Friday, January 5, 2024

பெங்களூரு பெண்ணெ தோசேயும் திருச்சி நெய் ரோஸ்ட்டும்….

 

மனிதன் வாழ அத்தியாவசியமானவைகளில் முதன்மையானது உணவு. அதிலும் வாய்க்கு ருசியான உணவாக இருந்து, ருசி கேட்கும் நாக்கு உள்ளவர்களாக நாம் இருந்தோமென்றால் சொல்லவே வேண்டாம், ஒரு ஃபுல் கட்டு கட்டி விடுவோம்.
30 வருடங்களாக இந்தியா வரும்போதெல்லாம் பெங்களூர் விஜயத்தின்போது சில உணவகங்களில் சாப்பிட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக பெங்களூரில் நிறைய, விதவிதமான உணவு பண்டங்களை ருசிக்க முடிகிறது.
பெங்களூர்வாசிகள் (மன்னிக்கவும்) கொஞ்சம் திண்ணி பண்டாரங்கள். காலையிலிருந்து இரவு வரை ரோடுகளில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் நின்றவன்னம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கொறிப்பதற்கு எல்லா பேக்கரிகளிலும் கூட்டம். எங்கும் வட இந்தியர்களின் பானி பூரி மற்றும் வடகிழக்கு அழகுப்பெண்களின் மொமோஸ் மயம். எல்லா ஹோட்டல்களிலும் சொய்ங்.. சொய்ங் என தோசை சத்தம். லஸ்ஸி கார்னர், சமோசா, பாவ்பாஜி ஸ்டால், கணேஷ் ஜூஸ் சென்டர்கள். BVK ஐயங்கார் ரோட்டில் சீதாப்பழ ஜூஸ் செய்துகொடுத்த கன்னட இளைஞனை ஆரத்தழுவிக்கொள்ளலாம். அவ்வளவு ருசி.
உணவுப்பண்டங்களின் ருசியிலும் சமைக்கும் விதத்திலும் சென்னைக்கும் பெங்களூருக்கும் நிறைய வித்தியாசம். சென்னையில் கெட்டியான தோசை மாவை கிண்ணத்தில் அள்ளி டொக்கென தோசைக்கல்லில் கொட்டி, சர்.. சர்ரென்று சுற்றுவது போல இங்கு சுற்றாமல், மாவை கொஞ்சம் நீராகவே கரைத்து கல்லில் ஊற்றும் போதே இந்தியன் நியூஸ் ரெவ்யூ போல அழகாக வட்டமாக தோசை விரிந்து உடனே ஆங்காங்கே புள்ளிகள் தோன்ற, தோசைக் கரண்டியால் எண்ணெயை ப்ளக்கென அள்ளி தெளிப்பதை பார்க்க, நமக்கு பகீர். கிழங்கு மசாலை அள்ளி தோசைக்கு நடுவில் வைத்து பாய் சுருட்டுவது போல் சுருட்டி தட்டில் வைக்கப்படும் ஒரு மசால் தோசையே வயிற்றை நிரப்பி விடுகிறது. தோசை திக்காக இருந்தாலும் நல்ல முறுகல்.
தாவங்கரே பெண்ணெ தோசே (வெண்ணெய் தோசை) ரொம்ப பிரபலம் இங்கே. இந்த பலகாரத்தை நான் தாவங்கரேயிலேயை சாப்பிட்டிருக்கிறேன். பத்து, பதினைந்து தோசைகளை கல்லில் ஊற்றிய பின், கையால் வெடிகுண்டு சைஸில் உள்ள வெண்ணை உருண்டையை அள்ளி அப்படியே பொல பொலவென தோசைகள் மேல் தெளிக்கிறார். என்னா தாராள மனசு! ‘உருகுதே.. மருகுதே… ஒரே பார்வையாலே’ என வெண்டைக்கட்டிகள் பாடியபடியே தங்கள் சுயரூபத்தை இழந்து தோசை புள்ளிகளை நிரப்பி ஜிகுஜிகு என நடனமாட, அடுத்த நிமிடம் சர்.. சர்..ரென தோசைகள் சுருட்டப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட, ‘பல்லியா’ எனப்படும் வேக வைத்து மசித்த உ.கிழங்கு, வெங்காயம் (மஞ்சள் தூள் கலக்காத) வெண்கலவையை தொட்டுக்கொள்ள வைக்கிறார்கள். பச்சை மிளகாய் வாசனை மணக்கும் தே.சட்னி, அதில் முக்கிய பெண்ணெ தோசா+ பல்லியா கூட்டணி நம் சுவை நரம்புகளை சுண்டி இழுத்தபடியே தொண்டைக்குள் இறங்கும் போது தூரத்தில் மங்கலாக சொர்க்க வாசல் தெரிகிறது.
