ஶ்ரீநகரிலிருந்து நாங்கள் 250 கி.மீ தொலைவிலுள்ள திரிகுடா மலையுச்சியிலிருக்கும் மாதா வைஷ்ணோதேவி கோயில் செல்ல மலையடிவார நகரான கட்ரா போய்ச்சேர வேண்டும். இராணுவத்தினரால் அந்த நெடுஞ்சாலையில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்டுள்ளதாம். காரணம் நடுவே ஓரிடத்தில் அந்த நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறம் பிரியும் சாலை முன் இருந்த ‘புல்வாமா
’ என்கிற பதாகை. ‘ஐயோ! இங்க தான் பாகிஸ்தான் அட்டாக் செஞ்சி, பதிலடி வாங்கினான்!’ என வியந்தோம். உள்ளுக்குள் சற்று பயம் வேறு.

ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள். அங்கங்கே இராணுவத்தினரின் வாகன சோதனை என நிறைய நிறுத்தங்கள். அந்த வழியாகத்தான் அமர்நாத் யாத்ரீகர்களும் வாகனங்களில் செல்வார்கள் என்பதால் வழி முழுக்க எறும்பு போல ஊரும் வாகனங்கள் தான். அதற்கு 2 நாள் முன்பு அதே சாலையில் பஹல்காம் செல்லும்போது மணிக்கணக்காக காத்திருந்து, மூணறை மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய நாம் 8 மணி நேரம் எடுத்துக்கொண்டோம். அடுத்த 2 நாட்களில் மறுபடியும் அதே சாலையில் தற்போது கட்ரா நகர் பயணம் என்பதால் குஷி யாத்ரா மேலாளர் எங்களை காலை 5 மணிக்கே கிளப்பி விட்டார். மூன்று மினி பஸ்கள். கையில் எங்கள் குக் பட் கட்டிக்கொடுத்த டிபன் பொட்டலத்தில் அவலக்கி ( அவல் உப்புமா) மற்றும் ஷேவிகே(சேமியா உப்புமா)வில் அங்கங்கே பதுங்கியிருக்கும் ராணுவ வீரர்களைப்போல வேர்க்கடலை.
இந்த முறை ஆறடி உயர காஷ்மீரி டிரைவர் எங்களுக்கு. சன்னமான தேகம். வெண்தாடி, கழுத்து வரை புரளும் டை அடித்த சிகை. கேசம் முன்பக்கம் விழாமலிருக்க உச்சந்தலையில் கவிழ்ந்த U வடிவ கிளிப். ஜீன்ஸ், டீ ஷர்ட். பெயர் ஆரிஃப். வரும்போதே எச்சரிக்கை செய்தவாறு வந்தான். ‘நல்லா கேட்டுக்கோங்க! டேஞ்சரான ரோட்ல பயணம் செய்யப்போறோம். வழியில அதிகம் நிறுத்த மாட்டேன். பஸ் கூரை மேல வச்ச பெட்டில தான் என் சுகர் மாத்திரை இருக்குன்னெல்லாம் நடுவுல வண்டிய நிறுத்தச்சொல்லக்கூடாது. கிளம்பி மூனு மண்ணேரத்துல குகை மலைப்பாதைய நாம கடந்தாத்தான் சாயரச்ச கட்ரா போய்ச்சேர்வோம். இல்லாகாட்டி நடுவழியில தான் இன்னிக்கி தூக்கம், நடுசாமம் ஆகலாம்’ என எச்சரிக்க பகீர் என்றது. பாவம் வழியில் பெண்களுக்கு தான் இயற்கையழைப்பை எதிர்கொள்வது கஷ்டம். ‘மூனு பஸ்ஸும் சேர்ந்து கன்வாயா போகனும். அதுக்கு ஸ்பெஷலா பெர்மிஷன் வாங்கனும். அப்பத்தான் மிரிட்டரிக்காரவங்க நம்ப வண்டிய நிறுத்தாம அனுப்புவாங்க’ என்றதும் எல்லோரும் அவசரமாக பாத்ரூம் ஒடினோம், அடுத்த மூன்று மணி நேரம் பஸ்ஸை விட்டு இறங்காமலிருக்க.
