Sunday, June 22, 2025

பொன்மலை டீசல் ஷாட் முரளி

 வாழ்த்துக்கள் முரளி!

35 வருடங்களுக்கு மேல் திருச்சி பொன்மலை டீசல் லோகா ஷெட்டில் பணியாற்றி சீனியர் மெக்கானிகல் இஞ்சினீயராக கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் முரளி! இவர் என் மைத்துனரின் சகோதரர்.
உலகின் மிகப்பெரிய 10 முதலாளிகளில் 9ஆவது இடம் வகிக்கும், இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான இந்தியன் ரயில்வேத்துறை நம்மை மிகவும் மலைக்க வைக்கக்கூடியது. அவரிடம் நெடுநேரம் அவரது ரயில்வே உத்தியோகம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
கணினி மயமாக்கலுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் குமாஸ்தாக்களின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். திருச்சி ஜங்ஷனில் டிக்கெட் கௌண்ட்ரில் ஒரு மணி நேர க்யூ. உள்ளே அவர் தலை மட்டும் தெரியும் சின்னஞ்சிறிய ஜெயில் கம்பி இரும்பு ஜன்னல். க்வீன் சைஸ் கயித்துக் கட்டில் அளவு நீண்ட ரிஜிசஸ்தரை நெஞ்சு முன் பரத்தி வைத்து நாம் ஃபில்லப் செய்த ஃபாரத்தை 10 நொடிகளில் படித்து முடித்து மூக்கு கண்ணாடிக்கு கீழே கண்களை உருட்டி ‘நோ ரூம் சார்!’ என்பார். அதாவது டிக்கெட் ஃபுல்லாம். அவர் கிறிஸ்டியனாகவோ அல்லது ஆங்கிலோ இந்தியனாகவோ இருப்பார். பக்கத்து ஜன்னலில் அந்தப்பக்கம் பச்சை புடவைப்பெண் உயரமான ஸ்டூலிலிருந்து ‘ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் இங்க இல்ல.. அந்த கௌண்ட்டர்ங்க!’ என யாரையோ விரட்டிக்கொண்டருப்பார். நாம் ரிசர்வ் செய்ய வேண்டிய டிரெயின் பக்கத்தை எச்சி தொட்டு திருப்பி பார்த்து அந்த சிறிய கட்டத்தில் நம் பெயர், வயது எல்லாம் எழுதி அட்டை டிக்கெட்டை இரும்பு மெஷினில் டட்டக்கு டட்டக்கு என குத்தி தேதியை பொறித்து ஜன்னல் வழியே அலட்சியமாக அவர் விட்டெறிய, ‘அப்பாடா!’ என நகர்வோம். சிலர் அந்த க்யூவிலேயே படுத்து விடுவார்கள்.
டீசல் மெக்கானிக்கல் இஞ்சினீயரான முரளி நிறைய சுவாரசியமான தகவல்கள் கொடுத்தார்.
ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் பெட்டியும் ஒரு மின்சார இஞ்சின் போலவாம்,
அதாவது தானே மின்சாரம் தயாரிக்கும் திறன் உடையதாம். மின் திறன் தயாரிக்கும் அந்த பெட்டி சில டம்மி பெட்டிகளை இழுக்க, அதற்குப்பின் மற்றொரு மின்திறன் பெட்டி என சுமார் 8 அல்லது 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 6000 குதிரைத்திறன் மின்சாரத்துடன் அதிவேகத்துடன் செல்கிறதாம்.
முன்பு இந்திய-அமெரிக்க கிர்லோஸ்கர் கும்மின்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கப்பலுக்கான இஞ்சின் மோட்டார்களைத்தான் ரயில் இஞ்சின்களுக்கும் பயன்படுத்தினார்களாம். பிறகு கும்மின்ஸ் இந்தியாவில் தொழிற்சாலை துவங்கி ரயில் இஞ்சின் மோட்டார்களை தயாரிக்க ஆரம்பித்தனராம்.
இன்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் கணவான்கள் பெட்சீட்களையும் தலையனை உறைகளையும் லவட்டிக்கொண்டு இறங்குகிறார்களாம்.
