மின்னலாய் வகிடெடுத்து.. மேகமாய் தலைமுடித்து..
சில வருடங்கள் முன்பு மல்லேஸ்வரம் பகுதி 11ஆவது க்ராஸில், ஶ்ரீ அகில ஹவ்யக மஹா சபாவில் என் நண்பர் Harish Jagannath அவர்களது தாயாரின் வைகுண்ட சமாராதனை நினைவு சந்திப்பிற்கென நண்பர்கள் 10,12 குடும்பங்கள் கூடி தாயாருக்கு அஞ்சலி செலுத்தியபின், கிளம்பியபோது அடுத்த இரண்டு வீடு தள்ளி நிறுத்தியிருந்த என் காரை எடுக்கும்போது அந்த வீட்டு வாசலில் B. சரோஜா தேவி என கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் பதிக்கப்பட்ட பெயர்ப்பலகை பார்த்ததும், இது கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவியின் வீடாக இருக்குமோவென சந்தேகம். மறுநாள் நண்பர் ஹரிஷிடம் கேட்க, அவர் அவர்களது வீடு தான் சொன்னபோது ‘ஆஹா! அபிநய சரஸ்வதி அவர்கள் வீட்டையா பார்த்தோம், அவர்கள் வீட்டின் முன் காரையும் நிறுத்தினோம் என பூரிப்பு எனக்கு.
80களில் திருச்சியில் வெறும் பழைய படங்கள் மட்டுமே விரும்பி பார்ப்பேன். அதிலும் சுப்ரமணியபுரம் சுரேஷ் டாக்கீஸ், ராமகிருஷ்ணா தியேட்டர் என எம்ஜியார், சரோஜா தேவி பட போஸ்டரை கண்டால் தவறாமல் அப்படங்களை பார்த்து விடுவேன். ஸ்டார் சினாமாவில் புதியபறவை பார்த்து வெகுநாட்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது படக்காட்சிகள்.
கண்பார்வையற்றவராக எம்ஜியாருடன் நடித்த நாடோடி படத்தின் ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலை பாபு ரோடு முருகன் தியேட்டரில் ஃபேன் இல்லாமல் வியர்வை புழுக்கத்துடன் மூட்டைப்பூச்சிக்கடிகளை பொருட்படுத்தாமல் ரசித்துப் பார்த்தவன்.
டூரிங் தியேட்டரின் வெளியே சோவென மழை பெய்துகொண்டிருக்க, அப்பாவின் ஆப்ரேட்டர் நண்பருடன் ஆபரேட்டர் ரூமில் இருந்தபடியே ‘கலங்கரை விளக்கம்’ பட ‘பொன்னெழில் பூத்தது’ பாடலை கண்கள் விரிய 1965இல் (4 வயசு) நீலகிரி மாவட்ட அரவேணு நகரில் பார்த்தவன்.
‘வண்டு வருகின்றது, மலரில் அமர்கின்றது’ எனும் சிவாஜியைத் தொடர்ந்து ‘உண்டு சுவைக்கின்றது, உறங்கி விழுகின்றது’ என்றபடியே சிவாஜியின் தோளில் மெல்ல சாய்வது போல போவார்.. ஆனால் சாய மாட்டார். திருமணம் ஆனபின் நடிக்க வந்த நடிகை அல்லவா! பாடல் காட்சிகளில் சட்லாக நெருக்கம் காட்டி, காட்டாமல் நடிப்பார்.
‘அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே கனவான கதை கூறவா.. பொங்கும் விழி நீரை அணை போடவா’ (ஆடிப்பெருக்கு) என்றபடியே யாருக்கும் தெரியாமல் சட்டென கண்களை துடைத்துக்கொண்டு இங்குமங்கும் பார்த்துக்கொள்வார்.
‘புத்தம்புதிய புத்தகமே’ பாடலின் ஆரம்ப இசை முடியும் தருவாயில் தோட்டத்தில் ஆலமரத்தின் விழுதைப்பற்றிக்கொண்டு ஜிவ்வென அந்தப்பக்கம் பறந்து போய் குதித்த கையோடு ‘நீயும் வாயேன்’ என்பதை சைகையால் கை விரல்களைக் குவித்து எம்ஜியாரை கூப்பிடும் நளினம் கொள்ளை அழகு.
‘தாய் சொல்லை தட்டாதே’யில் தான் ஒருவரை மணக்கப்போவதாக எம்ஜியாரிடம் சொல்ல, சிஐடி போலிஸான எம்ஜியார் உடனே கோபித்துக்கொள்ள, உடனே இவர் அந்தாள் யாரென பெயரை சொல்லாமல் ‘ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்..
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்’ பாடலைப்பாட, உம்மென்ற முகத்துடன் நகரும் எம்ஜியாரை சுற்றிச் சுற்றி வந்து மான் போல் குதித்து ஆடிப்பாடியபடியே ‘இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்’ என நிறைய க்ளூ கொடுத்தும் அது தான் தானொன்று எம்ஜியாருக்கு தெரியாமல் (படம் பார்க்காதவர்களுக்கே தெரியும்), கடைசி இரண்டு வரிகளில் ‘அது நீ தான்யா’ என உணர்த்தும் வகையில்
‘சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசிய போலீஸ் சேவகனாம்’
என பாடலை முடித்து எம்ஜியாரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். நான் இங்கே சொல்ல வந்தது அந்த ‘தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்’ என்ற வரிகளில் லெஃப்ட் ரைட் போட்டு விரைப்பான போலிஸ் போல இவர் நடந்து காட்டும் அழகு!
தாமரை போன்ற மலர்ந்த வட்ட முகம், மான் விழிகள், கொஞ்சிப்பேசும் தமிழ் வசனம், நளினமான நடை, ஆடல் கலை என பன்முகம் கொண்டவர். மாடர்ன் உடைகள் இல்லாமல் பெரும்பாலும் புடவை தான்.
முகபாவங்களை காட்சிக்குத் தகுந்தபடி அனாயசமாக மாற்றி வெளிப்படுத்தும் பாங்கு இவரது சிறப்பு. குறிப்பாக..
அழுகைக்கு (கல்யாணப்பரிசு)
குற்றவுணர்வுக்கு (புதிய பறவை)
குறும்புக்கு (எல்லா படங்களும்)
கோபத்திற்கு (பெற்றால் தான் பிள்ளையா)
விரக்திக்கு (ஆடிப்பெருக்கு)
எல்லா முகபாவங்களும் (புதிய பறவை)
RIP மேடம் B. சரோஜா தேவி 


No comments:
Post a Comment