ஆரிஃப் பஸ்ஸின் பின்பக்க ஏணியில் ஏறி பஸ்ஸின் கூரையில் நின்றுகொள்ள, அவன் அசிஸ்டென்ட் கீழிலிருந்து ஒரொரு பெட்டியாக மேலே எடுத்து கொடுக்க, வரிசையாக பெட்டிகளை மேலே அடுக்கி, தார்பாலின் போட்டு மூடி தாம்புக்கயிற்றால் நாற்புறமும் கட்டி முடித்தவுடன், யாரோ ஒரு அம்மணி ‘ஏமன்டி மன ப்ளூ கலர் பெட்ட அக்கட பய்க உந்தியா?’ எனக்கேட்டு கணவரை நறநறவென பற்களை கடிக்க வைத்தார். அவர் ஏற்கனவே சட்டை பட்டன் ஒன்றை விட்டு விட்டு ஒருபக்கம் சட்டை தூக்கலாக இருந்தது. பஸ்ஸுக்கு வெளியே அந்த அகால வேளையிலும் உள்ளூர் வியாபாரிகள் குங்கும்ப்பூ, மஃப்ளர், ஸ்வெட்டர் விற்றுக்கொண்டு இருந்தார்கள். ஐந்நூறு ரூபா சால்வையை ஆயிரத்திற்கு மூன்று பீஸ் என வாங்கிய பெண்கள் அதுபற்றி சிலாகிக்க, பொறாமையுடன் சில பெண்கள் ‘எங்க அவன் போய்ட்டானா?’ என ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தார்கள்.
பஸ்ஸை ஆரிஃப் கிளப்ப, வயிற்றில் பீதியிருந்தாலும் ஓவென கத்தி ஆர்ப்பரித்தோம். இந்த வயதிலும் பெருசுகளான எங்களுக்கு எக்ஸைட்மென்ட். இந்த டிரைவர் ஸ்மார்ட் ஃபோன், கூகிள் மேப் சகிதம் அப்டுடேட்டாக இருந்தாலும், செல்லும் வழியில் ஏதும் பிரச்னை இருக்காவென தெரிந்துகொள்ள, எதிரே வரும் பஸ் டிரைவர்களை கேட்டும், ஏற்கனவே பல மணி நேரங்கள் முன்பு கிளம்பி விட்ட அமர்நாத் டிரைவர்கள் பகிரும் குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் என தகவல்களை திரட்டிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறான்.
ஶ்ரீநகரின் எல்லையில் சுமார் 50 வாகனங்கள் நட்டநடு சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது பற்றி தகவல் பெற்றுக்கொண்ட பின் உடனே மாற்றுப்பாதை எடுப்பது, அல்லது இடது பக்க எமெர்ஜென்சி சந்து வழியாக எல்லோரையும் முந்தி முன்னால் போய்க்கொண்டிருந்தான். அடுத்த செக்போஸ்டில் நிறுத்தி, நம்மிடம் ‘பெர்மிட் வாங்கனும். யாத்ரீகர்கள் நீங்க எத்தினி பேர்! கித்னே ஆத்மி, கித்னே அவ்ரத்?’ எனக்கேட்க, ஏக காலத்தில் எல்லோரும் எண்ணத்தொடங்கினோம். கணக்கு சரியா வரலையே என யாரோ கேட்க ‘ஆரிஃபையும் சேர்த்து எண்ணிட்டேன்’ என்ற மஃப்ளர் ஆசாமியை கொலைவெறியோடு பார்த்தோம். மூன்று பஸ்களுக்கும் சேர்த்து பர்மிட் வாங்கி, J என்ற ஸ்டிக்கரை பஸ்ஸின் முன் ஒட்டி விட்டான். அடிக்கடி பின்னால் வரும் மற்ற இரண்டு பஸ் டிரைவர்களை போனில் காய்ச்சி ‘சாலே! கூடவே வந்து தொலைங்கடா’ என கத்தினான்.
