வருடத்தில் ஏப்ரல் மே மாதங்கள் மட்டும் ஓரளவு வெயிலும் மற்ற நேரங்களில் குளுகுளுவென சீதோஷ்ண நிலை கொண்ட பெங்களூரில் மழைக்கு பஞ்சமே இல்லை. லேசான தூறல் என்றாலே இருசக்கர வாகனங்கள் சடாரென ஓரங்கட்டி மழைக்கு ஒதுங்கும் சாக்கில் ஏகத்தும் தித்திக்கும் தேனீர் குடிப்பவர்கள் கன்னடியர்கள்.
ஒவ்வொரு பத்தாவது கடையும் ஒரு உணவகம் இங்கே. ஐ.டி துறையில் வேலை செய்யும் பெரும்பாலான வட இந்திய இளைஞர்கள் 3/4த் பேண்ட் அணிந்த மனைவியருடன் உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள். அவர்களுக்கெனவே வட இந்திய பதார்த்தங்களான பராட்டா வகையராக்கள் பரவலாக கிடைத்தாலும், மசால் தோசையை பிய்த்து வாயில் போட்டு இடது கை ஸ்பூனால் சாம்பாரை அள்ளிக் குடிப்பவர்கள்.
நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்திரா நகரின் நீட்டிக்கப்பட்ட பகுதியான விக்யான் நகர்/மல்லேஷ்பாள்யா கடைவீதியில் ‘ரோட்டி சத்கர்’ எனும் புதிய உணவகம் ஒன்றிற்கு மனைவி Usharani Sridharயுடன் சென்றிருந்தேன். குறுகலான கடைவீதியில் பிரம்மாண்டமான உணவகம்.
சீன உணவுகள், தோசை வகைகள், துரித உணவு வகைகளான பாவ்பாஜி, வடாபாவ் மற்றும் முள்ளங்கி பராட்டா, காளிஃப்ளவர் பராட்டா போன்றவை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்ஷண வகைகள். சொய்ங் சொய்ங் என தோசைகல்லை சீமாறு கொண்டு சுத்தம் செய்யும் சத்தங்களுக்கு இடையே கல்லாவில் பேட்டிஎம் மெஷின் பணம் பெற்றுக்கொண்டதை சத்தமாக அறிவித்தது.
கர்நாடக பாரம்பரிய ஹொளிகே (போளி) தயாரிக்கும் பெண் க.பருப்பு, தேங்காய், கோவா, கேரட், அன்னாசி, சாக்லேட் என எல்லா வகை போளிகளையும் சுட்டுத்தள்ள, வடகிழக்கு சிறுவன் சின்ன வட்ட வடிவத்தில் பூரி மாவை தோய்த்து எண்ணெய் கடாயில் சுழற்றி வீச, சப்போட்டா மற்றும் சீத்தாபழச்சாற்றை மிக்சியில் அடித்து நெட்டையான கண்ணாடி கோப்பையில் ஊற்றினான் மற்றொரு இளைஞன். அருகே கோத்தா ஃபில்டர் காபி மணம் மிதந்து வந்து நாசியில் நுழைந்தது.
ஜோளது ரோட்டி(சோளம்) தயாரிக்கும் பெண் சிறிய சோள மாவு உருண்டையை சன்னமாக பிளாஸ்டிக் காகிதத்தில் தட்டி எண்ணெய் அதிகமில்லாத மென்மையான ரொட்டியும் தொட்டுக்க கத்தரிக்காய் கூட்டு போல ஒரு வஸ்து மற்றும் பச்சை பாசிப்பருப்பு மசாலாவை தட்டில் வைத்துக்கொடுத்தார். வேக வைத்த காளிஃப்ளவரை மசித்து உப்பு காரம் என இன்னபிற மசாலை ஐட்டங்களை சேர்த்துப் பிசைந்த பூரணத்துடன் தயாரிக்கப்பட்ட கோபி பராட்டா, ராய்த்தா (தயிர் வெங்காயம்) மற்றும் நிலக்கடலை, மிளகாய்ப்பொடி, காய்ந்த தேங்காய்ப்பொடி கலந்த சட்னிப்பொடி என தட்டுக்களில் நிரப்பப்பட்ட உணவு வகைகளுடன் இருக்கை தேடி கூட்டத்தின் நடுவே அமர்ந்து இரவு உணவை முடித்துக்கொண்டோம்.
விலைப்பட்டியலுடன் ‘எங்கள் உணவகத்தில் அஜினமோட்டோ, சோடா உப்பு, செயற்கை வண்ணங்கள் சேர்ப்பதில்லை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் தான் சமைக்கிறோம்’ என்ற வாசகம் எல்லோரையும் கவர்ந்தது.
வெளியே மழை விட்டிருக்க, பக்கத்தில் பிரதான் மந்த்ரி ஜன் ஔஷதி மருந்தகத்தில் கொஞ்சம் மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தி வீடு உள்ளே நுழைந்து டீவி விசையை அழுத்தினால் நட்டாவும் சந்தான பாரதியும் பின்னால் புன்னகைக்க, டபுள் இஞ்சின் கேந்திரிய சர்க்காரின் பெருமைகளை பட்டியலிட்டு, ப்ரஷ்டாச்சார் அத்யாச்சார் இல்லாத அரசு அமைக்கப்போகும் மூன்று மாநில வெற்றியை பகிர்ந்து மக்களை வாழ்த்திக்கொண்டிருந்தார் அவர்.
இனிய இரவாகட்டும்..
No comments:
Post a Comment