பஹ்ரைன் நண்பர் ஹரிஷ்-நந்தினி தம்பதியின் பெங்களூர் சதாஷிவ் நகர் இல்லத்தில் நேற்று எனது மற்றும் மனைவி உஷாவின் (Usharani Sridhar) பிறந்த நாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினோம்.
சி.வி. ராமன் நகரிலிருந்து மல்லேஸ்வரம் பக்கம் வண்டியை விரட்டினேன். பம்பர் டு பம்பர் போக்குவரத்து நெரிசல் நேற்று. குறுக்கு வழியென ராஜ்பவன் பக்கம் போயும் போக்குவரத்து குறையாமல் சதாஷிவநகர் போய்ச்சேர தாமதமானது.
வொய்ட்ஃபீல்டிலிருந்து ராஜி-குரு, ஜெயநகரிலிருந்து சுரேஷ்-லதா, கனகபுரா ரோட்டிலிருந்து விஜயன்-ரேவதி தம்பதியர் எல்லோரும் ஊர்ந்து வரும் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு சற்று தாமதமாக வந்து சேர்ந்தார்கள். இன்னொரு ஜோடி உமா-மூர்த்தி (இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் தங்கை) வைரல் ஜுரத்தால் வர இயலவில்லை. எல்லோரும் எங்களைப்போல பஹ்ரைனிலிருந்து பாரதம் திரும்பியவர்கள்.
நண்பர் ஹரிஷுக்கு பூர்வீகம் கும்பகோணம் தஞ்சாவூர் பக்கம் கோவிலடி. கன்னடம் பேசும் மாத்வா ஆன இவர் பெங்களூரிலேயே வளர்ந்ததால் மார்வாடி தமிழ் பேசுவார். மனைவி நந்தினி மராட்டி பேசும் தேஷஸ்தா. சரபோஜி மன்னர் பரம்பரை என மராட்டி பேசுபவர்கள் தஞ்சாவூரில் பரவலாக இருப்பவர்கள். மூன்று பக்கா தமிழ் மற்றும் மூன்று பக்கா கன்னட மாத்வா குடும்பங்கள் நேற்று. ‘என்னங்க!’ என எங்கள் மனைவியர் கத்த ‘ஏன்றீ!’ என மற்றொரு பக்கம். எங்களிடம் பேசும் அளவிற்கு அவர்களுக்கு தெலுகு ஒஸ்துந்தி. போரடித்தால் ராகவேந்திரரை தரிசிக்க மந்த்ராலயம் கிளம்பி விடும் அவர்களை நாங்களும் நன்றாக கலாய்ப்போம். அநேகமாக இன்னும் 6 மாதத்தில் சரளமாக கன்னடம் கற்றுக்கொள்வோமென நினைக்கிறேன்.
மதியம் 2 மணியளவில் நண்பர் ஹரிஷ் கேக் கொண்டு வந்து மேசையில் வைத்து மெழுகுவர்த்தியை சொருகி, ‘ஶ்ரீதர்! அதை ஊதி அனைக்காமல் அப்பிடியே எடுத்து ஓரத்துல வைங்க என்றதும், எரியும் மெழுகுவர்த்தியை அனைக்கக்கூடாது என்ற நம்பிக்கையை பார்த்து வியந்து பாராட்டினோம்.
விசாலமான சுயாதீன/சுயேச்சை வீடு அவர்களுடையது. கார் நிறுத்த வீட்டிற்கு கீழே அடித்தளம். சுற்றிலும் சிறிய தோட்டம். மழைநீர் புகாமலிருக்க வாசலில் உயரமாக படிக்கட்டுகள். பெங்களூர் சதாஷிவநகரில் பெரும்பாலும் அந்தக்காலத்தில் நிலம் வாங்கி கட்டிய வீடுகள். நாலாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம் சதுரடி மனைகளில் வீடுகள். அமைச்சர்கள், எம்மெல்ஏக்கள் வசிக்கும் பகுதியென்பதால் காவேரி தண்ணீர், மின்சாரம் என எல்லாமே தங்குதடையின்றி கிடைக்கும்.
லஞ்ச்சுக்கு முன்னால் எல்லோருக்கும் வெஜ் பக்கோடா மற்றும் வெள்ளறி-புதினாச்சாறு நந்தினி பரிமாறி, ஹேப்பி பர்த் டே’ பாடி, கேக் வெட்டி நண்பர்கள் கைத்தட்டலுடன் எங்கள் அரட்டை கச்சேரி ஆரம்பமானது.
லோக்சபா எலெக்ஷன், பாஜகா, திமுக அரசியல் கட்சிகள், இந்திய வங்கிகள் செயல்பாடு, ரியல் எஸ்டேட், அயோத்யா கோவில் கட்டியதால் பெருகும் பலகோடி வருமானம், தங்கம் கடத்தல், கற்பழிப்பு, வட்டி சதவீதம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, அதானி, வேதாந்தா பங்குகள், துபாய் மற்றும் வளைகுடா ஷேக்குகள், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், இந்திய சினிமா, ஷாருக்கான், மைசூர் போகும் சாலை, மதூர் வடா, தட்டெ இட்லி, தர்ஷினி உணவகங்கள் என எங்கள் பேச்சு எல்லா பக்கமும் தறிகெட்டு ஓட, சாப்பிட்ட பக்கோடா ஆவியாகி எல்லோருக்கும் பசி.
டேபிளில் மதிய உணவை பரத்தி வைக்க பெண்கள் உதவினர். நிறைய காய்கறிகள் போட்டு மங்களூர் பலவ், மேத்தி கீரை-நிலக்கடலை சாலட், நொச்சின உண்ட்டே (நம்மூர் பிடி கொழக்கட்டை), கொஜ்ஜு (தொட்டுக்க), பருப்பு ரசம், மஜிக ஹுளி (மோர்க்குழம்பு). மொசுரு அன்னா (தயிர் சாதம்) எல்லாவற்றையும் மொஸ்க்கினோம். கடுகு இல்லாமல் உ.பருப்பு மற்றும் சீரகத்தால் தாளித்த தயிர்சாதம் செம்ம டேஸ்ட், சுழட்டி அடித்தோம்.
கடைசியில் அகலமான ட்ரேயில் வைத்த பூரி போன்ற பதார்த்தம் எல்லோரையும் கவர, ‘ஹரிஷ்! அது என்னப்பா எனக் கேட்க, ‘அது சஜ்ஜப்பா!’ என்றார் ஹரிஷ். மைதா-ரவா கலவையின் உள்ளே தேங்காய் பூரணம் வைத்து எண்ணெயில் பொறித்தெடுத்த சஜ்ஜப்பா செம்ம டேஸ்ட்டுப்பா! நம்மூர் சோமாஸ் சுவை. ஒன்று சாப்பிட்டதும் சர்க்கரை கலந்த வஸ்து என்பதால் சஜ்ஜப்பா போதும்ப்பா என முடித்துக்கொண்டோம்.
மதியம் நாலு மணிக்கு எல்லோரும் கோத்தாஸ் பில்டர் காப்பி குடித்த பின் ஹரிஷின் டாக்டர் பெண் (ராமையா மருத்துவ கல்லூரியில் முதுகலை படிக்கிறாள்) வந்த பின் எங்களை புகைப்படமெடுத்தவுடன் மெதுவாக ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
முகநூலில் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 


No comments:
Post a Comment