Thursday, March 19, 2015

மவுண்ட்பேட்டன் மணி ஐயர் காண்டீன்...


காலை 6 மணிக்கு எழுந்து தி.நகரிலிருந்து ஆட்டோ பிடித்து மயிலாப்பூரில் கணபதி வீடு போய்ச்சேர்வதற்குள் அவனிடமிருந்து போன். ஹைதராபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு ஓடி வந்துவிட்டான். நேராக கடற்கரைக்கு கூட்டிப்போனான். ஒரு மணி நேரம் வாக்கிங்.
ஸ்வச் பாரத் எஃபெக்ட் பீச்சில் தெரிந்தது. பள்ளிக்குழந்தைகள் பீச்சை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஏவியெம் சரவணன் அங்கு வருவாரென கேள்விப்பட்டதால் வெள்ளைச்சட்டையணிந்தவர்களையெல்லாம் உற்றுப்பார்த்துக்கொண்டே நடந்தேன். அங்கே இளநீர், அருகம்புல் சாற்றை விட அல்லோவிரா ஜூசுக்கு நல்ல டிமான்டு போலும்.
முதல் நாள் தண்ணியடித்துவிட்டு சிமென்டு தரையில் படித்தவர்கள் Z வடிவத்தில் தூங்கிக்கொண்டிருக்க, மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு காவி உடையில் ஒரு பெருசு செல்போனை காதில் வைத்துக்கொண்டு புன்னாகவராளி ராகத்துப்பாடல் ஏதோ கேட்டுக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்.
திரும்ப மயிலாப்பூர் சிவசாமி சாலை வந்தோம். 'தம்பி அடுத்த லெஃப்ட் எடுப்பா'வென கணபதி சொல்ல டிரைவர் இந்திராணியம்மாள் தெருவுக்குள் நுழைந்து ஶ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா முன் வண்டியை நிறுத்த கணபதி 'ஶ்ரீதரா இந்த சபா காண்டீன்ல டிபனை முடுச்சுக்கலான்டா..இங்க டேஸ்ட் பண்ணிப்பாரு'...டேஸ்ட்டா அது..
'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் அநேக நமஸ்காரம்' போர்டு எங்களை வரவேற்றது. உள்ளே சுமார் 150 பேர் உட்காரலாம். வடை சாம்பார் வாசனை சும்மா தூக்கியது. இன்றைய ஸ்மெஷல் சாக்லேட் தோசையாம். கமக ம வாசனை நெய்ப்பொங்கலிலிருந்து சர்வ ஜாக்ரதையாக மிளகுக்கூட்டங்களை விலக்கி, முந்திரியை ஆதரவுடன் சேர்த்து ஒரு விள்ளலை ஆசையுடன் எடுத்து, அடையாள அணிவகுப்பு மாதிரி வரிசையாக நின்ற ரெட் சட்னி, தே.சட்னி, சாம்பாரில் முக்கி எப்போது வாயில் போட்டேனென தெரியவில்லை... தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பற்களில் மாட்டிய முந்திரியை மென்று, டிஷ்யூ பேப்பரில் வழியும் மூக்கை துடைத்துக்கொண்டு மூக்கு மேல் சரிந்திருந்த கண்ணாடியை சற்று மேலே தூக்கி சுற்றிலும் பார்த்தால் ஈரம் சொட்டும் தலையுடன் ஆங்காங்கே கணவன் மனைவிகள் நெய் ரோஸ்ட்டை பெட்சீட் மாதிரி மடித்து கெட்டிச்சட்னியை மேலே கொட்ட, இந்தப்பக்கம் சின்னப்பையன் ஒருவன் பூரியை ஆள்காட்டி விரலால் குத்தி வெளியே வரும் ஆவியை வாயால் ஊவென ஊதினான்.
கணபதிக்கு மதுரம்னா இஷ்டமாச்சே. இன்றைக்கு காசி அல்வா, அசோக் அல்வா, சூர்யகலா, சந்த்ரகலா. மால்புவா, ஒப்புட்டு...அஞ்சு பாக்கெட் அசோகா அல்வா வீட்டுக்கு டேக் -அவே சொன்னான். டபரா டம்ளரை இரண்டு முறை மட்டுமே சுற்றி சக்கரை முழுவதும் கரைவதற்க்குள் மடக்கென்ன காபியை வாய்க்குள் கவிழ்க்க நாக்கில் காரசட்னியின் சுவையும் காபியின் சிக்கரியும் ஜுகல்பந்தி நடத்தின..மவுண்ட்பேட்டன் மணி ஐயர் வாழ்க.
சாயங்காலம் மறுபடியும் மியூசிக் அகாடமி போய் மூன்றாம் தளத்தில் அமர்ந்து .., உமையாள்புரம்+கார்த்திக்+ சிக்கில் கச்சேரியை ரசித்து 8.30க்கு கீழே வந்து பூரன்போளி, ராகி இடியாப்பம், தட்டு இட்லி, புளிப்பொங்கல் சாப்பிடதை விரிவாக எழுத ஆசை தான்.. மணி இப்பவே இரவு 12.. ஒரு மணிக்கு ஷார்ஜா ஃப்ளைட் செக்கின் செய்யனுமே..
இரவு வணக்கங்கள்...

No comments:

Post a Comment