Sunday, November 12, 2017

இனுமு கொறடு

(இவ்வார குங்குமம் மின் இதழில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. ஓவியம் எனதல்ல.. குங்குமம் வெளியிட்டது)

'பேசாமெ நானே அவருக்கு ரெண்டாங்கல்யாணம் பண்ணியே வச்சிருக்கலாம். இப்புடு நா பொட்டு தாரம் (தாலி) போயிந்தி!' ..
கதறி அழும் சின்ன அம்மம்மா முன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தோம்.
அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டி(அம்மம்மா)யின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் புகை வண்டி நிலையத்தில் வேலையில் இருந்த கணவர் அப்பாய் மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். 1980இல் காசநோயால் மடிந்து போனவள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவளுக்கு நாள் முழுக்க ஓய்வு ஒழிச்சலே கிடையாது. வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது, குடல் இறங்கிவிட்டால் விளக்கெண்ணெயில் வயிற்றை நீவி சரிசெய்துவிடுவது எல்லாம் அவள் தான். பிறந்த குழந்தைகளை அவளுக்கு மட்டுமே குளிப்பாட்டத்தெரியும். மனையில் உட்கார்ந்து முழங்கால் வரை புடவையை இழுத்துவிட்டுக்கொண்டு குழந்தையை காலில் குப்புற படுக்க வைத்து தண்ணீர் விடுவது, கடைசியில் குதிக்கால்களை பிடித்து தலைகீழாக குழந்தையை தூக்கி உதறுவது, நெஞ்சு சளி அடைத்து அவஸ்தைப்படும் குழந்தையின் வாயில் தன் வாயை வைத்து ஊதி சளியை மூக்கு வழியே வெளியே எடுப்பது போன்ற சாகசங்கள் செய்தவள்.
காலை விறகடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க சடசடவென அம்மியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாயை அவள் அரைக்கும்போதே சட்னி மணம் ஊரையே தூக்க, கருவேப்பிலை தாளித்துக்கொட்டுவது காற்றில் பறந்து நம் மூக்கை துளைக்கும். சாயங்கால வேளையில் குழந்தைகள் பசியென்று அவள் முன் போய் நின்றால் போதும். சட்டென அரிசி மாவை வெந்நீரில் கிண்டி இறக்கி, கை விரல்களால் சிறு கயிறுகளாக உருட்டி அரை இஞ்ச் துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு பால், வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து, 'ஒரேய் பில்லலா! ஒச்சி கூச்சண்டி!' என அவள் கூவி அழைத்து பட்டாசாலையில் வரிசையாக அலுமினிய தட்டுகளில் ஊற்றி குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடும் பால் கொழுக்கட்டை கிட்டக்க பீட்சாவும் பர்கரும் வரவே முடியாது.
தீபாவளி, பொங்கல் விசேஷங்களுக்கு தாத்தா பாட்டி வீட்டில் தான் எல்லோரும் குடும்பத்தினருடன் கூடுவோம். சின்ன அம்மம்மா தான் முன் நின்று பண்டிகையை நடத்துவாள். சக்கரை பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள அவள் சமைக்கும் கருணைக்கிழங்கு 'காரப்புலுசு' மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு அரிந்து போட்டு தேங்காய் வரமிளகாய் சேர்த்து தாளிதம் செய்த கறி.. அப்பப்பா அவ்வளவு ருசி..
