Friday, June 20, 2025

போர்ட் மேனேஜ்மென்ட் பாலு

 நண்பர் பாலு இம்முறை பெங்களூர் வந்திருந்த போது ஒரு இனிய மாலப்பொழுதை அவருடன் கழிக்கும் வாய்ப்பு கிட்டியது. பெங்களூரில் அவருக்கு என்ன வேலை என நினைப்பவர்களுக்கு… உலகின் தலைசிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்றான Indian Institute of Management இல் வருகை பேராசிரியர் (Visiting Professor) ஆக இருப்பவர் நண்பர் பாலு.

பெங்களூர் பன்னர்கட்டா சாலையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக மையங்களுக்கு நடுவே சட்டென இடதுபுறம் திரும்பினால் மிகப்பெரிய வளாகம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மரங்களும் இயற்கை வளங்களும் சூழ்ந்த பிரம்மாண்டமான கல்வி நிறுவனம். பல இளைஞர்களின் கனவுப்பள்ளிக்கூடமான IIM எனப்படும் Indian Institute of Management. சி.ஏ ஒன்னும் IIMக்கு குறைச்சலில்லே என வெளியே சொல்லிக்கொண்டாலும் லேசான பொறாமையுடன் IIMஐ பார்க்கும் சி.ஏக்களை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு IIMஇல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள், சம்பளம் மற்றும் உயர்பதவிகள்.
‘தேஜஸ்வி நவதிதாமஸ்து!’ (Let our study be enlightening) எனும் பொன்மொழிக் குறிக்கோளுடன் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் இன்று இந்தியா மற்றும் உலகின் பல பாகங்களில் மேலாண்மை பதவிகளில் கோலோச்சுகிறார்கள். இரண்டு வருட முழு நேர MBA அல்லாது ஒரு வருட Executive Management Pragramme போன்ற படிப்புகளும் இங்குண்டு. தனியார் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் மேலாளர்கள் ஏராளமானோர் பகுதி நேரமாக இங்கு படிக்கின்றனர். அவர்களுக்கும் ஐஐஎம்மின் Alumni எனப்படும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் சேர வாய்ப்பிருப்பதை பெருமையாக கருதுகிறார்கள், வேலை வாய்ப்பிற்கு உதவுவதால்.
வாசல் கேட்டில் நிறுத்தி பெயரைக்கேட்டதுடன் கணினியில் சரிபார்த்து ‘நேரா போய் வலது பக்க கட்டிடத்தில் ரூம் நெ: 34 இல் உங்க நண்பர் உங்களுக்காக காத்திருக்கிறார்’ என மரியாதையாக சொல்லி அனுப்பினார்கள்.
ஐந்து நட்சத்திர ஓட்டல் போல விஸ்தாரமான அறை. அந்தப்பக்கம் மேசை நாற்காலி. பளிச்சென ஒளி வீசும் விளக்குகள். மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் பாலு. MBA மாணவர்களுக்கு அங்கேயே 4 நாட்கள் தங்கி மானேஜ்மென்ட் வகுப்பெடுக்கிறார் என்றால் அவரது அபரிதமான அறிவாற்றலும், MBA பாடத்திட்டத்தில் அவருக்கிருக்கும் ஆளுமையும் தெரிகிறது. தற்கால இளைஞர்களுக்கு இருக்கும் அறிவையும், விழிப்புணர்வையும் ஈடுகட்ட நாமும் எவ்வளவு படிக்க வேண்டியுள்ளது என வெளிப்படையாக பேசும் பாலு, அடுத்த சில பாராக்களில் என்னென்ன செய்திருக்கிறார் பாருங்கள்!
திருச்சி செயின்ட் ஜோசஃப்ஸின் பி.காம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MBA படிப்பு, இங்கிலாந்து வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறைமுகங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை (Ports management, operations & logistics) படிப்பு, ICWA (Cost Accountantancy), பாண்டிச்சேரி பல்கலைக்கழக சட்டப்படிப்பு, தில்லி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் Competition Law எனப்படும் வணிகப்போட்டி சட்டம் சார்ந்த மேல்படிப்பு என வரிசையாக மாரத்தான் பந்தயத்தில் பங்குபெற்றதைப்போன்று படித்தவர்.
