Sunday, November 12, 2017

மார்ட்டின் (மீள்)

பெயர்
மார்ட்டின் ஜெரோம். அரியலூர் பக்கம் குலமாணிக்கம் சொந்த ஊர். சட்டென கோபம் வந்தாலும் கையோடு கன்னங்குழி விழ சிரிக்கவும் செய்வார். 80களில் திருச்சி மன்னார்புரம் பவானி லாட்ஜில் தங்கிக்கொண்டு ICWA படித்துக்கொண்டிருந்தார்.
அப்பா கிராமத்தில் நிலபுலன்கள் வைத்துக்கொண்டு மாதாமாதம் பணம் அனுப்ப, இவர் திருச்சியில் சொகுசாக படித்துக்கொண்டிருந்தார். மாநிறத்திற்கும் சற்றே குறைவான சருமம். ஓர வகிடா நடு வகிடா என புரியாத பாக்யராஜ் சிகையலங்காரம். சிங்கப்பூர் கைலி. வெள்ளை பார்டர் போட்ட கலர் பனியன் போடுவார். ஆருயிர் பால்ய நண்பன் கணபதி Ganapathi Subramanian மூலம் பரிச்சயமானவர். 'நம்ம ரூம்புக்கு வாங்க புள்ள! சேந்து படிக்கலாமே' என அவர் கேட்க கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்ய முடிவு செய்தோம்.
ஒருநாள் சைக்கிள் காரியரில் கனமான புத்தகங்கள் எடுத்துக்கொண்டு அவரது லாட்ஜ் ரூமுக்கு போனேன். கயத்து கட்டிலில் ஜமுக்காளம் மற்றும் துவைத்து நாளான தலகானி உறை நெடி. கட்டிலில் உட்கார்ந்ததும் தொபுக்கென உள்ளே போன என்னிடம் 'ஶ்ரீதர்.. எதையுமே ஒழுங்கா ப்ளான் பண்ணி செய்யனும்.. புரிஞ்சுதா?' என அவர் சொல்ல, அந்த காலத்தில் வடிவேலு இருந்திருந்தால் 'ஆஹா..வடிவேலு மாதிரி வில்லங்கம் புடிச்சவர் மாதிரீல்ல இருக்காரு' என நினைத்திருப்பேன். 'சொல்லுங்க மார்ட்டின்.. என்ன செய்யலாம்? அக்கவுன்ட்ஸ் புக் கொணாந்திருக்கேன்' என வெள்ளந்தியாக சொன்ன என்னிடம், 'அந்த அக்கவுன்ட்ஸ் புக்கெ மொத ஓரமா வைய்ங்க புள்ள...மொதல்ல முந்தின அஞ்சு வருச கொஸ்டீன் ஆன்ஸர் எடுத்துப்பாப்பம்' என சொல்லி அலமாரியிலிருந்து சரட்டென பழைய புத்தகங்களை வெளியே எடுத்தார். புத்தகத்தை அவர் தொட்டு சில மாதங்களாவது ஆனதை புத்தகத்திலிருந்து வெளியே தாவிய பாச்சை சொல்லிச்சு. மணி இப்பவே காலை பதினொன்று.
'ஶ்ரீதர்.. ICWAவ சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. அந்த காஸ்டிங் பேப்பர் இருக்கே.. எப்பிடி படிச்சாலும் ஊத்தீரும்' என சொல்லி அஹ்ஹஹ்ஹாவென அவர் எகத்தாளமாக சிரிக்க நான் உள்ளுக்குள்..'ஏது ஆரம்பமே சரியில்லியே....'.என நினைத்துக்கொண்டேன்.
அடுத்து ' டேய் கிட்டா! காபி கொண்டாடா' என அவர் சத்தம் கொடுக்க சில நிமிடங்களில் பவானி லாட்ஜ் பெயர் பொறித்த டபரா செட்டில் ஒன் பை டூ காபி வந்தது. 'ஶ்ரீதர் காபி சாப்டாவுட்டு நீங்க மார்ஜினல் காஸ்டிங் இதுக்கு முந்தி அவனுங்க #*%$€** (கெட்ட வார்த்தை) எந்தெந்த வருஷம் கேட்டுத்தொலைச்சிருக்கான்னு ஒரு பேப்பர்ல குறிங்க.. நா சுருக்க ஒரு தம்ம முடிச்சிக்கறேன்'னு சொல்லி மேசை டிராயரிலிருந்து பிளேடை எடுத்து வில்ஸ் ஃபில்டரை இரண்டாக வெட்டி ஒன்றை பத்த வைத்து, தமிழ்வாணன் மாதிரி காலை நீட்டி X மாதிரி மேசை மேல் வைத்து மூக்கு வழியாக புகையை விட்டார். ' ம்ஹூம்.. இவுரு விவகாரம் புடிச்சவர் தான்.. மணி இப்பவே பன்னண்டு.
