Tuesday, October 1, 2019

திருமதி Usha Seturaman

பஹ்ரைன் வந்த புதிது. ஹூரா பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் அங்கே. சிறுக சிறுக காசு சேர்த்து செக்கன்ட்-ஹேண்ட் கார் வாங்கினாலே மைசூர் ரெஸ்ட்ரோன்ட்டில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுப்போம். தாழ்வு மணப்பானமையுடன் யாரைப்பார்த்தாலும் வணக்கம் சொல்லத்தோன்றும். பிரதி வெள்ளியன்று சின்மயா மிஷன் சத்சங்கிற்கு போவது வழக்கம்.
நான், நண்பன் Ganapathi Subramanian, மாமாஜி (கணபதியின் மாமா) மற்றும் எங்கள் பில்டிங்கில் வசிக்கும் 2 பிரம்மச்சாரி நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போவோம். காலை 6 மணிக்கு எழுந்து குளித்து அரக்க பறக்க கிளம்பி, கணபதி என்னை பிக்கப் செய்து 7 மணிக்குள் மனாமா குஜராத்தி சமாஜ் வளாகத்திற்கு ஓடுவோம்.
நிறைய தொழிலாளர்கள் வருவார்கள்.சத்சங் முடிந்து இட்லி, வடை சாம்பார், கேசரி, பூரி என மஹா பிரசாதம். வெள்ளிக்கிழமை சத்சங் என்றால் மஹாபிரசாதம் தான் நினைவுக்கு வரும். 6 மணிக்கு தானாகவே முழிப்பு வரும். ரமதான் நோன்பு மாதத்தில் மஹாபிரசாதம் கிடையாது. வெறும் முந்திரி கிஸ்மிஸ் மினி பிரசாதம் தான். அந்த மாதம் கூட்டம் குறைவாக இருக்கும்😃. படுக்கையில் இருந்து நமக்கும் எழ மனசு வராது. டான் என கணபதி வந்து இழுத்துக்கொண்டு போவான்.
சத்சங் முடிவில் சமாஜின் தலைவர் கிஷோர் அசர்போட்டா உரையாற்றுவார். வயதில் மூத்தவர். ஏதோ கம்பெனியில் அக்கவுண்டன்ட். அவர் காலை தொட்டு வணங்குவோம். அங்கத்தினர் யாராவது வேலையை விட்டு இந்தியா திரும்ப போவதாக இருந்தால் சத்சங் நடுவே மேடைக்கு அழைத்து பாராட்டி பரிசு (சின்மயா புத்தகம்) கொடுப்பார். மறக்காமல் ‘நீயே போறியா.. இல்ல அவங்க உன்னை அனுப்பறாங்களா?’ என கேட்டு வைப்பார். வேலை போன ஆட்கள் சத்சங் வராமல் சத்தம் போடாமல் மஹாபிரசாத்தில் கலந்து கொண்டு அவரை பார்க்காமல் ஓடிவிடுவாரகள்.
‘அகண்ட மண்டலாகாரம்.. வியாப்தம் யேன ச்சராச்சரம்.. தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ..’ என கணீரென குரு ஸ்தோத்ரம் சொல்வோம். மத்தவங்களை விட நம்ம சத்தம் ஜாஸ்தியா கேக்கனும்’ என்ற முனைப்போடு எல்லோரும் கத்தி பாடுவோம்.
சுமார் ஒரு மணி நேரம் கீதா ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் பங்களாதேஷி இளைஞன் தபலாவை வெளியே எடுக்க, பன்வாரி லால் என்பவர் ஹார்மோனிய பெட்டியை திறந்து ‘மது சூதனா.. ஹே மாதவா’ என ஆரம்பிக்க மெய் மறந்து கண்களை மூடி கூட சேர்ந்து பாடுவோம். பங்காளா தேஷிக்கு பின்னால் நானும் சில நாட்கள் தபலாவுடன். சுமாராக வாசிப்பேன். பங்களாதேஷி சத்தத்திற்குள் நான் அமுக்கி வாசிப்பேன். என்றைக்காவது அந்த பங்களாதேஷிக்கு கை வலித்து நடுவே நிறுத்தி விடக்கூடாது என வேண்டிக்கொள்வேன்.
சத்சங்கின் நடுவே சின்ன இடம் கிடைத்தாலும் ஜனங்கள் முன்னேறி துள்ளி குதித்து யாரோ மடியில் உட்காராத குறை. வெங்கோப ராவ் என்பவர் ‘விட்டலா... விட்டலா.. பாண்டுரங்க விட்டலா.. பண்டரிநாதா விட்டலா..’ என பாட ஆரம்பித்தால் புல்லறிக்கும்.... அவருக்கு. கணீர் குரல். மைக்கை பின் பக்கமிருந்து அவரிடம் அனுப்புவதற்குள் மைக்கே வேண்டாமென பாட ஆரம்பித்து விடுவார். பெரிய சரீரம் கொண்ட அவருக்கு பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து நின்றாலும் சுவாமி சின்மயானந்தா போட்டோ மறைக்கும். மாமாஜி (60) எப்பவும் அவரை கிண்டல் செய்வார். ‘ஈயாளு ராவ் ஒரு மாசம் ச்சுட்டி எடுத்து ஊருக்கு போனேங்கில் மனாமாவுல அத்தற அரிசிக்கடையும் அடைச்சுடுவான்கள்’ என மாமாஜி மெதுவாக சொல்ல, கணபதி மற்றும் நண்பர்கள் சத்சங் நடுவில் சிரிப்பை அடக்க கடும் முயற்சி செய்வோம்.
சத்சங்கில் கடைசியாக திருமதி Usha Seturaman அவர்களின் பஜன் கேட்பதற்கே நிறைய பேர் தவறாமல் வருவார்கள். அந்த பஜனுக்கு முன் 4 வரிகள் அவர் பாடும் ஸ்லோகத்தில் மெய் மறந்து கண்களை மூடி ரசிப்போம். சுமார் ஏழெட்டு நிமிடம் சாய் பஜன் அல்லது ஶ்ரீராமர் பஜன் என வாரா வாரம் அவர் பாட, அந்த சூழலே தெய்வீகம் தான்.
பஹ்ரைனில் இந்திரன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் முக்கிய உறுப்பினர். நிறைய கச்சேரிகள் செய்வார். வருடா வருடம் தியாகராஜ ஆராதனையன்று சுமார் பத்து இருபது பாடகர்கள் சூழ அவர் பாடும் அழகே தனி. தீவிர சாய் பக்தை. அவரது வீட்டில் வியாழனன்று சாய் பஜன் உண்டு. பையன்களையும் புட்டபர்த்தியில் படிக்க வைத்தார். கணவர் சேதுராமன் சிஏ. உயர் பதவியில் இருக்கிறார். பஹ்ரைனில் எல்லோருக்கும்
பரிச்சயமானவர். எங்கள் சிஏ சாப்டரின் அங்கத்தினர். கணபதிக்கு மிகவும் நெருக்கமான தம்பதி..
உஷா அவர்கள் நிறைய பாடல்கள் பாடி காசெட், சிடி வெளியிட்டிருக்கிறார். அவ்வப்போது பஹ்ரைன் இந்தியன் க்ளப் மேடையில் ‘முல்லை மலர் மேலே’ என சினிமா பாடல்களும் அருமையாக பாடுவார்.
இன்று பிறந்த நாள் காணும் உஷாஜி அவர்களுக்கு எனது ஓவியத்துடன் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment