Thursday, March 19, 2015

வெங்கடாச்சாரி செல்லப்பா...



'ஹாய்..ஐ அம் செல்லப்பா...' ன்னு காதில் விழுந்தா பொதுவாக எல்லோருக்கும் 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் ஞாபகம் தான் வரும். பஹ்ரைனில் மட்டும் அப்படிக்கிடையாது. இங்கயும் ஒரு செல்லப்பா இருக்கார். இவருக்கும் கிட்டத்தட்ட நாகேஷ் மாதிரியான உடலமைப்பு...ஆனால் நல்ல உயரம். எனது சி.ஏ. நண்பர். ஒரு வங்கியில் வைஸ் பிரெஸிடென்ட்டாக இருக்கிறார். மஸ்கட்டிலிருந்தபோது என் தம்பி Jani Vijay Raghavan க்கும் நல்ல நண்பர்.

சில பேருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவும் திருச்சி பற்றியென்றால் சொல்லவே வேண்டாம். செல்லப்பா மேற்படி ஆசாமி...

பொங்கல் தினத்தன்று போன் செய்து 'உங்க வீட்டுக்கு இப்ப கிளம்பி வரலமா?' என செல்லப்பா கேட்டதும் குதூகலம் எனக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் நம்ம வீட்டில் ஆஜர். பெண்ணின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு நம்மை அழைக்க மனைவி ஜெயலட்சுமி (Jayalakshmi Chellappa) யுடன் வந்திருந்தார்.

கும்பகோணத்துக்காரரான இவர் திருச்சியைப்பற்றி சகலமும் தெரிந்தவர். தனது சி.ஏ.படிக்கும் பருவத்தில் நிறைய நாட்களை திருச்சியில் அனுபவித்திருக்கிறார். நண்பர் ( Vijayaraghavan Krishnan) விஜிக்கு நெருங்கிய உறவு.

ஶ்ரீரங்கத்தில் எல்லா தெருக்களும் அவருக்கு அத்துப்படி. உத்திர வீதி, சித்திர வீதி, அடையவளைஞ்சான் தெரு என எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடிய நாட்களை சிலாகித்துக்கொண்டிருந்தார். எதிரே கின்னத்தில் வைக்கப்பட்ட சக்கரைப் பொங்கலில் இருந்து ஒரு விள்ளல் மட்டும்..மனுஷன் ரொம்ப ஸ்ட்ராங்...இனிப்பு அதிகம் எடுத்துக்கறதில்லையாம். டீ, காபி ப்டாதாம். அந்த ஒரு மணி நேரம் ஏகத்துக்கும் பேசினோம்.

ஶ்ரீரங்கத்தின் அந்தக்கால எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள், காரைக்குடியில் எங்களுக்குத்தெரிந்த ராகவா அய்யங்கார் பாத்திரங்கடை, ஶ்ரீரங்கத்து வீட்டுச்சுவர்களில் கிரிக்கெட் பந்து பட்ட அடையாளங்கள் என நிறைய அலசினோம். திருச்சியில் ராபர்ட் க்ளைவ், மாலிக் கபூர், உல்லுக கான், முகமது பின் துக்ளக், சந்தா சாகிப் போன்றோர் மண்டைகளையும் அவ்வப்போது உருட்டினோம்.

ரிலீஸ் ஆகும் முன்பே டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் காஸெட்டில் 'காக்கிசட்டை' பார்த்தது, பிஷப் ஹீபர் ஸ்கூலில் சி.ஏ. பரிட்சை எழுதும் நாட்கள், கடைசி பரீட்சை (காஸ்டிங்) முடிந்த அன்றே படம் பார்க்க ஓடுவது என அவர் தனது திருச்சி நாட்களை எடுத்து விட நானும் ஆட்டோகிராஃப் திறந்தேன்....ரிஸல்ட் அன்று டென்ஷனை மறக்க ப்ளாஸாவில் நூன் ஷோவுக்கு '5 man army', மதியம் மாரிஸில் 'சகாதேவன் மகாதேவன்' பார்த்துவிட்டு, மாலையில் சின்னக்கடை வீதி சி.ஏ. சாப்டரில் ரிஸல்ட் பார்த்தவுடன் ()அந்த ஏரியாவை விட்டே ஓடி, 'என்னாச்சு ரிசல்ட்?' எனக்கேட்டு எதிரே வரும் நண்பர்களிடம் 'அக்ரிகேட்ல போயிடுச்சு' எனப்புளுகி, கவலையை மறக்க மறுபடியும் சோனாமீனாவில் 'கன்னி ராசி' மாதிரி ஏதோ ஒரு படம் நைட் ஷோ..

