Tuesday, March 31, 2015

ரவி( Vijaya Raghavan)

எங்கள் வீட்டில் கடைக்குட்டி இவன் தான். என்னை விட இரண்டே வயது இளையவன். என்னுடன் சேர்ந்து பயங்கரமாக லூட்டியடிப்பான். எப்போதும் துருதுருவென ஏதாவது கலாட்டா செய்துகொண்டு வீட்டில் அடி வாங்குவது எங்களுக்கு வழக்கம். 

அதிலும் எனக்கு மூத்தவள் லத்துவை (லதா Hemalatha Manohar ) சீண்டிக்கொண்டே இருப்பதில் எனக்கு எப்போதும் கம்பெனி கொடுப்பான்.... தென்னூர் வண்டி ஸ்டாண்டு வழியாக அக்காவை கூட்டிக்கொண்டு அம்மா, பேலஸ் அல்லது ஜுபிடரில் 'நினைத்ததை முடிப்பவன்' பார்க்க போகும்போது நாங்களிருவரும் கெஞ்சிக்கொண்டேபின்னால் போவதுண்டு. நிச்சயம் எங்களை கூட்டிப்போக மாட்டார்களென்பதால் அடுத்து அவர்களை கடுப்பேத்த வேண்டுமே! 'லத்தூஊஊஊ...' என பின்னாலிருந்து சத்தம் போடுவோம். 'பொது இடத்துல பொம்பளப்புள்ள பேரைச்சொல்லி கூப்பிடாதேன்னு எத்தனை தடவ சொல்றது?' என நடுரோட்டில் அடி விழும்.

மார்கழி மாதம் காலை 4 மணிக்கு அம்மா எங்களை எழுப்பியவுடன் குளித்து விட்டு திருப்பாவையில் அன்றைய பாசுரம் படித்துவிட்டு, பட்டாபிராம் பிள்ளைத்தெரு பெருமாள் கோவில் சக்கரைப்பொங்கல் வாங்க ஓடுவோம். வந்தவுடன் படிக்க உட்கார வேண்டும் என்பது நியதி. லத்து படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கமுள்ளவள். நடுவே அப்படியே தூங்கிப்போய் விடுவாள். அதற்காகத்தானே நானும் ரவியும் காத்திருப்போம். மெதுவாக சத்தம் போடாமல் அவள் பக்கம் நகர்ந்து அவளது புத்தகத்தையெல்லாம் மூடிவைத்து விட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அவளையும் பெட்சீட்டால் தலை வரை போத்தி விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி படித்துக்கொண்டிருப்போம். அடுத்த சில நிமிடங்களில், எழுந்து வரும் அம்மாவிடம்'ரெய்யே...சதுவ்வே! (எழுந்திருடி...படிடி)' என அடி விழும்.

தென்னூர் அக்ரஹாரம், ஈ.பி. தாண்டி வாமடம் வழியாக ஃபோர்ட் ஸ்டேஷனுக்குள் புகுந்து ஸ்கூல் போவோம்(செயின்ட் ஜோசப்). கல்லோ, மாங்கொட்டையோ அல்லது நாம்போட்டிருக்கும் செறுப்பை காலால் ரோட்டில் உதைத்தவாறே நடந்து போவது வழக்கம். போகும் வழியில் ரோட்டில் போகும் எல்லோரையும் சத்தாய்த்துக்கொண்டே போவோம். 'ஏய்யா! பாத்திமா ஸ்கூல் எங்க இருக்கு?' என கேட்கும் கிராமத்து பெருசுகளுக்கு எதிர் திசையை காட்டி விடுவோம்.

தென்னூர் அமிருதீன் ஆஸ்பத்திரி எதிரே உள்ள பரோட்டா கடையில் சாப்பிட எங்களுக்கு ரொம்ப நாள் ஆசை. கையில் காசு இருக்காது. ஒரு நாள் கொஞ்சம் காசு சேர்த்து இருவரும் புரோட்டா சாப்பிடப்போனோம். ஒரு புரோட்டா 15 காசு. சர்வர் ஆளுக்கு 2 புரோட்டா வைத்து மேலே குருமாவை ஊற்ற, புரோட்டாவை நன்றாக பிசைந்து ரசித்து சாப்பிட்டோம். 'இன்னங்கொஞ்சம் குருமா உத்துப்பா' என ஆர்டர் வேறு. 60 காசு பத்திரமாக இருக்கிறதாவென கால்சராய் பாக்கெட்டையும் அப்பப்ப தொட்டுப்பார்த்துக்கொண்டோம். சாப்பிட்டவுடன் கையலம்ப எழும்போது தான் கவனித்தோம், கல்லாவின் அருகே ஒருபோர்டில்..’1.04.1973 முதல் பரோட்டா ஒன்றின் விலை 20 காசு.’ என எழுதியிருக்க, 'ஆஹா.. மாட்னா அடிப்பானுங்களே!' ஒரே பயம்... ரவி சொன்னான் ' கெஞ்சல்லாம் வேண்டாம்டா... சண்டை போடற மாதிரி ட்ரை பண்ணுவோம்'. உடனே குரலை உயர்த்தி ..'என்னங்க இது? வெலைய ஏத்திட்டு...முன் கூட்டியே சொல்லலாம்ல? போர்டும் சரியா தெரீலயே!' என சத்தம் போட்டோம்(உள்ளுக்குள் உதறல்..)… ‘ டேய்.. பசங்களா! வெலயெல்லாம் ஏத்தி ஒரு வாரமாவுது..சரி.. இருக்கறத குடுத்துட்டு ஓடுங்கடா' என அவன் விரட்டியும் ' 'அதெப்பிடிங்க?...' என சும்மாவே கத்துவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தது மறக்க முடியாது.


கோலி, பம்பரம், கில்லி தாண்டு என எல்லாவற்றிலும் என்னுடனிருந்தவன். கல்லூரி படிக்கும்போதும் என்னுடன் சேர்ந்து சுற்றியவன். திருச்சி மன்னார்புரம் அரசு குடியிருப்பு காலனியில் நாங்கள் வசித்தபோது ஒருமுறை பால்கனியில் உட்கார்ந்துகொண்டு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தான். 'படிக்கறப்போ எதுக்கு முகம் பார்த்துக்கிட்டு படிக்கனும்?' என அம்மா அதட்டிவிட்டு அந்தப்பக்கம் போனதும், மெதுவாக என்னைக்கூப்பிட்டு அவன் கண்ணாடியை காட்டியபோது தான் தெரிந்தது, அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்புற ப்ளாக்கின் ஜன்னலிலிருந்து ஒரு பையனும் பக்கத்து பில்டிங் ஜன்னலிலிருந்து ஒரு பெண்ணும் சைகையால் பேசிக்கொண்டிருந்தது. மறுநாள் 'அப்பிடி என்னடா ரெண்டு பேரும் விழுந்து விழுந்து பால்கனியில் படிக்கறீங்க' வெனஅம்மாவும். கேட்டு விட்டுப்போனார்கள்.

இருவரும் சில வருடங்கள் பம்பாயிலும் சேர்ந்து வேலையிலிருந்தோம். மதிய உணவு இடைவேளையில் மிட்டல் கோர்ட் வாசலில்பாவ் பாஜி, திருநெல்வேலி அண்ணாச்சி கடையின் மசால் தோசை சாப்பிட்ட நாட்கள் பல. நான் பஹ்ரைன் வந்த ஓரிரு வருடங்களில் அவனும் இந்தப்பக்கம் வந்துவிட்டான். தற்போது மஸ்கட்டில் வங்கியொன்றில் வேலை. நடுவே அவன் பஹ்ரைனிலும் வங்கியொன்றில் 5 வருடங்கள் இருந்துவிட்டுப்போனது மறுக்க முடியாது. எங்களை மாதிரி எங்கள் பையன்களும் சேர்த்து செஸ், ஃபுட்பால் என சேர்ந்து விளையாடியவர்கள். இருந்தாலும் நாங்கள் கலக்கிய மாதிரி பையன்கள் லூட்டியெல்லாம் அடித்தமாதிரி தெரியவில்லை

இன்று 52 ஆவது பிறந்த நாள் காணும் என் தம்பி ரவி( Vijaya Raghavan)க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment