Sunday, June 22, 2025

ராஜ்கோட்டில் ஒரு திருமணம்

 ராஜ்கோட்டில் ஒரு குஜராத்தி-தெலுங்கு திருமணம். பெண் வீட்டார் முரளி-விஜயா தம்பதி (Muralidhar Kommajosula) எனது நெடுநாளைய பஹ்ரைன் நண்பர்கள். மனவாளு! ICAI பஹ்ரைன் கிளையின் முன்னாள் தலைவர் மற்றும் பஹ்ரைன் CA Toastmasters க்ளப் பின் முன்னாள் தலைவரும் கூட. பஹ்ரைனிலிருந்து தற்போது கனடாவில் செட்டிலானவர்கள். பெண் என் பெரியவனுடன் இந்தியன் ஸ்கூலில் படித்தவள். கனடாவிலேயே குஜ்ஜு பையனை காதலித்து தற்போது ராஜ்கோட்டில் திருமணம்.

ராஜ்கோட் ஏர்போர்ட்டிலிருந்து நாங்கள் 3 குடும்பங்கள் நாலு மணிக்கு வெளியே வரும்போது நல்ல பசி. ரிசார்ட்டில் நான்கு நாள் கல்யாண வைபவம். ஏர்போர்ட்டிலிருந்து ஒன்றரை மணி நேர பயணம். டிரைவர் பரூச்சி வண்டியை சாலையோர உணவகத்தில் நிறுத்தினான்.
நிற்க! குஜ்ஜுபாய்கள் சாப்பாட்டுப்பிரியர்கள் என்பது நாமறிந்ததே. எனது ஆரம்ப பம்பாய் வேலை மூன்றும் குஜராத்தி கம்பெனிகள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து நானும் திண்ணி பண்டாரமாகியிருந்தேன். நாள் முழுக்க பான், பான்பராக், குட்கா என லாகிரிவஸ்துக்களை விரும்பி மென்பவர்கள். அதிலும் சிலர் கீழ்தாடையை முன்னுக்கு தள்ளி வெற்றிலை எச்சியை தளும்ப தளும்ப அடக்கி வைத்துக்கொண்டு அப்படியே நம்முடன் சம்சாரிப்பவர்கள். தொண்டைப்பக்கம் போகும் எச்சியை கர்ரென அவர்கள் வெளியே இழுக்கும்போது எப்படியாவது ப்ளக்கென எச்சில் தெறித்து விடுமோவென நாம் பயப்படத்தேவையில்லை. வெற்றிலை வாயை கொப்பளித்ததும் உடனே கடக் சாய் குடிக்க வேண்டும் அவர்களுக்கு. அதுவும் இரண்டு வேளை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டு முறையாவது ச்சாய் குடிக்க வேண்டும் அவர்களுக்கு.
இன்று கடக் ச்சாய் சூப்பராக இருந்தது. அந்தப் பக்கம் கமண்ட் (டோக்ளா) வைத்திருந்தான். வேணாம், வந்த முதல் நாளே அதை ட்ரை செய்து ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை. பெரிய்ய அலுமினிய தாம்பாளத்தில் அவித்த டோக்ளாவை இறக்கி வைத்ததும், கத்தியால் குறுக்கா நெடுக்கா கீறி, கடுகு தாளித்து எண்ணெயுடன் தாராளமாக மேலே விட்டு, அடுத்து பொடியாக நறுக்கிய கொ.மல்லியை தூவி, எண்ணெயில் வறுத்து உப்பு தூவிய ப.மிளகாய் மேலே தூவினால் ருசியான டோக்ளா ரெடி. நீளநீளமாக எண்ணெயில் வறுத்த பாப்டி, பாக்கர்வாடி மற்றும் கச்சோடி என சகட்டுமேனிக்கு எண்ணெய் பதார்த்தங்கள் மொஸ்க்குபவர்கள் அவர்கள்.
ஆசையாக ஓடி வந்து ‘ச்சால சந்த்தோஷம் மாக்கு ஶ்ரீதர்காரு!’ என கட்டிக்கொண்டான் சம்மந்தி முரளி. பெண்களைக்கு சாமந்தி மாலை அணிவித்து எல்லோருக்கும் தங்கும் அறையை ஒதுக்கி, பெட்டியை போட்டுவிட்டு மெஹத்தி ஃபங்ஷனுக்கு வந்தோம்.
பஹ்ரைன் இந்தியன் Gavels Toastmasters க்ளப்பில் என் பசங்களுடன் public speaking செய்தவள் ஸ்பூர்த்தி (மணப்பெண்). அந்த அனுபவம் அவர்களுக்கு உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தைரியமாக பேசக் கற்றுக்கொடுக்கிறதென்பது உண்மை. Toranto IBMஇல் பணிபுரிகிறாள். பெங்களூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்ததற்கு நன்றி தெரிவித்து, மருதாணி போட்டுக்கோங்க என பெண்ணும் பெண்ணின் தாயாரும் கவனித்துக்கொள்ள, ஆண்கள் நாங்கள் சாப்பாட்டுப்பக்கம் போனோம். நண்பன் முரளி கில்லாடி. குஜராத்தி, மெக்ஸிகன் உணவின் ஊடே ஆந்திரா சாம்பாரு மற்றும் மஜிக (மோர்) வை சேர்த்து அசத்தி விட்டான். ‘தீஸ்கோண்டி, தீஸ்கோண்டி!’ என வாயில் ஊட்டி விடாத குறையாக சாப்பிட வைத்தனர் முரளி-விஜயா தம்பதி. சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டான் முரளி.
மற்ற பஹ்ரைன் நண்பர்களும் நாளை வந்திறங்கப்போகிறார்கள். நாளை சங்கீத், மண்டப் எனும் தெலுங்கு பூஜை, பாலிவுட் நைட் மற்றும் குஜராத்தி கர்பா நடனமாம். நடுவே வயிற்றுக்கு ஓய்வெல்லாம் கிடையாதாம். இனி அடுத்த 3 நாளைக்கு ‘சூ கபர் ச்சே!’ மற்றும் ‘பாக உண்ணாரா!’ தான்!
ரேப்பு சூஸ்தாமு!

கட்யாவாடி ஜூனாகட்..


ராஜகோட் கல்யாணம் முடிந்து சோம்நாத் ஆலயம் செல்ல காலை 8 மணிக்கு வரவேண்டிய டிரைவர் சாவகாசமாக 9 மணிக்கு வர, அவனை கடிந்துகொண்டேன். தப்பான லொகேஷனை குடுத்துட்டாங்க என்றவனிடம் லேசாக சாராய வாடை. நண்பர் பாலுவும் ‘ஈயாளு வேண்டா.. புள்ளி ஷெரிக்க கள்ளு குடிச்சிண்டு!’ என ஊர்ஜிதப்படுத்த, கோபமாக அந்த ஜெயேஷ்பாய்க்கு போனடித்தேன். கல்யாண மாப்பிள்ளையின் கசினுக்கு வேண்டிய அவர் தான் கார் ஏற்பாடு செய்தவர். ‘சான்சே இல்ல. அவன் குடிக்க மாட்டான். இங்கெல்லாம் தண்ணியடிச்சிட்டு மாட்னா பிரச்னையாயிடும்’ என்றார். பின்ன ஏன் கப்படிக்கிது என கேட்க, குஜராத்தி டிரைவர் ‘சார் நா பீடி குடிப்பேன், மாவா போட்ட தம்பாக்கு போடுவேன்’ என பெருமையாக சொல்ல, அங்கேயே அலறி விட்டோம். ஏன்டாப்பா! வண்டி பத்திரமா ஓட்டுவியா? அதென்ன போதை வஸ்துவோ! என கேட்க, அவன் ‘அதை நீங்க சாப்ட்டா வாய் வெந்துடும்’ என்றான் வெள்ளந்தியாக.
அடுத்த அரை மணியில் மோடி அரசுக்கு புகழாரம் சூட்டியபடியே குஜராத்தின் வளர்ச்சி பற்றி அவன் சொல்லிக்கொண்டு வந்தாலும், ஊரே குப்பையும் கூளமாக இருந்தது. டீக்கடைகள் ஒரே அழுக்கு. பேப்பர் கப்பும் இல்லைங்கறான். கடலை மாவை தேய்த்து ஃபாஃப்டா எனும் பதார்த்தம், தொட்டுக்க கடி என விற்றுக்கொண்டிருந்தார்கள்.
போகும் வழியில் ஜுனாகட் ஊரை சுற்றிப்பார்த்தோம். பிரம்மாண்டமாக பர்வத மலையடிவாரத்தில் சிவாலயம் சென்றோம். அங்கிருந்து மலையுச்சி கோவிலை பத்து ரூபாய் டெலஸ்கோப்பில் பார்த்தோம். டிரைவர் சுதந்திர போராட்டம் பற்றியும், காந்தி நேருவை திட்டிக்கொண்டே, பிரிவினையின் போது ஜுனாகட்டை பாகிஸ்தானுடன் சேர்க்க முயன்ற நவாப்களின் சூழ்ச்சி எப்படி முறியடிக்கப்பட்டதென விளக்க, எங்களுக்கு வயிறு பசிக்க ஆரம்பித்தது. டிரைவர் பெயர் கோவிந்த் குகாடியா. ‘ஐயா குகாடியா! பசிக்கிதுய்யா. சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு காந்தி நேரு கதையை அப்பறம் சொல்லலாமே!’ என்றதும் பக்கா குஜராத்தி தாலி கிடைக்கும் கிராண்ட் ரெஸ்ட்ரொண்ட் வந்து நிறுத்தினான்.
பெரிய்ய தாம்பாளம் போன்ற தட்டு. தட்டுக்குள்ளே சிவாஜியின் தங்கை சிரிப்பது போல கின்னங்களை கலகலவென உருட்டி விட்டான் பையன். பரெல்லா மிர்ச்சி எனும் கடலைமாவு மசாலா திணித்து வறுத்த மிளகாய் மற்றும் ரவா டிக்கி ஃபர்ஸான் என்று சொல்லியபடியே அவன் வைக்க உடனே காலி செய்தோம். லேசாக சர்க்கரை கலந்த தால், கடி, தேசி சன்னா, ரஸ் ஆலு சப்ஜி வைத்தான். கட்யாவாடி உந்தியு (அ) உந்தியோ கமகமவென வாசனையுடன் எண்ணெய் சொட்டச்சொட்ட வந்தது. நீளமாக கொத்தவரை, இளம் வாழைப்பழம், இன்னபிற காய்கறிகள், வெல்லம், பொடி செய்த நிலக்கடலை என அதுதான் அன்றைய பிரதான ஐட்டம். நெய் சொட்டும் ரோட்டி, மஞ்சள் கலரில் பூரி என சல்சல்லென எல்லாவற்றையும் உள்ளே இறக்கினோம். ஆஃப்கான் ஹலுவா கின்னத்தில் வைக்க, என்னவொரு ருசி. அந்தக்காலத்தில் கஜினி முகமது சோம்நாத்தை சூரையாட போகும் முன் ஜுனாகட் பக்கமும் வந்தானாம். அப்போதிலிருந்து ஆஃப்கானி ஹலுவா பிரசித்தமானதாம். மாவா பாதாம் ஷ்ரீக்கண்ட் எனும் பால்கோவா கலந்த போதை வஸ்து போன்ற இனிப்பு மற்றும் ஜிம்ரி மசாலா பொடி தீவிய ச்சாஸ் (மோர்) உடன் மதிய உணவை முடித்தோம்.
190ரூபாய்க்கு அருமையான தாலி. திடீரென மணியடித்தபடியே தள்ளு வண்டி கிச்சனிலிருந்து வெளியே வந்தது. பாகுபலி தாலியாம். லிமிடெட் தாலியாக 1500 ரூபாய்க்கு ஏழெட்டு பேர் சாப்பிடலாமாம். கிட்டத்தட்ட நாற்பது ஐட்டங்கள். மிச்சம் வைக்காமல் அதை ஒரே ஆள் சாப்பிட்டு முடித்தால் ரூ ஐயாயிரம் பரிசாம். தோற்றுவிட்டால் இரண்டு மடங்கு பைசா கட்ட வேண்டுமாம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சோம்நாத்!

வாரத்திற்கு 90 மணி நேர வேலையா! …


வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் காலை 7 மணிக்கே அலுவலகங்கள் இயங்கத்துவங்கும். மதியம் 12.30 - 3 மணி வரை நீண்ட இடைவேளை. பிரம்மச்சாரிகள் அந்த ப்ரேக்கில் சமைத்து சாப்பிட்டு செத்த கண்ணசந்து தூங்கி விட்டோ, அல்லது ‘கபி குஷி கபி கம்’ பாதிப்படம் பார்த்து விட்டு ஆபிஸ் போவார்கள். மறுபடியும் மாலை 3 - 5.30 வரை ஆபிஸ் என்றாலும் ஆறு, ஏழு, எட்டு என லேட் சிட்டிங் இருக்கும். மதிய இடைவேளையின்போது சாலைகளும் வெறிச்சோடிக்கிடக்கும். வியாழன் மதியம் 1 மணியிலிருந்து வெள்ளியுடன் ஒன்னறை நாள் வார இறுதி விடுமுறை.
இது இப்படியே போய்க்கொண்டிருக்க, சில கம்பெனிகளின் ஆங்கிலேய, ஐரோப்பிய பாஸ்களுக்கு இது போன்ற நேர இடைவெளி பிடிக்காமல் தங்கள் நாடுகளில் உள்ளது போல மிகச்சிறிய அல்லது இடைவேளையே இல்லாத ஸ்ட்ரெய்ட் ஷிஃப்ட் எனப்படும் 7 டு 4 மற்றும் 5 டே வீக் என மாற்ற, அரசாங்க அலுவலகங்கள் தனியாக 7 டூ 2 க்கு மாறினார்கள். தனியார் கம்பெனிகள் வழக்கம்போல மாங்கு மாங்கு என மாலை 5, 6 மணி வரை வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வேலை பார்த்த ட்ராஃப்கோ கம்பெனி பல்வேறு நாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து உள்ளூர் ஹைப்பர் மார்கெட்டுகள், இராணுவம், என சப்ளை செய்யும் Fast Moving Consumer Goods (FMCG) நிறுவனம். காலை ஆறிலிருந்தே கண்டெய்னர்கள் துறைமுகத்திலிருந்து உணவுப்பொருட்களை கிடங்கில் (warehouse) இறக்குவதும், 60, 70 நீண்ட ட்ரக்குகள் டெலிவரிக்கு கிளம்புவதுமாக இயங்கிக்கொண்டிருந்தோம். 60%க்கு மேல் இந்தியர்கள், மீதம் உள்நாட்டு அரபிய மக்கள்.
Dy CEOவான உள்ளூர் அரபிக்காரர் எனக்கு வலது கை போல உதவிக்கொண்டிருந்தார். எங்களது குழுமத்தில் துணை நிறுவனங்கள் 5 வேறு. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் லிஸ்டான நிறுவனம் வேறு என்பதால் போர்ட், ஆடிட் கமிட்டி மீட்டிங் என எல்லா பெரிய முடிவுகளும் போர்ட் அப்ரூவலுடன் இயங்கும் நிறுவனம்.
அரபிக்கார Dy CEO ஒரு முறை என்னிடம் வந்து ‘நாமளும் 7 டு 4 மற்றும் 5 டே வீக்குக்கு மாறினால் என்ன! அடுத்த போர்ட் மீட்டிங் அஜென்டாவில் நீங்கள் ப்ரொபோஸ் செய்யலாமே!’ எனக்கேட்க எனக்கு தர்ம சங்கடம். ஏதோ எனக்கு நிறைய ரெஸ்ட் தேவைப்படுவதால் கம்பெனி டைமிங்கை மாற்றுகிறேன் என சேர்மன் எண்ணி விடுவாரோ எனத்தயங்கி அவரிடமே கேட்க, ‘வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்’ என வடிவேலு அருண்விஜயிடம் கேட்பது போல குதித்தார். ‘ விலாவாரியா ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணியாரேன், அப்புறம் நீங்க சொல்லுங்க!’ என அவர் சேம்பரிலிருந்து வெளியே வந்தேன்.
அடுத்த சில நாட்கள் நிதி, விற்பனை, மனிதவளம், மெயின்டெனன்ஸ், கொள்முதல், ஸ்டோர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் என எல்லா துறை மேலாளர்களையும் கூட்டி வாரத்துக்கு 5 நாள், தினமும் 7 டு 4 நேரம் கடைபிடிப்பதால் என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கலாம் என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச்சொல்லி, நிறைய மீட்டிங்குகளை கூட்டி விவாதித்து, மற்ற பெரு நிறுவனங்கள் இதுபோல மாற்றங்கள் செய்து வெற்றிகண்டார்களா எனவும் தகவல்கள் திரட்டினோம்.
