Thursday, March 19, 2015

சிவகுமார் மாமா...




'ஶ்ரீதரா..சிவகுமார் மாமாவ மறக்காம பாத்துட்டுப்போ... உன்ன அடிக்கடி விஜாரிக்கிறார்' என Ganapathi Subramanian சொல்லவும் உடனே கிளம்பினேன். மாமா வீடு நான் தங்கியிருந்த வாசன் தெருவை அடுத்து முப்பாத்தம்மன் கோவிலுக்கு வெகு சமீபத்தில் ராமச்சந்திரா தெருவென நினைக்கிறேன். தொலைபேசியில் ஆனந்தி மாமிக்குத்தெரிவித்து விட்டு அடுத்த 10 நிமிடத்தில் அவர்கள் வீட்டில் நான்.
'வாப்பா ஶ்ரீதர்... எப்பிடிப்பா இருக்கே...' சிவகுமார் மாமா ஆனந்தி மாமியின் அதே வாஞ்சையான பேச்சு.... மாமி அதே மாதிரி தான் இருக்க மாமா (81) மட்டும் கொஞ்சம் களைத்திருந்த மாதிரி இருந்தது.
படிப்பை முடித்தவுடனேயே பஹ்ரைன் வந்து gulf air இல் சேர்ந்து நாற்பது வருடங்கள் ஆகி ரெவன்யூ அக்கவுன்ட்ஸின் தலைமைப்பதவியிலிருந்தவர் மாமா.
தினமும் மாலை மற்றும் வெள்ளியன்று அவரைப்பார்க்க அவரது உம்-அல்-ஹாசம் ஃப்ளாட்டுக்கு ஜனங்கள் வந்துகொண்டே இருப்பது வழக்கம். கணபதி தான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியவன். கஜ்ரியா எலெக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் தலைவர் லால்ஜி கஜ்ரியா, கேவல்ராம் க்ரூப் சேர்மன், அமெரிக்கன் எம்பஸியின் பாகிஸ்தான்காரர் குப்தாஜி என பஹ்ரைனின் முக்கிய புள்ளிகள் அவரது நணபர்கள். பக்கத்து ஃப்ளாட்டில் கல்ஃப் டெய்லி நியூஸ் எடிட்டர் சோமன் பேபி...எஸ்.வி.சேகர் டிராமா போன்ற ஏதாவது நிகழ்ச்சிக்கு மாமா தலைமை தாங்கினால், உடனே மாமாவின் போட்டோவை சோமன் பேபி பேப்பரில் போட்டு விடுவார். கீழ் தளத்தில் டாக்டர் மாலா...
உஷா மற்றும் குழந்தைகளை மாமா மாமி விசாரித்து விட்டு பஹ்ரைன் நாட்களை நானும் மாமாவும் கொஞ்சநேரம் அசைபோட்டோம் கின்னத்தில் குலாப்ஜாமூனோடு.
மாமாவின் நகைச்சுவைக்காகவே அவரைச்சுற்றி எப்போதும் ஒரு பட்டாளம் இருக்கும். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரே ஜோக் ... சிரிப்பு மயம் தான். ஒரே நேரத்தில் அடுக்கடுக்காக 10, 15 ஜோக்குகள் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பவர்.கோபமே வராது. எப்போதும் சாந்தமான மலர்ந்த முகம். ரொம்ப பாசிடிவ். மாமாவின் பலமே மாமி தான். மாமிக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருந்தது.
அப்போது Gopala Sundaram மாமாவும் பஹ்ரைனில் இருந்தார். தம்பி.. தம்பி என அவரை சிவகுமார் மாமா ஆசையோடு அழைப்பது வழக்கம். கோ.சு.மாமா வழங்கிய ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாமா கடைசியில் அவரை வாழ்த்திப்பேசும்போது 'இதுவரை நம்மை எல்லோரையும் விசா,டிக்கட் இல்லாமல் அனுமனுடன் லங்கா கூட்டிச்சென்ற தம்பி கோபாலசுந்தரத்திற்கு நன்றி' என முடிக்க ஒரே கரகோஷம்.
அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது மாமாவின் பழைய ஹாஸ்யத்தை அவரிடம் தேடினேன். 1995இல் ரிடையர் ஆகி கடந்த 20 வருடங்கள் சென்னையில்..
மாமா பஹ்ரைன் விட்டுக்கிளம்பும் முன் அவரது சென்டாஃப் பார்ட்டிக்கு தடபுடலான ஏற்பாடுகள். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், டிராமா, மாமாவின் ஓவியத்தை நான் வரைந்து மேடையில் அவருக்களித்தது, இந்தியன் அம்பாசடர் சிறப்பு விருந்தினர்...என எல்லாம் முடிந்து கடைசியில் மாமாவின் உரை..சுமார் 20 நிமிடங்கள் வரிசையாக ஜோக்குகள்... அழுகையினூடே எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் மாமா..( 'என்னடா சோகமா இருக்கே?..'
'கிரிக்கெட் விளையாடறேன் மாமா..'
'அதான் உன்ன வெளையாட்ல சேத்திக்கிட்டாங்களே! அப்பறமென்ன சோகம்? உன்ன விக்கெட் கீப்பரா ஆக்கலையா?'
'இல்ல மாமா என்னய தான் விக்கெட்டா நிக்க வெச்சிருக்கா')
அந்த ஹாஸ்ய உணர்வு இப்போதில்லையா? மாமா கண்களில் ஆசையுடன் தனது பழைய நண்பர்களை ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருக்க,
ஜோக்குகள் சொல்லும் மாமாவை மட்டும் நான் தேடினேன்.
கிளம்பும் முன் மறக்காமல் மாமா மாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 19 வருடங்கள் முன் நான் வரைந்த அவரது ஓவியம் ஹாலை அலங்கரித்துக்கொண்டிருந்தது. கிளம்ப மனசில்லை எனக்கு.. ஏதோ ஒரு உறுத்தல். பஹ்ரைனில் எங்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த மாமா இப்ப இல்லியா? விடை பெற்றுக்கொண்டு மாமா மாமியிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வாசல் பால்கனி வழியாக படியிறங்கும் முன் மறுபடியும் தயக்கம்...
'மாமா.. உங்க கிட்ட ஒன்னு கேக்க...' நான் முடிக்கவில்லை...
'அந்த சேரை இழுத்துப்போட்டு இப்பிடி உக்காருப்பா'... மாமாவுடன் மாமியும் சேர்ந்து கொள்ள.. "மாமா... நீங்க முந்தி சொன்ன ஜோக்கெல்லாம் ஞாபகமிருக்கா? இப்பவும் நாங்க அந்த ஜோக்கெல்லாம் மத்தவங்களுக்கு சொல்லிகிட்டிருக்கோம்... என்ன.. ஒன்னு...நீங்க சொல்ற ஸ்டைலே தனி.."
மாமி உடனே..., 'அந்த சர்க்கஸ் ஜோக் சொல்லுங்க' என எடுத்துக்கொடுக்க மாமா கண்களில் ஒரு மின்னல் கீற்று...பிரகாசம்.. தொண்டையை சரிசெய்து நெஞ்சை நிமிர்த்தி சடசடவென பெய்யும் மழை மாதிரி ஆரம்பித்தார்...
1. வேலையே கிடைக்காத ஒருத்தன் ஒரு சர்க்கஸ் மேனேஜரான்ட போயி 'சார் எனக்கு வேல ஒன்னுங்கெடைக்கல.. எதாவது வேல போட்டுக்கொடுங்க.. நான் பி. காம்' னானாம்.
'இந்தாப்பா.. நம்ப கரடிக்கி ரெண்டு நாளா வயறு சரியில்ல... நீயி கரடி வேஷம் போடறியாப்பா?' என சொல்லி அவனுக்கு கரடி வேஷம் போட்டு கூண்டுக்குள்ளாற தள்ளினாங்களாம். சிங்கம் ஒன்னு அவன பாத்து ஒடி வர, 'அய்யய்யோ இப்ப நா என்ன பண்றது சார்' ன்னு இவன் கத்த, கிட்ட வந்த சிங்கம் 'பயப்படாதப்பா.. நான் எம்.காம்'னுச்சாம்.
2. சினிமா டைரக்டர் கிட்ட ஒருத்தன் போய் 'சார் நீங்க எந்த ரோல் வேணும்னாலும் குடுங்க.. நா நடிக்கிறே' ன்னு கேட்டானாம். 'சரிப்பா கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் பரவால்லியா? அந்த புலிக்கூண்ட தொறந்து விட்ருவோம்..அது உன்ன தொறத்தும்.. நீ நேரா ஒடி அந்த மரத்து மேல ஏறி அங்கயிருக்கற துப்பாக்கி எடுத்து சுடனும்... என்ன புரிஞ்சுதா' ன்னு கேட்க, அவன் பதிலுக்கு ' எனக்கு புரியறதிருக்கட்டும்.. அந்த புலிக்கு மொத புரிய வைங்க'ன்னானாம்.
3. பக்கத்து ஃளாட்ல இருந்து தொபேல்.. தொபேல்னு சத்தம்..பையன போட்டு அடியோ அடின்னு அடிக்கறார் அந்த ஃப்ளாட்டுக்காரர். இந்த ஃளாட் காரர் ஓடிப்போய் ' என்ன சார் என்னாச்சு? பையன போட்டு இந்த அடி அடிக்கறீங்க?'
அதுக்கு அவர் 'பின்ன என்ன சார்.. மாசம் மூவாயிர்ரூவா ஃபீஸ் கட்டறேன். மூனுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல இவனுக்கு'
'உங்களுக்குத்தான் சார் சன்னுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல.. இது எங்காத்துப்பையன்'
4. வேல வெட்டியில்லாத ஒருத்தன் ஒரு சரக்கஸ் கம்பெனி போனானாம். 'தம்பி உனக்கு ஜோக்கர் வேல. தெனமும் நீ 20 இட்லி, 10 தோசை, 15 பூரி சாப்டனும். எல்லாரும் கை தட்டுவாங்க..'
'சரிங்க சார் நா நல்லா சாப்டுவேன்'
' தம்பி.. ஆனா ஒரு நாளைக்கி 3 ஷோ பரவால்லியா'
' இருக்கட்டும் சார்.. அதுக்கென்ன இப்ப?'
'மாசம்பூராவும் ஷோ இருக்கும் பரவால்லியா?'
'இருக்கட்டும் சார்'
'ஞாய்த்துக்கெழம மட்டும் 5 ஷோ..சாப்டுவியா?'
'சாப்டுவேன் சார்..ஒரு சின்ன ரிக்வஸ்ட் சார்'
'என்னப்பா?'
' மத்தியானம் ஒரு மணிக்கி ஒரு 10 நிமிசம் வீட்டுக்கும்போவனும்'
'எதுக்குப்பா?'
'வீட்ல சுறுக்க சாப்ட்டு வந்துடறேன்'
அப்பாடா..அதே பழைய சிவகுமார் மாமாவ பாத்துட்டேன்...ஆயிரம் பிறை கண்ட அவர் பல்லாண்டு வாழ்க...

No comments:

Post a Comment