Friday, June 20, 2025

பாயசம்..

மனசு சொல்லிற்று. “சீதாவுக்கு மச்சுனனா? சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே! ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ!” (தி.ஜா)
உள்ளுக்குள் குமைந்து போகிறார் சாமநாது.
அண்ணா பையன், மேற்படி ஆசாமி சுப்பராயன் வீட்டுக்கல்யாணம். அந்தப்பக்கம் மண்டபத்தில் நாதஸ்வரம் தவில் சத்தம் கேட்டது.
“பத்தரை மணிக்கு மேல்தான் முகூர்த்தம். மணி எட்டுக்கூட ஆகவில்லை. சும்மா தட்டுகிறான்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும். சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலுபிள்ளைகளையும் பெற்றான்” (தி.ஜா)
முன் நின்று நடத்த வேண்டிய சித்தப்பா இவரோ சாமியை சேவிக்க கோவில் பக்கம் வந்து விடுகிறார். ஏதோ சாக்கு வேணுமே!
“வலது பக்கம் – பின்னால் – வேளாளத் தெருவில் – புகை – வெல்லம் காய்ச்சுகிற புகை. புகை பூத்தாற்போல, அந்ததண்டை கருப்பங் கொல்லை கருப்பம் பூக்கள் – காலை வெயில் பட்டு பாதிப் பூக்கள் சிப்பிப் பூக்களாகியிருக்கின்றன – கூர்ந்து பார்த்தால் சுப்பராயன் மாதிரி இருக்கிறது… சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு – எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை – எல்லாம் சுப்பராயன்” (தி.ஜா)
சுப்பராயன்.. சுப்பராயன்… சுப்பராயன்…
மேலே குறிப்பிட்டுள்ள தி.ஜா அவர்களின் வரிகளை படிக்கும்போதே சாமநாதுவின் கொதிக்கும் மனநிலையை உணரலாம். சுப்பராயன் மேல் உள்ள பொறாமை, வன்மம், தன்னால் முடியவில்லையே என்ற ஆற்றாமை எல்லாவற்றையும் சிறுகதையை படிக்கும்போது அந்த சில வரிகளில் காண முடிகிறது. ஆனால் அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதே மனநிலையை நடிப்பில் காட்ட வைத்து டெல்லி கணேஷ் அவர்களை சாமநாதுவாக நம் எதிரே கொண்டு வந்த இயக்குநர் வசந்த் பாராட்டுக்குறியவர்.
“தானாகவே படித்து, கடை வைத்து சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து, தன் ஏழு பெண்களுக்கும் கலியாணம் முடித்து வைத்து விட்டானே சுப்பராயன்! நமக்கும் தான் நிலமெல்லாம் பிரித்து கொடுத்தான். ஆமா! அதுவும் ஊருக்கு சற்று எட்டாக்கையில் தானே விழுந்தது!“
சுப்பராயன் மீது தான் இவருக்கு அவ்வளவு எதிர்வினை ஆற்றத்தூண்டும் சினம்.
சரீரத்தைப் பெற்ற உயிர்களை ‘சரீரி’ என்போம். தேவதைகளுக்கு உருவம் இருந்தாலும் அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. ஆனாலும் சப்த வடிவில் அசரீரியாக நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. திஜா அவர்கள் சாமநாதுவின் இறந்து போன மனைவி வாலாம்பாளை தேவதை வடிவில் சரீரியாக கதைக்குள் ஒரு சின்ன பாத்திரமாக கொண்டு வருகிறார்.
வாலாம்பாள்(ரோகிணி) அவ்வப்போது அவரருகே தேவதையாக வந்தமர்ந்து, நெருப்புக்கங்குகளாக தெறிக்கும் அவரது வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் தட்டிக்கேட்கிறார். செல்லமாக கோபிக்கிறார். ஒப்புக்கொள்வாரா சாமநாது! சில நிமிடங்களே வந்தாலும் அந்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பார் ரோகிணி.
அப்புறம் வேண்டா வெறுப்பாக கலியாண மண்டபம் நோக்கி நடந்து போய், கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு உம்மென்ற முகத்துடன் அட்சதையை தூவி, உள்ளுக்குள் ஜுவாலை எரிய மணமக்களை ஆசிர்வதித்து, மண்டபத்திலிருந்து வெளியேறி…. நேராக… வேண்டாம்! படத்தை முதலில் பாருங்கள்.
‘பாயசம்’ கதையை ஏற்கனவே படிக்காதவர்கள் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப்பார்த்து ‘அட.. ராமா!’ என திகைப்பது நிச்சயம். டெல்லி கணேஷ் அவர்கள் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தி.ஜா அவர்கள் குறிப்பிட்ட அந்த ‘குஞ்சு குளுவான்கள்’ கூட என்னமாய் நடித்திருக்கிறார்கள்! சாமநாதுவின் புள்ளை மற்றும் விதவை மகள் (அதிதி பாலன்), சமையல் காரர், சுப்பராயன் என எல்லோரும் அற்புதமாக தத்தம் பாத்திரத்திற்கு மெருகூட்டியிருப்பார்கள்.
இயக்குநர் வசந்த் மற்றும் டெல்லி சார் (Ganesan Mahadevan Delhi Ganesh ) இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர் ராஜு ( Swaminathan Ramasubramanian ) அவர்கள் மூலம் டெல்லி கணேஷ் அவர்கள் முகநூலில் எழுதிய சுயசரிதைக்கு கார்ட்டூன்கள் வரைந்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த ஆறு மாதங்கள் அவருடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.
இரண்டு நாட்கள் முன்பு நவரசா (பாயசம்) பார்த்த கையோடு அவருக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து, எனக்கு தெரிந்த வரையில் விமரிசனமும் எழுதுவதாக சொல்லியிருந்தேன்.

No comments:

Post a Comment