அதாவது, சனியன்று அரசாங்க அலுவலகங்கள், பெரும்பாலான வங்கிகள், துறைமுகம் மற்றும் சுங்கத்துறை இயங்காததால் அன்று வங்கி சார்ந்த பணிகள் எங்களுக்கு கிடையா. குறிப்பாக ஷிப்பிங் டாகுமெண்டுகள் வங்கியில் சமர்ப்பிக்கும் பணி இல்லை. சனியன்று பண்டங்கள் துறைமுகத்திலிருந்து எங்கள் கிடங்கிற்கு வர அதிக கட்டணம். துறைமுகத்தில் கிடக்கும் எங்கள் குளிரூட்டபட்ட கண்டெய்னர்களுக்கு பிரத்யேகமாக மின்சார கட்டணம், இராணுவத்திற்கு தேவையான டெலிவரிகள் கிடையாது. இதனால் நிறைய ட்ரக்குகள் காலியாக சுற்றிக்கொண்டு இங்கும் அங்கும் குறைந்த டெலிவரியென பெட்ரோலை விரயப்படுத்தின. சனியன்று குறைவான சேல்ஸ். விற்பனைப்பிரதிநிதிகள் முழு கலெக்‌ஷனுக்கு செல்லாமல் பாதியிலேயே வீட்டிற்கு ஜூட் என ஒட்டுமொத்தமாக உற்பத்தித்திறன் குறைவாக இருந்தது.
முடிவில் புதிய டைமிங் மற்றும் 5 நாள் வாரம் என்பதை ஓரிரு மாதங்களுக்கு அறிமுகப்படுத்தி, விற்பனை குறைந்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது என போர்டுக்கு உறுதியளிக்க இயக்குநர்கள் அரைமனதுடன் ஒப்புக்கொண்டார்கள்.
எங்கள் சேர்மன் மற்றும் வைஸ் சேர்மன் இருவரும் தங்கள் தேசநலனில் அக்கரையுள்ளவர்கள். என்னிடம் ‘ஶ்ரீதர்! இந்தியர்கள் படிப்பறிவு, உழைப்பு என உயர்ந்தவர்கள். இந்த நாட்டு மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து என மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் நிலை, வசதியில்லாத மற்ற அரபிகள் என்ன செய்ய முடியும்! அதனால் அவர்கள் வாழ்வாதாரம் முன்னேற, ஏழை அரபிய தொழிலாளர்களுக்கு கடன் உதவி, அவர்களது குழந்தைகளுக்கு இலவச படிப்புதவி என நீ உதவும்படி கொள்கைகளை கொண்டுவர வேண்டும், உன்னுடன் அவர்களும் உயர வேண்டும். உள்ளூர்க்காரனுக்கு கிடைக்க வேண்டிய பதவியை உனக்கு கொடுத்திருக்கிறோம். இதை மனதில் கொண்டு எந்த மாற்றத்தையும் நீ கொண்டு வரலாம். மற்றபடி போர்ட் அப்ரூவலெல்லாம் சாங்கிய சம்பிரதாயத்துக்குத்தான் ’என அவ்வப்போது அன்புக்கட்டளை விதித்து ஊக்குவிப்பவர்கள்.
அடுத்த சில மாதங்களில்…
கடும் உழைப்பினால் அடையக்கூடிய அளவில் விற்பனை டார்கெட்டுகள் குறிக்கப்பட்டன. அதற்கேற்ப இன்சென்டிவ்களை உயர்த்தினோம். செயல்படாதவர்களுக்கு நியாயப்படுத்தும் காரணம் கொடுக்கப்படாவிட்டால் வார்னிங் மெமோ என நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தோம்.
விளைவு! ட்ராஃப்கோ விற்பனை அமோகமாக உயர்ந்தது. அரசாங்க டெண்டர்கள் புதியதாக நிறைய வந்தன. டெலிவரிகள் முன்கூட்டியே திட்டம் வகுத்து திறம்பட செயல்பட்டன. best employee அவார்டுக்கு மாதம் ஒருவரை தேர்ந்தெடுத்து உள்ளூர் பத்திரிக்கையில் போட்டோ மற்றும் 100 தினார் சன்மானம் (இன்றைய மதிப்பில் ரூ 22800). எனது அரேபிய டெபுடி CEO ஹவானா சுருட்டை கடித்துக்கொண்டு வியாழன் மாலை மீன் பிடிக்க தன் படகில் நெடுந்தூரம் கத்தார் எல்லை வரை சென்று புத்துணர்வுடன் மறுநாள் மாலை கரை திரும்பினான்(வெள்ளைக்காரர்கள் விரும்பும் மீன் பிடித்தல் பொழுதுபோக்கு). ஓவர்டைம் என்பதே சோம்பேறிகளுக்கானது என்ற உணர்வை உருவாக்கி, ‘ஆவரேஜா நீ ஓவர்டைம்ல எவ்ளோ அதிகம் சம்பாதிக்கிறயோ அதில் பாதியை இன்க்ரிமென்டா சம்பளத்தோட சேர்த்து விடறேன். இனி லேட்டா உக்கார்ரது உன் இஷ்டம், ஆனா பைசா கிடையாது’ என திட்டவட்டமாக புதிய விதிகள் கொண்டு வர, யார் லேட்டாக உட்காருவார்கள்!
ஆச்சு! பதினைந்து வருடங்களுக்கு முன்னால் செயல்படுத்திய 45 மணி நேரம் & 5 நாள் வாரத்துடன் இன்றும் பஹ்ரைன் ட்ராஃப்கோ நிறுவனம் வெற்றிகரமாக லாபத்துடன், வருடாவருடம் பங்குதாரர்களுக்கு அதிக டிவிடென்ட் கொடுத்துக்கொண்டு பணம் நிறைந்த (cash rich) நிறுவனமாக இயங்குகிறது.
பி.கு: இந்த பதிவு பரப்பளவில் சிறியதான மற்ற வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக குவெய்த், ஒமான், கத்தார் (துபாய், சவுதி சேர்த்தியில்லை) போன்ற சிறிய நாடுகளுக்கு பொருந்தும். உற்பத்தி நிறுவனங்களின் மாடல் வேறென்பதால் அவையுடனும் ஒப்பிட முடியாது. நாராயணமூர்த்தியின் 70 மணி நேரம் மற்றும் சுப்ரமணி அவர்களது 90 மணி நேர பரிந்துரைகளையும் ஒப்பிட இயலாது (அப்பாடா! தப்பிச்சேன் 🙂)

திருச்சி.. காரைக்குடி

 மாமியார் வீட்டிற்கு மருமகன் போகும்போது மனைவியருக்கு என்னவொரு சந்தோஷம்! பொதுவாக பெண்கள் என குறிப்பிடவே ‘மனைவியர்’ எனச் சொன்னேன். அடுத்த நாலைந்து நாட்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். காலையில் லேட்டாக எழலாம். டீ, காபி சப்ளை ஜரூரா இருக்கும். இந்த சமயம் மாத்திரம் ‘நீங்க ஓவரா ஸ்வீட் சாப்பிடறீங்க’ போன்ற அறிவுரைகள் இருக்காது.

இரண்டு மாத இடைவெளிக்குப்பிறகு காரைக்குடி பயணம். காலை 8.30 மணிக்கு பெங்களூர் ராமமூர்த்தி நகரிலிருந்து காடுகோடி (வொய்ட்ஃபீல்ட்) வழியாக காரை செலுத்த, சாலைகளில் கூட்டமே இல்லை. வட இந்திய, வடகிழக்கு பையன்கள் எல்லாம் ட்ரெயின் பிடித்து ஷங்க்ராந்தி கொண்டாட ஊருக்கு போய் விட்டிருந்ததால் ஸ்விக்கி, சொமேட்டோ பைக்குகள் இல்லாத வர்தூர்-சர்ஜாபூர் வழியாக சீக்கிரம் ஹோசூர் வந்தடைந்தோம்.
புதியதாக கிருஷ்ணகிரி தொடாமல் ஹோசூரிலிருந்து தர்மபுரிக்கு உபரியாக போடப்பட்ட NH சாலையை பிடிக்க, சூளகிரி-ராயகோட்டை ரோடு சுமார் 20 கிமீக்கு குறுகலான வளைந்து வளைந்து செல்லும் அதி அபாயகரமான கிராமப்புற சாலை எனத்தெரிந்தது. நான் நினைத்ததுபோலவே நடந்தது. பைக் ஒன்று மோதி ஏதோ காரின் முன் கண்ணாடி உடைந்து சிலந்தி வலை போலத் தெரிய, வலைக்கு பின்னால் துல்கர் சல்மான் சாயல் பையன், KL ரிஜிஸ்டர்ட் வண்டி.
சேலம்-நாமக்கல் சாலையில் வண்டியை 100 கிமீ தாண்டாமல் செலுத்துவது ஒரு சுகானுபவமான 45 நிமிடப்பயணம். பொதுவாக நாமக்கல் ருக்மணி அம்மாள் உணவகத்தில் தான் லஞ்ச் எடுத்துப்போம். நேற்று எங்கள் கம்யூனிட்டி சமையல் போட்டியில் உஷா கலந்துகொண்டு மீதமிருந்த இரண்டிரண்டு தயிர் வடைகளே இன்றைய லஞ்ச் என அறிக.
நாமக்கல்-தொட்டியம் நான்கு வழிச்சாலை வழியாக முசிறி தாண்டியதும் இடது பக்கம் திரும்பி காவிரி பாலத்தை கடக்காமல் நேராக செல்ல முடிவு செய்தோம். பேட்டைவாய்த்தலை, பெருகமணி, சிறுகமணி, முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை போன்ற சிற்றூர்கள் காவிரிக்கு அந்தப்பக்கம். நாங்கள் இந்தப்பக்கம் மரங்களடர்ந்த குணசீலம் சாலையில் இயற்கையின் அழகை ரசித்தபடி வந்தோம்.
ஆஹா! நான் படித்த செஞ்சோசஃப்ஸ் காலேஜ் மற்றும் லாலி ஹால். எதிரே இன்னும் அதே சஃபையர் லாட்ஜ். மதியம் சாப்பிட்ட மினி லஞ்ச் பசியைக்கிளறவே திருச்சி மெயின்கார்ட் கேட் பக்கம் டிபன் சாப்பிடலாமென நினைக்கும்போது பழம்பெரும் ஆதிகுடி காபி கிளப் நினைவுக்கு வரவே, சிங்காரதோப்பு பக்கம் வந்தோம்.கெயிட்டி தியேட்டர் எங்கே? பாவி மூடிட்டானா! ஒரு காலத்தில் அங்கே நின்று ஷோலே பேனரை ரசிப்பேன். இரத்த சிகப்புக் கலர் பின்புலத்துடன் அம்ஜத்கான் போஸ்டர், உயர்த்திய கைகள் கட்டப்பட்டு லம்பாடி பாவாடையுடன் பசந்தி (ஹே.மாலினி) ‘ஹா.. ஐப்தக் ஹெ ஜான்’ என கண்ணாடித்துண்டங்கள் மீது குதித்து பாதங்களில் இரத்தம் சிந்தி ஆடினாலும் எல்லா திருச்சிக்காரனும் (அடியேன் உட்பட) அவள் அழகைத்தான் ரசித்து பாரத்துக்கொண்டிருந்த காலம் அது.
ஜாபர்ஷா தெரு தாண்டியாயிற்று.. எங்கே ஆதிகுடி காபி க்ளப்? ஐயோ.. அந்த இடத்தையே இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அடுத்த பில்டிங் சுவர் முழுக்க புகை அடுப்புக்கரி கருப்பாக, ஆதிகுடியை நினைவுபடுத்தியது. பட்னம் பக்கோடா, கெட்டி சட்னி, அசோகா அல்வா, காபி மற்றும் வாழை இலை வாசனையை மறக்க முடியுமா!
பெரிய மார்க்கெட்டை அடுத்து இடது பக்கம் தஞ்சாவூர் ரோடு. கொஞ்சம் தள்ளி வலது பக்கம் வரகனேரி. ஒரு காலத்தில் அந்தப்பக்கம் போக தைரியம் வேணும், அங்கே ரௌடிகள் அதிகம். உங்களுக்கு ஆள் வைத்து யாரையாவது அடிக்க அடியாட்கள் உதவி தேவையா! சிறந்த முறையில் சகாயமான விலையில் கைகால்கள் உடைத்துக்கொடுக்கப்படும். என் அத்தை பையன் ஸ்கூல் புத்தகத்துக்கு அட்டை போட மறந்து போய், பயந்துகொண்டே வாத்தியாரிடம் ‘நாளைக்கி கண்டிப்பா அட்டை போட்டு கொண்டு வரேன் சார் என்றதும் ரௌடி வாத்தியார் சொன்னது: ‘அட்டை போட்டு வரலன்னா கொட்டைல அடிப்பேன்’. அந்த ஏரியாவை கடக்கும்போது வரகனேரி பற்றி மனைவியிடம் சொன்னேன்(ரௌடி வாத்யார் தவிர).
வரகனேரியை அடுத்த பால் பண்ணை அருகே முன்பிருந்த காலி மைதானத்தை காணோம். அப்பல்லாம் அங்கே பாம்பே சர்க்கஸ் போடுவான். சிங்கமோ ஏதோ ஒன்று பின் பக்கம் இருந்து வூஊஊஊம் என இடைவிடாமல் கர்ஜித்துக்கொண்டே இருக்க, சில்க் பேண்ட் மற்றும் அதன் மேலே வெல்வெட் ஜட்டியுடன் இளைஞர்கள் வெகு உயர பாரில் தலைகீழாக தொங்கிக்கொண்டும், அவர்கள் கைகளை பற்றிக்கொண்டு குறுக்கா நெடுக்கா பறந்து கடைசியில் மேல் ஊஞ்சலுக்கு ஜங்கென வந்து சேரும் புஷ்டியான மலையாள சேச்சிகளை இரண்டு தடியன்கள் தாவி இழுத்துக்கொள்வார்கள். ஸ்கூலில் படிக்கும்போதே சர்க்கஸ் வேலை கிடைக்காதா என ஏங்கியதுண்டு.
சென்னை பைபாஸ் ரோடு சங்கீதாஸ் ஹோட்டலில் காரை நிறுத்தும்போது சவ ஊர்வலம் ஒன்று ஓயாமாரி சுடுகாடு நோக்கி கடந்து போனது. இறந்தவரின் நெஞ்சை அநியாயத்துக்கு மேல்பக்கம் நிமிர்த்தி கட்டியிருந்தார்கள் (வீர மரணம் அடைந்திருப்பாரோ!) முன்பெல்லாம் அந்த அமரர் ஊர்தி முன்னால் தான் தாரை தப்பட்டையுடன் டான்ஸ் இருக்கும். ஆனால் இப்போது வண்டியின் மேலேயே இறந்தவரது கால் மாட்டில் நின்றபடி ஒருவர் உருமி மேளம் அடித்து கானா பாட்டு பாடவும் செய்து கொண்டிருந்தார். செம்ம பாடல் வரிகள்ப்பா! :
‘ஒழச்சி ஒழச்சி நீ ஓடானே..!
எழுத படிக்க நீ ஏடானே..
எழுத படிச்சாலும்.. இந்த வரியில் நீ என்ன ஆனே என்பது சரியாக காதில் விழவில்லை ’ (வீடியோவ பாருங்க)
அக்கா ஊரில் இல்லாததால் திருச்சி சுப்ரமணியபுரத்தில் இந்த முறை ஹால்ட் இல்லை. அங்கேயே ரோட்டோரத்தில் இஞ்சி, மஞ்சள் செடி, பூக்கள், வெல்லம், நெய், முந்திரி, கிஸ்மிஸ், ஏலம் (சக்கர பொங்கலுக்கு) வாங்கிக்கொண்டு காரைக்குடி மாமியார் வீட்டிற்கு அடுத்த ஒன்னேகால் மண்ணேரத்தில் வந்து சேர்ந்தோம்.

காரைக்குடியில் பால்யநட்பு

 காரைக்குடியில் இன்று மதியம் தரமான உணவுகள் கிடைக்கும் மல்லீஸ் கிச்சன் உணவகத்தில் அளவில்லா சாப்பாடு நமக்கு. ‘கின்னத்துல பருப்பு வச்சிருக்கீங்க சரி, தனியா நெய் கிடைக்குமா’ எனக்கேட்டு முடிக்கும் முன் ‘நெய் அதுலயே விட்ருக்கோம்’ என பதில் டக்கென வந்தது சர்வரிடமிருந்து. தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி ஆப்பம், வெங்காயம் தூவிய கார ஆப்பம் என நம் எதிரிலேயே ஆச்சி ஒருவர் சுட்டு சுட்டு வைக்கிறார்.

ஜனங்கள் உள்ளே வந்துகொண்டிருக்க, சட்டென ஒருவர் தனியாக உள்ளே வருவதை பார்த்தேன். அவர் இடம் தேடி ஒரு டேபிளில் உட்கார்ந்ததும் எழுந்து போய் நேரே அவர் முன் உட்கார்ந்து
நான்: ‘எப்படி இருக்கீங்க சௌக்கியமா?’
லேசான திகைப்புடன் அவர்: ‘நல்லா இருக்கேன்.. நீ.. நீங்க?’
‘நீங்க திருச்சில படிச்சீங்க, சரியா?’
‘ஆமா! நீங்க எப்பிடி?’
‘எங்கூட ஹைஸ்கூல் செஞ்சோப்ஸ்ல படிச்சீங்க.. பி.யு.சியும் 1977ல’
‘ஆமாங்க. ஆனா உங்கள நான்…’
‘பி.யு.சி முடிச்சி REC ல இஞ்சினீயரிங் கெடச்சி போயிட்டீங்க. சரியா!’
‘ஆர்.இ.சி இல்ல, சிதம்பரம் அன்னாமலைங்க. சரி..நீங்க எப்பிடி…!’
‘என்னங்க நாம தென்னூர் ஜெனரல் பஜார் தெருவுலயே தான ஒரு குரூப்பா சேர்ந்து, அந்த ஐயரு வீட்ல கிரிக்கெட் மேட்செல்லாம் சேர்ந்து பாப்பம். பூஜையெல்லாம் பண்ணி வெப்பாரே!’
‘ஆமாங்க, பூஜையில்ல, அவரு ஜோசியம் பாக்கறவரு. நீங்க அப்ப…?’
‘ஜோசியரோட மூத்த பையன் நமக்கு சீனியராச்சே. பெல்லுல (BHEL) வேல பாத்தாப்ளயே! ’
‘ஆமாங்க.. கரெக்டா சொல்றீங்க. அவரோட தம்பி நடராஜன் கரூர் வைஸ்யா பேங்க்ல அப்பத்தான் வேலைக்கு சேர்ந்தாப்டி. இப்ப ஜி.எம்மா ரிடையராய்ட்டார்’
‘ஞாபகம் இருக்கு, தேசப்பற்று உள்ளவரு. அவரு நடந்து போறச்ச ஜனகனமன பாட்டு கேட்டா அப்பிடியே அட்டென்ஷனா நிப்பாரு நடுரோட்ல, தேசிய கீதம் முடியற வரைக்கும்’
‘ஆமா.. ஞாபகம் வச்சிருக்கீங்க. நீங்க யாருன்னு இன்னம்…’
‘என்னங்க, கண்டுபிடிக்க முடியலயா? நீங்க பட்டாபிராம பிள்ள தெருவுலர்ந்து வருவீங்க. நாங்கூட அந்த ஜோசியர் வீட்டுக்கு பின்னால பென்ஷனர் காரத்தெருவுலர்ந்து வருவேன். பாதி நேரம் அவங்க வீட்லயே தான கெடப்போம்! கருப்பா குள்ளமா இருப்பேனே அப்ப!’
‘இப்பவும் அப்பிடித்தான் இருக்கீங்க. வயசும் ஆயிடுச்சு. ரொம்ப சாரி. கண்டு பிடிக்கவே முடில உங்கள’
‘நான் ஶ்ரீதர்ங்க. எனக்கு பி.யு.சி மார்க் பத்தாம RECயெல்லாம் கெடைக்காம அலகாபாத் யுனிவர்சிட்டில டிகிரி முடிச்சி, CA படிச்சிட்டு பாம்பே, கல்ஃப்னு போய்ட்டு இப்பத்தான் பெங்களூர்ல செட்டிலானேன்’
‘அலகாபாத்.. அட.. ஆமாங்க இப்ப தான் ஞாபகத்துக்கு வருது. பி.யு.சி வரைக்கும் எங்கூட படிச்சீங்க. PUCல உங்களுக்கு என்ன பெர்சன்டேஜ்?’
‘அத இப்ப சொல்லி அசிங்கப்படனுமா ரமேஷ்? ஃபேஸ்புக்ல வேற எல்லாருக்கும் வேற தெரியனுமாக்கும்?. சரி பி.ஈ முடிச்சிட்டு என்ன பண்ணீங்க ரமேஷ்?’
‘நானா? அடுத்ததா கோவை பி.எஸ்.ஜில எம்.டெக் முடிச்சிட்டு அங்கியே ஃபேகல்டியா சேந்தேன். அப்பறம் பி.ஹெச்.டி முடிச்சிட்டு வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இஞ்சினீயரிங், ஶ்ரீபெரும்புதூர்ல ரொம்ப வருஷமா மெக்கானிகல் இஞ்சினீயரிங் ஹெட் ஆஃப் டிபார்ட்மென்ட்டா இருந்து இப்ப ரிடையர் ஆயிட்டேன்’
‘ஓ.. காரைக்குடி தான் சொந்த ஊரா?’
‘ஆமாங்க. சென்னை விருகம்பாக்கத்துல வீடு. மாசாமாசம் ஒரு தடவ இங்க வந்திடுவேன். நீங்களும் நகரத்தாரா?’
‘நாங்க கிராமத்துல இருந்ததில்ல. எப்பவுமே நகரத்தார் தான், திருச்சி, பெங்களூர்னு. காரைக்குடில மாமனார் அந்த சிங்கம் வெச்ச வீடு’
‘அட. நகரத்தார்னா, நீங்க செட்டியாரானு கேட்டேன். சிங்கம் வெச்ச வீடு தெரியும்’
‘ரொம்ப சந்தோஷம்ப்பா.. சாரி.. ப்ரொஃபசர் (டாக்டர்) ரமேஷ். ஹைஸ்கூல்ல ஒன்னா படிச்சு இத்தனை வருஷம், அதுவும் 47 வருஷம் கழிச்சு சந்திக்கிறோம்’
‘ஆமாம்ப்பா! ஒரு மிஸ் கால் குடு. சேவ் பண்ணிக்கிறேன்’
‘ சரி.. ஒரு போட்டோ எடுத்துக்கலாமே ரமேஷ்’
‘காலைல லேட்டா ஏந்திரிச்சேன். இன்னம் குளிக்கல, ஷேவ் பண்ல. பரவால்ல எடு ஶ்ரீதர்!’
‘இருக்கட்டும்ப்பா. நானும் இன்னம் குளிக்கலை. செந்தில் டவுசரோடவே சுத்திக்கிட்ருக்கேன்’
Prof (Dr). ரமேஷ். B.E., M.Tech., PhD எனும் இந்த பள்ளிப் பிராயத்து நண்பனிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று அமெரிக்கா மற்றும் பிற வெளிநாடுகளில் கோலோச்சி வருகிறார்கள். தவிர, 40 வருட டீச்சிங் அனுபவத்துடன் மெஷின் டிசைன் மற்றும் transmission systemக்கான மெஷின் டிசைன் பிரிவிலும் பாண்டித்யம் பெற்ற சிறந்த பொறியியல் நிபுணன் என அறிந்தேன்.
மிக எளிமையான தோற்றத்துடன் இன்னும் அதே தென்னூர்ப்பையன் போல அடக்கம். இவரது இரண்டு பையன்களும் அப்பாவைப்போல இஞ்சினீயரிங் படித்து சாஃப்ட்வேர் கம்பெனி மற்றும் Caterpillar போன்ற உலகின் சிறந்த கட்டுமானம் & சுரங்க எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி

 காரைக்குடியிலிருந்து பெங்களூருக்கு நேற்று காலை 7.30க்கு கிளம்பினோம். ஞாயிறு என்பதால் சாலையில் வாகனங்கள் அதிகமில்லை. மோட்டார் பைக்குகளுக்கென ப்ரத்யேகமாக வெள்ளைக்கோடு போட்டிருப்பினும் சட்டை செய்யாமல் நட்ட நடு ரோட்டில் ஹெல்மெட்டும் இல்லாமல் சிலர் அதிவேகமாக செல்வது கவலையளிக்கிறது. நான்கு வழிச்சாலையும் அல்ல என்பதால் அபாயகரமானது தான். புதுக்கோட்டை தாண்டும்போது நான்கு ரோடு சந்திப்பில் எந்தப்பக்கமும் பார்க்காமல் வாகனங்கள் படாரென குறுக்காக கடக்கின்றன, என்ன சொல்வது!

8.45க்கு திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு சங்கீதாசில் நல்ல கூட்டம். டேபிளுக்கு பெயர் கொடுத்துவிட்டு ஜனங்கள் காத்திருக்க, ‘இளையராஜா சார்-6 பேர் வாங்க’ என ஓட்டல் சிப்பந்தி ஒருவர் வரிசையாக கூப்பிட்டுக்கொண்டருந்தார். மினி டிபன் காபி முடித்துக்கொண்டு முசிறி-நாமக்கல் வழியாக சேலம் நோக்கி… தொட்டியத்திலிருந்தே நான்கு வழிச்சாலை. பின் இருக்கையில் மாமியார் இருந்ததால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் போகும் முடிவை மாற்ற வேண்டியதாயிற்று, அவர்களால் இறங்கி நடக்க முடியாதென்பதால்.
கார் எஃப்எம் ரேடியோவில் எனது அபிமான பாடலான ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்’ (கி.போ.ர). இதை விட அபாரமாக வேறு யாரும் பாட முடியாது என நான் சொல்ல, ‘ ஆமாம்.. ஆமாம்.. பாலசுப்ரமணியன் என்னமா பாடறார்!’ என சிலாகித்த மாமியாரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. 79 வயதிலும் பாடல் வரிகளை ரசித்த அவரது விருப்பப்படி பாடலைப்பாடியது SP மலேஷியா பாலசுப்ரமணிய வாசுதேவனாகவே இருக்கட்டும்.
நாமக்கல்-சேலம் ரோடு என்னைப்பொறுத்தவரை படு அம்சமான ரோடு என்பேன். ஸ்பாட்டிஃபையில் பி.சுசிலா பாடல்கள் ஓடிக்கொண்டு வாகனமோட்டுதல் சுகமானது. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, உன்னை ஒன்று கேட்பேன், மீனே மீனே மீனம்மா, தேவியர் இருவர் முருகனுக்கு, கண்ணா கருமை நிறக் கண்ணா போன்ற முத்தான பாடல்கள், வெளியே சீராக வழுக்கிக்கொண்டு சாலை, தூரத்தில் சேர்வராயன் மலை (என நினைக்கிறேன்).
வெகுநாட்களுக்குப்பிறகு ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் (ரோஜாவின் ராஜா) பாடலை கேட்கிறேன். என்ன அழகான குரல் வளம் P. சுசிலாவிற்கு. SSLC படித்துக்கொண்டிருக்கும்போது பார்த்த படம். வாணிஶ்ரீ கண்கலங்கி உருக்கமாக பாட, எதிரே சிவாஜியும் ஏவிஎம் ராஜனும் சோகத்துடன், அந்தப்பக்கம் வரலட்சுமியும் மேஜரும். அக்காட்சியில் ஏவிஎம் ராஜன் அழாமல் இருந்தது ஆச்சரியம். பாடலின் முதல் சரணத்திற்கு முன் இடையிசையில் (சோகப்பாடலாக இருந்தும்) எம்எஸ்வியின் விசில் இசை பாடலின் தரத்தை தூக்கிப்பிடித்தது என்பது உண்மை (செருகப்பட்ட வீடியோ பார்க்க!)
சேலம் தாண்டி இன்னபிற பாடல்களை கேட்க ஆரம்பித்து, ‘நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்’ போன்ற லிரிக்ஸ் ஏனோ கேட்க போரடித்து (அபாரமான இசை என்றாலும்) டக்கென ரேடியோ எஃப்எம்முக்கு மாற்றினேன் (நெஞ்சு பொறு குஞ்சு பொறு, வீசுகிறேன் பூசுகிறேன்னுகிட்டு!)
நண்பர் Prasanna R குறிப்பிட்டிருந்த தர்மபுரி-ஹோசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை (கிருஷ்ணகிரி தொடாமல்) ராயக்கோட்டை வழியாக.. அருமை. நேரமின்மையால் இருட்டும் முன் பெங்களூர் சென்றடைய வேண்டியிருந்ததால் அடுத்த முறை சாவகாசமாக சந்திக்கலாம் ப்ரோ!
ஹோசூர் தாண்டி பெங்களூர் பார்டரில் ஶ்ரீநிதி வைபவா உடுப்பி ஹோட்டல். முப்பதுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதி, 200 பேர் கொண்ட இருக்கைகள். தரமான பலகாரங்கள் கிடைக்கும். டேங்க்கை காலி செய்து விட்டு உள்ளே நுழைந்து பாவ்பாஜி, மைசூர் பஜ்ஜியுடன் ஒரு வாரத்திற்குப்பிறகு கூர்க் ஃபில்டர் காபி!
5 நாள் காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருச்சி பயணத்துடன் இவ்வருட பொங்கல் பண்டிகை இனிதே நடந்து முடிந்தது.

