Thursday, March 19, 2015

ஆருயிர் நண்பன்



ஆருயிர் நண்பன்.. பால்ய சிநேகிதன். சென்ற வாரம் சென்னையில் ஒரு நாள் முழுவதும் அவனுடன் தான். காலை மெரினா வாக், சிற்றுண்டி, மதியவேளை உணவு மற்றும் இரவு உணவு என ஏதாவது ஒரு சபா கான்டீனில்...
1981இல் திருச்சியில் ஆரம்பித்த நட்பு ..
நற்குணங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவன்..பெரியவர்களை மதித்தல் (எல்லாம் நீங்க சொல்லி குடுத்தது தானே மாமா!)..
முன்பின் தெரியாதவர்களையும் தன் ஜோசிய அறிவால் வசீகரப்படுத்துதல் ( you seem to be very focussed sir! என்ன ராசி/நட்சத்திரம் நீங்க? நெனைச்சேன்..கைய குடுங்க ஸார்...அமோகமா இருக்கு உங்க ஜாதகம்)...
ஒருவரை மற்றவர்க்கு அறிமுகப்படுத்தும்போது அவன் பிரயோகிக்கும் flattering உத்தி ( இவன் வீட்டுல காய் நறுக்கறத பாத்திருக்கீயா இவளே? அய்யோ! ஒரொரு பீன்சும் அளந்தா அரை இன்ச்சு கரெக்டா இருக்கும்)...
ஒருவர் செய்யும் சுமாரான வேலையையும் பார்த்து ( ச்சமத்துடா நீ.. கெளப்பற..)...
ஆபிஸில் பாஸ் கிட்டியே...'அது ஒண்ணுமில்ல ஸார்.. உங்க கிட்ட ஒரு பயம் கலந்த மரியாத.. நன்னா திட்டிடுங்கோ ஸார் என்னை'
இருங்க...இருங்க..அவசரப்படாதீங்க.. அவன் வெறும் முகஸ்திதிக்கு சொல்றதா நினைக்க வேண்டாம். அலுவலகத்திலோ, நட்பு வட்டத்திலோ சிலரிடம் bluntஆகவும் பேசக்கூடியவன்.
தனது குழந்தைகளைப்பற்றி எப்போதும் பெருமையாக பேசி நம்மை கொல்பவர்களிடம்…("தப்பா எடுத்துக்காதீங்க.. இதைவிட அருமையா சில குழந்தைங்க பண்றாங்க)..
எவ்வளவு நெருக்கமானவர்களிடமும் ( சில சமயம் உனக்கு அஸர்டிவ்நெஸ் போதாதுடா ஸ்ரீதர்)...
ஹோட்டலில் (அரே யார்.. துமாரா தால் மெ நமக் நஹீ யார்)..
அலுவலகத்தில் (don't take me for granted.. understand?)
அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டான். நாங்கள் படிக்கும் காலத்தில் அவனது பேட்டையான திருச்சி பொன்மலை ரயில்வே காலனி சர்ச் பகுதியில் அழிச்சாட்டியம் செய்த ஆங்கிலோ இந்தியனை 'எவன்டா அந்த ஆப்ப' என அவன் கால்களுக்கிடையில் சைக்கிளை விட்டுத்தூக்கியவன்(விவேக் மாதிரி).
'நான் பிறவியில் ஊமை.. உதவி செய்யவும்' என கழுத்தில் போர்டு மாட்டி, ஆர்மரி கேட் அருகே CA பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்த
எங்களிருவரை அணுகிய ஒருவன் சட்டைக்காலரை கணபதி கோத்துப்பிடித்து 'உனக்கு பேச்சு வராதா? அடிங்...எங்க பேசுடா..' என ஒரு அறை விட 'சார் உட்ருங்க' வென அந்த 'பிறவி ஊமை' கத்தினான்.
பணியில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஏதாவது 'பாண்டுரங்க விட்டலா' என பஜனை பாடலை முணுமுணுத்தவாறே வேலையை முடித்துவிடுவான்.
12 வருடங்கள் பஹ்ரைனில் ஒரு குறுநில மன்னன் மாதிரி வலம் வந்தான். ஊருக்கு போனால் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப ஆறேழு பேர்..திரும்ப வரும்போது ரிஸீவ் பண்ண ஆறேழு பேர்.
மலையாளி, யூபி பையா, பங்களாதேஷி, பாகிஸ்தானி, பலுச்சி, சிறிலங்கன் என அவசர உதவிக்கு ஓடிவர ஏகப்பட்ட ஆட்கள் அவனுக்கு.
பஹ்ரைன் விட்டுப்போய் சென்னையில் ஒரு பிரபல சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த
14 வருடங்கள்...
ஆபீஸ் தான் கோவில். பாஸ் தான் மூலவர். எப்போதும் அவர் புகழ் பாடுவான் (சும்மா இல்ல..மனதார). அவனுக்கு ரோல்மாடல் அவர்தான்.( பாஸ் எனக்கும் நண்பர்.. அவரை பற்றி தனிப்பதிவே போடலாம்)
'கணபதி! ஏர்போர்ட் கிட்ட இருக்கேன். வண்டி நின்னு போச்சு' என பாஸின் போன் வந்த மறுநிமிடம் போன் கால்கள் பறக்கும். மயிலாப்பூரிலிருந்து கபாலி, ஆறுமுகம் எல்லோரையும் அங்கே விரட்டி, பின்னால் தானும் தண்ணீர் பாட்டிலோடு (குடி தண்ணீர்தான்) அங்கே ஓடுவான்.
எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் excel செய்து திறம்பட முடிப்பவன். பொய், சால்சாப்பு கிடையாது. பாஸை தனியாக வீட்டில் காலை வேளை சந்திக்கும்போதோ அல்லது அவருடன் மெரினா வாக் போகும்போதோ நிறைய காரியங்களை முடிக்கும் கில்லாடி. அவசியமென்றால் அவர் வீட்டு பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிக்கொண்டு போய் அவனே மாட்டுக்கு கொடுப்பதும் சில சமயம் நடக்கும். 'ஶ்ரீதரா..வேற யாருடா நம்பள இப்பிடி நல்லா பாத்துக்கறா?..'
நிறுவனத்திற்கு ஆடிட் மட்டுமல்லாது IT துறையில் நிறைய வருமானமும் லாபமும் ஈட்டித்தருகிறான் என்ற நல்ல பெயர் வேறு. வேறு வேலை தேடவே முடியாது. பொழுதன்னைக்கும் கஷ்டப்படும் யாருக்காவது வேலை போட்டுத்தருவது.. கோவில் பணிகளுக்கு நன்கொடை தாராளமாக கொடுப்பது..
endless லிஸ்ட் சார்..
வாழ்க்கையில் நான் ஏறும் ஒவ்வொரு படியும் கணபதி போட்டது. எனது குடும்பத்திற்கும் நிறைய உதவிகள்... கடந்த 28 வருடங்களில் நான் இதுவரை செய்த/செய்துகொண்டிருக்கும் (பஹ்ரைன் உட்பட) வேலை ஐந்தும் கணபதி மூலம் கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தில் பார்ட்னர் ஆகும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ள, இன்று பிறந்த நாள் காணும் ஸ்நேகிதன் கணபதி, வாழ்க்கையில் மேலும் மேலும் சிறந்தோங்கி, அவனது குலதெய்வமான தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற வேண்டுகிறேன்.. அவனது இக்கரிக்கட்டி ஓவியத்துடன்...

No comments:

Post a Comment