வீட்டு வேலை செய்தே ஓய்ந்துபோன ஒடிசலான தேகம். கண்களில் எப்போதும் தெரியும் அசதி. இருக்கும் நாலைந்து புடவைகளையே மாற்றி மாற்றி கட்டுவாள். சிடுசிடுவென எல்லோரையும் விரட்டிக்கொண்டே இருந்தாலும் தங்கமான மனது. அவள் ஒருநாள் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாலும் வீடே நாறிவிடும். சித்தியென்றாலும் என் மாமாக்கள், அம்மா எல்லோரும் அவளை அதட்டுவது வழக்கம். ஏதாவது பிரச்னை செய்து அவ்வப்போது வாங்கிக்கட்டிக்கொள்வாள்.
ஒருமுறை பொங்கல் பண்டிகையன்று குழந்தைகளை விரட்டி அவள் ஏதோ சொல்லி என் மாமாக்கள் அவளை உலுப்பியெடுக்க, சமையலறையில் உட்கார்ந்து ஓவென ஒரே அழுகை. 'எல்லாரும் நல்லா திட்டுங்க.. நேனு ஏமி சேஸ்துனு! நாக்கு யொவரு லேது. அனாதை தானே நேனு! அந்த பிச்சாளு அப்பவே அவங்க வீட்டு வேலைக்கு வந்து இருந்துக்கச்சொன்னார்..' என புலம்ப, சின்ன குழந்தைகளான நான் மற்றும் என் அத்தை பெண்கள் அவளை சமாதானம் செய்ய முயன்றதைத்தான் பதிவின் ஆரம்ப வரிகளில் படித்தீர்கள்.
நாகை ரெயில்வேயில் கணவர் அப்பாய்க்கு மேலே இருந்த சூப்பர்வைசர் பிச்சாளுவிடம் சின்ன அம்மம்மாவிற்கு மிகுந்த மரியாதை. பிச்சாளுவை கேட்காமல் எதுவுமே செய்யமாட்டார் கணவர். குழந்தை பாக்கியம் இல்லையென்றால் அம்மாவின் வற்புறுத்தலால் அப்பாய் மறுமணம் செய்துகொள்வதாக முடிவு செய்ய, அழுது புலம்பியபடி உடனே பிச்சாளுவிடம் ஓடினாள் சி. அம்மம்மா. 'ரெண்டே வருஷத்துல குழந்தை இல்லேங்கறதுக்காக இவளை விட்டுட்டு வேறு கல்யாணம் செய்யனூங்கறியே! நீயெல்லாம் மனுசனா' என பிச்சாளு தட்டிக்கேட்டும் அப்பாய் மாறவில்லை. ஒரு நாள் மனைவியை வீட்டை விட்டே வெளியேற்றினார்.
தினமும் சாயங்காலம் தம்பித்துரை பூங்காவிற்கு சின்ன அம்மம்மா போவது வழக்கம். ரயில்வே ஒர்க் ஷாப் விட்டு மாலை பூங்கா பெஞ்சில் உடகார்ந்து காரப்பொறி சாப்பிட வரும் அப்பாயின் காலடியில் கிடந்து 'ரெண்டோ பெல்லி ஒத்து பாவா!' என அவள் கெஞ்சி அழுவது வழக்கமாம். இறுக்கமான முகத்துடன் காரப்பொறியை சாப்பிட்டு விட்டு அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அப்பாய் போன நாட்கள் பல.
'போரா நுவ்வு! அந்த மகமாயி உன்ன வாரிக்
கிட்டு தான் போவா!' என சாபமிட்டு அவள் வீடு திரும்பினாலும் அடுத்த வாரம் மறுபடியும் அதே பூங்கா போய் கெஞ்சி அழுவாள்.
ஒருநாள் வொர்க்‌ஷாப்பில் இருந்து வெளியே வரும்போது அப்பாய்யின் பையை செக்யூரிடி ஆபிசர் சோதனை செய்து இரும்பு கொறடு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்கள். திருட்டுக்குற்றம்.. உடனே தற்காலிக பணி நீக்கம்.
'ஐயய்யோ! ஆய்ன தொங்கவாடு காது.. திருட மாட்டாருங்க.. மனக்கு எந்துக்கு இனுமு கொறடு!' என பிச்சாளு வீட்டில் சின்ன அம்மம்மா அழுது கெஞ்சியும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 'வெள்ளக்கார துரை கறாரான மனுஷன். இரும்பு கொறடை திருடியது குற்றமாம். நின்ன என்கொயரி பெட்டேரு.. ஆய்னக்கு பணி போயிந்தி' என பிச்சாளு வந்து சொல்ல ஓவென அழுது பிலாக்கனம் பிடித்தாள். அப்புறம் அப்பாய் பூங்கா வருவதும் நின்று போக, வேலை போன கவலையில் கையிலும் காசில்லாமல் பித்து புடித்தவர் போல இருந்தார்.
