ஒரு வெள்ளிக்கிழமை..
கடந்த வாரங்களில் ஒரு வெள்ளியன்று மதியம் பஹ்ரைன் உமல்ஹாசம் பகுதி கிம்ஸ் ஆசுபத்திரி பக்கம் போயிருந்தோம். முன்பெல்லாம் ஆஸ்பத்திரி எதிரே ரோடு வெறிச்சோடி இருக்கும். ஓரிரண்டு மலையாளி டாக்சிக்காரர்கள் மட்டும்.
காதில் அரிப்பு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், முதுகுப்பிடிப்பு போன்ற சின்ன உபாதைகளுக்கான சிகிச்சைக்கு சிறந்த இடம். 5 தினார் பணம் கட்டி நம் அடையாள அட்டை காண்பித்த 5 நிமிடத்தில் மாடிக்கு அனுப்புவார்கள். அங்கே மலையாளி சேச்சி உங்கள் எடை, உயரம்( உயரம் எதற்கு!), டெம்பரேச்சர், இரத்த அழுத்தம் எல்லாம் பார்த்து ‘அவ்டே இருக்கி’ என நாற்காலியை காட்ட, அடுத்த பத்தே நிமிடத்தில் டாக்டரை பார்க்கலாம். கீழே நம் அடையாள அட்டை எண்ணை கணினியில் அவள் தட்டி விட்டதும் நமது குண்டலினி எல்லாவற்றையும் மேலே டாக்டர் தன் கணினியில் பார்த்துவிடுவார். ‘நாட்ல எவ்டே?’ தான் அவரது முதல் கேள்வி. அப்புறம் தான் என்ன ரோகம் என விஜாரிப்பார். பரிவுடன் பேசி நோய் ஏன் வந்தது, எப்படி சிகிச்சை அளிக்கலாமென சுருக்கமாக பேசி ‘பின்னே காணாம்’ என முடித்து சரியான மருந்து கொடுத்து அனுப்பி வைப்பார். நிவாரணம் நூறு சதம் கியாரண்டி. தேவையில்லலாத டெஸ்டுகள் செய்து பணம் பிடுங்க மாட்டார்கள்.
தற்போது பக்கத்தில் பார்மசி, கண்ணாடி கடை எதிரே புதிய ஹோட்டல் பரணி என அந்த இடமே களை கட்டியிருக்கிறது. பொதுவாக கேரள விஜிடேரியன் தாலி எங்களுக்கு பிடிக்கும். மோட்டாவா பாரிக்கா (அரிசி) என நம்மை கேட்டு தாலி கொண்டு வந்து வைப்பார்கள். பொலபொலவென முத்துக்கள் போல கேரள கொட்டை அரிசி, தாராளமாக தேங்காய் துருவிபோட்ட முட்டைகோசு பொறியல், சிறிதுள்ளி+கொடும்புளி தூக்கலுடன் சாம்பார், வாடாமல்லி கலரில் அவன் வைக்கும் சட்னி போன்ற வஸ்துவை விரல் தொட்டு நக்கிப் பார்த்தால் கசப்புடன் கூடிய அருமையான ருசி, பாகற்காயை அரைத்துவிட்ட சட்னி அது. முழுவதும் தோல் சீவாத பாதி நிர்வாணமாய் வாழைக்காய் மற்றும் மோதிரவிரல் சைஸில் சேனை துண்டங்களுடன் அவியல் அமிர்தம். புழுங்கல் அரிசி மற்றும் பஞ்சசாரத்தில் (வெல்லம்) செய்த அரவண பாயசம் ஒரு மடக்கு விழுங்கியபின் சாவகாசமாக முந்திரி மற்றும் தேங்காய் பற்களை மென்று தின்னும் சுகம் மறுமையில் வைகுண்ட ப்ராப்தி கிடைத்த மாதிரி.
திவ்யமான சாப்பாடு. இதையெல்லாம் மனதில் கொண்டு அந்த புதிய ஹோட்டலில் நுழைந்தால் ‘சாரே! சோறு கழுஞ்ஞு.. மணி ரெண்டற..’ என்றான் படுபாவி.
ஏமாற்றத்துடன் வெளியே வந்து எதிரே பான்ஏசியா ஹோட்டலில் நுழைந்தோம். இந்த ஹோட்டலை யாரோ ஒரு வட இந்தியன் தானே நடத்தி வந்தது! உணவு ருசியாக இருந்தாலும் கூட்டம் எப்பவும் இருக்காது. காரணம் நம் ஆர்டர் கொடுத்தபின் தான் சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பிப்பார்கள். வீட்டில் சண்டை போட்டு பிறகு மனைவியை சமாதானப்படுத்த முனையும் கணவர்களுக்கு இந்த ஹோட்டல் சரியான இடம். நிறைய பேசி தீர்த்துக்கலாம். பொது இடம் என்பதால் கணவர்களுக்கும் பாதுகாப்பு உத்திரவாதம். நாங்களும் அதுமாதிரி அவ்வப்போது வருவோம்
. ஆனால் தற்போது யாரோ ஒரு மலையாளி அந்த ஓட்டலை எடுத்து புதுப்பித்து அதை மிலிட்டரி ஹோட்டலாக்கி விட்டார். மரக்கறி உணவும் உண்டு.

மதியம் இரண்டரை மணிக்கு கூட்டம் அம்மியது. ரிசப்ஷனிலேயே அரை மணி நேரம் காத்துக்கிடந்து இரண்டு பேருக்கான சீட் கிடைக்க உள்ளே நுழைந்தோம். எல்லாம் மாடர்ன் யுவதிகள். ஸ்ட்ரெய்ட் ஹேர், ஹேர் கலரிங் செய்து தலையை அங்கங்கே பிரவுன் கலராக்கி, உதட்டு சாயம், டீஷர்ட், லெக்கின்ஸ், உச்சந்தலையில் சொருகியிருக்கும் குளிர் கண்ணாடி என வட இந்திய பெண்கள் போல இருக்கே! ஆனா பக்கத்தில் பட்டை மீசை, சிவந்த கண்கள், தடித்த சுண்டுகளுடன் (உதடுகள்) மலையாளி கணவர்கள். ‘ஏ மோனே! நீ இப்பொ தாழ வீழும்! இவ்டே வா!’ என அந்த பெண்களில் ஒருவர் தன் குழந்தையிடம் க்றீச்சென கத்தி விளித்தபோது தான் தெரிந்தது கரீனா கபூர் போல மாடர்னாக இருந்த அவரும் மலையாளி என.
30 நிமிட பயணத்தில் சவுதியிலிருந்து பெரிய 4 வீல் ட்ரைவ்வில் பஹ்ரைன் வந்து, ஊணு கழிச்சி, மாலில் ஷாப்பிங் செய்து, மாலை சினிப்ளெக்ஸில் நவீன் பௌலி படம் பார்த்துவிட்டு இரவு சவுதி திரும்புபவர்கள்.
முன்பெல்லாம் பொதுவாக மலையாளி பெண்களென்றாலே நாம் காண்பது ஶ்ரீவித்யா போல தாட்டியாக, நான்கடி அடர்ந்த சுருள் கேசத்தை வெளிச்செண்ணெயில் பராமரித்து, சீர் செய்யப்படாத திக்கான புருவங்கள், உதட்டுக்கு மேல் அங்கங்கே மின்னும் மெல்லிய ரோமங்கள். சீமா சசி , ஷீலா, சாரதா போன்ற நடிகைகளை நினைவூட்டுவார்கள். இப்ப எல்லாம் மாறி விட்டது. மலையாள வாடை இல்லாத ஆங்கிலம்.
அவர்கள் எதிரே சட்டிச்சோறு எனப்படும் புதிய மெனுவாம். சாதாரண பீங்கான் தட்டில் வைக்கப்படும் அசைவ உணவை மண் சட்டியில் கொட்டி, பறப்பன ஊர்வன நடப்பன மிதப்பன என முழு நேஷனல் ஜியாக்ரஃபியே அந்த மண் சட்டியில் இருக்க அத்தனை மலையாளி அன்பர்களும் உணவை கபளீகரம் செய்து பல் குத்திக்கொண்டு டெசர்ட்டுக்காக காத்திருந்தார்கள்.
ஹோட்டலுக்கு வெளியே தனியாக ஒரு பெரிய கண்ணாடி அறை. பழரசம், ஃபில்லே, பர்கர் என வகை வகையான துரித உணவுகள். கடைக்கு வெளியே பையன் ஒருவன் நின்று கொண்டு ஜன்னல் வழியாக பதார்த்தங்களை எடுத்து வெளியே நிற்கும் கஸ்டமர்களுக்கு சேவை. அங்கேயும் செம கூட்டம். ஆண்களும் பெண்களும் ஊதி ஊதி ச்சாய் மற்றும் பக்ஷணங்களை மொஸ்க்கிக்கொண்டிருந்தார்கள்.
மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தோம் பரிப்பு வடை (பருப்பு), பழம்பொரி (நேந்திரம்பழ பஜ்ஜி), பத்திரி(அரிசி), உன்னியப்பம், சுகியன்(சுய்யம்), புட்டு, பேரீச்சம்பழ கேக்.. அந்த பக்கம் பெரிய பாய்லரில் சமோவர் டீ. அப்படியே வெளியே நின்றுகொண்டே டீ வாங்கி குடித்தோம். பாய்லர் டீ சுவையே தனி. ஹோட்டலுக்கு உள்ளே 100 பேரும் ஹோட்டலுக்கு வெளியே பலகாரம் கழிக்க மட்டும் பதினைந்து இருபது பேர். அந்த பக்கம் காரில் இருந்தபடியே பாம் பாம் என ஹார்ன் அடித்து கடக் ச்சாய் ஆர்டர் செய்யும் உள்ளூர் பஹ்ரைனிகள்.
பொதுவாக பொருளாதார மந்த நிலையில் (recession) பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவை நுகர்வு (consumption) குறைவாக இருக்கும் என்று எவன் சொன்னான்! கார்கள் நிறுத்தக்கூட அங்கே இடமில்லை.
மெல்ல தலையை நிமிர்ந்தி மேலே பார்த்தேன். உணவகத்தின் பெயர்ப்பலகையில் உணவு வகைகளின் பட்டியல் வண்ண விளக்குகளில்..
இவர்களது வெற்றியின் ரகசியம் இது தான்!

Malabar
Indian
Chinese
Arabic
மலபார் உணவு இந்திய உணவை விட வித்தியாசமானதாம்! எப்படியோ.. அந்த பாய்லர் டீ மற்றும் பக்ஷ்ணங்களுக்காக அங்கே படையெடுக்கும் வாடிக்கையாளர்களில் நானும் ஒருவன்..
(சீதாபதி ஶ்ரீதர்) 
No comments:
Post a Comment