Sunday, April 22, 2018

எது உன்னுடையதோ..2014 மீள்

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!)
(சீதாபதி ஶ்ரீதர்)
2014 மீள்

சூப்ஸ் என்கிற சுப்ரமணியன்-2015 மீள்


செம்பூர் செட்டா நகருக்குள் நுழையும்போதே ஜிலுஜிலுவென காற்று.. ஏராளமான மரங்கள். அமைதியான சூழல். பரபரப்பான பாம்பே தானா இது என சந்தேகம். சுமார் 60, 70 அடுக்குமாடி வீடுகள். நடுவே முருகன் கோவில். அங்கே வசிக்கும் முக்காவாசி பேர் தமிழர்கள். பல வருடங்களுக்கு முன் பம்பாய்க்கு குடியேறி அங்கேயே படித்து, மணமுடித்து, புத்திர சந்தானத்துடன் செட்டிலான பாலக்காட்டுக்காரர்கள். அல்லது நம்மூரிலிருந்து வேலை கிடைத்து வந்து சில பல வருஷங்களாக இருப்பவர்கள். திடீரென்று என்னை மாதிரி பம்பாய் விட்டு ஓடக்கூடியவர்கள்.
பம்பாய் தமிழ்ப்பெண்கள்? சுத்த வேஸ்ட் ஸார். ஆண் வர்க்‌கமே பிடிக்காத மாதிரி சீன் போடுவார்கள். சரி, தமிழ்ப்பொண்ணாச்சே என்று ஒருத்தியுடன் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வரும். அவள் தம்பி அதுக்கு மேல... பார்க்க மதமதவென்று போக்கிரி அசின் தம்பி கிட்ட விஜய் சொல்ற மாதிரி "குடும்பமே உப்புமா சாப்ட்டு" வளர்ந்த ஸ்தூல சரீரி. தமிழோடு ஹிந்தி கலந்து வெறுப்பேற்றுவார்கள். ("அந்த பங்க்காவ பந்து பண்ணு.. எட்டு மணிக்கு ப்ரோக்ராம் சாலு பண்ணுவாங்க.."). அதிலும் சில எக்ஸ்‌ட்ரீம்கள்... இந்த காஸ்ஸெட் அங்கே கிடைக்குமாவென்று கேட்டால் "அங்கே தோடி(ஹிந்தி) கிடைக்கும்" என பதில். 'அதுசரி..உங்கக்கா என்னடா பண்றா' என கேட்டால் 'தெர்லடா’ என பட்டென பதில் வரும், வயது வித்தியாசம் தெரியாமல் 'டா' போடும் தம்பிகள். ‘அதுசரி! அவங்க அக்காவை நீ எதுக்கு விஜாரிக்கனும்?’ என என்னை கேட்க நினைப்பவர்கள் அடுத்த பாரா போய்விடலாம். 😃
தமிழ்க்கார அப்பாக்கள் பலவகை. ஒன்று காலை 6 மணிக்கு காண்ட்ராக்ட் பஸ்ஸில் ஐய்ரோலி, தூர்பே, முலுன்டு பகுதியில் உள்ள PIL அல்லது ஏஷியன் பெயிண்ட்ஸில் வேலை செய்யும் சீனியர் ஸ்டேனோக்ராபர்கள். அல்லது டிபன் டப்பாவில் சப்பாத்தி எடுத்துக்கொண்டு 8.13 லோக்கலை பிடிக்க ஓடும் ரயில்வே சிப்பந்திகள், இன்கம்டாக்ஸ்/சச்சிவாலயா ஊழியர்கள். அல்லது மனைவியிடம் சள்ளென்று எறிந்து விழும் கொஞ்சம் கடுகடுவென முகத்துடன் சம்மந்தமில்லாத கலரில் பாண்ட் சட்டை, கழுத்தில் படு ஒல்லியான டை, சூட்கேசில் ஹிந்து பேப்பர், ரவுண்டு டிபன் டப்‌பா, ட்ரெயினில் படிக்க வென்ச்சர் காபிடல் மானேஜ்மெண்ட் புத்தகம் சகிதம் பர்ஸ்ட் க்ளாஸ்ஸில் பயணம் செய்யும் 'ஐ ஆம் shawreng pawni' என கை குலுக்கும் வைஸ் பிரெஸிடெண்டுகள். வந்தாரை எப்படியும் வாழ வைக்கும் பம்பாய்..
வேலைக்குப்போகும் பேச்சிலர்ஸ்...? தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு வந்த பேச்சிலர்ஸ் 2,3 வருஷம் யாராவது ஒருத்தியுடன் தாதர் சிவாஜி பார்க், ஜூஹூ பீச்சென ஊரெல்லாம் சுற்றி, ப்ரீத்தி உண்டாக்கி, ஒருமாத லீவுக்கு ஊருக்குப்போய் திரும்பி வரும்போது 'மாயவரத்துப்பொண்ண வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க' என்று வந்து நிற்பார்கள்.
என் அண்ணனின் மாமனார் சொன்னாரென்று யாரோ ஒருவர் தன் பெண்ணின் ஜாதகத்துடன் என்னை பார்க்க ஆபீசுக்கு வந்துவிட்டார். ஜாதகத்தை வாங்கி ஊருக்கு அனுப்பிவிட்டேன். அப்படியும் மனுஷன் என்னை விடுவதாக இல்லை. சரியாக ஒவ்வொரு சனியன்றும் மதியம் ஆபீசுக்கு (ஃபோர்ட் ஏரியா) வந்து பக்கத்தில் உடுப்பி ஹோட்டலுக்கு கூட்டிப்போய் கல்யாணத்தப்பத்தியே பேசுவார். தாலியும் வாங்கித்தருவார்(இது நார்த் இன்டியன் தாலி..வயத்துக்கு). 'யாரைக்கேட்டு நீயே பெண் பார்க்கிறாய்' என திட்டி ஊரிலிருந்து லெட்டர் வந்ததும் பயந்து போய் அடுத்தவாரம், அவருடன் நல்லா சாப்பிட்டவுடன் மெதுவாக 'வீட்ல அவங்களே பெண் பாத்துப்பாங்க மாமா' என நான் சொன்னதும் கரகாட்டக்காரன் ஷண்முகசுந்தரம் மாதிரி உஷ்ணமாகி ஜீரகத்தை வாயில் அள்ளி போட்டுக்கொண்டார்.
முருகன் கோவிலுக்கு சற்று எதிரே விஜயா பில்டிங்கில் நாங்கள் ஐந்தாறு பிரம்மச்சாரிகள் தங்கியிருந்தோம். வீட்டுக்கு போய் குளித்துவிட்டு நானும் ரங்குவும் முதலில் கோவிலுக்கு போவோம். சுவாமி தரிசனத்திற்கு மட்டும் தான்!. எல்லா குருக்களும் எங்களுக்கு தோஸ்த்.. கீழ் தளத்தில் தங்கியிருக்கும், சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கும் 25 வயது கூட நிரம்பாத அர்ச்சகர் சதாசிவம் ரங்குவுக்கு நண்பர். 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த அவருடன் அவர் ரூமில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த போது சந்துரு Balasubramaniam Chandrasekaran வந்திருந்தான்.

சந்துருவுக்கு திருச்சி சுந்தர் நகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு. கம்பெனி செகரடேரி. ரோஷக்காரன். மானஸ்தன். அப்பாவின் கடனை அடைக்க காலை டிபனுக்கு பிறகு ஒன்றும் சாப்பிடாமல் இரவில் உ.பி.பைய்யா கடையில் பால் மட்டும் குடித்து கடனை அடைத்தவன். வேலையில் இருந்துகொண்டே ACS பைனல் பாஸ் செய்து என்னுடைய உபயத்தால் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டவன். (அந்த கதை என் 'செம்பூர் ஸ்டேஷன்' என்ற தனிப்பதிவில்..) சரியான லூட்டி... நாகேஷின் காமெடிக்காக என்னை பலமுறை 'சோப்பு சீப்பு கண்ணாடி' பார்க்க வைத்தவன். சந்துரு இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போட்டு குடுத்தான்.
அடுத்து துபே (வடநாட்டுக்காரன்), மற்றும் சத்யன் (IT) ஆபிசிலிருந்து வந்தார்கள். கடைசியில் ஸ்ரீரங்கத்துக்காரனான முரளி வந்தான். இரவில் வீட்டு சாப்பாடு தான். அந்த ரூமில் முன்பு சாம்பார், தக்காளி ரசம், தயிர்சாதம், பொறியல்..மட்டும் தான். நான் இவர்களுடன் சேர்ந்தவுடன், "இதெல்லாம் பத்தாதுடா... " என்று சொல்லி அடுத்த சில நாட்களில் ராவா தோசை(ஞாயிறு காலை டிபன்), பூண்டு ரசம், மோர்குழம்பு, தக்காளி சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, சப்பாத்தி, ஆலு கோபி, பைங்கன் மசாலா என எனக்குத் தெரிந்த வெரைட்டியுடன் சமையலில் பிரதான இடம் என்னுடையதாகியது.
அடுத்தடுத்த பில்டிங்குகளிலும் நிறைய பேச்சிலர்கள். எல்லோரும் நள மகாராஜாக்கள். கிச்சனிலிருந்து வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு பக்கத்துவீட்டு பெண்ணிற்கு கேட்கும்படி "'மணி!... put some காரப்பொடி'...என கத்தி அலப்பறை செய்யும் கணேசன்கள்..
பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை வெகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் நண்பரின் சிபாரிசின் பேரில் BITS Pilaniயிலிருந்து சுப்ரமணியன் என்ற மாணவன் 3 மாதம் மட்டும் தங்க எங்களுடன் சேர்ந்துகொண்டான். வங்கியில் தன் ப்ராஜெக்ட் செய்ய பம்பாய் வந்திருந்தவன் சூப்ஸ் என்ற நாமகரணம் எங்களால் சூட்டப்பட்டான்.
ஒடிசலான உருவம், திக்கான சோடாபுட்டி கண்ணாடி. சின்ன மீசை.. முள் தாடி.. சட்டையை இன் செய்யாமல் முழங்கை வரை மடித்து சாதாரண பாண்ட் மற்றும் ரப்பர் செருப்பு, அலட்சியமாக வாரிய தலை முடி. மண்டை முழுக்க மூளை. அவன் படிக்காத ஆங்கில நாவல்களே இல்லை. வயது 20. பார்க்க கண்ணாடி போட்ட தனுஷ் மாதிரி இருக்கும் சூப்ஸ்சுக்கு இந்திய, உலக அரசியலாகட்டும், தமிழ், ஆங்கில இலக்கியமாகட்டும் எல்லாம் அத்துப்படி. சினிமா அறிவு அறவே கிடையா. பார்க்க மூடியாக இருப்பான். அவ்வப்போது தனது டைரியில் ஆங்கில கவிதைகள் எழுதுவான். எங்கே..படித்துக்காமிடா என்றால் வெட்கப்படுவான். ஆனால் பழகப்பழக சில நாட்களில் அவனது நட்பு எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சமையல் தெரியாததால் காபி குடித்த தம்ளர்களை சிங்க்கில் போட்டு அலம்புவான். போட்டிருக்கும் சட்டை பாண்ட்டுடன் அப்படியே சட்டென் தூங்கிப்போவான்.
இவனுடன் மற்றொரு ரூம்மேட் ஸ்ரீராமும் சிகரெட் வலிப்பதால், அடூர் கோபாலகிருஷ்ணன் ஜாடையிலிருக்கும் பக்கத்து வீட்டு மாமா திருட்டு தம்மடிக்க எங்கள் வீட்டிற்கு அப்பப்போ வருவார்.அவரை தேடிக்கொண்டு வந்த மாமி ஒருமுறை எங்கள் ரூமை பார்த்ததும் தன் மராட்டிய வேலைக்காரியை விட்டு எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அனுப்ப, அந்த மராட்டி பாயி எங்கள் வீடு இருக்கும் நிலையை பார்த்து சரமாரியாக திட்டித்தீர்த்து விட்டாள். அங்கங்கே அவுத்துப்போட்ட பாண்ட் சர்ட்டுகள், உலர்த்தாத கப்படிக்கும் ஈரத்துவாலைகள், ஸ்ரீராம் , அடூர் மாமா விட்டெரிந்த சிகரெட் துண்டுகள், எங்கு பார்த்தாலும் CA,ACS சம்மந்தப்பட்ட புத்தகங்கள். கட்டிலுக்கு அடியில் போட்டுத்தள்ளப்பட்டிருக்கும் வாழைப்பழத்தோல்.. எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
ஒரு சனிக்கிழமை ஸ்ரீராம் ஆபிசில் எல்லோரும் கர்ஜத் அருகில் பிக்னிக் போவதாக ப்ளான் செய்து என் ரூம் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நானும் சந்துருவும் போகவில்லை. மறுநாள் செம்பூர் கீதாபவனில் பைனாப்பிள் தோசா முடித்து வெளியே வரும்போது எதிரே சந்துரு கலவரத்துடன் ஓடி வந்து "ஸ்ரீதர்...சூப்ஸ் செத்து போய்ட்டாண்டா.." என சொல்ல அதிர்ந்து போனோம். சூப்ஸ்சின் பாடி கல்யாண் ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் ட்ரெயின் பிடித்து கல்யாண் போனோம்.
ஆசுபத்திரி பின்பக்கம் மார்ச்சுவரியில் பாடி இருப்பதாக சொல்ல அங்கு ஓடினோம். கொஞ்சம் ஒதுக்குப்புறமான பழைய சிறிய கட்டிடம். சுற்றிலும் மரங்கள். ஊஊஊவென காற்றடிக்க, பகலில் கூட தனியே போக பயமாக இருக்கும் அளவுக்கு ஒரு அமைதி. வாசலில் ஒரு வேன்… மெல்ல அருகே போய் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தோம். சூப்ஸ் லேசாக உடல் ஊதி, கறுத்து விரைத்துப்போயிருந்தான். அடுத்து மற்றொரு மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்றிரண்டு விரைந்து வர, ஒரே சமயத்தில் நாலைந்து பிணங்கள் வந்திறங்கின. சில உடல்களை சதையும் ரத்தமாக கந்தலாக கொண்டு வந்து வைத்தார்கள்.. இல்லை.. போட்டார்கள். டோம்பீவிலி, கல்வா அல்லது சுத்துப்பட்டு ஸ்டேஷன்கள் அருகே ரயிலில் அடித்துச்சென்ற உடல்களாம்.
மார்ச்சுவரியை பார்த்துக்கொள்ளும் மராட்டிய கிழவன் முழு போதையுடன் வந்தான். பிணவரையில் தினம் 16 மணி நேரம் வேலை செய்ய அரசாங்கமே அவனுக்கு மதுவுக்கு பணம் கொடுக்குமாம். சலனமேயில்லாமல் உடல்களை தொட்டு அப்படியும் இப்படியும் உருட்டி தள்ளினான். சில உடல்களை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டியவாறே ‘ஹஸ்த்தே மரா க்யா!’ (சிரிச்சிக்கிட்டே செத்தையாடா?) என கேட்டு வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கும் சந்துருவுக்கும் வயிறை என்னமோ செய்ய, லேசாக உள்ளே எட்டிப்பார்த்த சந்துரு ‘ஆ’வெனஅலறி பின்வாங்கினான். எனக்கு லேசாக தலை சுற்றியது. அங்கே பக்கவாட்டில் சரிந்தும், சாய்ந்து உட்கார்ந்த நிலையிலும், குப்புறக்கிடந்தும், குடல் மற்றும் சதைக்குவியலோடும் அங்கங்கே …. சில நாட்கள் பிணவறை முற்றிலும் காலியாக இருக்குமாம். அன்று அந்த சிறிய ரூம் கொள்ளாத அளவுக்கு …..( போதும் நிறுத்திக்கிறேன் ஸார்.)
இரவு 12 மணி வரை கல்யாண் போலீஸ் ஸ்டேஷனில் நண்பர்களை போலீஸ் தூண்டித்துருவி விசாரித்தார்கள். கர்ஜத் அருகே எங்கோ கிராமத்தில் அழகிய நீரோடை, பூங்கா மற்றும் காட்டுப்பகுதி…நண்பர்கள் மதியம் 2 மணி வரை பூங்காவில் சுற்றிவிட்டு சாப்பிட்டவுடன் 4 மணி வரை கிரிக்கெட் ஆடி மெதுவாக ஒவ்வொருவராக தண்ணீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெளிவான அமைதியான ஓடை. இடுப்பளவு தண்ணீர் தான். எல்லோரும் குளித்து முடிந்து வெளியே வந்த பிறகும் சூப்ஸ் மட்டும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தானாம்..
'போதும் வாடா' என அவனை நண்பர்கள் கூப்பிட அவன் மெல்ல சிரித்துக்கொண்டே கரையை நோக்கி ஓரடி எடுத்து... 'சளக்' கென்று அப்படியே நீருக்குள்ளே போய் உடலை சிலுப்பி.. நண்பர்கள் கூச்சலுடன் துண்டை அவன் பக்கம் வீசியும் பயனில்லை... யாருக்கும் நீச்சல் தெரியாது. உள்ளே முழுவதும் சென்றுவிட்ட சூப்ஸ் அடுத்த நொடி திடீரென மறுபடியும் தண்ணீருக்கு மேலே கழுத்தளவு வெளியே வந்து அதே வேகத்தில் திரும்ப உள்ளே போனான்.. ஒரு கை மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிய அடுத்த நொடி நீர்க்குமிழிகளுடன் தண்ணீருக்குள் மாயமாக மறைந்தான். வெளியே வர போராடுகிறான் என்பது தண்ணீரின் சலசலப்பில் தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நீர்க்குமிழிகளும் நீரின் சலசலப்பும் அடங்கி நீர்ப்பரப்பு அமைதியானது. எல்லோரும் கூச்சலிட யாருக்கும் ஒன்றும் செய்யத்தெரியவில்லை. போலீஸ் வந்து சேர மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
போலீஸ் கூட வந்திருந்த கிராமத்தான் 'சாலா! பொழுதன்னைக்கும் உங்களுக்கு இதே வேலயாப்போச்சு? இந்த வாரத்துல இது மூணாவது சாவு!' என சலித்துக்கொண்டு 1500 ரூபாய் பேசி தண்ணீருக்குள் பாய்ந்து செடிகளுக்கிடையே கையை விட்டு பாறைகளை நகர்த்த, ஜிவ்வென உடல் மேலே வர, சூப்ஸ் என்கிற சுப்ரமணியன் வெளியே எடுத்து போடப்பட்டான்.
நண்பர்கள் எல்லோரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து ஸ்டேஷனுக்கு கூட்டிப்போனார்கள். பஞ்சநாமா போன்ற சம்பிரதாயங்களுக்குப்பின் “வேறெந்த முகாந்திரமும் இல்லை ..சுழலில் சிக்கி இறந்த தற்செயலான விபத்து இதுவென ருசுவாகிறது.. கேஸ் பதிவு செய்யாமலிருக்க 35 ஆயிரம் ஆகும்” என போலீஸ் பேரம் பேச, ஸ்ரீராமின் அண்ணன் 20 ஆயிரத்திற்கு முடித்து நண்பர்களை வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த 2 நாட்கள் கொடுமையானவை. 13 வயது மகளுடன் வடநாட்டு சுற்றுலா சென்று விட்ட சூப்சின் பெற்றோரை யாரோ பெரியப்பா ஒருவர் தேடி போனில் பிடித்தார். மறுமுனையில் கூச்சல்..அழுகை. உடலையும் அவர்கள் பார்க்கத்தயாராக இல்லை. பெரியப்பா மட்டும் 2 நாளில் வந்து அந்திம காரியங்களை முடித்து விட்டுப்போனார்.
அடுத்த ஒரு மாத காலம் வீட்டில் சமைக்கவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் சோகமாக உலாவினோம். சூப்ஸ்சின் உடமைகளை பெரியப்பா கொண்டு சென்றுவிட அவனது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும் ரூமில் கிடந்தன.
சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வரத்தொடங்கினோம். ஒருநாள் சந்துரு ஏதோ புத்தகங்களை குடைந்தபோது சூப்ஸ்சின் டயரி கிடைக்க "ஸ்ரீதர்! இங்க வாடா! " என அலறினான். கைகள் நடுங்க டயரியை புரட்டியபோது, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கிறுக்கி வைத்த கவிதை மாதிரி சில வரிகள்..... ஒன்றும் புரியவில்லை. ஆனால் படிக்க முடிந்த கடைசி நாலைந்து வரிகள் ….
And I want to dwell..
in some corner…
alone..
surrounded by water…
only water..
charcoal பென்சிலில் சூப்ஸின் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)
2015 மீள்

Tuesday, March 13, 2018

வெங்கடேஷ்

டோல்கேட்டிலிருந்து செந்தண்ணீர்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வலதுபுறம் ஜி-கார்னர் திரும்பி ‘பேய் தொங்கிட்ருக்குமோ!’ என பயத்துடன் அந்த புளிய மரங்களை பார்ப்பதை தவிர்த்து, அடர்ந்த மரங்கள் இருபுறமும் உள்ள சாலை உள்ளே நுழைந்தால் பொன்மலை. பொன்மலை ரயிலடி எதிரே ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி வீடு மாதிரி பெரிய வீடு. உள்ளே நுழைய ஒரு கேட். வெளியே வர ஒரு கேட். வெள்ளைக்காரன் கட்டிய, டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி வீடு.
பெரியவன் வெங்கடேஷ். சின்னவன் வைத்தி. நான், வைத்தி, கணபதி மூவரும் சேர்ந்து சி.ஏ பரீட்சைக்கு படிக்க ரயில்வே ஸ்டேஷன் போகும் முன் வைத்தி வீட்டில் காபி. வெங்கடேஷ் எம்.ஏ முடித்து மனிதவளம் சார்ந்த (DPMIR) படிப்பு. வாசலில் நாலைந்து சேர் போட்டு எல்லோரும் அரட்டை. அந்தப்பக்கம் அவர்கள் அம்மாவும், சில சமயம் டூர் முடிந்து ஜீப்பில் வந்திறங்கிய அப்பா சப்தரிஷியும் பனியனுடன்.
பேச்சின் நடுவே ‘அப்பா நேத்து ரயில்ல ஏ.சி சலூன்ல வற்ரச்சே’ என வெங்கடேஷ் சொல்ல, நான் குறுக்கிட்டு ‘ஏசி சலூனா! அப்ப முடி வெட்டறவருக்கு ஜாலி தான்.. அவருக்கும் ஏசி இல்ல!’ என சொல்ல பெருங்குரலுடன் நண்பர்களின் வெடிச்சிரிப்பு அந்த இடமே ஒலிக்கும். டி.ராஜேந்தர், பாரதி ராஜா, பாக்யராஜ் படங்கள், ராதா, அம்பிகா என நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.
சில்க் ஸ்மிதா, ப்ரிமிளா என பேச்சு ஒரு மார்க்கமாக திரும்பும்போது குரலை கம்மி குசுகுசுவென நாங்கள் பேச ஆரம்பிக்க, ‘போதும்பா! நாழியாச்சு! படிக்க கிளம்புங்க!’ என அம்மா விரட்டியும் கேட் அருகே நின்று கொண்டு ஶ்ரீப்ரியா ஜோக் (இங்க எழுத முடியாதுங்க) பற்றி இன்னும் கொஞ்ச நேரம்..
இன்கம் டாக்ஸ் சப்ஜெக்டில் ‘ஏம்ப்பா! அந்த க்ளப்பிங் ஆஃப் இன்கம் டாக்ஸ் ஆஃப் ஸ்பௌஸ்.. என்ன செக்‌ஷன் அது!’ என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து ‘செக்‌ஷன் 64(1)!’ என வெங்கடேஷ் கத்துவான். இன்கம்டாக்ஸ் அமென்ட்மென்ட் பற்றி எங்களுடன் நிறைய விவாதிப்பான் வெங்கடேஷ். அசாத்தியமான ஞாபக சக்தி அவனுக்கு.
நெடுநெடுவென உயரம் வெங்கடேஷ். ஞாயிரன்று அவன் பெரிய வெள்ளை ஜிப்பா+ஜீன்சுடன் தம்பி வைத்தி சகிதம் தனது லூனாவில் சோனாமீனா தியேட்டரில் கன்னிராசி படம் பார்க்க போகும் வழியில் சர்க்யூட் ஹவுஸ் காலனியில் குடியிருக்கும் என்னை பார்க்க வரும்போது அங்கங்கே மாணவிகள் பால்கனியிலிருந்து இவர்களை சைட் அடிப்பது பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும். ‘ஹும்! எல்லாத்துக்கும் மச்சம் வேணுமே!’ என பெருமூச்சுடன், தண்ணி லாரி பின்னால் குடத்துடன் ஓடுவேன்.
1986இல் இப்படியான திருச்சியின் சொர்க்கமான இளமைக்காலத்தை அப்படியே விட்டுவிட்டு பம்பாய் சென்றதும், வெங்கடேஷ், வைத்தி போன்ற நண்பர்கள் தொடர்பு அற்றுப்போனதும், கணபதியுடன் பம்பாய், இந்தோர், பஹ்ரைன் என ஊர் ஊராக மாறியது.. 31 வருடங்கள் உருண்டு ஓடியது தெரியவில்லை.
சில வருடங்கள் முன் கணபதி மூலம் வைத்தியின் (Vaidya Rishi) தொடர்பு கிடைக்க 25 வருடங்களுக்குப்பிறகு பெங்களூரில் அவனை சந்தித்தேன். நிதிஷ் எஸ்டேட்ஸ் எனும் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ED யாக இருக்கிறான். பலால் ரெசிடென்சியில் முறுகல் ரவா தோசைக்கு நடுவே மறக்காமல் வெங்கடேஷின் நம்பரை வாங்கிக்கொண்டு, அப்போதிலிருந்து வெங்கடேஷுடனும் மீண்டும் தொடர்பு கொண்டாலும் அவனை நேரில் சந்திக்க இயலாமல் தள்ளிப்போனது. முகநூலில் நட்பு தொடர்ந்தது.
சென்ற மாதம் சென்னையில் நண்பர் வீட்டு
விஷேசத்திற்கு போகவேண்டியிருந்தது. ‘ஶ்ரீதரா! வெங்கடேஷை வரச்
சொல்லியிருக்கேன்!’ என கணபதி சொல்ல மனம் குதூகலமானது. மண்டபத்தில் நுழையும்போது கூட்டத்தின் நடுவே உயரமான வெங்கடேஷ் தான் தெரிந்தான். அப்படியே இறுக்க கட்டிக்கொண்டான். இப்பவும் அதே சிரிப்பு, பொன்மலை தெனாவெட்டு, குறும்பு, அரட்டை.. நெற்றியில் குங்குமம்.
HR Consultancy, இன்டெலிஜென்ட் என வெங்கடேஷைப்பற்றி கணபதியின் முகநூல் பதிவு பார்த்தேன்.
இன்று வெங்கடேஷுக்கு பிறந்தநாள். ‘ஶ்ரீதரா! அவம்படத்தையும் வரஞ்சு போட்ரு’ என்ற கணபதியின் கட்டளையை மீறுவேனா!
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
Image may contain: 1 person, smiling, drawing

பார்சிலோனா

ஃபிரான்ஸும் ஸ்பெயினும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள அழகிய பெர்பியான் (Perpignan) நகருக்கு அலுவல் நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அந்நகரம் பிரான்ஸில் இருந்தாலும் பாரிஸ் வெகு தொலைவு. ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து இரண்டே மணி நேர பஸ் பிரயாணம் தான். கூடவே மனைவி Usharani Sridhar .
நாங்கள் தங்கிய மெர்க்யூர் விடுதி முழுக்க பெண்களால் இயக்கப்படுவதால் அங்கங்கே பளிச்சென மலர் கொத்துகள், வண்ண விளக்குகள், சுவர்களில் பிங்க் வர்ணம். வரவேற்பறை பெண்கள் பகுதி நேர சிப்பந்திகளாம். கல்லூரியில் படிக்கும் கீர்த்தி சுரேஷ்கள். மலர்ந்த முகம், இனிமையான பேச்சு. சின்ன குழந்தைகள் பென்சிலை செங்குத்தாக இறுக்கி பிடித்து முட்டை முட்டையாக எழுதுவது போல ஃப்ரெஞ்ச் மொழியில் அவர்கள் எழுதுவதை ரசித்தேன் (கூட இருந்த உஷாவும்தான்).
பெர்பியான் கிட்டத்தட்ட கரூர் மாதிரி. எக்கச்சக்கமாக பணம் புழங்கும் சிறிய வியாபார நகரம். உலகின் மற்ற பாகங்களுக்கு பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்கிறார்கள். எங்கும் பச்சை பசேலென ஊரே அழகு. நகருக்குள் விபத்தே ஏற்பட முடியாத அளவு நூற்றுக்கணக்கில் சிக்னல்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சாலைகள். வாகனங்கள் நாற்பது கி.மீ வேகத்தில் அசைந்து மெதுவாக செல்வது மறக்க முடியாத அனுபவம். பஹ்ரைனில் அதிகம் போனியாகாத சிட்ரோயென், ஓபல், ரிநோ மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் இங்கே ரோடு முழுக்க.
பல்வேறு உணவுப்பொருட்களை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பஹ்ரைன் சந்தை, அரசாங்கம், ராணுவம் மற்றும் அமெரிக்க கடற்படைக்கு விநியோகிக்கிறது எங்கள் நிறுவனம். நாங்கள் இறக்குமதி செய்யும் நெதர்லாந்து பால் பவுடர், பாகிஸ்தானிய/இந்திய பாசுமதி அரிசி, மலேஷிய உணவு எண்ணெய், இந்திய மற்றும் ஜெர்மானிய சர்க்கரை, எகிப்திய பாலாடைக்கட்டி (cheese) போன்ற பொருட்கள் இங்கு அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனால் நிறைய food exhibition களுக்கும், புதிய தரமான உணவுப்பொருட்களை ஆ(பீ)ராய்ந்து தேடியும் நான் செய்யும் பயணங்களில் இதுவொன்று.
நான்கு நாட்களில் வேலை முடிந்து பெர்பியானிலிருந்து பார்சிலோனாவிற்கு இரண்டு மணி நேர பஸ் பயணம். சீராக வெண்ணை போன்ற சாலையில் பஸ் ஊர்வது போல இருந்தாலும் சுமார் 120 கி.மீ வேகமே தெரியவில்லை. இது போல நெடுந்தொலைவு பயணமென்றால் உறவினர்கள் நண்பர்கள் பற்றி மனைவியுடன் பேசிக்கொண்டு போவதால் பயணக்களைப்பு தெரிவதில்லை. அதிலும் குடும்ப அரசியல் பேச்சென்றால் போதும், பஸ்ஸாக இருந்தாலும் உஷா சம்மனங்கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவாள். மாலை இருள் மெல்ல சூழ, தூரத்தில் மங்கியதோர் நிலவினிலே பார்ஸிலோனாவை கண்டேன்.
ஐரோப்பாவின் பார்சிலோனா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கால் பந்தாட்டமும் ஒலிம்பிக் போட்டியும் தான். எஸ்பானியா (ஸ்பெயின்) நாட்டின் முக்கிய நகரமான பார்சிலோனா சமீபத்தில் தன்னாட்சி பெற்ற காட்டலூனியாவின் தலைநகரமாகும். ஐரோப்பியாவின் பெரிய விமானநிலையங்களில் பார்சிலோனா ஒன்றாம்.
ஸ்டெஃபி க்ராஃப் சாயலில் செம்பட்டை கேசத்துடனிருந்த விடுதிப்பெண் எங்களுக்கு அறையை ஒதுக்க, இரவு 7 மணிக்கு பெட்டியை போட்டு விட்டு மனைவி கெட்டிலில் போட்டுக்கொடுத்த பச்சை தேநீர் மற்றும் பஹ்ரைனிலிருந்து கொண்டு சென்ற க்ராய்ஸ்ஸோன் பசியை ஓரளவு அடக்க, விடுதியை விட்டு வெளியே வந்து காலாற தெருவில் நடந்தோம்.
நிறைய சர்தார்ஜிகளை பார்க்க முடிந்தது. பஞ்சாபி கவுரின் சிறிய கடை (convenient store)
உள்ளே நுழைந்து சாப்பிட பக்ஷ்ணம் தேடினோம். Ready to eat பஞ்சாபி கறி, புலாவ் என டெட்ராபேக் உணவு பொட்டலத்தை கொதிக்கும் நீரில் அப்படியே போட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து சாப்பிட்டால், மறுநாள் dரிப் ஏற்றும் அளவிற்கு வயிறு உபாதை வருவது சாத்தியம்.
வளைகுடா நாடுகள் போல இல்லாமல் ஐரோப்பிய விடுதிகளில் எப்போதும் சிறிய அறைகள் தாம். அறையில் கெட்டில், காபி, டீ, சர்க்கரைப்பைகள் இலவசம். ஆனால் பக்கத்தில் சிறிய ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சீமைச்சாராயம், பீர், வறுகடலை, பிஸ்கோத்து வகையாக்கள் எல்லாம் தொட்டு பார்த்தாலே காசு. அழகான சிறிய குளியலறை. நான்கு பக்கமும் கண்ணாடி. ச்சீ! நமக்கே வெட்கமாக இருந்தது. கழிவறையில் டிஷ்யூ பேப்பர் தான். அரை லிட்டர் காலி பாட்டில்கள் ஏழெட்டை மனைவி எதனால் பெட்டியில் வைத்திருந்தாள் என இப்போது புரிந்தது.
பார்சிலோனாவை சுற்றிப்பார்க்க மொத்தம் இரண்டே நாட்கள் இருந்தன. பொதுவாக டூர் ஏஜென்ட் போன்றவர்கள் மூலம் நான் ஊரை சுற்றிப்பார்ப்பதில்லை. செலவு அதிகம். நாமே உள்ளூர் வரைபடம் மற்றும் கைப்கேசியில் கூகிள் மேப் வைத்துக்கொண்டு டாக்சி, மெட்ரோ ரயில் அல்லது ‘ஹாப் இன் ஹாப் ஆஃப்’ என சுற்றிக்கொண்டிருக்கும் சைட் சீயிங் ரெட் பஸ்களை வேண்டுமிடத்தில் பிடித்து மொத்தம் 18 ஸ்தலங்களில் நமக்கு பிடித்த இடங்களில் மட்டும் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் அதே பஸ் பிடித்து திரும்பி வந்து விட்டோம்.
நகரில் அங்கங்கே பஸ்ஸிலோ ரயிலிலோ மாலிலோ உணவகங்களிலோ அகஸ்மாத்தாக பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியர் திடீரென மூடு வந்து பச்ச்ச்சக்கென உதடுகளை கவ்வி உறிஞ்சி.. யப்பா! பார்க்கும் நமக்கே உதடு வலித்தது. லைட்டா பொறாமையும் கூட. எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒரு ஜோடி மட்டும் இன்னும் ‘லிப்லாக்’கில் இருக்க அந்த பெண் அவனை விடுவிக்க முயல ‘நம்மவர்’ விடுவதாக இல்லை.
கேடலூனியா அரண்மனை, சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் (கதீட்ரல்), உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட மைதானம் (camp nuo), ஒலிம்பிக் ஸ்டேடியம் என ஒரே நாளில் நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம்.
மறுநாள் விலா டி’கார்ஸியா என்ற பகுதிக்கு டாக்சி பிடித்து ‘ஸ்வாகதம்’ இந்திய உணவு விடுதி வந்தோம். குல்ஷன் குரோவர் சாயலிலிலிருந்த லூதியான்வி மேலாளர் ‘ஹாஞ்சி நமஷ்கார்’ என வரவேற்றார். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலோர் எஸ்பானியரே. நாங்கள் வாலன்ஸியா ஆரஞ்சு பழச்சாறு, லார்டு நெல்சன் புதினா எலுமிச்சை தேநீருடன் வெறும் பருப்பு சாதம் மட்டுமே சாப்பிட முடிந்தது. மீதி ஐட்டங்கள்?.. ஏற்கனவே சொன்னமாதிரி மறுநாள் dரிப் தான். அந்தப்பக்கம் ஒரு டியூனிசிய தாத்தா தந்தூரி சிக்கனையும் காந்தா பஜியாவையும் கபளீகரம் செய்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, மேலே உதித் நாராயணும் அல்கா யக்னிக்கும் கால் கால் என கத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை ‘லா ரம்லா’ (Las Ramblas) தெருவுக்கு வந்த போது பிரமிப்படைந்தேன். தெருவின் இருபுறமும் ஏராளமான கடைகள். தெருவின் நடுவே ப்ளாட்ஃபாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓவியர்கள். கரிக்கட்டி (charcoal), பென்சில், மார்க்கர் கொண்டு விதவிதமாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். சுமார் 5 யூரோக்களுக்கு நம் உருவப்படத்தை சில நிமிடங்களில் வரையும் காரிகேச்சரிஸ்ட்டுகள். ஒருவர் கருப்பான பொடியை ப்ரஷ்ஷில் தொட்டு பேப்பரில் பதித்தவுடன் கை விரல்களால் பூசி பூசி வடிவமைத்த ஓவியம் பிரமிப்பாக இருந்தது.
கடைசியாக ஒருவரிடம் போனோம். அவர் எங்களை எதிரே நிற்க வைத்து, கையில் வைத்திருந்த கருப்பு வெள்ளை தாளை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி சில நிமிடங்களில் எங்கள் இருவரின் நிழற்படத்தை அற்புதமாக வெட்டி வடிவமைத்து கொடுத்தார் (படம் பார்க்க!)
அதே தெருவில் ISKCON கோயில் இருப்பது கேள்விப்பட்டு இடத்தை விஜாரித்தோம். பத்து கட்டிடங்கள் தள்ளி பிளாசா ரியால் (Royal Plaza square)இல் கோயில் இருப்பதாக பங்காலி இளைஞன் சொன்னான். பிளாசா ரியால் மிகப்பெரிய சதுர வளாகம். கீழ் தளத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருட்டான சாராய மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகள், கண்ணாடி குவளையில் மொந்தை மொந்தையாக சாராயம் பருகும் லெபனீய பெருசுகள், அலட்சியமாக ஹெனிக்கன் பியர் கேனை திறந்து வாயில் கவிழ்த்து நுரையைத்துடைக்கும் அரேபிய இளைஞர்கள்.. பின்னால் ஈனசுரத்தில் ஜியார்ஜ் மைக்கலின் ‘கேர்லெஸ் விஸ்பர்’. அங்குமிங்கும் ஓடும் துக்குனியூண்டு அரை நிஜார் பிலிப்பினோ பணிப்பெண்கள்.
மேலே முதல் தளத்தில் உள்ள வீடுகள் ஒன்றில் கோயிலாம். படிகளில் ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி படியில் ஏறி இரும்பு கேட் ஒன்றின் முன் நின்றோம். அருகே அழைப்பு மணி மாதிரி தெரிந்தது. இருட்டில் தடவி மணியை அழுத்த ஒரு நிமிடம் கழித்து கர்ரர்ர்ரென இரும்பு கேட் திறந்தது. பயந்துகொண்டே கேட் கதவை திறந்து உள்ளே கால் எடுத்து வைக்.. ‘தொபக்’கென் பள்ளம். நல்ல வேளை.. கீழே விழவில்லை. ‘இதி ஒத்து மனக்கு.. பயங்கா உந்தி’ என உஷா தயங்க, நான் அவளை இழுத்துக்கொண்டு இருட்டில் முன்னேற, வெளிச்சமில்லா தாழ்வாரத்தில் மிகப்பெரிய கனமான மரக்கதவு. சக்தி முழுவதையும் திரட்டி க்ற்ற்றீச்சென கதவை தள்ள உள்ளே இஸ்கான் பிரபு ஒருவர் கருப்பு சால்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார் நினைவுக்கு வந்தார்.
‘என்ன ப்ரபுஜி! கோயிலுக்குள்ளே வருவதற்கு இவ்வளவு கட்டுப்பாடா? பாஆஆன்னு கதவை திறந்து வைக்கலாமே!’ என நான் கேட்க முக்காடை விலக்கிய நம்பியார் பிரபு அமைதியாக சொன்னது: ‘இது அமைதியான ஊர்னு நினைக்காதீங்க பிரபு!. ஐரோப்பா முன்ன மாதிரி இல்ல. அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா ன்னு எல்லா நாட்டுக்காரனும் இங்க இருக்கான். அரபி, பிரெஞ்சு, எஸ்பானிய, கேடலான் மொழி சகஜமா பேசுவானுங்க. தீவிரவாதி யாருன்னே கண்டு புடிக்க முடியாது. கல்லூரி பேராசிரியரா இருப்பான். கால்நடை மருத்துவராவும் இருப்பான். திடீர்னு தாக்குதல் நடத்துவான். இடுப்புல வெடிகுண்டு பெல்ட்டோட கூட்டத்துல புகுந்து துப்பாக்கில சுடுவது, போலிஸ் புடிக்க வந்தா வெடிகுண்டை ட்ரிக்கர் பண்ணி தானே அபீட் ஆயிருவான். தற்கொலை அவங்களுக்கு தக்காளி சோறு மாதிரி. அவங்களுக்கு அமைதியை குலைச்சி அப்பாவி மக்களை கொல்லனும். உங்கள சிசி டீவில பாத்தாவுட்டுத்தான் கதவ தொறந்தோம். ஹரே கிருஷ்ணா!’
அவர் சொன்னது முற்றிலும் சரி என்பது அடுத்த சில நாட்களில் பஹ்ரைன் வந்ததும் தெரிந்தது. கோயில் இருக்கும் அதே ‘லா ரம்லா’ பகுதியில், அந்த ஓவியர்கள் தங்கள் பிழைப்புக்காக தம் படைப்புக்களை விற்றுக்கொண்டிருந்த அதே தெருவில், உஷாவை நிற்க வைத்து அவளது ஓவியத்தை வடித்த அதே இடத்தில் தீவிரவாதி ஒருவன் படு வேகத்தில் ரினோ (Renault) வேனை கூட்டத்தினர் மீது மோதி சுமார் 100 பேரை காயப்படுத்தி, 14 பேரை அநியாயமாக கொன்ற பின், நிதானமாக நடந்து போய் மற்றொரு ஃபோர்டு காரை திறந்து காரோட்டியை கத்தியால் குத்தி கொன்று, இறந்த உடலோடு காரை ஓட்டிச்சென்று ஒரு போலீஸ் செக் போஸ்ட்டை இடித்து விட்டு மறைந்து, அடுத்த நான்கு நாட்களில் போலீசாரால் சுடப்பட்டு இறந்தானாம்.
இறந்த 14 பேரில் தன் பெற்றோருடன் 6 வயது சிறுவனும். அதே நேரத்தில் அவனது 5 வயது தங்கை வேறு பகுதியில் பாட்டு வகுப்பு முடிந்து மற்றொரு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாளாம்..
ஹரே கிருஷ்ணா!

டாக்டர் மனோகர்.

தஞ்சை மருத்துவ கல்லூரியில் MBBS.. பின் சில வருடங்களில் MD படிப்பு.. தென்னர் ஹிந்தி பிரச்சார சபா சமீபம் காஞ்சிப்பெரியவரால் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய ஹிந்து மிஷன் ஆசுபத்திரயில் தன் பணியை துவங்கினார் இவர். எனக்கு மைத்துனர். டாக்டர் மனோகர்.
என் மூத்த சகோதரி ஹேமலதா(Hemalatha Manohar)வின் கணவர். உறையூர், தென்னூர் சாஸ்திரி ரோடு அருகே, மலைவாசல் கிலேதார் தெரு என அங்கங்கே க்ளினிக் துவங்கினார்.
பகலில் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டும் சாப்பிட வீட்டுக்கு வருவார். மற்றபடி காலை பத்து முதல் இரவு பன்னிரண்டு மணி வரை ஆசுபத்திரி மற்றும் தன் க்ளினிக்கில் இருப்பார். எதற்காக இரவு பன்னிரண்டு வரை? மையின்கார்டு கேட், சிங்காரதோப்பு, பெரியகடை மற்றும் சின்ன கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் இவரது பேஷன்ட்டுகள். பத்து மணிக்கு கடையடைத்த பிறகே இவரிடம் அவர்கள் வருவதால் இரவு பன்னிரண்டு வரை வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு ஊசிக்கு ஐந்து பத்து, தெரிந்தவர்களுக்கு இலவசம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு பணம் இல்லையென்றால் இலவசமாக என இருந்தவரை என் சகோதரி சொல்லி சொல்லி பிறகு ஃபீசை உயர்த்தினாலும் காசு விஷயத்தில் கராராக இல்லாமல் இருப்பவர்.
சுப்பரமணியபுரத்தில் இவருக்கு வீடு. பொதுவாக வீட்டில் இவர் மருத்துவம் செய்வதில்லை. அப்படியும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலசமயம் அவசர சிகிச்சைக்கு வந்து விட்டால் இல்லையென்று திருப்பி அனுப்பாமல் இலவசமாகவே ட்ரீட் செய்துவிடுவார்.
பக்கத்து குடிசைப்பகுதியில் ஒரு பெண் சூடான வடித்த கஞ்சியை குடிசைக்குள்ளிருந்து வெளியே ஓங்கி வீசும்போது தனது 3 வயது குழந்தை குறுக்கே ஓடி வர, சூடான கஞ்சி பட்டு குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில் முழுக்க தோல் பிய்ந்து ரணமாகிப்போக, பக்கத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு முன்பணமாக கட்ட பத்தாயிரம் ரூபாய் இல்லாத்தால் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஒரு பைசா கூட அவரிடம் வாங்காமல் அடுத்த பத்து நாட்கள் தினமும் காலை மருத்துவம் பார்த்து குழந்தையை பூரண குணமடையச்செய்தவர்.
சுற்றுப்புற ஆட்டோ டிரைவர்கள் எல்லோருக்கும் டாக்டர் நண்பர். ரமலான், கிருஸ்துமஸ், பொங்கல் என எல்லா பண்டிகைகளுக்கும் இவருக்கு வாழத்துக்களும் அன்பளிப்புக்களும் குவியும்.
தலையனை மெத்தை தைக்க, வாட்ச் ரிப்பேர், போட்டோ ஃப்ரேம், கல்யாண மண்டபம், விசேஷங்களுக்கு வேன், பஸ் வாடகை, திருமண அலங்காரம், கல்யாண பாத்திரம் மற்றும் ஷாமியானா வாடகை, கார் ரிப்பேர், ரியல் எஸ்டேட் என எல்லா துறைகளிலும் இவருக்கு ஆட்கள் மற்றும் செல்வாக்கு.
நானும் என் சகோதரனும் வெளிநாட்டில் இருப்பதால் என் அம்மா அப்பா இருவரையும் நன்றாக பார்த்துக்கொண்டவர். எளிமையான மனிதர். கோபமே வராதொரு நிதானம்.. அளவான பேச்சு..வாட்சப் மற்றும் முகநூல் இல்லாமல் இன்னமும் சாதாரன கைப்பேசி..
திருச்சியில் ஒரு குறுநில மன்னன் போல வலம் வரும் என் மைத்துனர் டாக்டர் மனோகருக்கு இன்று பிறந்த நாள்.
நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிம்மதியான வாழ்க்கை இவருக்கு அருள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வேண்டுகிறேன்.
Image may contain: 4 people, including Keerthi Shri, Hemalatha Manohar and Sadana Mano, people smiling, people standing

Mythili Varadarajan

சில மாதங்கள் முன் பெங்களூர் சென்றிருந்த சமயம் இவரை நேரில் சந்திக்கலாமென இருந்தேன். இவரும் வீட்டிற்கு வரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
ஒரு மதிய வேளை போகலாமென முடிவு செய்து மல்லேஷ்பாளையா என பிக்கப் இட்டு ஓலா டாக்ஸி தேடினேன். அடுத்த விநாடி ஓலா வரைபடத்தில் கரப்பான் பூச்சி மாதிரி ஏழெட்டு டாக்சிகளில் ஒன்று பொம்மை கார் மாதிரி சரட் சரட்டென முன்னே பின்னே நகர்ந்து திடீரென வீடு நோக்கி வர என் கைப்பேசியில் உடனே மெசேஜ். வெளியே ஓடிப்போய் டாக்சியில் அமர்ந்து ஓட்டுநரிடம் ஓட்டிபி கொடுத்த கையோடு ஓலா வரைபடத்தில் சர்ஜாபூர் அம்பாலிபுரா ரோடு எங்கேயென தேடினேன். சின்ன புள்ளியொன்று என் டாக்சி போகும் தடத்தை அழகாக காட்ட, வெளியே நல்ல டிராஃபிக்.
கரடுமுரடான பெங்களூர் சாலைகள் இன்னும் எத்தனை வருடத்திற்கென தெரியவில்லை. 80, 90 களில் எவ்வளவு அழகாக இருந்த நகரம்!. முன்பெல்லாம் அகண்ட சாலைகள் இருமருங்கிலும் மரங்கள். சிக்பேட்டில் பஸ் விட்டிறங்கி 'சிவாஜி நகர் ஹோகி' என ஆட்டோ பிடித்தால் சில்லென குளிர் காற்று நம் முகத்தில் வீச ஸ்வெட்டர் போட்ட ஆட்டோக்காரர் பத்தே நிமிடத்தில் சிவாஜி நகரில் இறக்கி விட்டு நம் முகம் கூட பார்க்காமல் காசு வாங்கிக்கொண்டு திரும்ப சிக்பேட்டுக்கே போவார். இப்ப அதெல்லாம் சாத்தியமில்லை.
பெங்களூரில் ரோட்டில் போகும்போது தலையை தூக்கினாலேயே மெட்ரோ ரயில் பாலங்கள் கட்டுமானம் தான் எங்கு பார்த்தாலும். 24 மணி நேரமும் பானி பூரி சாப்பிடும் நகரம். மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டிகளும் ஆட்டோக்களும் தலை தெறிக்க ஓட்டுகிறார்கள். டிராஃபிக்கிற்கு பயந்து முதல் நாள் பய்யப்பன்னஹள்ளியில் மெட்ரோ ரயில் பிடித்து மஹாலக்ஷ்மி போய் இஸ்கான் கோவில் தரிசணம் முடித்த கையோடு கோவில் பிரசாத உணவகத்தில் கோகோனட் ஹோளிகே (தேங்காய் போளி), பெண்ணெ (வெண்ணெய்) தோசா மற்றும் காஃபின் நீக்கப்பட்ட வேதிக் காபி சாப்பிட்டது சுகானுபவம் (காபி தவிர).
ஓலா வரைபடத்தில் புள்ளி சர்ஜாபூர் ரோட்டைக்காட்ட அதற்குள் இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'எங்கே இருக்கீங்க' என. தொடர்ந்து தொலைபேசி அழைப்பு. 'இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேங்க' என சொல்லி ரோட்டை பார்த்தேன். கார்களுக்கிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் வரிசையாக ஸ்கூட்டிகளும் பைக்குகளும் புகுந்து முன்னேற, ஓட்டுநர் தொலைபேசியில் 'ஹொரகடே இல்லப்பா..ஒளகடே..நானு ஹேளிதே.. அவ்தா? அவ்தா?' என யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
பிக் பஜார் தாண்டி டோமினோ பீட்ஸா முன்னால் இடது பக்கம் திரும்பி ஶ்ரீரெட்டி கட்டிடம் நுழைந்து நேபாளி செக்யூரிட்டி காட்டிய ரிஜிஸ்தரில் கையொப்பமிட்டு முதல் தளத்தில் நாலைந்து ஃப்ளாட்டுகள் தாண்டி அழைப்புமணியை அழுத்த, கதவைத்திறந்து புன்முறுவலோடு வரவேற்றார். சென்ற ஆண்டு என் முகநூல் நண்பரானவர்.
இவரது முகநூல் பதிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில். அபாரமாக எழுதுபவர். அப்பா, சகோதரிகள் என இவரது குடும்பத்தில் எல்லோரும் புத்தகம் சார்ந்த துறைகளில் (மாக்மில்லன்) பணியாற்றியவர்கள்.
தன் குடும்பத்தைப்பற்றி சுறுக்கமாக சொல்லி, எனது குடும்பத்தாரைப்பற்றியும் விஜாரித்தவுடன்,
பணிப்பெண்ணை காபி கலக்கச்சொன்னார். காபியை உறிஞ்சியவாறே வீட்டை சுற்றி வந்தேன். அழகான இரண்டு பெட்ரூம் ஃபளாட். முன் அறை, பெட்ரூம் என எங்கு பார்த்தாலும் ஏராளமான புத்தகங்கள். எனக்கு எதிரே அமர்ந்திருந்த அவரின் கைக்கெட்டும் தூரத்தில் சோஃபாவிலேயே கொஞ்சம் புத்தகங்கள்.
புத்தகம் அதிகம் படிப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். ரயிலில் கடலை வாங்கி சாப்பிட்டாலும் கடலை பொட்டலத்தின் பேப்பரை முழுவதும் படிக்க விரும்புவேன்.
அடுத்த அரை மணி நேரம் இவருடன் பேசும்போது நிறைய மெசேஜ்கள் எனக்கு கிடைத்தன. வயதான காலத்தில் அடுத்தவருக்கு உபத்திரவமோ தொந்தரவோ கொடுக்காமல் கூடியவரையில் நம்மை நாமே பார்த்துக்கொள்வது, கவலையோ வருங்காலத்தைப்பற்றியோ நினைத்துக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் மனப்பான்மை, எந்த வித கஷ்டத்தையும் புன்முறுவலுடன் ஏற்று அதனுடனே பயணிப்பது, சிரமங்களை தவிர்க்க நம் நினைவுகளை திசை திருப்பி (diversion) புத்தகம் படித்தல், நண்பர்களை சந்திப்பது போன்று நமக்கு பிடித்தவற்றை செய்வது.. இவையெல்லாம் இவரிடம் கற்றுக்கொண்டேன்.
தனக்கு பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இவரது பேத்தி முதலிடம் என்பதை தெரிந்து கொண்டேன். அவ்வப்போது இவருடைய பதிவுகளில் பேத்தியின் புகைப்படத்தை பார்க்க முடிகிறது.
இவரின் இனிய பிறந்த நாளான இன்று பேத்தியுடனிருக்கும் இவரது பென்சில் ஓவியத்தை வரைந்து பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

Thursday, December 28, 2017

ஜம்புநாதன்

கையில் இரண்டு பெட்டிகளுடன் தாதர் ஸ்டேஷனில் ரயில் மாறி வெஸ்டர்ன் ரயில்வே பம்பாய் சென்ட்ரலில் ப்ளாட்ஃபார்ம் நெ. ஒன்றில் காத்திருந்த ரயிலில் ஏறி அமரவும் ரயில் மெதுவாக நகரத்துடங்கியது. சுற்றிலும் வெள்ளை ஜிப்பா, பெருத்த சரீரமுள்ள, பான்பராக் குட்கா ஆசாமிகள். குஜராத்திகள். பே லாக் (2 லட்சம்), த்ரன் லாக் (3 லட்சம்) என வளவளவென வியாபாரம் பற்றி பேச்சு. என்னுடைய இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்திருந்த ஆசாமி சற்றும் கவலையே இன்றி என்னை இன்னும் நெறுக்கி, கொல்லென இருமும்போது என்னையும் சேர்த்து உலுக்கி நகர்த்தினார். வாப்பி, வல்சாட், நவ்சாரி என ஸ்டேஷன்களில் மக்கள் ஏற ஏற, பக்கத்து ஆசாமி என் முதுகுக்கு பின்னால் சரிந்து தூங்க, நான் சீட் நுனியில்.
தூக்கம் வரவில்லை. மனசும் சரியில்லை. பங்குச்சந்தை சரிவால் வேலை போய் இரண்டு மாதங்கள் பம்பாய் முலுண்டில் அண்ணன் வீட்டில் ஜாகை. மனைவி பிரசவத்திற்கு போயிருந்த நேரத்தில் இந்த புதிய வேலை கிடைத்து, 8 வருட பம்பாய் வாழ்க்கையை விட்டு குஜராத் பக்கம் போகிறேன்.
கம்பெனியின் தலைமை அலுவலகம் பம்பாய் வொர்லி பகுதியில். ஆருயிர் பால்ய நண்பன் Ganapathi Subramanianனின் சிபாரிசால் அங்கே க்ரூப் ஃபைனான்ஸ் கன்ட்ரோலராக இருந்த ஜம்புநாதன் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் இன்டர்வியூவில் எந்த கேள்வியும் கேட்காமல் வேலை கிடைத்தது.
ஜம்புநாதனும் திருச்சிக்காரர். தென்னூர் சுப்பையா ஸ்கூல் தாண்டி ஹிந்தி பிரச்சார சபா எதிரே உள்ள அக்ரஹாரத்தில் அவருக்கு வீடு. அவரது மைத்துனர் சங்கர் என் செயின்ட் ஜோசப் பள்ளித்தோழன். கோபால் புக் டெப்போ புத்தகக்கடையை மலைவாசல் எதிரே வைத்திருந்தவர்கள்.
ரயில் மூச்சிரைத்தபடி சூரத் ப்ளாட்ஃபாரத்தில் நுழைய, 'ச்சாய் .. ச்சாய்வாலா' என சத்தம். ஒரு கும்பல் தபதபவென வண்டியில் ஏறி நெருக்கித்தள்ள, குண்டு ஆசாமி வெகுண்டு எழுந்தான். இப்போது சரியாக அவன் மடியில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்க்லேஷ்வர் ஸ்டேஷன் வர, முட்டித்தள்ளி நீந்தி பெட்டிகளோடு ப்ளாட்ஃபாரத்தில் குதித்து கம்பெனி காருக்காக காத்திருந்தேன். காற்றில் ஏதோ வாடை மற்றும் புகை. . மூக்கு நமநமவென அரித்தது. காரணம் அங்க்லேஷ்வரில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மருந்து, சாயம் மற்றும் ரசாயனக்கழிவுகள். சுகாதாரக்கேடு அதிகம். ஆஸ்த்துமா நோய் வருமாம்.
இந்த ஊர்ல எத்தினி நாள் இருப்பமோ என யோசிக்கும்போதே அம்பாசடர் கார் ஒன்று வந்து நின்றது. வாய்நிறைய பான்பராக்குடன் வந்த ஆசாமி நேராக மதராஸியான என்னை அடையாளம் கண்டு சதானந்த் ஹோட்டலில் இறக்கிவிட்டான். குளித்துவிட்டு டிபனை முடித்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிப்போகும் கைதி போல கம்பெனிக்கு அழைத்துப்போனார்கள்.
ஆன்ட்டிபயோடிக் மருந்துகளான அமாக்ஸிஸிலின், செஃபலாக்ஸின் தயாரிப்பவர்கள். கம்பெனியில் என்னைத்தவிர எல்லோருமே குஜராத்திகள். ஒருவரும் அடக்கமாகவோ பதவிசாகவோ பேசமாட்டார்கள். ஃபாக்டரியில் வேலை செய்யும் முக்காவாசிப்பேர் பரூச், படோதா பகுதியிலிருந்து தினமும் ரயிலில் அப்டௌன் செய்பவர்கள். பெண்கள் சதா நொறுக்குத்தீனி அசை போட்டுக்கொண்டிருக்க, ஆண்கள் நொடிக்கொரு முறை தாய் மற்றும் சகோதரியை குறிப்பிட்டு சொல்லும் ஹிந்தி கெட்டவார்த்தைகளை பிரயோகித்தார்கள். (நிற்க..! அது என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என இப்ப யோசிக்காமல் அடுத்த பாராவுக்கு போகவும்)
சிரிக்காதீர்கள்! கம்பெனி உள்ளே நுழையும்போதே 'ஏண்டா சாலே! ஆறுமாதமா பணம் தராமெ என்னடா கம்பெனி நடத்தறீங்க! என கர்ஜித்தவாரே நம்மிடம் வரும் சப்ளையர்கள்.. மணிக்கொருமுறை சாய் குடித்து குட்கா பொட்டலத்தை கிழித்து வாய்க்குள் போட்டு எச்சில் வழியாமலிருக்க தலையை தூக்கி பேசும் மானேஜர்கள்..படோதாவிலிருந்து வரும் கர்னாவதி எக்ஸ்பிரஸ் இன்று ஏன் லேட் என வெட்டிப்பேச்சு பேசும் மேத்தாக்கள், தேசாய்கள், படேல்கள்..
அவர்களுடன் மதிய உணவு சாப்பிடும்போது கவனிப்பேன்.. சீராக அடுக்கப்பட்ட, அப்பளம் போல ஒரே சைஸில் பத்து பன்னிரெண்டு சன்னமான சப்பாத்திகளை டிபன் பாக்ஸிலிருந்து மொத்தமாக எடுத்து அப்படியே முறுக்கி பிய்த்து, எண்ணெய் நிரம்பிய ஆலு சப்ஜியில் முக்கி எடுத்து சாப்பிடுவார்கள். பொதுவாக குஜராத்திகள் எல்லோரும் உணவுப்பிரியர்கள். காலை உணவு டோக்ளா சாபுதானா வகையரா. மதியமும் இரவும் ரோட்டி, எண்ணெய் சொட்ட சப்ஜிகள், கிச்சடி, நடுவே சமோசா, கச்சோரி, ஶ்ரீகண்ட், வேர்க்கடலை (பரூச் கா சிங்தானா பிரபலம்). இரவு பத்து மணிக்கு மேல் வெட வெட குளிரில் ஐஸ் க்ரீம் கடையில் கூட்டம் அம்மும். ஆண்கள் மேல் பாகம் பெருத்து ஒல்லியான கால்களில் முடிய, பெண்கள் எப்படி ஆரம்பித்தாலும் அகலமாகவே முடிவார்கள்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான penicillin-Gயை (Pen-G) எங்கள் நிறுவனம் அரசாங்க அனுமதியுடன் இறக்குமதி செய்வார்கள். அது கிடைப்பதற்கரிய வஸ்து என்பதால் அரசாங்கம் கோட்டா விதித்திருத்தது. பென்ஜி எவ்வளவு உபயோகப்படுத்தினோம் என்ற கணக்கை தணிக்கை செய்ய food and drugs administration துறையிலிருந்து மாதமொரு முறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். தவிர அவ்வப்போது விற்பனை வரி அலுவலகத்திலிருந்தும் வந்து நிற்பார்கள். ஃபாக்டரி அக்கவுண்ட்ஸ் இன் சார்ஜான நான் தான் அவர்களை சமாளிக்க வேண்டும். பொழுது விடிந்தால் பிரச்சனை தான்.
கம்பெனியிலிருந்து பத்தே நிமிடத்தில் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடியில் விசாலமான ஃப்ளாட். பெரிய பால்கனி. நான், மனைவி உஷா, இரண்டுமாத குழந்தை பிரஷாந்த் மற்றும் குறை பிரசவ குழந்தை சைஸில் இரண்டு பல்லிகள் அந்த ஃப்ளாட்டில் குடியிருந்தோம். மாலை ஆபிஸிலிருந்து வந்து ஃபளாட்டில் நுழையும்போது உஷா சோஃபா மீது ஏறி நின்று கொண்டிருப்பாள், அறை ஒரத்தில் தரையில் பல்லி நின்று கொண்டிருப்பதால். சிலசமயம் சுவற்றிலிருந்து ச்ச்ச்சப்ப்ப்பென சப்தத்துடன் பல்லி தரையில் குதிக்கும்போது உஷா அலறாமல் இருந்தால் அதிசயம் தான்.
காலை மாலை பான்பராக் அம்பாசடர் வந்துவிடும். நாங்கள் ஐந்து மானேஜர்கள் ஒரே பில்டிங்கில் வசித்தாலும் ஆபிசில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். எதை கேட்டாலும் குதர்க்கமாகவே பதில் சொல்லும் ஸ்டோர்ஸ் மானேஜர் படேலுக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'அர்ரே! பீவி புக்கார் ஹெ.. மனைவிக்கு உடம்பு சரியில்லை..'
அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும்.
'ஆமா.. உங்க வைஃப்க்கு தானே காய்ச்சல்.. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்க?'
'பின்னே நீயா லீவு எடுப்பே?'
இவன் பட்டேல் இல்லை.. பொட்டேல். சரியாக வாங்கி கட்டிக்கொண்டேன். அன்றிலிருந்து நான் அவனிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
கம்பெனியில் எல்லோருமே எகத்தாளமாக பதில் சொல்கிறார்களே! காலை எட்டு மணிக்கு ஃபாக்டரி உள்ளே நுழையும்போது இரும்பு பக்கெட்டில் எதையோ எடுத்துக்கொண்டு எதிரே வந்தான் ஆபிஸ்பாய் மஹிசூரி. பக்கெட்டிலிருந்து பக் பக்கென புகை வேறு. 'அதென்னப்பா?' எனக்கேட்ட என்னிடம் 'இது லிக்விட் நைட்ரஜன் சார். ஒரு கரண்டி மொண்டு உங்க உள்ளங்கைல வச்சாக்க அந்த ரசாயணம் கைய பொத்துக்கிட்டு சதை வழியா கீழே இறங்கும். ஊத்தீறவா?' என பக்கெட்டை பக்கத்தில் கொண்டு வந்தவனை தடுத்து 'ஏம்ப்பா.. மஹிசூரி! யாரு பெத்த புள்ளப்பா நீ! ராவுகாலத்தில் பொறந்தியா?' எனக்கேட்டு அந்தப்பக்கம் ஓடினேன். மரியாதை தெரியாத மணி சங்கர்கள்.
எப்படி இந்த கம்பெனியில் காலத்தள்ளுவது என யோசிப்பேன். அந்த ஊர் காற்றில் நஞ்சு.. அலுவலகத்தில் வேலைப்பளு.. சக சிப்பந்திகள் ஒத்துழைப்பு இல்லை. ஒரே ஒரு ஆறுதல். தலைமை அலுவலகத்தில் ஜம்புநாதன் சார் மட்டுமே பரிவாக பேசக்கூடியவர்.
மாதமொரு முறை ஜம்புநாதன் சார் ஃபாக்டரி விசிட்டுக்காக பம்பாயிலிருந்து வந்தால் ஆபீஸே அல்லோகலப்படும். பெனிசிலின்-G இருப்பு எவ்வளவு, எவ்வளவு கொள்முதல் செய்தோம், அந்த மாத உற்பத்தி எவ்வளவு என சில எண்களை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே என்ன தில்லுமுல்லு நடந்திருக்கும் என சட்டென கணிப்பார். இத்தனை டன் பெனிசிலின்-G உபயோகித்தால் இன்ன அளவு அமாக்ஸிஸிலின் தான் உற்பத்தி செய்திருக்க முடியும். இல்லையென்றால் yield குறைய காரணமென்ன என கேள்வி கேட்டு ப்ரொடக்‌ஷன் மானேஜர் சிட்னிஸை நின்ன வாக்கிலேயே உச்சா போக வைப்பார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல அக்கவுண்டன்ட்கள் லோட்டஸ் 123யில் தலையை விட்டு தேடுவார்கள்.
மாலை படு காஷுவலாக மானேஜர்களுடன் 'முஜே எக்ஸ்ட்ரா மஸ்கா!' என ஆர்டர் செய்து மூக்கில் ஜலம் வழிய ரசித்து பாவ் பாஜி சாப்பிடுவார். ஆபிஸை மறந்து கிண்டலடித்து அரட்டையடிப்பார். சிகரெட், குட்கா, மது போன்ற லாகிரி வஸ்துக்கள் கிடையா. டை கட்டும் வழக்கம் இல்லை. டிசைன் மற்றும் நிறமில்லா வெள்ளை அரைக்கை சட்டையை பாண்ட்டுக்குள் திணிக்காமல் எடுத்து விட்டிருப்பார். மெல்லிய சட்டைக்குள்ளிருந்து தொப்பையில்லா வயிற்றில் கருப்பு பெல்ட் தெரியும்.
திடீரென பார்த்தால் ஒரு வார லீவில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டிலுள்ள தன் வீட்டு வாசல் திறந்த வெளியில் ஈசி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அப்பவும் கையில் ஏதோ மானேஜ்மென்ட் புத்தகம். பக்கத்தில் காலி டபரா. அங்கேயும் அவரை விட்டு வைக்காமல் நான் ஆஜர். 'நானும் லீவு சார். ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். உங்களையும் அப்பிடியே பாத்துட்டு...' என ஏதோ சாக்கு. வந்ததே அவரை பார்க்கத்தான் என அவருக்கு தெரியுமோ இல்லையோ, அருமையான காபி நமக்கு உண்டு.
நிறைய முறை பம்பாயில் அவரது வீட்டிற்கு கணபதி என்னை அழைத்துச்சென்றிருக்கிறான். நான் அவர் மூலம் இந்த வேலைக்கு வந்தவன் என்பது கம்பெனியில் எல்லோருக்கும் தெரிந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென கொஞ்சம் கண்டிப்புடன் எதிர் பார்ப்பவர்.
பம்பாய் 'தானே' பகுதியில் வீடு அவருக்கு. டானென்று காலை எட்டு மணிக்கு ப்ரீஃப் கேஸ் சகிதம் நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் தன் ஃபியட் கார் பின் இருக்கையில் ஏறுவார். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடனே டிரைவர் சஷ்டி கவசம், சஹஸ்ரநாமம் என காசெட்டை தட்டி விட, இவர் ஸ்லோகங்களை உச்சரித்தபடி எகனாமிக் டைம்ஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள், இந்தியா டுடே, சுச்சேதா தலால், சுவாமிநாதன் அங்கலேஸாரிய அய்யர் கட்டுரைகள் என அவர் உலகமே தனி.
விக்ரோலி கொத்ரெஜ் பாய்ஸ் கம்பெனி தாண்டும்போது தண்ணீர் எடுத்து குடிப்பது என எல்லாம் டயத்திற்கு செய்வார். 'வனமாலி கதி சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகி' யின் போது பிரிமியர் பத்மினியிலிருந்து தலையை திருப்பி வெளியே பார்த்தால் வொர்லி சிக்னல் தாண்டும் என சத்தியம் செய்வேன். இது தினமும்..
கம்பெனி முதலாளிகள் காந்தி சகோதரர்கள் ஜம்புநாதன் சொல்வதை தெய்வ வாக்காக மதிப்பவர்கள். பம்பாயிலிருந்து அங்க்லேஷ்வர் பாங்க் மானேஜருக்கு ஒரே போன் காலில் பல லட்சங்களை இன்வாய்ஸ் பில் டிஸ்கௌண்ட் அக்கவுண்ட் மூலம் வரவு வைப்பார். அந்த அளவிற்கு அனுபவமும் இன்ஃப்ளுவென்ஸும் கொண்டவர்.
எப்படியோ ஒருநாள் கணபதி மூலம் எனக்கு பஹ்ரைன் வேலை கிடைத்து விசா வந்து விட்டது. மூன்று மாத நோட்டிஸ் கொடுத்து விட்டு பிறகு நீ போகலாமென ஆபிஸில் சொல்லிவிட விசனத்துடன் வந்து சீட்டில் அமர்ந்தேன். ஏதாவது பிரச்சனை செய்வது என அவர்கள் இருந்ததால் மாலை ஜம்புநாதனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். 'கம்பெனி விதிமுறைகள் அப்பிடியாச்சேப்பா!.. உன் காண்ட்ராக்ட்ல அப்பிடி போட்டிருந்தா என்ன செய்வே?' என அவர் கேட்க அழுகையே வந்துவிட்டது எனக்கு.
'உடனே ஜாயின் பண்ணலேன்னா பஹ்ரைன்ல விசா கான்சல் பண்ணிருவாங்க சார்' என நான் கெஞ்ச, அவர் 'இப்ப நான் தலையிடுவது சரியில்லப்பா. உன் காண்டிராக்ட் பிரகாரம் மூனு மாச நோட்டீஸ்.. இல்லாட்டி 3 மாச சம்பளத்தை சரண்டர் பண்ணலாமே!. நீ அதை பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டிருப்பாங்க.. மூனு மாச சம்பளத்த பஹ்ரைன்ல சம்பாரிச்சுக்கலாம்பா! ' என அவர் சொல்ல மறு நாள் காலை லெட்டர் எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த சில மணி நேரத்தில் எனது 'த்யாக் பத்ர' விஷயம் ஹெட் ஆபிஸுக்கு போனது.. ஜம்புநாதனிடமிருந்து ஃபாக்டரி வொர்க்ஸ் மானேஜருக்கு டெலக்ஸ் வந்தது. ஆபிஸ் மீட்டிங் ரூமில் சமோசா, கச்சோரி, ஜிலேபி வாசனை. ஃபேர்வெல் பார்ட்டியாம். நாற்பது பேர் கூடி என்னை வாயார வாழ்த்த, நானும் இந்த மாதிரி ஒரு அருமையான ஆபிசை பார்த்ததே இல்லையென இரண்டு நிமிடம் புளுகி (இல்லாட்டி விசா போச்சே!) , சிலரின் உருவப்படத்தை (ஜம்புநாதன் உள்பட) கார்ட்டூனாக வரைந்து காட்டி, கைத்தட்டல் பெற்று, ஓரிரு நாளில் பம்பாய் வந்து, விமானம் ஏறும் முன் ஜம்புநாதனிடம் ஆசி பெற்று பஹ்ரைன் வந்திறங்கி 23 வருடங்கள் ஓடியது தெரியவில்லை.
பி.கு: ஜம்புநாதன் சாருக்கு இந்நேரம் 75 வயது பூர்த்தியாகியிருக்கும்,10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக புற்று நோய் வந்திராவிட்டால்..