நண்பர் எல்லே ராம் உட்கார்ந்திருந்தார். எனக்கு அவரை பார்த்தும் சட்டென அடையாளம் தெரியவில்லை.
‘ஶ்ரீதர்! ஶ்ரீதர் சீதாபதி! என்னை அடையாளம் தெரியவில்லையா? நான் ராம்… லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்!’ என்றபோதே அடையாளம் கண்டு கொண்டு, ‘ஆஹா! ராம்! உங்கள இங்க நான் எதிர்பாக்கவே இல்லை!’ எனக் கட்டித்தழுவிக்கொண்டோம். ‘நேத்தக்கி சத்யமூர்த்தி சார் உங்க பேரைச்சொன்னதுமே அவர்ட்ட சொல்லிட்டேன் ‘ஶ்ரீதர் எனக்கும் ஃப்ரெண்டுன்னு’ என்ற ராம் பக்கத்தில் அவரது மனைவியை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவிலிருந்து ஒரு வாரம் பத்து நாள் விடுமுறைக்கு இந்தியா வந்திருக்கிறார்கள். அதீத நகைச்சுவை உணர்வும், நண்பர்களுடன் செம்மத்தியாக அரட்டையடிக்கிறார் ராம். ராமின் மனைவியும் கணவரை கலாய்த்துக்கொண்டு அரட்டை கச்சேரியில் இறங்கினார்.
ராம் 30 வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார். அங்கே புகழ்பெற்ற SAG-AFTRA (Screen Actors Guild-American Federation of Television and Radio Artists) எனப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் அமெரிக்க கூட்டமைப்பின் அங்கத்தினர்களில் ஒருவர். தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்தவராயினும் இயக்குநர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் ஜொலிப்பவர். கவிதைகள், சுவாரசியமான அமெரிக்க நிகழ்வுகள் என நிறைய எழுதிக்கொண்டிருந்தாலும் இந்திய அரசியல் நையாண்டி பதிவுகள் அவ்வப்போது எழுதி அசத்துபவர். கோவில் திருப்பணி, நன்கொடை என ஆன்மிகம் பக்கமும் ஒருக்கழிச்சு படுப்பவர்.
பல வருடங்களுக்கு முன் இறைப்பணிக்காக அமெரிக்காவில் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரம் டாலர்களுடன் மலேஷியா வழியாக இந்தியா பயணம் செய்த அவரை மலேஷிய சுங்கத்துறையினர் சோதனை செய்து, அந்த காவலர்களில் தமிழர் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் விளக்கியதும் அவர்கள் இவரை பாராட்டியதுடன், பயணத்தைத் தொடர அனுமதித்த சம்பவத்தை சுவாரசியமாகவும் தனக்கே உரிய நகைச்சுவையுடனும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அமெரிக்கா வருகை தரும் சினிமா பிரபலங்கள் அநேகம் பேர் திரைப்பட இயக்குநரான இவரது வீட்டில் தங்காமல் போக மாட்டார்கள். கமல் போன்ற நடிகர்களையே ‘ஹே.. கமல்!’ என விளிக்கும் அளவிற்கு நெருக்கம்.
ஐஸ்வர்யாரய், ரஜ்னிகாந்த் முதலிய பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்தவர் இவர்.
இவரது கதை ஒன்றிற்கு ஓவியம் ஒன்று வரைந்திருக்கிறேன். சில வருடங்கள் முன்பு அமெரிக்க உள்ளூர் சம்பவங்கள் பிண்ணனியில் கதை ஒன்று இவர் எழுதிக்கொண்டிருக்க அந்த புத்தகத்திற்கு பஹ்ரைனில் இருந்த போது நான் கார்ட்டூன் வரைவதாக இருந்தது. கதையின் முதல் பாகத்தை எனக்கு அனுப்பியிருந்தார். ஹாலிவுட் படம் போல விருவிருப்பான திகில் கதை அது. நேரமின்மை மற்றும் அவசரப் பயணம் போன்றவைகளால் நான் படம் வரைய இயலாமல் போனது.
‘நாளைக்கி சென்னை பயணம். ஏர்போர்ட் கிட்டக்கயே ஹோட்டல்ல தங்கியிருக்கோம். உங்க வீடு இங்கர்ந்து தூரம். அடுத்த தபா அவசியம் வரேன்’ போன்ற சம்பாஷணைகளுடன் விடைபெற்றுக்கொண்டோம்.
No comments:
Post a Comment