திருட்டுத்தனமாக மாந்தோப்பு சுவரேறிக் குதித்து, கல்லெறிந்து மாங்காய் அடித்து, தோட்டக்காரன் நம்மை துரத்தி பிடிப்பதெல்லாம் அந்தக்காலம். தற்போது அதுவே வணிகமயமாக்கப்பட்டு, அந்த தோட்டக்காரனே (நாம் சும்மா இருந்தாலும்) நம்மை துரத்திப்பிடித்து ‘காசை குடுத்துட்டு எவ்ளோ வேண்ணாலும் பறிச்சிக்கோ’ என கேட்கும் வைபவத்திற்கு மாங்கோ பிக்கிங், செர்ரி பிக்கிங் என நாமகரணங்கள் சூட்டி… அடடா! வரவேற்கப்படவேண்டியது தான் இதுபோன்ற பிக்னிக்குகள்.
பொட்டை வெயிலில் KMC பண்ணை எதிரே சுமார் 20 கார்கள். ஓரளவு கூட்டம். ஆண்களும் பெண்களும் தலையில் குல்லா, குளிர் கண்ணாடி சகிதம் சின்ன சின்ன குழந்தைகளுடன் கையில் கூடை ஏந்தி வரப்புகளின் நடுவே புகுந்து, தரையோடு படர்ந்துள்ள சின்ன சின்ன செடிகளுக்குள்ளே ஒளித்து கொண்டிருந்த பழுத்த, செந்நிற ஸ்ட்ராபெர்ரி பழங்களை கண்களில் ஆச்சரியம் மின்ன பறித்தது வித்தியாசமான அனுபவம். தூரத்தில் ‘கல்யாண வளையோசைச்செண்டு!’ பாடல் கேட்பது போன்ற பிரமை எனக்கு.
பறித்த பழங்களை அங்கேயே பண்ணைக்காரர்களிடம் கொண்டு சென்று எடை பார்த்து காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். பழங்களை பறிக்கும்போதே சத்தம் போடாமல் ஓரிரண்டு பழங்களை சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே லபக்கென மொஸ்க்கிக்கொண்டபோது தான் கவனித்தேன், மற்றவர்களுக்கும் வாய் சிவந்திருந்தது.
ஸ்ட்ராபெர்ரி ஜாம், பெர்ரி+வாழைப்பழ ஜாம் என அமோக வியாபாரமும் அங்கே. ஸ்ட்ராபெர்ரி சோடா எனப்படும் பிழிந்த பழச்சாறு கலந்த பிஸ்லேரி சோடாவை மதகஜராஜா படத்தைப்போல ர(ரு)சித்தோம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கோலார் நகரம். உடனிருந்த பஹ்ரைன் நண்பர் ஹரிஷ்-நந்தினி தம்பதியின் டாக்டர் மகளது இல்லம் கோலார் நகரில். தனது கணவருடன் எங்களை வரவேற்ற அவள் பஹ்ரைன் இந்தியன் ஸ்கூலில் என் பையனின் ப்ளஸ் டூ பேட்ச்மேட்.
‘நீங்கள்லாம் காபிய குடிச்சிட்டு பக்கத்துல கோலாரம்மா குடி(கோவில்) மற்றும் சோமேஷ்வரர் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க. டின்னர் ரெடியாயிடும் ’ என மருமகன் சொல்ல, உடனே கிளம்பினோம். 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய கோயில்களாம். செதுக்கப்பட்ட தூண்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் பிரமிக்க வைத்தன. கோலாரம்மா காளியைப்போல உக்கிரத்துடன் தேள் வாகனத்துடன் காட்சியளித்தாள். தலப்புராணத்தை தெலுங்கில் விளக்கினார் அர்ச்சகர்.
கோலாரில் சகஜமாக எல்லோரும் தெலுங்கு பேசுவதை கவனித்தேன். கன்னடம் முழுதும் கற்காமல் ‘அவ்தா, கொத்தில்லா, எஷ்டு, ஏனு’ என எத்தனை நாள் தான் நான் சமாளிப்பது! பெங்களூரிலேயே தெலுங்கு தாராளமாக பேசலாம். எல்லோருக்கும் தெலுங்கு தெரிந்திருக்கிறது. முல்பாகல், பலமனேர் போன்ற சிற்றூர்களிலும் தமிழ், தெலுங்கு பேசுகிறார்கள். அடுத்த ஒரு மணி நேரப்பயண தூரத்தில் சித்தூர். அங்கேயும் ‘ஆமாங்கோ.. வருவாங்கோ.. குட்துக்கிறாங்கோ’ தான். அதையடுத்து ராணிப்பேட்டை.
ப்ரோக்கோலி சூப், ரகடா பட்டீஸ், தாய்(Thai)க்கறி+அரிசி, மங்களூர் ரசம், என திவ்யமான சாப்பாட்டுடன் அவர்களது தோட்டத்தில் Bon fire நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அரட்டையடித்தோம். மருமகன் படு கூலாக ரசத்தை மொண்டு எங்கள் தட்டில் விட்டுக்கொண்டும், தனது இல்லத்தை அலங்கரிக்கும் ஓவியங்களை ஆர்வத்துடன் காண்பித்துக்கொண்டும் இருந்தார்.
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமுடன் அவர்கள் விடை கொடுக்க, ஆக்ஸிலேட்டரை அழுத்தி அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹோஸ்கோட்டே, ஹூடி, கிருஷ்ணராஜபுரம் கடந்து வீடு வந்து சேர இரவு 12 மணியாகி ‘குட் மார்னிங், நாங்க வீடு வந்து சேர்ந்துட்டோம்’ என வாட்ஸப் பரிமாற்றங்களுடன் படுக்கையை அடித்தோம் (ஏன் அடிக்கனும்! hit the bed ன்னு சொல்ல வந்தேன்)
No comments:
Post a Comment