Sunday, November 12, 2017

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இரவு பத்து மணிக்கு மேல் திருச்சி தெப்பகுளம் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டிலிருந்து அப்பா வாங்கி வந்த துப்பாக்கி, கேப், பட்டாசையெல்லாம் தம்பியுடன் பிரித்துக்கொண்டு, படுக்கப்போகும் முன் இன்னொரு முறை சரி பார்க்கும் சுகம் எங்கே?
வெடிக்காம புஸ்ஸான பட்டாசையெல்லாம் ரோட்லர்ந்து பொறுக்கி அத பிய்ச்சி மருந்தையெல்லாம் சேர்த்து போட்டு பத்த வச்சி ஒரே செக்கண்டுல எறிஞ்சி போறத பாக்கற சுகம் எங்கே?
பக்கத்து வீட்டு பையன் அனுகுண்டு திரி நுனிய பிச்சி, பயந்துகிட்டே கைய நல்லா நீட்டி ஊதுபத்தியால பத்த வைக்கறப்ப, தூரத்துல இருந்து நாம 'டமார்'னு சத்தம் போட்டு அவனை தலை தெறிக்க ஓட வைக்கிற சுகம் எங்கே?
வெள்ளாட போறப்ப வர்றப்பல்லாம் சாமி ரூம்ல தூக்குச்சட்டிலர்ந்து அதிரசத்த எடுத்து சாப்ட்டு சாப்ட்டு வயித்த கலக்கி மறுநா பிச்சுகிட்டு போற சுகம் எங்கே?
'தரைல இருந்து பாம்பு எப்பிடி வருது'ன்னு ஆச்சரியப்பட வைத்த பாம்பு மாத்திரையெல்லாம் எங்கே?
'லக்ஷ்மி வெடிய பத்த வச்சு கைல வெடிச்சிக்கிட்டு ஊதுபத்திய தூக்கி போட்டுட்டேன்'னு கையெல்லாம் புண்ணாகி கட்டோட ஸ்கூலுக்கு வரும் யாராவது ஒரு ஃப்ரெண்டு எங்கே?
சூடான கம்பி மத்தாப்பு கம்பிய தண்ணில வுட்டு 'சொய்ங்' சத்தத்த ரசிக்கற சுகம் எங்கே?
ரோட்ல பசங்க வெடி வெக்கறத பாத்து நாம சைக்கிள நிறுத்திட்டு காத்திருக்கறப்ப, வெடி வெடிக்காம இருந்ததால 'சரி போயிடலாம்னு' பெடலை அழுத்தி தாண்டி போறப்ப 'டமார்'னு வெடிச்சி கீழ விழுந்து முழங்கால் காயத்துக்கு மஞ்சத்தூள் போடற சுகம் எங்கே?
சங்கு சக்கரத்த நாம பத்த வச்சி அது சர்ர்ருன்னு சுத்திகிட்டே எதிர்ல வேடிக்கை பாத்துகிட்டிருந்த பக்கத்து வீட்டு தாத்தா கால் ஊடால போய், அடுத்த நிமிசம் நின்னவாக்குலயே அவரு டக்கரா ஒரு டான்ஸ் ஸ்டெப்பு போடறத பாக்கற சுகம் எங்கே?
நோம்புக்கு செஞ்சி தாம்பாளத்துல அடுக்கி வச்சிருந்த அதிரசத்த அவசரமா எடுத்து சாப்ட்டு, தொபேல் தொபேல்னு முதுகுல அடி வாங்கற சுகம் எங்கே?
காலைல 4 மணிக்கு காலி பாட்டில்ல ராக்கெட்ட வச்சு பத்த வெச்சவுடனே அது வரைக்கும் நின்னுகிட்டிருந்த ராக்கெட் சரிஞ்சி திடீர்னு எதிர் வீட்டு திண்ணைக்குள்ளாற ஓடி, போத்திகிட்டு தூங்கிக்கிட்டிருந்த அந்த வீட்டுக்காரர் அந்நேரத்துக்கு உதிர்த்த கெட்ட வார்த்தைகள் எங்கே?
தீபாவளி முடிஞ்சி ரோட்ல இருந்து வெடிக்காத கேப் எல்லாம் எடுத்து திண்ணைல ஒன்னுக்கு மேல ஒன்னா நாலைஞ்சு கேப்பை அடுக்கி வச்சி, கரெக்ட்டா பாட்டி வெளிய வர்றப்ப சுத்தியால படார்னு அடிச்சி 'கடங்காரா! போய்த்தொல அந்தப்பக்கம்'னு திட்டு வாங்கற சுகம் எங்கே?
கடைசியில் 'இது வரைக்கும் வெடிச்ச பட்டாசு போதும். மீதிய கார்த்திகைக்கு வச்சுக்கலாம்' என பிடுங்கி அம்மா பரணியில் வைக்கும் போது ஏற்படும் துக்கம் எங்கே?
நடுத்தர வர்க்கத்தினரின் பழைய தீபாவளி நினைவுகளை கிளறி எழுதியிருந்த நண்பர் Ganesan Ramamoorthy அவர்களின் பதிவை பார்த்தவுடன் எனக்கும் ஏற்பட்ட தாக்கம் தான் மேற்படி பதிவு..
அந்த நாட்கள் இனி வருமா!.
இன்று?
சாலமன் பாப்பையா மற்றும் ராஜா பட்டி மன்றங்கள் ரசித்து முடித்து, டீவியில் வன்முறை படம் ஒன்றை பார்த்து, மனாமா ஜுமா ஸ்வீட்ஸில் அரை அரை கிலோவாய் வாங்கிய ஏழெட்டு ஸ்வீட்டு டப்பாக்களையும் சான்ட்விச் பைகளில் கொட்டிய மிக்சரையும் பக்கத்து வீட்டு வடநாட்டவர்களுக்கு கொடுத்த கையோடு 'ஆப்கோ கல் தீவாலி ஹெனா?' என கேள்வியையும் இயந்திரமாக கேட்டு, மாலை சீஃப் மாலில் நாச்சோ மற்றும் பனானா ஸ்மூதியுடன் பாடாவதியான 'மெர்சல்' படத்தை மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு, இரவு சாம்பார் சாதத்திற்கு முறுக்கும் தயிர் சாதத்திற்கு மிக்சரும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு ஜெலுசில் போட்டுக்கொண்டு தூங்கப்போவதோடு தீபாவளி முடிந்துவிடும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment