Sunday, June 22, 2025

ஆர்ஜி

 முதல் நாலைந்து வரிகள் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாது. அப்புறம் யாரையோ வாழ்த்தும் பதிவு என ஓரளவு ஊகிக்கலாம். அடுத்த வரிகள் ‘இன்னிக்கி யார் பிறந்தநாள்!’ என நம்மை யோசிக்க வைத்து, அவரா இருக்குமோ என் கொஞ்சம் கிட்டே வருவோம். அடுத்த வரிகளில் க்ளூ எதும் இல்லாமல் வாழ்த்தி முடித்து விடுவார். அப்புறம் நாம் முதல் வரியிலிருந்து மறுபடியும் ஆரம்பித்தால், ஆஹா! கண்டு பிடிச்சிட்டோம் என புன்சிரிப்போடு கமென்ட் எழுத ஆரம்பிப்போம். வார்த்தை ஜாலத்தில் கில்லாடி இவர்.

சில சமயம் நண்பர் ஒருவரது பிறந்தநாள் வாழ்த்திற்கு ‘சுஜாதா இவரைத் தன் மகனாக பாவித்தால்… பாலகுமாரன் இவரது மனைவியை தன் மகளாக பாவித்தால்… ‘ என ஈசி கொஸ்டின்ஸ் வரும் எக்சாம் போல க்ளூ கொடுத்து அவர் யாரென கண்டுபிடிக்க வைத்து விடுவார்.
பி.சுசிலா, கவியரசர், மெல்லிசை மன்னர்கள், சிவாஜி கணேசன் போன்றோருக்கு இவரை விட அற்புதமாக அஞ்சலி வேறு யாரும் செலுத்தியிருப்பார்களா தெரியாது.
இவரது இன்னொரு நையாண்டி:
‘இந்தியன் 1க்கும் 2க்கும் என்ன வித்தியாயம்?
1ல மேக்கப் போட ரொம்ப நேரமாச்சு. 2ல மேக்கப்பே தேவைப்படல’
8 வருடங்கள் முன்பு இவரது பதிவுகள் (அப்ப இவர் போட்டோவை யாரும் பார்த்ததில்லை) படிக்கும்போது, ‘கணேஷ்’ என்ற ஸ்டைலான பெயரால், சின்ன பையனா இருப்பார் போல என நினைத்த எனக்கு பின்னர் ஆச்சரியம்.
‘நீங்க பஹ்ரைன்லர்ந்து சென்னை வரும்போது ஏர்போர்ட்லர்ந்து எங்க வீட்டைத் தாண்டித்தான் போகனும். அதனால எந்த சாக்கும் சொல்லாம வீட்டுக்கு வரலாம்’ என்றபோதே என்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் 2015இல். பஜ்ஜி காபியுடன் நெடுநேரம் பேசிக்கொண்டு எங்கள் நட்பு நெருக்கமானது.
இவருடன் எனது இன்னோரு சந்திப்பைப் பற்றி நான் சொல்லவில்லையென்றால் முருகன்-தில்லை சிவபெருமான் பெயரைக்கொண்ட மயிலாப்பூர்க்காரர் ஒருவர் உடனே ‘தி.நகர் நடேசன் தெரு சர்வீஸ் அபார்ட்மென்ட்ல உங்கள சந்திக்க இவர் ஸ்வீட் டப்பாவோட வந்தார்.. அப்பறம் கோமள விலாஸ்ல காபி சாப்ட்டீங்க’ என கமென்ட்டிடுவார்.
திருச்சி பாலக்கரையில் வெயில் காலத்தில் பஸ் போக முடியாதபடி பாதி ரோட்டை அடைத்துக்கொண்டு மக்கள் ஜூஸ் குடிக்கும் புகழ் பெற்ற சத்குரு ஜூஸ் சென்டர் பற்றி நான் ஆறேழு வருடங்கள் முன் எழுதும்போது அது சத்குரு இல்ல பிரம்மானந்தா என என்னை கரெக்ட் செய்யும்போது பிரமிக்க வைத்தவர். செம்ம மெமரி பவர்.
சைவக் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான சின்னத்தை முகநூலில் பிரயோகிக்கும் ‘உ’ன்னதமானவர் இவர்.
‘ஶ்ரேயோ பூயாத் ஸகலஜனானாம்’ என்ற branding sloganஐ முகநூலில் அதிக முறை பயன்படுத்தியவரும் இவரே.
அண்ணா யுனிவர்சிட்டியில் டெக்ஸ்டைல் இஞ்சினீயரிங் படித்தவர், தாய்லாந்து போன்ற நாடுகளில் பல வருடங்கள் பணிபுரிந்தவர் போன்ற தகவல்கள் நிறைய பேருக்கு தெரியாது.
அடக்கம், பணிவு, மரியாதை, எளிமை, ஆங்கிலப்புலமை என இவர் ஒளித்து வைத்திருக்கும் குணங்கள் ஏராளம்.

No comments:

Post a Comment