'ஶ்ரீதர்!.. தல கொஞ்சம் கனக்குது.. நான் அப்படியே சரிஞ்சி ஒக்காந்து ஒரு பத்து நிமிசம் தூங்கிட்டு வந்துரவா? இல்ல நீங்க சாப்டு ஒரேடியா சாய்ங்காலம் வரீங்களா? என கேட்டு என் பதிலுக்கு காத்திராமல் இடுப்பிலிருக்கும் லுங்கியை தளர்த்தி இழுத்து சொறுகிக்கொண்டு அவர் தூங்க ஆரம்பிக்க, நான்... (கிழிஞ்சது போ..).
மாலை மார்ட்டின் ரூமுக்கு போனால் ஆளைக்காணோம். வெளியே வந்தால் தூரத்தில் ஆட்டோ ஸ்டான்டில், ஒரு ஆட்டோவின் பின் சீட்டில் அமர்ந்தவன்னம் ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டு 'வாங்க ஶ்ரீதர்.. பாத்திங்களா..நம்ம எபிநேசர் புது வண்டி எடுத்திருக்காப்ள.. இப்பத்தான் மாலை போட்டு வண்டி ரெண்டு நாளா லைன்ல ஓடுது.' என்றார்.
' சரி மார்ட்டின்!.. நாம படிக்க அந்த பளய கொஸ்டீன்ஸ்... என இழுத்தேன். '
'அதுவா.. இந்தா கொஞ்ச நேரத்துல கரூர் தான்தோன்றிமலைல இருந்து நம்ம ஒறவுக்காரப்பையன் ஒருத்தன் வர்றான். அவங்கூட டின்னர எதுத்தாப்ல மிலிட்டரி ஹோட்டல்ல முடிச்சிகிட்டு நாம நைட்டு ஒரு ஒம்பது மணிக்கி ஆரம்பிக்கலாமா?' வென கேட்ட கையோடு அவரே ' வேணாம் ஶ்ரீதர்..படிக்க ஒக்காந்தா சும்மா மூனு நாலு மணி நேரம் கிடு..கிடு..கிடு ன்னு ஒடனும் இல்ல? இல்லன்னா வேஸ்ட்டு. அதனால நாம ஒரேடியா நாளைக்கி காலைல பத்து மணிக்கே ஒக்காரலாம். இன்னிக்கி ஃப்ரெண்டு கூட நைட்ஷோ.. சிம்கோமீட்டர் சத்யால இன்னியோட கடசீ நாள்.. கோழி கூவுது' என இழுத்தார். மகா எரிச்சல் எனக்கு..'கோழி கூவுதா? எக்ஸாம்ல கூவிடும்டி' என உள்ளுக்குள் சலித்துக்கொண்டு வீடு திரும்பினேன்..
அடுத்த நாள் படிக்க போனால் லாட்ஜ் ரூம் பூட்டியிருந்தது. எங்க போயிருப்பாரென யோசித்தபடி வெளியே வந்து டீக்கடையில் ஒரு 'வாளக்கா பஜ்ஜி',போன்விடா டீ வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கவனித்தேன். தூரத்தில் ஒரு அம்பாசடர் கார்... கிட்ட வரும்போது அதில் முன் பக்கம் பயில்வான் போன்ற டிரைவர் பக்கத்தில் குட்டியூண்டாக மார்ட்டீன். பஜ்ஜி சுற்றிய தந்தி பேப்பரை கசக்கியெறிந்து வாயில் தங்கியிருந்த வாழைக்காய்தோலை துப்பிவிட்டு உற்று பார்த்தேன். பின் சீட்டில் முரட்டு உருவத்துடன் மூன்று பேர். வண்டி நிற்கவில்லை. அன்றைய படிப்பும் கோவிந்தா..
மறுநாள் லாட்ஜ் ரூமில் மார்ட்டீன் இருந்தார்.
'என்னங்க மார்ட்டீன் நேத்திக்கி என்னாச்சு? நம்ப ஏரியா பக்கம் கார்ல சுத்திட்டிருந்தீங்க?'
அதுவா ஶ்ரீதர்.. கார்ல எங்கூட எல்லாரும் மஃப்டில இருந்தாங்க.. முந்தாநாளு மெஸ்ஸுல சாப்ட்டு வெளில வாரேன்.. ரவுடிபசங்க மூனு பேரு என்னைய நிறுத்தி 'யார்ரா நீயி! புதுசா நம்ப ஏரியாவுல?ன்னு விஜாரிச்சதுமில்லாமெ பேசீட்டிருக்கும்போதே பளார்னு ஒருத்தன் அறைஞ்சுட்டான்'
'ஐயய்யோ .. அப்பறம்?'
'அப்பபறமென்ன.. ஊருக்கு தகவல் சொல்லியனுப்ச்சேன்..எங்கப்பாரு உடனே இவங்கள காரோட அனுச்சிட்டாரு..'
'மஃப்டில அவங்கள பாக்க பயம்மா இருந்துச்சே! என்னா பண்ணாங்க?'
'கார்ல ரெண்டு ரவுண்டு சுத்தி வந்து அவனுங்கள தேடி, கனகா வீட்டான்ட முச்சந்தியல புடிச்சிட்டோம். கார்ல ஏத்திகிட்டு நேரா அண்ணா ஸ்டேடியம் பக்கம் போயிட்டோம். அதுல என்னைய அறைஞ்சவன் மாத்தரம் 'ஓ'ன்னு அழுது கெஞ்சுனான். போய்த்தொலையறானுங்கன்னு நாஞ்சொல்ல, டோல்கேட்ல நிறுத்தி மெரட்டிட்டு எறக்கி வுட்டுட்டோம்'
' சரி.. கூட்டிக்கிட்டு போயிருந்தா என்னா பண்ணியிருப்பீங்க?'
' அதுவா.. ஸ்டேஷன்ல அவனுங்கள ஜட்டியோட நாலு நாள் வச்சிருந்து ரத்தம் வெளிய வராமெ சுளுக்கெடுத்து விட்ருப்பாங்க..செத்த நேரம் முன்னே அந்த முக்குல அவனுங்க நின்னுட்டிருந்தானுங்க.. என்னிய பாத்தவுன்னே சலாம் வெக்கிறான்' என சிரித்த மார்ட்டினை நானே கொஞ்சம் கலவரமா பார்த்தேன். நல்ல மனுஷந்தான். ஆனா சண்டைன்னு வந்துட்டா பொல்லாதவனாயிடறார். என்ன! அவர் கூட சேர்ந்து உருப்படியா இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லியேயென கவலை எனக்கு.
அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே.. லாட்ஜ் ரூம் பூட்டியிருக்கும். அல்லது ஓரிரு நாள் படித்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு 'அப்பத்தாவுக்கு பேதி, அண்ணம்புள்ளைக்கு கட்டி ஒடைஞ்சிருச்சு, ஒன்னுக்கு போனா எரியுது' என காரணங்கள் சொல்லி என்னை திருப்பி அனுப்பி விடுவார். முக்காவாசி நேரம் நானே தனியாக படிக்க வேண்டியதாகிவிட்டது.
நடுவே அவ்வப்போது மார்ட்டீனை பார்க்கும்போது ' மாஞ்சு மாஞ்சு புஸ்தகத்தை படிக்காதீங்க ஶ்ரீதர். அஞ்சு வருசம் பழைய கொஸ்டின் பேப்பர் படிங்க போதும்' என அட்வைஸ்...இருந்தாலும் பயந்துகொண்டு எல்லா புத்தகங்களையும் படித்தேன்.
பரிட்சை ஒரு வாரம் நேஷனல் காலேஜில். நன்றாகவே எழுதினேன். தினம் பரிட்சைக்கு வரும் மார்ட்டீன் கையில் சிகரெட் வாசனையுடன் பழைய விடைத்தாள்கள். சிகப்பு ஜோட்டர் ரீஃபிள் பேனாவில் அன்டர்லைன் செய்யப்பட்ட பக்கங்கள். வழக்கம்போல சட்டைப்பையில் அரை துண்டு வில்ஸ் சிகரெட் . 'ஶ்ரீதர்! சும்மா ஆன்சரை மட்டும் எழுதுனா போறாது. எல்லாருந்தான் எழுதுவான். அங்கங்க நெளிநெளியா அன்டர்லைனும் பண்ணனும். முக்கா பக்கத்துல மொன்னையா நிறுத்தாதீங்க.. முழு பக்கத்துக்கு இழுத்து உட்ருங்க. '.
ரிசல்ட் வரும் முன்பே மார்ட்டீனுக்கு நாக்பூர் NTPC யில் ட்ரெய்னீ அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் வேலைக்கு கடிதம் வந்தது. ICWA இன்டர் முடித்தால் அடுத்த க்ரேடு கிடைக்குமாம்.
ரிசல்ட்டும் வந்தது..
இருவரும் இன்டர் பாசானோம்...
ஆனால் மார்ட்டின் எக்கச்சக்க மார்க்குகளுடன்..

No comments:

Post a Comment