‘நீங்கள்ளாம் இந்த நெடுஞ்சாலையை நல்லா பாருங்க! குறுக்கே தடுப்பு இல்லாம ரொம்ப அகலமா இருக்கே கவனிச்சீங்களா?’ என ஆரிஃப் கேட்டதும் தான் கவனித்தோம். அட! நெடுஞ்சாலையையே ஒரு ரன்வே ஆக்கியிருக்கிறார்கள். போர்கால அவசரத்திற்கு விமானங்களையே நெடுஞ்சாலையில் இறக்கி விடலாம் என ராஜநாத் கோடு போட, கட்காரி ரோடே போட்டுவிட்டாராம். (வீடியோ பார்க்க!)
வலது பக்கம் அதளபாதாளம். இடது பக்கம் மண்/பாறாங்கற்கள் சரியும் பகுதி. பகீர் என்றது. அந்த சுவற்றில் ராட்சத இரும்பு நெட்டை திரை போல போட்டு மண்சரிவை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள். வண்டி சட்டென வேகத்தை குறைத்து, ‘ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பாக்க வேணாம்’ என ஆரிஃப் சொல்லி முடிக்கும் முன் அவசரமாக சிலர் எட்டிப்பார்த்தார்கள். சடசடவென மண் சரிந்து, சிறிய கற்கள் கடகடவென உருண்டு வந்து டங் டங்கென பஸ்ஸின் மேற்கூரையில் விழ, ஆவென எல்லோரும் அலற, ‘கத்தாதீங்க.. அந்த இடத்துல வண்டிய நிறுத்தாமெ நாம போகனும். அதுக்கு நமக்கு முன்னால வண்டிகள் நின்னுடாம இருக்கனும்’ என்றபோது இந்த பயணம் எவ்வளவு ஆபத்து என்பது தெரிந்தது.
ஓரிடத்தில் வரிசையாக வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிற்பதை கேட்டுத்தெரிந்துகொண்டு, அப்படியே யூ-டெர்ன் எடுத்து சர்வ ஜாக்ரதையுடன் மற்ற வண்டிகளை முட்டி மோதாமல் வரிசையிலிருந்து பிரிந்து வெளியே வந்து அடுத்த ஜங்ஷனில் அந்தப்பக்கம் எதிரே பஸ்கள் வந்துகொண்டிருக்கும் சாலையில் புக, நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ‘என்னப்பா செய்யப்போறே’ என அலறினோம். எதிரே வரும் வாகனங்கள் ‘ஏய்! சாவு கிராக்கி’ (ஹிந்தியில்) என கத்த, அவர்களை சட்டை செய்யாமல் அதே சாலையில் பாஆஆம் என ஹார்ன் ஒலியெழுப்பியபடி ஓட்டி, அடுத்த ஜங்ஷனில் மறுபடியும் இடது பக்க சாலையில் சேர்ந்து கொண்டான். போனில் கேட்டு, எதிரில் வரும் நிறைய வாகனங்களும் அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்தப்பக்கம் சாலை கொஞ்சம் காலியாக இருக்கும் என ஊகித்து அப்படி தப்பான எதிர் சாலையில் வண்டியை செலுத்தினான் என எங்களுக்கு பிறகு சொன்னான். அவன் சாமர்த்தியத்தைப்பார்த்து பாராட்டினோம். ‘பத்தரமா நம்பள கொண்டு போய்ச்சேப்பானா?’ என்று கணவரிடம் கேட்டு ‘அதை எங்கிட்ட ஏன் கேக்கற! அவனைத்தான் கேக்கனும்’ என திரும்ப வாங்கினார் பெண் ஒருவர்.
