Tuesday, October 1, 2019

டைம் பாஸ் கதைகள்- 2

அலகாபாத் சிவில் லைன்ஸ்.. மேட்டுக்குடி மக்கள் நடமாடும் பகுதி. ஃபியட், ப்ளைமௌத், அம்பாசிடர் கார்களுக்கு நடுவே கோஹ்லி போட்டோ ஸ்டுடியோ முன் தன் பிரிமியர் பத்மினியிலிருந்து இறங்கிய ஷ்யாம் லால் ஆனந்த்துக்கு எழுபது வயதுக்குள் இருக்கும். சட்டைக்கு மேலே கையில்லா ஸ்வெட்டர் மற்றும் குளிருக்கான கம்பளி கோட் அவரை சற்று பெருத்து காட்டியது.
நகரில் புகழ் பெற்ற போட்டோ ஸ்டுடியோ அது. குறுகலான மரப்படிகளில் தும் தும் என சத்தத்துடன் மேலேறி வரும் வாடிக்கையாளர்கள். அங்கே வேலை செய்பவர்கள் ஏழெட்டு சிப்பந்திகள். எல்லா நாட்களிலும் கூட்டம் இருக்கும். லாகூரில் பிறந்து வளர்ந்த ஆனந்த் பிரிவினையின் போது கையில் சொற்பமான காசுடன் மனைவி கவுர் மற்றும் குட்டிப்பையன் கோவர்தன் லாலுடன் தில்லி ஓடிவந்தவர். பின் அலகாபாத் வந்து உழைத்து முன்னுக்கு வந்து ‘கோஹ்லி ஸ்டுடியோ’ துவங்கி கடந்த பதினைந்து வருடங்களில் நிறைய பணம் பார்த்தவர். மகன் கோவர்தன் லால் ஆனந்த் (36) கடை நிர்வாகம் பார்த்துக்கொள்பவர். அப்பா அருகே வந்தால் எழுந்து நிற்கும் அளவிற்கு மரியாதை.
நகரின் சற்று ஒதுக்குப்புறமான கம்பெனி கார்டன் அருகே தர்பாங்கா காலோனியில் ஆனந்த் குடும்பத்தாருக்கு பெரிய பங்களா. சிந்தி, பஞ்சாபி, பெங்காலி மற்றும் சீக்கியர்கள் வாழும் பகுதி. இரவு 9 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் குறைந்து பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் சாலையில் நிற்பார்கள். டப்டப் என புல்லெட்டில் வரும் பக்கத்து கிராமத்து டாக்கூர்கள் சால்வைக்குள் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியால் பட்பட் என யாரோ ஒரு எதிரியை சுட்டுத்தள்ளி விட்டு போகும் வழியில் கர்னல் கஞ்சில் பனார்ஸி பான் சாவகாசமாக வாங்கி சாப்பிட்டு விட்டு போவதும் அலகாபாத்தில் சகஜம்.
காலோனி மிட்டாய் கா துக்கான் வாசலில் எப்போதும் கூட்டம். மண்சட்டியிலிருந்து சாதக்கரண்டியால் கட்டித்தயிரை வெட்டி மட்காவில் வைத்து சூடான ஜிலேபியுடன் சேர்த்து கொடுப்பார்கள். சமோசா ச்சாய்யுடன் அது தான் காலை நாஷ்டா.
ஞாயிரன்று காலை 9 மணிக்கு ஆங்காங்கே பங்களா கேட்டுக்கு வெளியே மேலாடை இல்லா வெற்றுடம்புடன் விரித்துப்போட்ட நீண்ட கூந்தலில் கட்டித்தயிரை பூசி ஒரு மணி நேரம் சுள்ளென்ற வெயிலில் காய வைக்கும் சீக்கிய இளைஞர்களை பார்க்கலாம் (யப்பா! வேர்த்திருச்சா!). அடுத்த ஞாயிறு தலைக்குளியலுக்கு முன் அவர்கள் கிட்டப்போனால் கப்பு தான். டர்பனிலிருந்து வெளியே தொங்கும் முடியை கூரிய ஊசியால் சரட்டென உள்ளே தள்ளி ஊசியை டர்பனில் சொறுகிக்கொள்வார்கள் சீக்கிய ஆண்களுக்கு கூந்தல் பராமரிப்பு முக்கியம். நீண்ட தாடியை கழுத்தின் கீழ் சுருட்டி முடிச்சு போட்டு பசையை தடவி வைக்கும் இளைஞர்கள்.
மாலை ஏழு மணிக்கு பத்து எருமைகளை ஓட்டி வருவான் பால்காரன் லல்லன். ஆனந்த் வீட்டு வாசலில் வைத்து துணைக்கு ஒரு பையனுடன் பால் கறக்க ஆரம்பிக்க, அக்கம்பக்கத்தார் ஓவ்வொருவராக வந்து பால் வாங்கிக்கொண்டு போவார்கள். எருமை, பாலை கறக்க விடாமல் மடியை இறுக்கி பிடித்துக்கொள்ள, லல்லன் அதன் வாயை குறி பார்த்து மற்றொரு எருமையின் காம்பிலிருந்து பாலை சர்ரென பீய்ச்சி அடிக்க, ஆசையாக ஒரு வாய் பாலை குடித்ததும் எருமை தனது பாலை கறக்க விடும். எருமைகளுக்குள் அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங்.
