Thursday, March 19, 2015

7.83 ஹெர்ட்ஸ் (க.சுதாகர்)-REVIEW


'அறிவியல் புனைக்கதையில் தட்டுப்படும் இப்படியான இலக்கிய விசாரத்தை ஆங்கில ஸைஃபியில் கூடப்பார்த்தது இல்லை....சுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார்'- இரா. முருகன்
ஏதோ ஹோட்டலின் உட்புறம். வெகு சிலர் உணவு அருந்திக்கொண்டிருக்க மூலையில் அமர்ந்து அவன் ஏதோ குடித்துக்கொண்டிருந்தான். அமைதியான முகம்..திடீரென அவன் கண்கள் விரிந்தன.சிரித்துப்பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினருகே நெருங்கினான்....கையில் ஃபோர்க் மற்றும் கத்தி.மிக அருகில் இருந்த
ஒருவனை பின் மண்டையில் தாக்கினான். அடுத்து இருவர் தரையில் சாய்த்தனர். பெண்கள் அலறி எழுந்தனர். கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நிதானமாக சுட ஆரம்பித்தான். இரு நிமிடங்களில் கனத்த மவுனம். குப்புறக்கிடந்த சிறுமியின் உடலிலிருந்து கசியும் கருப்பான புது ரத்தத்தை ஈக்கள் மொய்க்கத்தொடங்கியிருந்தன..
இப்படிப்போகிறது... நண்பர் Sudhakar Kasturi யின் இரண்டாவது நாவலின் கதை. இவரது முதல் நாவல் 6174, வம்சி புக்ஸ் வெளியீடு. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினால் '2012ம் வருடத்தின் சிறந்த நாவல்' விருதினையும், கலகம் அமைப்பின் 'சிறந்த நாவல்-2012' விருதினையும் பெற்றது.
கதையிலிருந்து மேலும்.....
மேலே சொன்ன அமைதியான இளைஞனின் திடீர்த்தாக்குதல் ஸைஆப்ஸ்(psyops)இன் ஒரு வகையாம். அதாவது 'ஒரு மனிதனின் மனம் என்பதின் ஆளுமையை மற்றவர் முழுதும் எடுத்துக்கொண்டு அவர்கள் விரும்பியதை தொலைதூரத்திலிருந்தபடி நடத்திக்கொள்வது.
'நமக்கெல்லாம் அதிர்வெண் இருக்காம்..நாம அமைதியா இருக்கறச்சே 7.83 Hzல இருக்குமாம். ஆனா அது சீரா இருக்காதாம்.மூடுக்குத்தகுந்தமாதிரி மாறுமாம். ELF (extremely low frequency) மூலமா பெரிய நிலப்பரப்பில் அத்தனை மனிதர்களுடைய இயற்கை அதிர்வெண்ணை மாற்றிவிட முடியுமாம்.
பெயர் அறியாத மரத்தின் கிளையில் குத்திட்டு அமர்ந்து இரவில் அந்த ஓநாய்க்கூட்டத்தை காமிராவில் பதிவு செய்யும் பெண்...இறைச்சிக்காக ரத்தம் சொட்டச்சொட்ட சண்டையிடும் ஓநாய்கள்....
போலீஸ் என்கவுன்ட்டர்..
'தீப்பிடிக்காத துணிய இடுப்புக்குக்கீழே கட்டியிருக்கான்'..'ஆசனவாயில் முழுசா கொலோன் வரை சுருட்டிய ப்ளாஸ்டிக் உறையை சொருகியிருக்கான்'
பெங்களூர், மைசூர், ஜம்மு..., டெல்லி கன்னாட் ப்ளேஸ்...
ஆயுதமேந்திய வீர்ர்கள்...ஆயுதக்கிடங்கு...
காலாண்டாக்மைக்ரோ அசால்ட் துப்பாக்கிகள்...benelli CBM&2 மாடர்ன் துப்பாக்கி..
வனவிலங்கு மரபியல் துறை...
ஒன்றை ஒன்று தாக்கி ஏராளமாக இறக்கும் சில்கா ஏரி மீன்கள்...
விதவிதமான துப்பாக்கிகளின் பெயர்கள்... அதற்கு விளக்கங்கள்...
கதை முழுக்க சுதாகரின் வர்ணனை மற்றும் தமிழ் புகுந்து விளையாடுகிறது. சிம்பிளான ஆனால் அருமையான தமிழ் வார்த்தைகள். பொய்க்கூரையாம் ( false ceiling)...
சென்ற மாதம் நான் துருக்கி போய்வந்த பின் பயணக்கட்டுரைக்கு எழுத துருக்கியின் சரித்திரம் சம்மந்தப்பட்ட பழைய நிகழ்வுகளை கஷ்டப்பட்டு தேடித்தான் எழுதினேன். ஆனால் இக்கதையில் துருக்கியின் சரித்திரம் பற்றி (எர்ஜரம் நகரம்...அடாடர்க் பல்கலைக்கழகம்..) நிறைய தகவல்கள் எழுதி அசத்திவிட்டார் சுதாகர்..