திருச்சில உங்களுக்கு லால்குடி வி.கே.வி.யத்தெரியுமா, அப்பறம் அந்த ஜீயபுரத்துல இருந்து ரமேஷ் வருவானே...அவனத்தெரியுமா.. அவங்க மாமா வீடு கீழப்புலிவார் ரோடு..என காமன் ஃப்ரெண்ட்ஸ் பற்றி விஜாரிப்புகள்...

மனசுக்குள் 30,35 வருடங்கள் முந்தின ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது....
சாயங்காலம் 5 மணிக்கு மேல் குளித்துவிட்டு ஜோதி டெய்லரிடம் தைத்த டபுள் நெட் பாண்ட்டுக்குள் சட்டையை இன் பண்ணி, ரோலிங் கோம்பில் சிகையை கோதி வாரி, ஜிப் வைத்த ஆங்க்கிள் ஷூ அணிந்து, மன்னார்புரம்/காஜாமலை நால்ரோட்டில் பஸ் பிடித்து, சோஃபீஸ் கார்னரில் இறங்கி, ஹோலி க்ராஸ் பெண்கள் கல்லூரி வழியாக நடந்து, பஸ்ஸுக்கு நிற்கும் அத்தனை பெண்களும் ஏதோ நம்மைத்தான் பார்க்கிறார்களென நாமே முடிவு செய்து கொண்டு, மைக்கேல் ஐஸ்க்ரீம் பார்லர் போன்ற 'அவுட் டேட்டட் 'ஸ்தலங்களை தவிர்த்து, சிங்காரத்தோப்பு 'ஸீ கிங்'கில் போனியெம், ஆபா (abba) பாடல்களுக்கு புரியாமல் தலையசைத்து, வெனில்லா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, 'தைலா'வை க்ராஸ் செய்து செயின்ட் மாரிஸ் தோப்பு வழியே கிலேதார் ஸ்ட்ரீட் மான்ஷனில் நண்பர்களை மானாவாரியாக அழைத்துக்கொண்டு, முருகன் டாக்கீஸ் (சாது மிரண்டால்) எதிரே டீ சொல்லி, டீ வரும்வரை கண்ணாடி பாட்டிலிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு, பாபு ரோடு வழியாக சின்னக்கடை வீதியில் நுழைந்து மேலும் கீழும் இரண்டு மூன்று முறை உலாத்தி, மலைவாசல் முன் பிள்ளையாருக்கு லைட்டாக தோ.கரணம் போட்டு, கோபால் புக் டெப்போ பக்கத்தில் எல்.ஜி நன்னாரி சர்பத் அல்லது சிந்தாமணி வாசலில் இஞ்சி எலுமிச்சை சேர்த்துப்பிழிந்த கரும்புச்சாறு அல்லது நந்தி கோவில் தெரு ஐயங்கார் பேக்கரியில் காபி குடித்துவிட்டு, பக்கத்துக்கோயிலின் நெற்றி நிறைய குங்குமத்துடன் 88A ( கே.கே. நகர்) பஸ் பிடித்து, உட்கார இடமிருந்தும் உட்காராமல் கம்பியில் முதுகைச்சாய்த்து நின்றுகொண்டு, எட்டாக மடித்த டிக்கெட்டை மோதிரத்துக்குள் செருகிக்கொண்டு, 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' பாட்டு கேட்டு, இறங்குவதற்கு ஒரு நிறுத்தத்திற்கு முன்பே பி. அன்ட்.டி ஸ்டாப்பில் ஃபுட்போர்டுக்கு மாறி, இறங்கும் ஸ்டாப்பிற்கு சில அடிகள் முன்பே ஓடும் வண்டியிலிருந்து ஸ்டைலாக இறங்கி, யாரும் நம்மை பார்த்தார்களாவென ஊர்ஜிதம் செய்து புளகாங்கிதமடைந்து, வீடு போய்ச்சேர்ந்து 'சித்ரஹார்' ல் ஜாக்கி ஷ்ராஃப் மீனாட்சி சேஷாத்திரி ஜோடி ( தூ மேரா ஜானு ஹை) பாடல் மற்றும் ஃபரூக் ஷேக்-திப்தி நவல் படம் பார்த்து, சாப்ட்டு பத்து பதினோரு மணிக்கு மேல் எதிர்காலம் பற்றிய லேசான பயத்துடன் புத்தகங்கள் சகிதம் படிக்க உட்கார்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொட்டாவி விட்டு, சடுதியில் உறங்கிப்போன நாட்கள் பல..

திடுதிப்பென வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அளவலாவி அந்தக்கால திருச்சி நாட்களை நிறைவு கூர்ந்த நண்பன் செல்லப்பாவிற்கு நன்றிகள்...

என்பதுகளில் திருச்சியில் நாங்கள் அனுபவித்த மாதிரி வாழ்க்கையை வேறு யாரும் அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்..

No comments:

Post a Comment