Sunday, November 12, 2017

செம்பூர் ஆலி.. பூடே ச்சலா!...


ஓலா பிடித்து செம்பூர் வந்திறங்கிய எனக்கு ஒரே ஆச்சரியம். அப்படியே இருக்கிறது செம்பூர். அதே கடைகள் மட்டுமல்ல.. அதே கடை முதலாளிகள். 9 வருடங்கள் பம்பாயில் இருந்துவிட்டு பஹ்ரைன் சென்றவுடன் அவ்வப்போது பம்பாய் வந்தாலும் இம்முறை செம்பூர் செல்ல விரும்பினேன்.
80களில் பிரம்மச்சாரி நண்பர்களுடன் செம்பூரில் மாலை மற்றும் ஞாயிறன்று சுற்றாத தெருக்களே இல்லை. ஞாயிறு காலை கீதா பவனில் பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா, ஃபில்டர் காபி முடித்து, எதிரே ரோட்டோரத்தில் வரிசையாக இருக்கும் பெட்டிக்கடைகள் ஒன்றில் காலி காசெட் கொடுத்துவிட்டால் மறுநாள் ஜியார்ஜ் மைக்கேல்(wham), எரிக் கிளாப்டன்( I shot the sheriff), ஸ்டீவி வொன்டர் ( I just called to say I love you) மற்றும் ஜியார்ஜ் பென்சன்(nothing gonna change my love for you) பாடல்களை ரெகார்ட் செய்து கொடுத்து விடுவார் இளம் தமிழ்க்காரர் ஒருவர். ஆசிஷ் தியேட்டரில் இணைந்த கைகள் படம் பார்த்துவிட்டு ரோட்டுக்கடையில் பாவ் பாஜி சாப்பிட்டு அந்த கடைகள் வழியாக வருவோம்.
அதே கடைகள் இன்றும் அதே இடத்தில் இருப்பதை மனைவியிடம் காட்டினேன். அந்த கடைகளின் பின் புறம் இன்னும் அதே பழைய குடியிருப்பு சொசைட்டி.
கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்:
முன்பு அங்கே ரிடையர்டு கம்பெனி செக்ரடரி ஒருவர் (பெயர் ராமநாதன் என ஞாபகம்) எங்கள் கம்பெனியிலிருந்து பார்ட் டைம் அசைன்மெனட் வாங்கி செய்வார். அவ்வப்போது ஃபைல்களை கொடுக்க அவரது ஃப்ளாட்டிற்கு போவேன். ஒரேயடியாக எல்லா ஃபைல்களையும் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் கொடுப்பேன். புஷ்டியான அவரது பெண்ணை அப்பத்தானே அடிக்கடி பார்க்க முடியும்! (நிற்க! இது 88இல்). சோகம் என்னவென்றால் கதவை திறந்து என்னை முறைப்பது அவரது மனைவி தான். பெண்ணின் வாய்ப்பாட்டு சத்தம் மட்டும் உள்ளேயிருந்து கேட்கும். மறுநாள் செம்பூர் ஸ்டேஷனில் அவளை கடக்கும்போது நம்மை யாரென்றே தெரியாத மாதிரி ப்ளாங்க் லுக் விடுவாள் அந்த யுவதி. பிறகுதான் ஒருநாள் நாரிமன் பாய்ன்ட்டில் மாவா ஐஸ்க்ரீம் கோனை மற்றொரு பார்சி இளைஞனுடன் சுவைத்துக்கொண்டிருந்தாள். அடுத்த முறை ஃபல்களை கொடுக்க சென்றபோது பெண்ணுக்கு கல்யாணமாகி பூனேயில் செட்டிலாகி விட்டதாக மலர்ந்த முகத்துடன் மாமி காபி கலந்து கொடுத்தாள். நல்ல கவனிப்பு எனக்கு. ஏன் இருக்காது!
கீதா பவன் தாண்டியதும் முழங்காலில் டர்க்கி டவல் போட்டு இளநீரை கத்தியால் சரக் சரக்கென சீவும் மலையாளி பையன் இப்போது நெடுமுடி வேணு மாதிரி வெண்தாடியிலிருந்தான்(ர்).
அடுத்து பான் பீடா கடை நாயக்.. கடைக்கு வெளியே சிகரெட் பத்தவைக்க நெறுப்பு கங்குடன் தொங்கும் கயிற்றைக்காணோம். கடை அப்படியே இருக்க, நாயக்கின் சாயலில் இளம் வாலிபன்... கடையை சுற்றி ஏராளமான கார்கள்.. அமோக விற்பனை இப்போதும்.
20th road திரும்பும் முன் ஒரு வட்ட வடிவ ஜங்ஷன் தற்போது புதுப்பிக்கப்பட்டு நடுவில் செடிகளுடன்.. 91இல் ஜீவன் மெஸ்ஸில் சாப்பிட்டு அந்த ரவுண்டபௌட் கடக்கும் போது கூட நடந்து வந்துகொண்டிருந்த ரூம்மேட் 'தக்கலை அக்ரக்ஹாரம்' பத்துவை(பத்மநாபன்) ஒரு ஆட்டோ நேரே வந்து மோத, பின் பக்கம் கரனமடித்து விழுந்து எழுந்த கையோடு ஆட்டோவை விரட்டியபடி அவன் ஓட, மராட்டி ஆட்டோ டிரைவர் நேராக புலி படம் போட்ட சிவசேனா அலுவலகம் முன் வண்டியை நிறுத்திவிட்டு பயந்தபடி அலுவலகத்தினுள் ஓட முற்பட, பத்தன் ஒரே எட்டில் அவன் காலரை பிடித்து, தன் முஷ்டியால் அவனது முகத்தில் குத்த, சேனா ப்ரமுக்குகள் நால்வர் 'ஏய்! ச்சோடோ உஸ்கோ' என பத்தனை இழுக்க, தலைவர் போல இருந்த ஒருவர் வந்து தடுத்து, டிரைவரை மன்னிப்பு கேட்கச்சொன்னதும் பத்தன் அவனை விட்டான். 'இடித்தது கூட பரவாயில்லை.ஆனால் வண்டியை நிறுத்தாமல் ஓடியது தப்பு! சாலா..சம்ஜே?' என உருமியபடி நடந்த பத்தனை பெருமையுடன் பார்ப்போம் (உள்ளுக்குள் பயத்துடன்). சிவசேனைக்காரர்கள் நியாயமானவர்கள்.. அப்போது! அதே ரவண்டபௌட்.. அதே ஆட்டோ ஸ்டாண்டு.. சிவசேனா அலுவலகத்தை இப்போது காணோம்.
சற்று தள்ளி 8 லிமிடெட் பஸ்ஸின் கடைசி நிறுத்தம். 'செம்பூர் ஆலி.. பூடே ச்சலா!' என்ற கண்டக்டரின் குரல் இப்போதும் ஒலிப்பது போன்ற பிரமை..
20th Roadஇல் நாங்கள் தங்கியிருந்த ரமேஷ்நிவாஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டு மேலே இரண்டடுக்கு மாடிகளுடன். ஓனர் திரு. மோக்ரே எங்கேயென விஜாரித்தேன். அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்டுவிட்டு அடுத்த தெரு போய் விட்டாராம். 'இருபத்தைந்து வருடங்களாக என் பாஸ்போர்ட்டில் அதே அட்ரஸ் இருப்பதால், இந்த முறை எனது டிரைவிங் லைசென்ஸ் ரென்யூ ஆகி அதே அட்ரஸுக்கு வரும். வந்தவுடன் என் பையன் நம்பருக்கு போன் அடியுங்கள்' என நான் கேட்டுக்கொண்டதை ஆச்சரியத்துடன் பார்த்தார் கீழ் தளத்தில் குடியிருப்பவர்.
ஆர்.கே ஸ்டுடியோவிலிருந்து ரோஸ் கலரில் ராஜ் கபூர் வந்து 'ரவிஸ்' வாசலில் தன் அம்பாசடர் காரில் இருந்தபடியே டீ குடிப்பதை முன்பு பார்த்திருக்கிறோம். தற்போது அங்கே கிராண்ட் சென்ட்ரல் எனும் ஹோட்டல்.
