Sunday, June 22, 2025

நண்பர்கள் தானே வாழ்க்கை நமக்கு!

 சிஏ பரிட்சையில் பாஸ் ஆனாலும் ஃபெயில் ஆனாலும் நண்பர்கள் நாங்கள் இவனது அறையில் கூடித்தான் ட்ரீட் கொடுத்துக்கொள்வோம். இவன் பெயர் நவீன். திருச்சி மலைவாசல் சமீபம் கிலேதார் தெரு சகாயமாதா பில்டிங்கில் அப்போது வசித்து வந்த பிரம்மச்சாரி இவன். பூர்வீகம் மலேசியா. JVC டேப் ரெகார்டர், கசங்காத மலேசியா சட்டைகள், டிடிகே கேஸட், சிங்கப்பூர் ரப்பர் செறுப்பு என வெளிநாட்டு சாதனங்களுடன் வலம் வருவான் அப்போது. நண்பர்கள் மத்தியில் முதலில் சிஏ முடித்ததும் இவன் தான். கையோடு சிங்காரத்தோப்பில் ப்ராக்டிஸ் ஆரம்பித்து, அடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சிஏ இன்ஸ்டட்யூட் எதிரே மற்றொரு ஆபிஸ், பின் துபாயிலும் ஒரு கிளை என படிப்படியாக உயர்ந்தவன். பரம சாது. வளவளவென அதிகம் பேசாமல் மணிரத் போல் ஓரிரு வார்த் மட் பேஸ்...

மற்ற சிஏ நண்பர்களான குமார் (காஜாமலை காலணி), ராஜசேகர் (ஜாஃபர்ஷாத்தெரு), மலைவாசல் அருகே ஹோல்சேல் ஸ்டேஷனரிக்கடை சுப்ரமணியன், பட்டர்வொர்த் ரோட்டில் வசித்து வந்த அய்யம்பிள்ளை (Ayyampillai Ponnusamy, ஹிதாயத்துல்லா மற்றும் நான் என ஒவ்வொருவராக சிஏ முடித்து சிங்கப்பூர், திருப்பூர், பம்பாய், துபாய், அபுதாபி, பஹ்ரைன் என பறந்து விட்டோம்.
ஆச்சு 35 வருடங்கள். நவீனின் பெண் அமெரிக்காவிலும் பையன் ஜெர்மனியிலும் வேலை. சென்ற வாரம் பெண்ணுக்கு திருமணம். வாரணாசி அகர்வால் மாப்பிள்ளை. பையனும் அமெரிக்கா. ஹல்தி, மெஹந்தி் வைபவங்கள், கோட் அணிந்து முண்டாசு கட்டி ஸ்டெப் போட்டு ஆடிய ஆண்கள், கை கொட்டியபடி ஆடும் பெண்கள் என வாரனாசியில் வட இந்திய முறைப்படி பராத், ஷாதி, முபாரக் ஹோ! எல்லாம் முடிந்து சென்னையில் ‘ல மெரிடியா(ன்)’ ஹோட்டலில் வரவேற்பு.
சிங்கப்பூர் குமார் ‘மாப்ளே!’ என ஆரத்தழுவிக்கொண்டான். 20 வருடங்கள் முன் சிங்கப்பூரில் நாங்கள் அவனது சந்தித்தது. அங்கே Siemens போன்ற கம்பெனியில் உயர் பதவியில் இருந்தவன். இந்தியாவின் தலைசிறந்த ஏற்றுமதி நிறுவனமொன்றின் COO & CFO பதவியிலிருந்த ராஜசேகர், பெங்களூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் COO பதவியிலிருந்த சுப்ரமணியன் எல்லோரும் சில பல வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட தருணம்.
அநேகமாக நால்வரும் போட்டோ போஸ் கொடுக்கும்போது சிரத்தையாக வயிற்றை உள்வாங்கிக்கொண்டு அவஸ்தையுடன் சிரித்தோம். முன்புறம் லேசாக கொட்ட ஆரம்பித்த கேசத்தை பின்னிருந்து இழுத்து மூடினோம். அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் போயிருந்தது சிங்கப்பூர் குமாருக்கு. கருப்பு சாயம் பூசிய கேசத்துடன் 35 வருடங்களுக்கு முன் இருந்த இளமையில் சில சதவீதங்கள் நேற்று கொணர்ந்து அகமகிழ்தோம். எங்கள் மனைவியர் என்ன பேசுவது என யோசித்து முகத்தில் புன்னகை அணிந்து பேசிக்கொண்டிருந்தனர்.
‘டேய் மாப்ள! ஞாபகம் இருக்கா? நாம கம்பைண்ட் நைட் ஸ்டடீஸ்னு வீட்ல சொல்லிட்டு மலையாளப்படம் பார்க்கப் போவேமே! (பிட்டு சீனுக்காக).. அந்த படத்துக்கு வித்தியாசமான தமிழ் பேர் நம்மூர் போஸ்டர்ல போடுவாங்களே( எக்சாம்பிள்: மாமனாரின் இன்ப வெறி்😀), கர்ணன் டைரக்‌ஷன்/கேமராவுல ஜெய் சங்கர் படம் ‘ஜம்பு‘ பார்க்கப்போனா அங்க நம்ம ஆடிட்டர் உக்காந்தருந்தார்… ‘குஜலித்தெருவுல ஒரு சேட்டுப் பொண்ணு பின்னாடி சுத்துவியே!’ … ‘ஆமாடா! நீயும் தான் பட்டர்வொர்த் ரோடு பக்கம் உங்காளத்தேடி சுத்திகிட்ருப்பே!’ போன்ற எங்கள் சம்பாஷனைகளை ஓரக்கண்ணால் எங்கள் மனைவியர் பார்த்து ரசித்தனர் என்சொல்லலாம்.
பதினோறு மணி விமானத்தை பிடிக்க சிங்கப்பூர் குமார் ஓட, மற்ற நண்பர்களும் ‘ உன் பையனுக்கு எப்ப கல்யாணம்’ போன்ற கேள்விகளுடன் ஒவ்வொருவராக விடை பெற்றுக்கொண்டோம்.
நண்பர்கள் தானே வாழ்க்கை நமக்கு!

No comments:

Post a Comment