சில நாட்களில் அப்பாய்க்கு உடம்பு சுகமில்லை என தகவல் வர சின்ன அம்மம்மா அவர் வீட்டிற்கு ஓடினாள். வாசல் கதவு பூட்டியிருக்க, எதிரே ஓடி வந்த பிச்சாளு 'ஆய்னக்கு ரொம்மு நொப்பி (நெஞ்சு வலி).. ஆஸ்பத்ரீலோ உண்ட்டாரு' என சொல்ல அலறியபடி அங்கே ஓடினாள். அதற்குள் எல்லாம் முடிந்து போனது.
'பாழாப்போன ரெண்டாங்கல்யாணம் பண்ற நெனப்பு வந்து.. பணி போயிந்தி.. நா பாவ உசுருனி போயிந்தே! என அழுது அரற்றிய
சின்ன அம்மம்மாவை பிச்சாளுவும் அவரது மனைவியும் சமாதானம் செய்ய முயன்றார்கள்.
அடுத்த சில நாட்களில் ஆபிசில் பிச்சாளு வெள்ளைக்கார துரையை கெஞ்சி அப்பாய்க்கு சேரவேண்டிய பணத்தை வாங்கிக்கொடுத்தபோது சின்ன அம்மம்மா 'நாக்கு ரூப்பாயலு ஒத்து பிச்சாளு! நூவே பெட்டுக்கோ' என சொல்லி புத்திர சம்பத்து உள்ள அவர் கையில் பணத்தை திணித்ததும், மனமில்லாமல் தயங்கியபடி கண்ணீருடன் பிச்சாளு பெற்றுக்கொண்டதும், இருபதே வயதில் இளம் விதவையாக சின்ன அம்மம்மா தன் அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்.. 1930இல் நடந்து முடிந்த சம்பவங்கள்..
நீண்ட பெருமூச்சுடன் தன் கதையை சின்ன அம்மம்மா சொல்லி முடித்தபோது வாக்கிலியில் பொங்கல் பானையின் கீழே இரும்பு அடுப்பு விறகில் நெருப்பு அனைந்து சாம்பல் பூத்திருந்தது. கதையை கேட்டு எதிரே இருந்த என் அத்தை பெண்கள் கோட்டீஸ்வரியும் ரேவதியும் அழுது கொண்டிருந்தார்கள். . இது 1976இல் பொங்கலன்று.
'ச்சே! அப்பாய் தாத்தா சாகாமெ இருந்திருந்தா நீங்க நல்லா இருந்திருப்பீங்கல்ல?' என கோட்டீஸ்வரி கேட்க, மெல்ல விசும்பத்தொடங்கினாள் சின்ன அம்மம்மா.
'நாக்கு காவாலெ.. நேஞ்சேசின தப்புக்கு!' என அவள் கதற எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
'தப்பா? நுவ்வு ஏமி தப்பு சேஸ்திவி?' (நீ என்ன தப்பு செய்தாய்)
'ஆ இனுமு கொறடு...! இரும்பு கொறடை அவர் பையில் போட்டதே நாந்தான்.. ஆ பார்க் பெஞ்சுலோ' பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
'ரெயில்வே வேலை போச்சுன்னா கைல காசில்லாமெ ரெண்டாங்கல்யாணத்தை நிறுத்திடுவார்னு நெனைச்சேன். ஆனா அவரு உசுரையே நிறுத்திட்டேனே!' தலையில் அடித்துக்கொண்டாள்.
அதிர்ச்சியில் உறைந்து போய்..மெதுவாக அவளைக்கேட்டோம்..
'ஆ ரெயில்வே இனுமுக்கொறடு நீக்கு எக்கட தொறக்கிந்தி?' (ரயில்வேக்கு சொந்தமான அந்த இரும்பு கொறடு உனக்கு எங்கே கிடைத்தது?)
மூக்கை சிந்தி முந்தானையை தோளில் போட்ட பின் சன்னமாக பதில் வந்தது..
'பிச்சாளு இன்ட்டிலோ..'
(சீதாபதி ஶ்ரீதர்)
நன்றி.. பத்திரிக்கைக்கு எனது கதையை அனுப்புமாறு ஊக்குவித்த சகோதரி Vedha Gopalan, சகோதரர் Anand Raghav மற்றும் ஏராளமான நண்பர்களுக்கு நன்றி..🙏

No comments:

Post a Comment