செம்பூர் ஸ்டேஷன் அருகே சத்குரு ஜூஸ் சென்டரில் இரவு பத்து மணிக்கு மேல் கூட்டம் அம்மும். ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு பெரிய பியர் மக்கில் ஜூஸ் கொடுப்பார்கள். கார் பானெட்டில் அமர்ந்தபடி ஜூஸ் குடிப்பார்கள். அந்த கடையை இப்போது சத்குரு டிபன் சென்டர் ஆக்கி விட்டார்கள். இரவு ஒரு மணி வரை வியாபாரம். அந்நேரத்திற்கும் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். அரவிந்த் இனாம்தார் எனும் உதவி போலிஸ் கமிஷனர் அப்போது பம்பாய் நகரத்தையே தன் கன்ட்ரோலில் வைத்திருப்பார். எங்கேயும் தப்பு தண்டாவே கிடையாது. இரவு ரோந்து சென்று 'அழகி'களை அடிக்கடி கைது செய்வார்.
நேராக கஃபே உடுப்பியில் நுழைந்தோம். ஒரு காலத்தில் மசால் தோசை, வடா பாவ், மிசல் பாவ் அங்கே பிரசித்தம். வெறும் கல்லூரி மாணவர்களும், பேச்சுலர்ஸும் கூடி கட்டிங் சாய் குடித்து கும்மாளமடிக்கும் இடம் அது. கடை முதலாளி இல்லாத நேரத்தில் அவரது மகன் விஜய் தன் சகாக்களுடன் கல்லாவில் உட்கார்ந்திருப்பான். படு ஸ்மார்ட்டாக, நெற்றியில் புரளும் முடி, பம்பாய்க்கே உரித்தான நுனிநாக்கு ஆங்கிலம், பாகி பாண்ட், பாண்ட் போட்ட இளம்பெண்கள் சூழ..
இன்றும் ஹோட்டலில் அதே மாதிரி நல்ல கூட்டம். கடை சிப்பந்திகள் அநேகம் பேர் அதே ஆட்கள். கல்லாவில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்.. அட. நம்ம விஜய் மாதிரியே.. விஜய்யே தான்!. மெல்ல அவரை நெருங்கினேன். 'ஹலோ விஜய்! அடையாளம் தெரிகிறதா.. 25 வருடங்கள் முன்.. ' என நான் நினைவுபடுத்த அவர் முகத்தில் மலர்ச்சி. 'சாரி.. உங்கள் முகம் நினைவுக்கு வரவில்லை. ஆனால் பரிச்சயமான முகம். மறக்காமல் இங்கு வந்ததற்கு நன்றி' என அதே நுனிநாக்கு ஆங்கிலம்.
'சரி விஜய்.. உங்கள் நண்பர்களெல்லாம் எங்கே! ஒரு பட்டாளத்துடன் இருப்பீர்களே!' என்ற கேள்விக்கு கொஞ்சம் சோகமாக 'இப்பல்லாம் யாருமில்லை.. எல்லோரும் அவரவர் வேலையில் பிசி' என்றார்.
'அது சரி.. இந்த இடத்துல ஒரு sign board வைத்திருப்பீர்களே.. அது இப்ப இல்லியா' என்றேன்.
சற்றே குழப்பத்துடன் 'என்ன சைன் போர்டு? நினைவில் இல்லையே!' என்றார்.
'என்ன விஜய்!.. free meals for persons of 75 and above' போர்டு வைத்திருப்பீர்களே!' என்ற என்னை ஆச்சரியத்துடன் பார்த்து உடனே கலகலவென சிரித்தார்.
'ஓ.. ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே! those young days are gone now. இப்ப அந்த போர்டெல்லாம் வைக்கறதில்லை' என லேசான சோகத்துடன் சொன்னார்.
free meals for persons of 75 and above என்ற அந்த வாசகத்தின் கீழ் அடுத்த வரி... 'if accompanied by'
............
அதற்கும் அடுத்த வரி.. 'both parents'
பி.கு: போகும்போது இருந்த குதூகலமும் சந்தோஷமும் செம்பூரிலிருந்து பாண்டுப் திரும்ப வரும்போது அறவே இல்லை..

No comments:

Post a Comment