Sunday, June 22, 2025

தூங்கா நகரம் பம்பாய்

 மும்பய் ஏர்போர்ட் பக்கத்திலேயே பாவா இண்டர்நேஷனல் எனும் விடுதிதியில் தங்கியிருந்தோம். இங்கே என்னை மிகவும் கவர்ந்தது, இப்பொழுதும் சாலை ஓரத்தில் எங்கு வேண்டுமானாலும் வாகனங்கள் நிறுத்த வசதி. பெங்களூரைப்போல ‘நோ பார்க்கிங் இங்கிட்டும் அங்கிட்டும் அம்பது மீட்டருக்கு’ போன்ற பதாகைகள் இல்லை. குட்டி ஹுண்டாய் சான்ட்ரோ டாக்ஸிகளில் உ.பி பையாக்கள் கரப்புகளைப்போல சுற்றிச்சுற்றி வருகிறார்கள். ஆட்டோவில் ஏறினால் மறுநொடி மீட்டரை போட்டு, இப்பவும் மினிமம் 26 ரூபாய் மட்டுமே. 90களில்.. நினைவிருக்கிறது, ஆட்டோவை விட்டிறங்கி பாக்கெட்டில் சில்லரை தேட கொஞ்ச தாமதமானாலும் ஆட்டோக்காரர் சர்ரென கிளம்பிப்போய் விடுவார், காரணம் இத்தனை மணி நேரம் என கன்டிநுவசாக ஆட்டோ ஓடிக்கொண்டிருந்தால் காசு! செம்பூர், சயான், குர்லா, சான்டாக்ரூஸ் என ரெஸ்ட் இல்லாமல் அடுத்தடுத்த சவாரிகளில் காசு பார்த்து விடுவார்கள்.

தாதர் நண்பர் இல்லத்தில் இரவு உணவு முடித்ததும் அடுத்த இரண்டு தெருக்கள் தாண்டி எங்களை சிவாஜி பார்க் அழைத்துச்சென்றார். 35 வருடங்கள் கழித்து மறுபடியும் சிவாஜி பார்க். ஆஹா! புதிப்பிக்கப்பட்டு, அங்கே பூங்கா பிள்ளையார் கோவில் மெருகூட்டப்பட்டு அழகுடன் இருந்தது. தாதர் சௌபாத்தி் இரவு 12 மணிக்கும் ஜேஜே என கூட்டத்துடன், சௌபாத்தி் வெள்ள விளக்கு ஒளியில் ஃபுட்பால் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
பார்க்கின் எதிரே ‘இதாங்க ராஜ் தாக்கரே வீடு’ என அந்த பெரிய கட்டிடத்தை காட்டினார் நண்பர். போலீஸ் பந்தோபஸ்து, தடுப்பணை இத்யாதிகளுடன். எனக்கு ஆரம்பம் முதலே பாலாசாஹெப் (பால்தாக்கரே)யை ரொம்ப பிடிக்கும். அவர் கார்ட்டூஸ்ட் என்பது கூடுதல் தகவல். சாம்னா தினசரியை துவங்கியவர். பாண்ட்ரா பகுதியில் மாதொஶ்ரீ என்ற அவரது இல்லத்தில் பேரன் ஆதித்யா தாக்ரே தற்போது வசிக்கிறான். பாலாசாஹேப் சிவசேனை கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். எல்லா லோகல் டிரெய்ன் ஸ்டேஷன் எதிரிலும் புலி உறுமலுடன் சேனா அலுவலகம் மற்றும் காவிக்கொடி் இப்ப அதிகம் காணோம். பந்த் என எல்லா கடை ஷட்டர்கள் இறக்கப்பட்டிருந்தாலும் சேனை சேவக்குகள் பைகுல்லா பெரிய மார்க்கெட்டிலிருந்து லாரிகளில் காந்தா பட்டாட்டா வாங்கி வந்து குடியிருப்பு பகுதிகளில் அடக்க விலைக்கு விற்பார்கள். அவர்கள் சப்போர்ட் பண்ணாத பந்த் என்றால் அன்று கடையை அடைப்பவர்களுக்கு மாத்து தான்.
பாண்ட்ரா சீ லிங்க் எனப்படும் புதிய பாலம், புது அடுக்குமாடி கட்டிடங்கள் வந்துவிட்டாலும் ஜோப்பர்பட்டி எனப்படும் குடிசைப்பகுதிகள் ரோட்டோரங்களில் இன்னும் இருக்கிறது. குடிசை இல்லாமல் தகரத்தில் சுவர்கள், அதிலும் மூன்றடுக்கு தகர வீடுகள், கடைகள்.
இன்று ஞாயிறு என்பதால் தாதர் சித்திவிநாயக் கோவிலில் நல்ல கூட்டம். நீண்ட வரிசை. எப்படியும் ஒரு மணி நேரமாகும். நண்பர் பக்கா மும்பய்கர், அதுவும் அந்த பகுதியில் பல வருடங்கள் வசிப்பதால் அங்கே தனக்குத் தெரிந்த கோவில் டிரஸ்டி யாரோ ஒருவரிடம் தொடர்புகொண்டதும், கோவில் சிப்பந்தி ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று கிட்டக்க தரிசணம் செய்ய வைத்தார். போட்டோ எடுத்துக்கலாமா என மராட்டிய போலீஸ்காரம்மாவை கேட்டேன். இன்னம் கிட்ட போய் நல்லா எடுத்துக்கோ என்றார். பம்பாய் வந்தால் பிள்ளையாரை வணங்காமல் இருந்துடாதே என நண்பன் Ganapathi Subramanian சொல்லியிருக்கிறான்.
பல வருடங்கள் இயங்கிய தாதர் கோஹினூர் மில்ஸை தரை மட்டமாக்கிவிட்டு அவ்விடத்தில் தற்போது கோஹினூர் ஸ்கொயர் மால். மாலின் தரைத்தளத்தில் மணி கஃபேயில் ஃபில்டர் காபி அருமை. வெளியே வந்தோம். ரானடே ரோடு, சிவாஜி பார்க் ரோடு, HM பாட்டில் ரோடு, தாதாசாஹேப் ரெஜி மார்க் என நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமான சிவசேனை கட்டிட (சிவசேனா பவன்) முகப்பில் பால் தாக்கரேயின் ஆளுயர உருவப் படம்.
பம்பாய் தூங்கா நகரம். வேலைக்கு போய் விட்டு தனியாக பெண்கள் இரவில் தைரியமாக நடந்து போகிறார்கள். கட்டிங் சாய், வடாபாவ், ப்ரட் சாண்ட்விச் என சாப்பிட பலகாரங்கள் எங்கும். எல்லோரும் ஓடுகிறார்கள், சம்பாதிக்கிறார்கள், அங்கங்கே இன்னும் பிச்சைக்காரர்கள், தெருநாய்கள், எங்கு பார்த்தாலும் கட்டுமானப்பணிகள், மெட்ரோ ரயில் விஸ்தரிப்பு, அழுக்காக இருந்தாலும் துரிதசேவை செய்யும் டவுன் பஸ்கள், சுறுசுறுப்பான காவல்துறை, தடையில்லா ஒழுங்கான போக்குவரத்து, நிதிசார்ந்த நிறுவனங்கள், புதிய கடல்வழி அடல் பாலம், சுரங்கப்பாதை மெட்ரோ.. சொல்லிக்கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment