Sunday, June 22, 2025

ஜர ஹட்கே ஜர பச்கே யெஹி பம்பய் மெரி ஜான்..

 

செட்டா நகர்..
பிரம்மச்சாரியாக நாங்கள் தங்கியிருந்த செம்பூர் செட்டா நகர் விஜயா பில்டிங் வாசலில் நேற்று காலை நிற்கும்போது உடல் சிலிர்த்தது. திருச்சி ஶ்ரீரங்கத்து பாச்சுலர்களுடன் சேர்ந்து நாங்கள் ஒரு ஃப்ளாட். பக்கத்தில் ஜெயா, பாலமுரளி, மாண்டவி என பில்டிங்குகள். ‘மணி! Put some kara podi!’ என எதிர் பில்டிங் கிச்சனிலிருந்து சத்தம் வந்தால் அங்கே திருச்சி தென்னூர் வண்டி ஸ்டாண்டு அருகேயுள்ள அக்ரஹாரத்து பையன்கள் சமைக்கிறார்களென அர்த்தம். இரவு சமைத்ததும் குளித்துவிட்டு எதிரே சுப்ரமணியர் கோவிலுக்கு ஓடி சேவித்துவிட்டு வந்து, வட்டமாக உட்கார்ந்து சாம்பார், கொத்தவரங்காய் அல்லது வெண்டைக்காய் பொறியல், ஆரே பாலில் தோய்த்த தயிருடன் திவ்யமான சாப்பாடு. கோவிலுக்கு சேவிக்க மட்டும் தான் போனாயா என சந்தேகப்பட வேண்டாம்! உள்ளூரில் வளர்ந்த தமிழ்ப்பையன்களுடன் ‘க்யா ரே’ என அரட்டையடிக்கும் தமிழ் யுவதிகள் தமிழ்நாட்டுப்பசங்கள் எங்களை கண்டுகொள்ளாமலிருக்க, அவர்களின் பாலக்காட்டு அப்பாக்கள் மட்டும் (எங்களுக்கு ஃப்ரெண்டு) லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு பில்டிங் வாசலில் திருட்டுத்தனமாக சிகரெட் வலிப்பார்கள், காரணம் எங்கள் ரூம்மேட் ஶ்ரீராம் ஒருமுறை சிகரெட் பற்றவைக்க லைட்டர் கொடுத்து கல்யாணி பீர் வாங்கிக்கொடுத்ததனால்.
35 வருடங்கள் முன்பு கோவிலை ஒட்டி டெம்பிள் வியூ பில்டிங் ஃப்ளாட்டில் என் பாச்சுலர் நண்பர்கள் Balasubramaniam Chandrasekaran Chandra மற்றும் பத்து என்கிற பத்மநாபன் தங்கியிருக்க புதியதாக ரவிகுமார் என்பவன் சேர்ந்தான். வேலைவெட்டியில்லாத அவன் ஜோசியம் பார்த்து சொற்பமாக சம்பாரிப்பவன். வாயைத்திறந்தால் உதார் தான். அவனுடைய உதார்களில் சிறந்தது என்னவென்றால் ‘ஜோசியம் பாக்கறதுக்கு முந்தி என்ன வேலை செஞ்சேன் தெரியுமா! மெட்ராஸ்லர்ந்து நடிகைகளை ரயில்ல பம்பாய் கூட்டிப்போறது, நல்ல வருமாணம் எனக்கு’. அது பொய்யென்று தெரிந்தும் எந்த நடிகையா இருக்கும்!’ என ஜொல்லுடன் யோசிக்கும் வயது அப்போது. அவன் க்ராண்ட் ரோடு பக்கம் போய் வந்து இரவில் தூங்கும்போது சத்தமாக வரக் வரக்கென சொறிந்து கொள்வான் என்ற ஒரே காரணத்திற்காக சத்துருவும் பத்துவும் ரூமை காலி செய்தவர்கள்.
தாதர் சித்தி விநாயகர் கோவில்.. (ஒரு சின்ன கதை)
செம்பூரிலிருத்து சித்தி விநாயகர் கோவிலுக்கு செல்லும்போது டார்ட்டாய்ஸ் சுருள் போல 30 வருடம் பின்னே போனது மனது. சக்தி வாய்ந்த பிள்ளையாரல்லவா! திருச்சியில் சீஏ இன்டர் பாஸ் செய்தபின் பம்பாயில் வேலைக்கு சேர்ந்ததும், அடுத்த 2 வருடங்கள் சீஏ ஃபைனல் பரிட்சை எழுதாமல் ஊர் சுற்றிக்கொண்டு ஊதாரித்தனத்துடன் இருக்க, ஒருநாள் திடீரென வேகம் வந்து 1 மாத லீவில் கஃப் பரேட் சிஏ லைப்ரரியில் வெறித்தனமாக படித்தும் பாஸ் பண்ண முடியவில்லை. எத்தனி அட்டெம்ட் என்ற பரோட்டா சூரி கணக்குக் கதை இப்ப வேண்டாம், அசிங்கமாயிடும். போஃபர்ஸ் (ராஜிவ் காந்தி) வழக்கையெல்லாம் மேற்கோள் காட்டி லா பேப்பரை பம்பாய் பசங்கள் விவாதம் செய்வதைக் கண்டு திருச்சிக்காரனான நான் திகைத்து, மெல்ல அகில இந்திய அளவில் ராங்க் வாங்கிய குஜ்ஜு பசங்களுடன் சகவாசம் வைக்க ஆரம்பித்த போது தான் தெரிந்தது, நாம் இதுவரை படித்த விதமெல்லாம் வேஸ்ட் என. அவர்கள் உதவியுடன் அடுத்த ஓரிரு அட்டெம்ட்டுகள் நன்றாக படித்தும் குறைந்த வித்தியாசத்தில் ஃபைனல் பாஸ் ஆகவில்லை. அதற்கடுத்த அட்டெம்ட் உயிரைக்கொடுத்து படித்து, ரிசல்ட் அன்று சுமார் 4 மணிநேரம் தாதர் ஸ்டேஷனிலிருந்து நீண்ட வரிசையில் நின்று சித்தி விநாயகரை வேண்டியபின் ஒருவழியாக ‘போய்ட்டு போறான். பாஸ் ஆயிடட்டும்’ என ரிசல்ட்டில் என் நெம்பரை போட்டு என்னை சீஏ ஆக்கினார் பிள்ளையார். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். நேற்றும் முக்கால் மணி நேர வரிசைக்குப்பின் அருமையான தரிசனம்.
ப்ளாசா சினிமா..
தாதரில் வி.சாந்தாராமுக்கு சொந்தமான ப்ளாசா சினிமா முன்பிருந்த பொலிவு இழந்து நிற்கிறது. முன்பு நிறைய மராட்டிய ஹவுஸ்ஃபுல் படங்கள், குறிப்பாக தாதா கோண்ட்கேயின் Andheri Raat me Diya tere haath me மற்றும் Aage ki soch போன்ற படங்கள். அவருடையது எல்லாம் வெள்ளி விழாப்படங்கள், காரணம்.. இப்ப வேணாம்!
சயான் மணி’ஸ் லஞ்ச் ஹோம்..
அந்தப்பெரியவர் இறந்து விட்டார் என்பது கல்லாவின் மேல் போட்டோ பார்த்து தெரிந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஆறேழு ரூபாய்க்கு தரமான சின்ன வெங்காய சாம்பார், உ.கி கறி, கப் தயிர் என நல்ல சாப்பாடு சாப்பிட பெரிய வரிசையே நிற்கும். இலை கிடையாது தட்டு தான். நேற்று அதுபோல வரிசையில் 20 நிமிடம் காத்திருந்து சாப்பிட்டோம், ஏனோ முன்பிருந்த சுவை இல்லை. சுகாதாரமும் இல்லை.
மஹாலக்ஷமி கோவில்..
டாக்ஸி பிடித்து நேராக மஹாலக்ஷ்மி கோவில் வந்தோம். கோவில் செல்லும் குறுகிய சந்தில் முன்பு போல பானிபூரி மற்றும் தோசைக்கடைகளைத்தாண்டி படிக்கட்டுகள் ஏறி நல்ல கூட்டம், அற்புதமான தரிசனம்.
வொர்லி சீ ஃபேஸ் தாண்டி Sea Link எனப்படும் பாலத்தில் சுமார் இருபதே நிமிடத்தில் பாண்ட்ரா வந்து சேர்ந்தோம். முன்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும்.
மக்கள் தொகை உயர உயர நிறைய அடுக்கு மாடிக்கட்டிடங்கள், பாலங்கள், மால்கள், சிறிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், அங்கங்கே ஒற்றைத்தண்டூர்தி (mono rail) போன்ற உள்கட்டமைப்புகள் பம்பாயை தலைநிமிரச்செய்கிறது. என்னை மிகவும் வியக்கச்செய்தது Mumbai Trans Harbour Link (MTHL) அடல் சேது எனப்படும் 22கி.மீ நீளமுள்ள, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அருகே ஷிவ்ரியையும் நவி மும்பையையும் இணைக்கும் இந்தியாவிலேயே நீண்ட பாலமாகும்.
ப்ரபாதேவி பக்கம் ஆம்லைட் பாவ் செய்யும் பையன் என்னை மிகவும் கவர்ந்தான். இத்தனை வருடம் கழித்தும் அதே ஸ்டைல்!

No comments:

Post a Comment