கடல், கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்த Indian Maritime University யில் 8 வருடங்கள் விரிவுரையாளர், ஐக்கிய நாடுகள் (United Nations) திட்டத்தின் கீழ் இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து இந்திய துறைமுகங்களுக்கான செயல் திறன் கட்டுமானம் (Capacity Building) சார்ந்த பொருளில் துறைமுக மேலதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பு, IDFC எனப்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி நிறுவனத்தில் மூத்த இயக்குநராக 16 வருடங்கள் பணியாற்றி
அரசு துறைமுக நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), இந்திய திட்ட கமிஷன் (Planning Commission) மற்றும் உலக வங்கி போன்ற பெருநிறுவனங்களுக்கு ஆலோசகராக இயங்கியவர்.. சரி இனி ரெஸ்ட் எடுப்பார் என பார்த்தால், பிறகு தான் விஸ்வரூபமே எடுத்துள்ளார்.
மத்திய, மாநில அரசாங்கங்களுக்காக PPP-Public Private Partnership எனப்படும் அரசு-தனியார் கூட்டுப்பங்கேற்பு சார்ந்த துறைகளில் சட்ட ஆலோசகர், துறைமுக நிறுவனங்களுக்கிடையேயான சட்டச்சர்ச்சை (Disputes)களுக்கு நடுவர் (Arbitrator) போன்ற உணர்திறன் பதவிகள். சாதாரண பணிகள் அல்ல இவை. பலகோடி முதலீட்டுத்திட்டங்கள் சார்ந்தவை. அதிக பொறுப்புகளும் கரணம் தப்பினால் மரணம் போன்ற தலைவேதனை பிடித்த பணிகள், National Shipping Boardஇன் இயக்குநர் என பணியாற்றிய பின் அரசு நிறுவனங்கள், மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளில் உரையாற்றுவது, உத்தர்காண்ட் மாநில முஸ்ஸௌரி நகரில் உள்ள IAS Academyயில் IAS அதிகாரிகள், மத்திய, மாநில அரசு செயலாளர்களுக்கு (Secretaries) பயிற்சியளிக்கும் பணி என எல்லாம் செய்து விட்டு, கிடைக்கும் நேரத்தில் ( ‘என்ன விளையாடறீங்களா! இவருக்கு நேரம் கிடைக்குமா?’ என கேட்க வேண்டாம்) உள்கட்டமைப்பு நிதி சார்ந்த கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் ஏராளமாக வெளியிடுகிறார்.
இதையெல்லாம் விட, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தது இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் ஆன்ட்ரூ முன்னிலையில் இவர் உரையாற்றியது தான்.
LinkedIn இல் இவரது ப்ரொஃபைல் பார்த்தால் அரண்டு போவீர்கள்.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் அரட்டையடித்தோம். சி.ஏ படித்து வேலையிலிருக்கும் என் பையன்கள் இருவரும் அடுத்து என்ன செய்யலாமென நிறைய ஆலைசனைகள் சொன்னவர் ‘வாங்க! கீழே போய் சாப்பிடலாம்!’ என கீழ்த்தளத்திற்கு அழைத்துச்சென்றார்.
அரசாங்க அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், எபிஎஸ் போலிஸ் அதிகாரிகள், உயர் நிறுவனங்களின் வைஸ் பிரெசிடென்ட்டுகள் என நிறைய பேர் உணவுக்கூடத்தில் அதிகம் பேசாமல் சப்பாத்தி சப்ஜியுடன் மௌனமாக சாப்பிட்டுக்கொண்டிருக்க, இவர் அங்கே நுழைந்ததும் இவரிடம் ஓடி வந்து வணக்கம் தெரிவித்து பேசுகிறார்கள். இவரது மாணவர்களாம்!
ஏராளமான நண்பர்கள் இவருக்கு. அதில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கு. கலகலவென பேசிக்கொண்டேயிருப்பவர். சரியான அரட்டை பேர்வழி.. திருச்சி ஶ்ரீரங்கத்துக்காரர். நெடுநெடுவென ஆறடிக்கு மேல் உயரத்துடன் பெரும் கூட்டத்திற்கு முன் மேடைகளில் உரையாற்றும் High Profile personality இவர்.
சாப்பாடு முடிந்து வாசல் வரை வந்து அங்கங்கே நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். காரில் ஏறும் வரை வந்து விடைபெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment