Friday, June 20, 2025

காஷ்மிர் ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஆலயம்..


காலை 8 மணிக்கு குஷி யாத்ரா சமையல்
காரர் அருமையான நாஷ்டா சமைத்துப்போட்டார். இட்லி, உத்தினு வடை, பொங்கல், டீ, காபி எல்லாவற்றையும் உள்ளே தள்ளி விட்டு வரிசையாக இன்னோவாக்களில் கிளம்பினோம். அடுத்த 10 நிமிடத்தில் வளைந்து வளைந்து செல்லும் சாலையை ஒட்டிய தால் ஏரியைக்கடந்து சடாரென மலைப்பாதையில் வண்டி செல்ல, மலை மேலிருந்து கீழே ஶ்ரீநகரின் அழகை ரசித்தோம்.
CRPF காவலர்கள் வண்டியை நிறுத்தி எந்த ஊர் என மட்டும் விசாரித்து அனுப்பினர். குறுகிய மலைச்சாலையை அடைத்தபடி ஏராளமான வாகனங்கள் நிற்க, நாங்கள் வண்டியை விட்டிறங்கி படிகளில் ஏற ஆரம்பித்தோம்.
செங்குத்தாக மொத்தம் 243 படிகள். மக்கள் மூச்சு வாங்கி ஆங்காங்கே நின்று சற்று ஓய்வெடுக்கும் இடத்தில் சர்தார்ஜி பெரியவர் கடை விரித்து உருத்திராட்சம், பூஜை சாதனங்கள் விற்க, அங்கே நல்ல கூட்டம். எல்லோரும் தாமிரத்தில் செய்த சூலம் வாங்கிக்கொண்டார்கள். மலை உச்சியில் ஜிலுஜிலுவென காற்று. ரம்மியமான சூழல். வில்வ மரங்கள். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜ்யேஷ்டேஸ்வரர் கோயில். ஒருமுறை காஷ்மீருக்கு விஜயம் செய்த சங்கர்ச்சாரியாரின் நினைவாக, சங்கர்ச்சாரியார் கோயில் என்றும் அழைக்கப்படும் இவ்வாலயம் ஸ்ரீநகரில் உள்ள முக்கிய மத ஈர்ப்புகளில் ஒன்றாகும். வரிசையாக நின்றபடி பக்தர்கள் படிகளில் ஏறி கோவிலுக்குள் சென்றனர்.
பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலையுடன் கட்டப்பட்ட கோயில். 20 அடி உயர எண்கோண அடித்தளம், அதற்கு மேல் சதுரமான கட்டிடத்தினுள் கோவில் கட்டப்பட்டுள்ளது.கோவிலின் உள்ளே வட்ட வடிவ சிறிய இருண்ட அறையானது நான்கு எண்கோணத் தூண்களால் (Octogonal columns) தாங்கப்பட்டுள்ளது. நடுவே பாம்பினால் சூழப்பட்ட சிவலிங்கம்.
சிவலிங்கத்திற்கு ஜலதாரா, அதாவது சிவலிங்கத்திற்கு மேல் சொட்டு நீராக விழும் படி ஒரு பானையை நூலில் கட்டி தொங்க விடப்பட்டதன் பின்னனி என்னவென்பது தெரியவில்லை. வலையில் புகுந்து தேடினால், சமுத்திர மந்தனத்தின் போது ஹாலாஹல விஷத்தைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை போக்கி சிவபெருமானை குளிர்விப்பதே பானையில் உள்ள நீர் தான் என்று சொல்கிறார்கள். அபிஷேகப்பிரியனான அந்த பரமேஸ்வரன் ஜோதி சொரூபம் ஆயிற்றே! தவிர நெருப்பின் அம்சம் சிவபெருமான் என்பதால் அவன் மேல் ஒரு செம்புப்பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சொட்டு சொட்டாக அபிஷேகம் செய்து, அதனால் சிவனின் உள்ளம் குளிர்ந்து நமக்கு அருள்பாலிப்பார் என்கிற விளக்கமும் கூறப்பட்டுள்ளது.
சுமார் பத்து பேருக்கு மேல் உள்ளே நுழைய முடியாத சிறிய கோயில் என்றாலும் தள்ளுமுள்ளு இல்லாமல் மக்கள் வரிசையில் சென்றனர். கேமிரா பயன்படுத்த அனுமதி இல்லை என பதாகைகள் இருந்தும் யாரோ ஒரு யாத்ரி புகைப்படமெடுத்து பண்டிட்டிடம் சரியாக வாங்கி கட்டிக்கொண்டார்.
ஶ்ரீநகரின் மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் உள்ள இக்கோவிலைச்சுற்றி வரும் தளத்திலிருந்து பனி மூடிய மலைகள், பரந்த தால் ஏரி, படகுகள், தெற்கு காஷ்மீரின் வாழ்விடங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் என நாற்புரமும் தெரிவது அற்புதமான காட்சி.
கோவிலை விட்டு வெளியே வந்ததும் பக்கத்திலேயே ‘ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சார்யா தபஸ் ஸ்தல்’ என்ற சிறிய குகையினுள் சங்கரர் தியானம் செய்தாராம். குனிந்து அந்த குகையினுள் சென்று பக்தர்களும் சில நிமிடங்கள் தியானம் செய்தனர், மனைவி Usharani Sridhar உட்பட.
மதிய உணவிற்கு பூரி, உ.கி குருமா, பீட்ரூட் பொரியல், புலாவ், குலாப் ஜாமுன், ரசம் மற்றும் தயிர். இரவு ராகி முத்தே (களி), ராஜ்மா, பருப்பு வடை, அப்பளம், சாதம், சாம்பார், ரசம், மோர் மற்றும் பப்பாளி, தர்பூசணி பழங்கள்.
நாளை காலை 6 மணிக்கு இரண்டரை மணி நேரப்பயணமாக 120 கி.மீ தொலைவில் பஹல்காவ் (Pahalgaon) செல்கிறோம். சமையல்காரர் டிபன் பொட்டலம் கட்டிக்கொடுத்து விடுவாராம். யாத்திரையின்போது சோறு முக்கியம்!

No comments:

Post a Comment