கோலார் பண்ணை ஸ்ட்ராபெர்ரி பிக்கிங்..


திருட்டுத்தனமாக மாந்தோப்பு சுவரேறிக் குதித்து, கல்லெறிந்து மாங்காய் அடித்து, தோட்டக்காரன் நம்மை துரத்தி பிடிப்பதெல்லாம் அந்தக்காலம். தற்போது அதுவே வணிகமயமாக்கப்பட்டு, அந்த தோட்டக்காரனே (நாம் சும்மா இருந்தாலும்) நம்மை துரத்திப்பிடித்து ‘காசை குடுத்துட்டு எவ்ளோ வேண்ணாலும் பறிச்சிக்கோ’ என கேட்கும் வைபவத்திற்கு மாங்கோ பிக்கிங், செர்ரி பிக்கிங் என நாமகரணங்கள் சூட்டி… அடடா! வரவேற்கப்படவேண்டியது தான் இதுபோன்ற பிக்னிக்குகள்.
பஹ்ரைன் நண்பர்கள் நாங்கள் ஐந்து குடும்பங்கள் காலை பெங்களூரிலிருந்து கிளம்பி சுமார் 50 கி.மீ தொலைவில் கோலார் மாவட்டம் நோக்கி ரோடு மார்க்கமாக பயணம். நடுவே மாலூரில் உடுப்பி உபஹாராவில் சூடான பொங்கல் சாப்பிட, காரை ஓட்ட கொஞ்சம் தெம்பு கிடைத்தது.
பொட்டை வெயிலில் KMC பண்ணை எதிரே சுமார் 20 கார்கள். ஓரளவு கூட்டம். ஆண்களும் பெண்களும் தலையில் குல்லா, குளிர் கண்ணாடி சகிதம் சின்ன சின்ன குழந்தைகளுடன் கையில் கூடை ஏந்தி வரப்புகளின் நடுவே புகுந்து, தரையோடு படர்ந்துள்ள சின்ன சின்ன செடிகளுக்குள்ளே ஒளித்து கொண்டிருந்த பழுத்த, செந்நிற ஸ்ட்ராபெர்ரி பழங்களை கண்களில் ஆச்சரியம் மின்ன பறித்தது வித்தியாசமான அனுபவம். தூரத்தில் ‘கல்யாண வளையோசைச்செண்டு!’ பாடல் கேட்பது போன்ற பிரமை எனக்கு.
பறித்த பழங்களை அங்கேயே பண்ணைக்காரர்களிடம் கொண்டு சென்று எடை பார்த்து காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். பழங்களை பறிக்கும்போதே சத்தம் போடாமல் ஓரிரண்டு பழங்களை சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே லபக்கென மொஸ்க்கிக்கொண்டபோது தான் கவனித்தேன், மற்றவர்களுக்கும் வாய் சிவந்திருந்தது.
ஸ்ட்ராபெர்ரி ஜாம், பெர்ரி+வாழைப்பழ ஜாம் என அமோக வியாபாரமும் அங்கே. ஸ்ட்ராபெர்ரி சோடா எனப்படும் பிழிந்த பழச்சாறு கலந்த பிஸ்லேரி சோடாவை மதகஜராஜா படத்தைப்போல ர(ரு)சித்தோம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கோலார் நகரம். உடனிருந்த பஹ்ரைன் நண்பர் ஹரிஷ்-நந்தினி தம்பதியின் டாக்டர் மகளது இல்லம் கோலார் நகரில். தனது கணவருடன் எங்களை வரவேற்ற அவள் பஹ்ரைன் இந்தியன் ஸ்கூலில் என் பையனின் ப்ளஸ் டூ பேட்ச்மேட்.
‘நீங்கள்லாம் காபிய குடிச்சிட்டு பக்கத்துல கோலாரம்மா குடி(கோவில்) மற்றும் சோமேஷ்வரர் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க. டின்னர் ரெடியாயிடும் ’ என மருமகன் சொல்ல, உடனே கிளம்பினோம். 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய கோயில்களாம். செதுக்கப்பட்ட தூண்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் பிரமிக்க வைத்தன. கோலாரம்மா காளியைப்போல உக்கிரத்துடன் தேள் வாகனத்துடன் காட்சியளித்தாள். தலப்புராணத்தை தெலுங்கில் விளக்கினார் அர்ச்சகர்.
கோலாரில் சகஜமாக எல்லோரும் தெலுங்கு பேசுவதை கவனித்தேன். கன்னடம் முழுதும் கற்காமல் ‘அவ்தா, கொத்தில்லா, எஷ்டு, ஏனு’ என எத்தனை நாள் தான் நான் சமாளிப்பது! பெங்களூரிலேயே தெலுங்கு தாராளமாக பேசலாம். எல்லோருக்கும் தெலுங்கு தெரிந்திருக்கிறது. முல்பாகல், பலமனேர் போன்ற சிற்றூர்களிலும் தமிழ், தெலுங்கு பேசுகிறார்கள். அடுத்த ஒரு மணி நேரப்பயண தூரத்தில் சித்தூர். அங்கேயும் ‘ஆமாங்கோ.. வருவாங்கோ.. குட்துக்கிறாங்கோ’ தான். அதையடுத்து ராணிப்பேட்டை.
ப்ரோக்கோலி சூப், ரகடா பட்டீஸ், தாய்(Thai)க்கறி+அரிசி, மங்களூர் ரசம், என திவ்யமான சாப்பாட்டுடன் அவர்களது தோட்டத்தில் Bon fire நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அரட்டையடித்தோம். மருமகன் படு கூலாக ரசத்தை மொண்டு எங்கள் தட்டில் விட்டுக்கொண்டும், தனது இல்லத்தை அலங்கரிக்கும் ஓவியங்களை ஆர்வத்துடன் காண்பித்துக்கொண்டும் இருந்தார்.
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமுடன் அவர்கள் விடை கொடுக்க, ஆக்ஸிலேட்டரை அழுத்தி அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹோஸ்கோட்டே, ஹூடி, கிருஷ்ணராஜபுரம் கடந்து வீடு வந்து சேர இரவு 12 மணியாகி ‘குட் மார்னிங், நாங்க வீடு வந்து சேர்ந்துட்டோம்’ என வாட்ஸப் பரிமாற்றங்களுடன் படுக்கையை அடித்தோம் (ஏன் அடிக்கனும்! hit the bed ன்னு சொல்ல வந்தேன்)