திடீரென எங்கள் முன் ஒரு இராணுவ லாரி சென்றது. அதன் பின்னால் ‘don’t overtake this vehicle’ என போர்டு. அந்த லாரிலிருந்த வீரர்கள் ‘எங்க பின்னாலயே வாங்க’ என சைகை காட்ட அடுத்த அரை மணி நேரம் வழி்நெடுக வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மூன்று பஸ்களை மட்டும் அந்த இராணுவ லாரி முன்னே கொண்டு சென்று அடுத்த ஜங்ஷனில் விட்டிவிட்டு கை காட்டியபடி திரும்பி விட்டது. ‘ஹே…’ என நாங்களும் கத்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்ததும், மறுபடியும் மற்றொரு இராணுவ லாரி எங்கள் முன்னால் எஸ்கார்ட்டாக எங்களை பத்திரமாக அடுத்த ஜங்ஷனில் விட்டார்கள். இப்படி வழி நெடுக அந்த J ஸ்டிக்கர் பெறும் மரியாதை. யாத்ரீகர்கள் செல்லும் கன்வாய் வாகனங்களை மட்டும் நிறுத்தி சிரமம் கொடுக்காமல் இப்படி ராஜமரியாதையுடன் எஸ்கார்ட் கொடுத்து, நாங்கள் ஒருவழியாக அந்த 9 கி.மீ நீள மலைச்சுரங்கப்பாதை சென்றடைந்ததும் தான் நிம்மதி.
ஒருவழியாக கட்ராவிற்கு 20 கி.மீ முன்னால் மலைமுகட்டில் உள்ள உணவகம் ஒன்றின் முன் வண்டியை நிறுத்திய ஆரிஃப், ‘இந்த இடத்தில் கிடைக்கும் ராஜ்மா ச்சாவல் போல வேறு எங்கும் கிடைக்காது. ட்ரை பண்ணப்பாருங்க’ என்றான். அது ஒரு டாபா. கொஞ்சம் அழுக்காக இருக்கும். எல்லாம் நம் முன்னால் சமைத்து கொடுப்பார்கள். அதனால் காரசாரமாக இருக்கும். நமக்கு நல்ல நேரமா இல்லையா என்பதை சாப்பிட்ட ஓரு் மணி நேரத்தில் தெரிந்து விடும். ராட்சத அலுமினிய பாத்திரம் ஒன்று. இரண்டு பேர் உள்ளே உட்கார்ந்து தாயம் ஆடலாம். அதில் ஏற்கனவே வேகவைத்திருந்த சிகப்பு காராமணியை குடம் குடமாக கொட்டி, பத்து வாளி தண்ணீர் ஊற்றி, டாடா உப்பு பாக்கெட்டை திறந்து அப்படியே கொட்டி, ஒரு டப்பா நிறைய காஷ்மீரி மி.தூளை அதில் கவிழ்த்து, கரம் மசாலா வகையறாக்களையும் கொட்டி, படகுத்துடுப்பு போன்ற நீண்ட இரும்புக்கரண்டியால் சிறுவன் சிரத்தையுடன் கலக்க, ப்ளக்..ப்ளக் என குமிழிகளுடன் கொதிக்க ஆரம்பித்தது. தட்டு நிறைய சோற்றில் பெரிய கரண்டி ராஜ்மாவை விட்டு, அதற்கு மேல் 100 மில்லி தேசி நெய்யை அளந்து விட்டதும் கமகமவென மணம். தொட்டுக்க அனார் (மாதுளை) சட்னி. வெளியே லேசான தூரலுக்கு சுடச்சுட ராஜ்மா அரிசி திவ்யமாக இருந்தது. மனைவி Usharani Sridhar அதைப்பார்த்து பயந்து ஓடிவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வழிநெடுக இந்திய ராணுவ வீரர்களின் உதவியுடனும், அபாயகரமான மலைப்பாதையில் பாறை, மண் சரிவு அனைத்தையும் கடந்து, பத்திரமாக விடுதியில் சேர்த்த டிரைவருக்கு நன்றி செலுத்தி விடை பெரும்போது மாலை 3 மணி.
சரி! நீ ரெஸ்ட் எடுத்துக்கோப்பா என்ற எங்களுக்கு அவன் அளித்த பதில் ‘ இல்லை ஜனாப்! நான் இப்ப கிளம்புனாக்கத்தான் திரும்பவும் காலையில் நாம் கிளம்பிய இடமான கட்ராவுக்கு ராத்திரி 12 மணிக்குள்ளாற போகனும், திரும்பவும் அதே மலைப்பாதை, வாகன நெரிசல், மண் சரிவுகளைக்கடந்து!’
No comments:
Post a Comment