அந்த பகுதியில் கோஹ்லி ஸ்டுடியொ ஆனந்த் குடும்பத்தார் வீடு மிகப்பிரபலம். அக்காள் மற்றும் மைத்துனருடன் தங்கிக்கொண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்ஸி படிப்பு எனக்கு. ஆனந்த் குடும்பத்தாரின் பங்களாவின் மாடியில் ஒரு போர்ஷனில் வாடகைக்கு இருந்தோம்.
68 வயது வெள்ளை சல்வார் அம்மா கவுர் தான் குடும்ப நிர்வாகம் எல்லாமே. பாதி நேரம் பஞ்சாபி கலந்த ஹிந்தியில் ‘மாடியில் தொட்டி தண்ணி காலியாயிடுச்சு.. மோட்டரை போடு’ என அவர் கத்துவது மேலே எங்களுக்கு கேட்கும். ( ) போல வளைந்த கால்களுடன் அவர் ஆடி நடந்தாலும் ஓயாமல் வேலை செய்யக்கூடியவர். ஏலம் கலந்த தேநீர் மற்றும் கோதுமை பிஸ்கோத்து தட்டுகளை கொண்டு போய் தோட்டத்தில் வைத்து ‘ஆஜாவ் சப்லோக்’ என குரல் கொடுப்பார்.
நேபாளி சமையல்காரன் பகதூர் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்திருக்க, மதியம் பன்னிரண்டு மணி வாக்கில் சமையலறையில் நுழையும் மருமகள், மாவை உருட்டி நடுவே ஆலு, லசூ(ன்) பூரணத்தை வைத்து மூடி தாராளமாக நெய் விட்டு சுட்ட கமகம வாசனை பராத்தாவை படுக்கை அறைக்கு கொண்டு செல்ல அங்கே தான் கட்டிலில் அந்த 7 வயது பையன் படுத்திருப்பான். அந்த வீட்டின் கடைக்குட்டி பிட்டூ. ஸ்டுடியோ விட்டு வந்ததும் தாத்தா ஆனந்த் நேராக பேரன் அருகில் கட்டிலில் உட்கார்ந்து தான் ஃபர்சான் (கார வகைகள்) மற்றும் சாய் சாப்பிடுவார். அப்பாவும் அப்படியே.
முதல் நாள் தான் பிட்டுவை கல்கத்தாவிலருந்து டிரெயினில் கூட்டி வந்தார்கள். கடந்த ஒரு வருடமாக அவனது சிறுநீரக கோளாறு சிகிச்சையால் இடிந்து போன குடும்பம் அது. மாதமொரு முறை டயாலிசிஸ் செய்து நோய் முற்றிலும் குணமடைய, தயாராக அடுத்த அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. ரீனல் ஆன்சைகோடோமா (renal oncycotoma) எனப்படும் சிறிய கட்டி திடீரென முளைத்து ஆனந்த் குடும்பத்தையே ஸ்தம்பிக்கச்செய்தது.
ஸ்டுடியோவில் பெரிய சைஸில் இருந்து சின்ன சைஸ் வரை மாடல் போட்டோக்கள் எல்லாமே குட்டிப்பையன் பிட்டூவின் போட்டோக்கள் தான். வெள்ளை வெளேரென வெண்ணைக்கட்டி மாதிரி இருக்கும் பிட்டூவின் உடல் நிலை எப்போதும் கவலைக்கிடம் தான். பிட்டூவின் அம்மா எப்போதோ முகத்தில் சிரிப்பை இழந்திருந்தாள்.
பிட்டூவிற்கு திடீரென முளைத்த சிறுநீரக கட்டிக்கான சோதனைகள் செய்ய மறுபடியும் கல்கத்தா பிரயாணம். புற்று நோயாக இருக்கக்கூடாதென ராம்பாக் ஹனுமான்ஜி மத்திரில் வேண்டிக்கொண்டார்கள். கால்கா அல்லது தின்சுக்கியா மெயிலில் பையனுடன் அம்மா கிளம்பிப்போக, அப்பா,தாத்தா பாட்டி மூவரும் தினமும் கல்கத்தாவுக்கு டிரங்க்கால் போட்டு விசாரிப்பது தொடர்ந்தது.
அன்று காலையிலிருந்தே மகன் ஆனந்த் நிலைகொள்ளாமல் தவித்தார். கல்கத்தாவிலிருந்து போன் வரவில்லை. ஸ்டுடியோ கிளம்பி போகும்போது ஹனுமான் ச்சாலிஸா சொல்லியவாறே காரை செலுத்த அப்பா அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பிட்டூவின் எல்லா மருத்துவ சோதனைகளிலும் பாசிடிவ்... பாசிடிவ் என்ற முடிவுகளை படித்து படித்து ‘பாசிடிவ்’ என்ற வார்த்தையே ஆனந்த் குடும்பத்தை கலவரப்படுத்தியிருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு அப்பாவும் மகனும் ஸ்டுடியோவை நெருங்க தூரத்தில் கடைப்பையன் வெளியே வந்துகொண்டிருந்தான். கையில் சின்ன மூட்டை நிறைய போட்டோ ஃப்ளிம் சுருள்கள். ஏதோ நினைவுடன் ‘என்னப்பா அது!’ என ஆனந்த் கேட்க, பையன் ‘நெகடிவ்.. பாபுஜி!’ என கத்தினான்.
ஆனந்த்தின் முகம் மலர, மேலே போன் அடிக்கும் சத்தம்.

No comments:

Post a Comment