பெங்களூர் நீரு தோசா! ஆஹா! சீரகம் தெளித்து உளுந்தே இல்லாமல் தண்ணியாக கரைத்த மாவை கல்லில் சதுரமாக ஊற்றி அப்படியே வெள்ளையாக மல்லு வேட்டி போல மடித்து தட்டில் வைத்து, தொட்டுக்கொள்ள சர்க்கரை+தேங்காய் துருவல் செம்ம காம்பினேஷன். இதைப்போலவே எங்கள் பஹ்ரைன் கேரள நண்பர்கள் வெள்ளை ஆப்பம் செய்து நடுவிலே சர்க்கரை + தேங்காய் துறுவல் வைத்து சுருட்டி கொடுக்கிறார்கள். இதன் பெயர் லவ் லெட்டராம்.
பெங்களூரில் கொஞ்சம் அகலமாக, தட்டையாக ஊற்றப்படும் தட்டெ இட்லி கிடைக்கிறது. கொஞ்சம் ஹெவி. ஒன்று சாப்பிட்டு அடுத்தது சாப்பிடலாமா என நீங்கள் யோசிக்கும்போதே பக்கத்தில் (உங்க) மனைவியின் தட்டிலிருந்து ஒரு ஹாஃப் உங்க தட்டுக்கு வந்துடும்.
எங்கள் வீட்டிலிருந்து நாலே கி.மீ தூரத்தில் இந்திரா நகர் பகுதியில் புதிதாக ராமேஸ்வரம் எனும் ஹோட்டல். ஞாயிறு காலை 8 மணிக்கு லெக்கீஸ் பெண்களுடன் 50 பேர் வரிசையில் நின்று டோக்கன் வாங்கும் அளவிற்கு கூட்டம். கீ(ghee) பொடி இட்லி, ரவா தோசை+சாஹு (குருமா போல), கொத்மீரி ரைஸ் (கொத்தமல்லி சட்னியை சாதத்தில் கலந்து) என காலங்கார்த்தாலயே அதகளம் செய்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு ஐட்டமும் குறைந்தது 60,70 ரூபாய். ருசி? சுமார் தான்.
லால்பாக் பகுதி-MTR (மாவல்லி டிபன் ரூம்) போயிருந்தோம். காலை நாஷ்டாவில் பிரதான ஐட்டம் அங்கே சௌசௌ பாத். அதாவது மோட்டா ரவா (சூஜி ரவா)வில் செய்த கேசரியையும் உப்புமாவையும் இரண்டு கின்னங்களில் நிரப்பி ‘ணங்’ஙென ஒரே தட்டில் சட்னியுடன் வைக்கிறார்கள். நல்ல சுவை. தட்டில் தேங்கும் எண்ணெயில் அப்பளம் பொறிக்கலாம்.
‘ஶ்ரீ உடுப்பி பார்க்’ மெனுவில் போண்டா சூப் கண்ணில் பட, ஆர்டர் செய்தோம். வறுத்த வெங்காயம், கடுகு, உ.பருப்பு தாளிதம் செய்து தண்ணீராய் ஓடும் பருப்பு சூப். பக்கத்திலிருக்கும் 2 போண்டாக்களை தூக்கிப்போட்டு அதில் மிதக்க விட்டு .. அட..அட.. செம்ம ருசி. போண்டாக்களை கபளீகரம் செய்த பின் மீதமுள்ள பருப்பு சூப்பை கின்னத்துடன் எடுத்து வாயில் கவிழ்க்க… ப்ப்ப்பபா!
அடைமழைக்கு ஊடே ஹலசூரு பகுதியில் ‘ஓம் சாய் ஸ்கந்தா தோசா காம்ப்’ போயிருந்தோம். (தோசை)கல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள். தோசா மாஸ்டர் பெயர் தாஸாம். மூன்று நிமிடத்திற்கொரு முறை சீராக ஒரே அளவில் 8 தோசைகள் வீதம் நூறு தோசைகளுக்கு மேல் கல்லில் ஜனனம் எடுக்க, கார்களில் இருந்தவன்னம் பெருத்த மார்வாடி மக்கள் மசால் தோசையை மொஸ்க்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் கல்லில் இரண்டு மூன்று தம்ளர் தண்ணீர் விட்டு சீமாறு கொண்டு பாத்ரூம் கழுவி விடுவதைப்போல கல்லை சுத்தமாக கழுவி பிறகு அடுத்த 8 தோசை ஊற்றுகிறார் தாஸ். அங்கே என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் எண்ணெய் ப்ளாஸ்டிக் பாக்கெட்டை ஊசியால் துளைத்து தோசைகள் மேல் சர்ர்ரென பீய்ச்சி அடிக்கும் முருக(ல்) தாஸ் ஸ்டைலே வித்தியாசமாக இருந்தது.
டாப் 20 உணவகங்கள் பெரும்பாலும் இந்திரா நகர், ஜெயநகர், மல்லேஸ்வரம் பகுதிகளில். ஜே.பி.நகர்/பனஷங்கரி பகுதி ஶ்ரீ கிருஷ்ணம், மல்லேஸ்வரம் CTR (சென்ட்ரல் டிபன் ரூம்), ப்ராமின்ஸ் டிபன் & காபி, Taza திண்டி, மய்யாஸ், Sattvam restaurant (சட்டுவமா இருக்குமோ!) போன்ற உணவகங்களுக்கு பெங்களூர் மக்கள் படையெடுக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் ஒரு மதுரை இட்லி கடை பார்க்கலாம். பொங்கல், பருப்பு வடை, பஜ்ஜி, பாய்லர் டீ என தமிழ்நாட்டு பக்ஷ்ணங்கள் எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்ய மக்கள் தயார்.
பழங்கால வீட்டை துப்புறவு செய்து ஐஸ்க்ரீம் பார்லராக்கி, கல்லூரி இளசுகளுக்கெனவே இயங்கும் இந்திரா நகர் 'கார்னர் ஹவுஸ்'ல் ரூ 90இல் ஆரம்பித்து 200 வரை ‘கையெழுத்து சண்டை’யாம் (Signature Sundae). அங்கே விலை உயர்ந்த ஒரு ஐஸ்க்ரீம் பெயர் ‘சாக்லெட்டால் மரணம்’ (Death by Chocolate). பின்ன! மரணம்னா சீப்பாவா இருக்கும்! விலை ரூ.200. குறைந்தது இரண்டு வகை மரண ஐஸ்க்ரீம்கள் சாப்பிடாமல் மக்கள் வெளியேறுவதில்லை. மோட்டா மணிபர்ஸுடன் குடும்பத்துடன் அங்கே சென்றால் ‘செத்தோம்’.
சிவாஜிநகர் பஸ்டாண்ட் எதிரே ஶ்ரீராஜ் லஸ்ஸி பார். 40 வருடங்களுக்கு முன் ஸ்தாபகமான கடை. மட்கா லஸ்ஸி, காரா லஸ்ஸி, மாங்கோ லஸ்ஸி, குல்ஃபி, ஃபலூடா வகைகள். பிரபல நடிகர்கள் ராஜ்குமார், விஷணுவர்தன், அம்பரீஷ் போன்றோர் முன்பு விஜயம் செய்வார்களாம். மட்கா லஸ்ஸிகளை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கொடுக்கிறார்கள். அதனால் ஸ்பூனால் வெட்டி சாப்பிட வேண்டும்.
நம்மூர் பூரண் போளி (தெலுங்கில் ஒப்பட்டு) இங்கு ஹோலிகே என்ற பெயரில் கிடைக்கிறது. பருப்பு பூரணம் அல்லாது தேங்காய் வெல்லம் சேர்த்தது செம்ம ருசி. நிறைய இடங்களில் ஹோலிகே மனே கடைகள். ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் இளசுகளை ஈர்க்க.
அது சரி! பெங்களூர் பற்றி இவ்வளவு எழுதி விட்டு திருச்சியைப்பற்றியும் கொஞ்சம்…
40 வருடங்களுக்கு முன் சீ.ஏ படிக்கும்போது திருச்சி மேலபுலிவார்ட் சாலையில் ஜாபர்ஷா தெரு வழியாக ஆடிட்டர் ஆபிஸ் போகும்போது தெரு முகனையில் ஆதிகுடி காபி ஹோட்டல் தாண்டி தான் போவோம். வாழை இலை போட்டதும் தண்ணீர் தெளித்து இலையின் நடுத்தண்டை வர்ர்க்.. வர்ரக் என அழுத்த, நெய் ரோஸ்டை மடித்து வைப்பார்கள். சாம்பார் வாளி சின்ன பையன் பெருங்கரண்டியால் சம்பாரை மொண்டு தோசை நடுவில் ஊற்றி அதன் தலையிலேயே சட்னியையும் கொட்டுவான். முறுகல் ஓரங்களை கொஞ்சம் பிய்த்து தோசையின் எல்லைக்கு வெளியே பரவிய சாம்பார் சட்னி கலவையில் முக்கி வாயில் போட்டால் ம்ம்ம்மா.. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இது தான். என்னா ருசி! பக்கத்து இலை மாமா பட்ணம் பக்கோடா, அசோகா அல்வா என தனி உலகில் இருப்பார். எல்லாம் முடிந்து எதிரிப்படைகள் நம் எல்லையிலிருந்து பின் வாங்குவது போல சாம்பார் காரம் நாவிலிருந்து பின் வாங்கும் முன் எதிர்பாரா தாக்குதல் போல பில்டர் காபி வந்து, சாம்பார் காரத்துடன் கலக்கும்போது அடுத்த சில மணி நேரம் நாவில் ருசியுடன் யுத்த களம்.
சட்டென வரைந்த மசால் தோசை ஓவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்



 
All react

No comments:

Post a Comment