நல்ல விலைக்கு போவதால் டாய்லெட்டுகளில் இரும்பு மற்றும் செப்புக்கருவிகள் திருடப்படுகின்றனவாம். பல்பைக்கூட மக்கள் விட்டு வைப்பதில்லையாம். திருச்சி-கரூர் வழித்தடத்தில் ஏற்படும் அதிக திருட்டால் முரளிக்கு மேலிடத்திலிருந்து அதிக அழுத்தம். ஒரு நாள் இவர் அந்த தடத்தை மட்டும் பல முறை கண்காணித்ததில், கரூர் காவிரி பாலத்தில் செல்லும்போது ரயிலில் இருந்து நிறைய சாமான்கள் ஆற்றுப்படுகையில் தூக்கியெறிப்படுவதை கவனித்து கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அடுத்த சில நாட்களில் சில கல்லூரி மாணவர்கள் பிடிபட்டனராம்.
இவ்வளவு பெரிய நிறுவனம் எப்படி தானே ஏதோ ஒரு சிஸ்டத்துடன் வெற்றிகரமாக இயங்குகிறது, எப்படி டான் என சம்பள பட்டுவாடா செய்கிறார்கள் என நான் கேட்க முரளி ‘எல்லாம் பிரிட்டிஷ் காரன் செஞ்சு வச்சுட்டு போன ஆபரேட்டிங் ப்ரொசீஜர் தான்’ என்றார்.
ரயில்வேயில் ரிடையர்மென்ட் என்பது ஒரு கோலாகல நிகழ்ச்சியாக செய்கிறார்கள். ரிடையராகும் பெருசுகளை மேடையில் ஏற்றி 20,30 சால்வைகள் போர்த்தி அழ வைத்து, 400, 500 பேருக்கு கல்யாண பந்தி போட்டு பழனி முருகன் மாநாட்டைப்போல லிச்சி சந்தேஷ், மலபார் கி ரைஸ் என பெரிய்ய மெனு.
கடைசி நாள் ரிடையர்மென்ட் வைபவ மேடையில் அமர்ந்திருந்த முரளி மற்றும் மற்றவர்களுக்கு ரூ. பத்தாயிரம் வங்கியில் கிரெடிட் ஆன மெசேஜ் முதலில் வந்ததாம். HR மானேஜர் இவர்களை வாழ்த்தி பேசும்போது உங்களுக்கெல்லாம் மெசேஜ் வந்ததா என கேட்டுக்கொண்டாராம். அன்று மாலைக்குள் எல்லோருக்கும் தத்தம் வங்கிகளில் ரிடையர்மென்ட் செட்டில்மென்ட் தொகை முழுக்க கிரெடிட் செய்யபட்டதாம்.
ஓய்வு பெற்ற பின் இன்றும் பொன்மலை லோகாஷெட்டில் சிக்கலான இஞ்சின் கோளாறு என்றால் முரளிக்கு போன் வருகிறதாம்.
மெக்கானிக்கல் இஞ்சினீயர் என்பதால் கார் மற்றும் கார் இஞ்சின் சம்மந்தப்பட்ட எல்லாவற்றிலும் முரளிக்கு தனி ஈடுபாடு. அசத்தலாக கார் செலுத்துபவர். எதையும் இஞ்சினீயரிங் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்.
சென்றவாரம் என் வீட்டிற்கு விஜயம் செய்த முரளி (என்னை விட 3 வயசு இளையவர்) காலை ஏழு மணிக்கு பால்கனியில் ஃபில்டர் காபியுடன் சில்லென முகத்தில் வீசும் பெங்களூர் குளிர் காற்றை ரசித்துக் கொண்டே தலையை தூக்கி மேலே பார்த்து ‘ இந்த மூங்கில் திரை ஓரத்துல ஆணி வெளிய வந்துருச்சே! சரி பண்ணிறவா?’ என கேட்க, ரவா இட்லி சாப்பிட அவசரமாக அவரை உள்ளே இழுத்துக் கொண்டேன். உடல் முழுக்க இஞ்ச் இஞ்ச்சாக இஞ்சினீயரிங் நரம்பு இவருக்கு.
வீட்டில் எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல் ஆட்டுக்கல், அரிசிக்கல் என எல்லா வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் சுத்தியல், ஸ்பானருடன் இறங்கி வேலை செய்பவர் முரளி. இவரது வீட்டு பாத்ரூம் உள்ளே பார்த்து அசந்து போனேன். போர்வெல் தண்ணி, காவேரித்தண்ணி, சுடு தண்ணி, பச்சத்தண்ணி என குறுக்கா நெடுக்கா நீராவி இஞ்சின் போல பைப்புகள். கூஊ என ரயில் இஞ்சின் சத்தம் கூட லேசாக கேட்டது, நல்லவேளை ஜன்னலுக்கு வெளியே முதலியார் சத்திரம்-சங்கிலியாண்டபுரம் பின்பக்கம் ஜங்ஷன் பக்கம் ஷன்ட் அடிக்கும் இஞ்சின் சத்தம் அது.

No comments:

Post a Comment