அப்பப்பா.... அடுத்தடுத்து மாறும் காட்சிகள்..திருப்பங்கள்... பகீரென ஒர் இடம்...( விக்ரமும் போலீஸ்காரரும் மரங்களடர்ந்த பாதையில் நடந்தனர். பெரிய தொட்டிகள் இருக்கும் பகுதியை அடைந்தனர். மிகப் பெரிய தொட்டிகள். க்வாய் நதியின் நீர் சிறு கால்வாய்களில் வழியே அதில் நிரப்பப்பட்டிருந்தது. பச்சையான நீரலைகள் மெல்ல சலசலக்க பாசியும் மீனுமாக கலந்த ஒரு நாற்றம் புழுங்கிய காற்றில் அடர்ந்திருந்திருந்தது.
விக்ரம் சலசலப்பு கேட்டு திரும்பினார். பச்சை முதுகில் வெள்ளைத்திட்டுக்களோடு இருந்த பெரும் மீன்கள் பெருத்த சலசலப்புடன் நீரில் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அந்த பச்சை நீரிலும் அவை சண்டையிடக்காரணமான ஒன்று விக்ரமிற்கு ஒரு கணம் தன்னைத்தெளிவாக காட்டி கீழே ஆடியாடி வேகமாக ஆழத்தில் அமிழ்ந்தது.....மனிதனின் கை) ........போதுமா?
மொத்தம் 226 பக்க கதையில் கடைசி 60 பக்கங்களுக்கு கூடுதல் பாராட்டு தேவை. காரணம் அந்த 60 பக்கங்களை இரண்டு பாத்திரங்கள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்பவர்கள். ஒன்று ஓநாய்(கள்)...மற்றொரு பாத்திரம் 'வேதநாயகம்'..
'எலும்பு துருத்தும் ஃப்ரேமில், சுருங்கிய பளபளத்த தோல் போர்த்திய அந்தக்கிழவர்,அழுக்கு பனியனில் திருநெல்வேலி ஆரியபவனில் வாழை மட்டை கொண்டு டேபிள் துடைப்பவரைப்போல் இருப்பவ'ராம்.
திருநெல்வேலி இல்லாம சுதாகர் கதையா? சவத்தெளவு..
'ஏவுட்டீ ருக்மணி...எம்பைய எடுத்து வையி...பத்து நாளு இந்த எழவெடுத்தவனோட போயிட்டு வாறென்' போன்ற வட்டார வழக்குத்தமிழ் மூலம் திருநெல்வேலி மீதுள்ள உங்கள் அன்பை வெளிப்படுத்தி திருப்தி பட்டுக்கொண்டீர்கள் சுதா!
..ஓநாய்களைப்பற்றி சில இடங்களில் சுதாகர் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே சிலிர்ப்பூட்டும்படியாக இருக்கின்றன. (ஓநாய்களுக்குள் சண்டை. பெண் ஓநாய்களுக்காகவும் இடத்தைக்கைப்பற்றவும் நடக்கும். புது தலைவனுக்கு முதல் வேலை, தனது மரபினை வளர்ப்பது. குட்டிகள் இருக்கும் வரை பெண் புணர்வுக்கு இணங்காது. எனவே புதுத்தலைவன், பழைய தலைவனின் குட்டிகளைக் கொன்று குவிக்கும். இது இயற்கையின் தேர்வு.)
இன்னொரு இடத்தில் ...'ஓநாய் அடிச்சா, முதல்ல தலைல கழுத்துலதான் கடிக்கும். பாரு... வயிறு இன்னும் முழுசாக்கிழியல. ஓநாயா இருந்தா, இந்த வயிறு இருக்கிற இடத்தில வெறும் ஓட்டை தான் இருக்கும . இருக்கறதுலயே கொடூரமான வலி வந்த சாவு ஓநாயி கொல்றதுல தான். மத்ததெல்லாம் இரைய கொன்னுட்டுத்திங்கும். ஆனா, இந்த சவத்தெளவு, தின்னுகிட்டே கொல்லும்'.
இதுக்கு மேல எழுதினா சுதாகர் என் மேல கேஸ் போட்ருவார். மதிப்புரை, விமரிசனம் எல்லாம் எழுதுவதை விட எனக்கு பிடித்த சில பகுதிகளை அப்படியே காப்பி செய்து காண்பித்தால் சுவாரசியமாக மற்றவர்கள் முழு கதையை படிக்கலாம்.
நிறைய இடங்கள், அத்தியாயங்கள் இரண்டு முறை படித்தால் தான் புரியும் அளவிற்கு அவ்வளவு டெக்னிகல் சமாசாரங்கள்...
'7.83 ஹெர்ட்ஸ்' கதைய அரக்க பரக்க படிக்காமெ, நிதானமா ஒவ்வொரு வரியையும்
ரசிச்சுப்படியுங்க... அது தான் எழுத்தாளர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்பது என் கருத்து...
70களில் ஒரு மதிய வேளையில், திருச்சி ஜங்ஷன் பகுதி ப்ளாசா தியேட்டரில் ஓமர் முக்தார் ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு (இடைவேளையில் முட்டைகோசு போண்டா, டீ சாப்ட்டு) வெளியே வரும்போது கிடைக்கும் திருப்தி.....7.83 ஹெர்ட்ஸ் படித்ததில்.

No comments:

Post a Comment