Tuesday, October 1, 2019

துபாய்..இரவு மணி 12.45.. போக்குவரத்து அதிகமில்லாத சாலை. பளீரென விளக்குகள். எங்கள் காரைச்சுற்றிலும் மூன்று ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வண்டிகள். முன்னிருக்கையிலிருந்த நான் சட்டென கண் விழிக்க ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடங்கள் முன் டமாலென சத்தம் கேட்டது லேசாக நினைவுக்கு வர, நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்த மாதிரி பயங்கர வலி. மூச்சு விட ஸ்ரமமாக இருக்க, இறக்கப்போகும் கடைசி சில நிமிடங்கள் போல இருந்தது!
எதிரே புகையோ புழுதியோ.. என்னை முழுவதும் மறைத்தபடி ஏதோ ஒரு சாக்கு மூட்டை மாதிரி. சற்று நேரம் முன் தான் airbag 'டமால்' என்ற பெருஞ்சப்தத்துடன் கார் டேஷ்போர்டை உடைத்துக்கொண்டு என் நெஞ்சில் மோதி.. சுற்றிலும் புகை மூட்டம் மற்றும் கண்ணாடித்துகள். டிரைவர் இருக்கையிலிருந்த என் மைத்துனர் சதீஷும் மற்றொரு airbag இல் புதைந்திருக்க அவரெதிரே ஸ்டியரிங்கை கிழித்து ஊதி வெளியேறியிருந்தது airbag.
பின் இருக்கையில் 75 வயதைத்தாண்டிய என் மாமனார் (சதீஷின் அப்பா) மற்றும் சதீஷின் மாமனார் இருவரும் தம் இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, முழங்கால் பகுதியில் பேண்ட் கிழிந்து, இரத்தக்கசிவுடன் பொட்டலங்களாக கிடந்தனர்.
இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பெரிய சாலை விபத்தில் சிக்கிக்கொண்டோம் என்பது புரிய ஆரம்பித்தது. இது நடந்தது இரண்டு வருடங்கள் முன்பு. ஒரு ஃபிப்ரவரி மாதம் அலுவல் நிமித்தம் நான் ஒருவாரகாலம் துபாயில் இருந்த போது நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து. அதுவும் எனது பிறந்த நாளன்று.
சரேலென சதீஷ் எழுந்து என்னை தட்டியெழிப்பி Are you ok எனக்கேட்க, உடலை அசைக்க முடியவில்லை. பின்புறம் திரும்பி தன் தந்தையை அவர் எழுப்ப, அவரும் கலவரத்துடன் எழ முயற்சித்தார். சட்டென கார்கள் அருகில் வந்து நிற்க, அரபிக்காரர்கள் சிலர் ஓடி வந்து 'hey.. get down first.. there is smoke in the engine!' என கத்த அடுத்த நொடி நாங்கள் நால்வரும் காரிலிருந்து அவசரமாக தள்ளாடியபடி இறங்கினோம். நல்ல வேளை கார் தீப்பிடிக்கவில்லை.
நிற்க முடியாமல் மயக்கம் வர ஆரம்பித்தது. பதட்டமான சூழ்நிலையில் எப்போதும் நான் செய்யும் முதல் காரியம் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது தான். பலன் அடுத்த சில நொடிகளில் தெரிவது சத்தியம். உதடுகள் 'ஓம் பூர்புவஸ்ஸுவஹ.. தத்சவிதுர் வரேண்யஹம்' முனுமுனுத்து மயக்கம் வருவதை வெற்றிகரமாக தடுத்து, சாலையை கடந்து ப்ளாட்ஃபாரத்தில் கால்களை நீட்டி சயன நிலையிலிருந்த என்னை துபாய் போலீஸ்காரர் ஒருவர் ஓடி வந்து 'ஹேய்.. இது இரண்டு ரோடுகளுக்கு நடுவே உள்ள மீடியன் பகுதி.. இங்கு இன்னும் ஆபத்து.. அபீட் உட்ருவே!' என கைத்தாங்கலாக அழைத்துச்சென்று சாலையின் ஓரத்தில் அமர வைத்தார்.
யாரோ என்னிடம் வந்து ஏதோ கேட்பது மங்கலாக தெரிய வாய் குளறி ஏதோ சொல்கிறேன்.. நெஞ்சுவலி தாங்க முடியவில்லை என. சுற்றி பதினைந்துக்கும் மேற்ப்பட்ட ஆட்கள். ஆம்புலன்சிலிருந்து இறங்கி வந்த மலையாளி இளைஞர் என்னை வண்டியினுள்ளே அமர வைத்தார். இதற்குள் மனைவி உஷா தகவல் கிடைத்து அங்கே வந்து சேர்ந்தார்.
'சார்.. 6 வருடங்களுக்கு முன் எனக்கு angioplasty செய்யப்பட்டுள்ளது. தற்போது நெஞ்சில் அடிபட்டதில் தாங்க முடியாத வலி. Please உடனே என்னை பரிசோதியுங்கள்' என நாக்குளற நான் சொன்னதும், ஆம்புலன்ஸ் மலையாளி பெண் 'சார்..உங்க நெஞ்சுவலி அந்த airbag அடித்ததனால் தானே தவிர உங்க இதயம் அடிபட்டிருக்க வாய்ப்பே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம்' என சொல்லியவாறே தன் கைப்பேசியில் ' I have 2 persons with me.. one is Green and the other is Yellow.. no Red here..' என்றார். Yellow என்றால் critical என குறிப்பிடப்படும் என் மைத்துனரின் மாமனாருக்கு முதலில் கழுத்தில் வலி இருக்கிறதாவென கேட்டு உடனே அவரை அள்ளிக்கொண்டு விரைந்தது ஆம்புலன்ஸ். என்னை Green என குறிப்பிட்டது ஆபத்தில்லை என்பதற்காக போலும். Red என்றால் ‘மூக்கில் பஞ்சு கேஸ்’ எனக்கொள்க.
அல்நாஹ்தா தாண்டி க்வெஸேஸ் பகுதியில் வீட்டை நெருங்க சில நிமிடங்களே இருந்த நேரத்தில் நடந்த விபத்து இது. மைத்துனர் சதீஷ், மனைவி உஷா மற்றும் நான்..மூவரின் பிறந்த நாள் ஒரே வாரத்தில் இருந்ததால் துபாய் இந்தியா க்ளப்பில் சுமார் இருபது நண்பர்களுடன் இரவு உணவை முடித்து கேக் வெட்டி கொண்டாடி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். சதீஷின் மனைவி Pramila S Raj பெண்களுடன் GMC Envoy எனும் பெரிய 4 சக்கர வாகனத்தில் முன்னால் போக ஆண்கள் நாங்கள் நாலு பேர் காரில் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தோம்.
சிக்னலில் சிவப்பு விளக்கு மாறி பச்சை வந்தவுடன் இடது பக்கம் நாங்கள் திரும்பும் போது எதிர் பக்கமிருந்து மிக அதிக வேகத்துடன் சிவப்பு விளக்கில் நிற்காமல் சவுதி வண்டியில் வந்த எமராட்டி இளைஞன் எங்கள் காரை நேருக்கு நேர் மோத, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. பணக்கார இளஞர்கள் எப்போதும் விலை உயர்ந்த கார்களான மாசெரட்டி, லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களில் காதை கிழிக்கும் சத்தத்துடன் நள்ளிரவில் நண்பர்களுடன் பறப்பதும் டமாலென எங்காவது இடித்து சடுதியில் இறப்பதும் அரபு நாடுகளில் சகஜம்.
விபத்துக்கு வருவோம். எனது முதல் ஆம்புலன்ஸ் பயணம் அது (ஆமா! ஏதோ ஏரோப்ளேன் பயணம் மாதிரி ரொம்ப முக்கியம் இப்ப!) பக்கத்தில் என் கையை பிடித்துக்கொண்டபடி மனைவி. வண்டி ஊய்.. ஊய் என சைரன் ஒலியுடன் போகும்போது தான் நினைத்தேன் 'எத்தனை முறை ரோட்டில் சைரன் ஒலியுடன் செல்லும் ஆம்புலன்ஸை பார்த்திருக்கிறோம். இன்று நாமே அந்த வண்டியில். ஆம்புலன்ஸில் மூன்று பேர் கொண்ட குழு (மலையாளிகள்) பதட்டமேதுமில்லாமல் சூழ்நிலையை கையாண்டு, எங்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு புன்முறுவலுடன் விடை பெற்றுக்கொண்டிருக்கும் போதே அடுத்த விபத்துக்கான அலார ஒலி கேட்டு ஓடினார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.
அடுத்த சில நிமிடங்களில் எமெர்சஜென்சி வார்டில் படுக்கையில் என்னை கிடத்தி ஆக்ஸிஜன் மாஸ்க்கை முகத்தில் பொருத்தி, இஞ்செக்‌ஷன், மற்றும் என்னைச்சுற்றி வயர்கள், மானிட்டர் வகையறா. சுடானிய டாக்டர் ஒருவர் வந்து சோதித்து 'கழுத்தில் வலி இருக்கிறதா' என கேட்டு ஈசிஜி மற்றும் கார்டியாக் என்சைம் டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு, கை காலை மேலே கீழே ஆட்டச்சொல்லி எலும்பு முறிவு ஏதுமில்லை, எல்லாமே நார்மலாக இருப்பதாக சில நிமிடங்களில் சொன்னதும் எனக்கு நிம்மதி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர். 60 வயது மதிக்கத்தக்க மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் முன் அமர்ந்தேன். அக்கரையுடன் 'உன்னால் உட்கார்ந்து பேச முடியுமா?.. உன்னை இங்கு வரவழைத்து தான் பேச வேண்டுமென்பது நியதி. மன்னிக்கவும்' என பரிவாக பேசினார். 'காரை ஓட்டியது யார்.. எப்படி விபத்து நடந்தது என நீ பார்த்தாயா.. கார் ஓட்டியவர் ( என் மைத்துனர்) மீது குற்றமிருக்குமென நீ நினைக்கிறாயா.. இல்லை அவரை விடுவிப்பதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே!.. போன்ற கேள்விகள். ஆட்சேபணை உண்டென்றால் உடனே அவர் கம்பிகளுக்கு பின்னேவாம். பின், மைத்துனரின் கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு (அடுத்த ஒரு மாதத்திற்கு நாட்டை விட்டு போகாமலிருக்க), ஒரு மாதத்திற்குள் கோர்ட் வரும்படியும் அதற்குள் டிராஃபிக் காமிரா footage பார்த்து அவர் மேல் தப்பா அல்லது அந்த எம(ன்)ராட்டி இளைஞன் மேல் தப்பா என தெரிந்து கொள்வார்கள் என விளக்கினார்.
காலை நான்கு மணிக்கு மைத்துனரின் நண்பர்கள் சுகுனா ரமேஷ் தம்பதியின் இல்லத்தில் டீ, காபியுடன் வட்டமாக அமர்ந்து விபத்தைப்பற்றி விவாதித்து ட்ரேயில் பெரிய கேக் ஒன்றை கொண்டு வந்தார்கள். எனது பிறந்தநாளை சிம்பிளாக, இடது கையை நெஞ்சில் பிடித்துக்கொண்டு, வலியால் முனகிக்கொண்டே வலது கையால் கேக்கை வெட்டினேன்.
வாகனத்தில் போகும்போது சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவமும், முன் பக்க வாகன ஓட்டியின் அருகில் இருப்பவருக்கும் airbag தேவை என்பதும் இந்த விபத்தில் நான் தெரிந்து கொண்டவை. ஒரு சிறு சிராய்ப்பு இல்லாமல் உயிர் பிழைத்தது அதிசயமே. சமயபுரம் மாரியம்மன், மலைக்கோட்டை பிள்ளையார், சீரங்கம் பெருமாளுக்கு நன்றி.
Airbag அடித்த வலி நெஞ்சில் ஒரிரு மாதங்களிருக்குமாம். சிலருக்கு அதனால் எலும்பு முறிவே ஏற்படுமாம். தலை சீவ கையை உயர்த்தினாலோ, கையை நீட்டி தண்ணீர் க்ளாஸ் எடுக்க முனைந்தாலோ, கழிவறையில் இடது கையை.... ஜிவ்வென உயிர் போற சுகமான வலி..
இவ்விபத்திற்குப்பிறகு மனைவி உஷாவின் (Usharani Sridhar) ஹ்யுண்டாய் டுஸ்ஸான் (Tucsan) காரில் முன் பக்கம் airbag இல்லையென்பதால் உடனே வண்டியை விற்றுவிட்டு Jeep Cherokee வாங்கியாகி விட்டது.
கார் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்கள் பார்த்து வாங்குதல் அவசியம். Sun roof, DVD, alloy wheel, leather seat, Navigation போன்றவை இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். குறிப்பாக பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் airbag உள்ள வண்டிகள் பார்த்து வாங்குதல் உத்தமம்.
வளைகுடா நாடுகளில் அமெரிக்க கார்களுக்கு ரீசேல் மதிப்பு குறைவென்பதால் எல்லோரும் ஜப்பானிய டொயோட்டா காம்ரி, கரோல்லா, லெக்சஸ் கார் வாங்குவார்கள். ஆனால் அமெரிக்க வண்டிகளில் safety features நன்றாக இருக்கும்.
முன்பெல்லாம் ஃபோர்ட் க்ரௌன் விக்டோரியா காரை பஹ்ரைனில் சீந்துவாரில்லை. ஆனால் அமெரிக்காவில் அதே காரைத்தான் போலிசார் அதிவேகமாக ஓட்டிச்சென்று திருடர்களை பிடிப்பார்கள். ப்ளைமூத் மாதிரி ரொம்ப பெரிய்ய்ய கார். முன்னிருக்கையில் நலங்கு வைக்க ஏதுவாக பரந்த இடம். பின்னிருக்கையில் சாந்தி முகூர்த்தமே நடத்தலாம்.
2019 ஒரு ஆரோக்யமான வருடமாகவும், விபத்து ஏதுமின்றி பாதுகாப்பான வருடமாக அமைய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment