Friday, June 20, 2025

ஹசீன் தில்ருபா (Hindi)..(அழகான காதலி)

 மைனஸ் 30 அல்லது 40 டிகிரி குளிர் சாதன அறையில் வைக்கப்பட்டிருக்கும் மிருதுவான உணவுப்பண்டங்கள் உறைந்த நிலையில் பாறாங்கல் போல இருக்கும். பார்த்திருக்கிறீர்களா? அதிருக்கட்டும்…கதைக்கு வருவோம்.

ஹரித்வார் மாவட்டத்தில் ஜ்வாலாபூர் என்ற சிறிய ஊர். சலசலக்கும் கங்கையை ஒட்டிய வீட்டில் அப்பா, அம்மா மற்றும் எஞ்சினீயர் பையன். அருமையாக சமைக்கும் மருமகளை எதிர்பார்த்த அம்மாவுக்கு கிடைத்ததென்னவோ மாடர்ன் பெண் ராணி (தாப்ஸி). பையன் ரிஷிக்கு (விக்ராந்த்) பிடித்திருந்ததால் திருமணம் செய்துகொண்டான். ஆனால் பயம் காரணமாக படுக்கையறையில் தள்ளியே இருந்தான். ராணிக்கு வருத்தம். இந்த மாதிரி சமயத்தில் ஹிந்தி சினிமாக்காரர்கள் என்ன செய்வார்கள்! உடனே பையனின் கசின் ஒருவனை கதைக்குள் கொண்டு வருவார்கள். அவனும் சடையுடன் அஜானுபாகுவான உருவம், ஜிம் பாடி. வந்தானே இந்த கதையிலும்! பெயர் நீல். லீவுக்கு அவர்கள் வீட்டிற்கு வந்தான். அடுத்து உங்கள் ஊகம் சரி.. ராணி மெதுவாக அவனை விரும்ப ஆரம்பித்தாள். சமையல் தெரியவில்லையெனினும் நீலுக்கு பிடித்த டீ போட்டுக்கொடுத்தாள். கணவன் ரிஷிக்கு இதெல்லாம் தெரியாது. நீலை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஒருநாள் அவள் சொல்ல, பயந்து மறுநாள் அவன் யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு ஓடிவிட்டான்.
அவள் நீலை விரும்புவது ரிஷிக்கு தெரிய வர, சரியான கோபம். பல முறை ராணி மன்னிப்பு கேட்டும் அவனது கோபம் அடங்கவில்லை. சின்ன சின்ன காயங்கள் அவளுக்கு ஏற்படும்போதெல்லலாம் பழி தீர்த்துக்கொண்டது போல அவன் உணர, ஒருநாள் கணவனிடம் ராணி உட்கார்ந்து நீண்ட நேரம் பேசி, தன் குற்றத்திற்கு பரிகாரமாக தான் இறக்கவும் தயாரென சொல்ல, அவனும் மனம் மாறி, அவளை மன்னித்து ஏற்றுக்கொள்கிறான். அவள் மேலுள்ள அதீத காதலால் தான் அவனால் அவளது தவறை மன்னிக்க முடியவில்லை என்கிறான். பிறகு பழையவற்றை மறந்து வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பமாகிறது.
படம் அத்தோடு முடியவில்லை.
போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் எதிரே ராணி. ‘உன் கணவனின் இறப்புக்கு நீ தான் காரணம். உன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து நீ தான் சதி செய்து கேஸ் சிலண்டரை வெடிக்கச்செய்து ரிஷியை கொன்றாய்’ என்ற இன்ஸ்பெக்டரின் குற்றச்சாட்டுக்கு கொஞ்சமும் பயமில்லாமல் ராணி, தான் எப்போதே திருந்தி விட்டதாகவும், நீலிடம் தற்போது தொடர்பிலும் இல்லையென சொல்லியும் இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை. ராணியை அடித்து சித்ரவதை செய்தும் அவள் திடமாக மறுத்தாள். கணவன் இறந்த சற்று நேரத்தில் நீல் அந்த வீட்டிலிருந்து தப்பி, பக்கத்தில் ஆற்றில் குதித்து நீந்திச்சென்றதை காவலர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் ராணி மேல் சுமத்திய குற்றத்திற்கு ஆதாரம் கிடைக்காமல் போலிஸ் திணறுகிறது.
சுரேந்திர மோகன் பாடக் எனும் க்ரைம் எழுத்தாளரின் நாவல்கள் வட இந்தியாவில் பிரபலம். எல்லா ரயில் நிலையங்களிலும் பரபரப்புடன் அதிக விற்பனையாகும் நாவல்கள். இப்படத்தில் அதை தினேஷ் பண்டிட்டின் நாவல்கள் என காட்டியிருப்பார்கள். போலீஸ் விசாரணையின் போது அடிக்கடி அந்த நாவல்களிலிருந்து ராணி மேற்கோள் காட்டுவார். கொலைக்கான ஆதாரம் கிடைக்காமல் அந்த நாவல்களைப்பற்றி ராணி குறிப்பிடும்போதெல்லாம் ஆத்திரம் கொள்கிறார் இன்ஸ்பெக்டர்.
கடைசி 10 நிமிடங்கள் சீட்டின் நுனிக்கு வந்து விடுகிறோம். மர்ம முடிச்சுக்கள் அவிழ அவிழ இயக்குநரின் வெற்றி பளச்சென தெரிகிறது. தாப்ஸி அற்புதமாக நடித்திருக்கிறார். திரைக்கதை நகரும் வேகம், போலீஸ் விசாரணை, சட்டென மாறும் காட்சிகள் எல்லாமே நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதிலும் அந்த இன்ஸ்பெக்டர் கடைசி கட்சியில் கையில் தினேஷ் பண்டிட்டின் நாவலுடன் கொலை எப்படி நடந்தருக்கும் என ஊகிப்பது, அதைத்தொடர்ந்து திரையில் தோன்றும் முடிவு காட்சி… ப்பா! ப்ரமாதம்.
ஹீரோ விக்ராந்த் என்னவொரு அழகு. அற்புத நடிப்பு. தாப்ஸி எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுமளவிற்கு அருமையான நடிப்பு.
அது சரி. முதல் பாராவில்.. உறைந்த நிலை.. பண்டம்.. பாறாங்கல்.. இதெல்லாம் எதற்கு? படத்தை முதல்ல பாருங்க! புரியும்.

No comments:

Post a Comment