Sunday, April 2, 2017

Gopala Sundaram மாமா...

சுமார் 20 வருடங்களுக்கு முன்...பஹ்ரைனுக்கு இவர் முதன்முதலில் வந்த புதிது. ஒரு பெரிய வங்கியில் சீனியர் வைஸ் பிரெசிடென்ட்.கல்யாணமாகி சில வருடங்களேயான 15, 20 இளைஞர்களை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்தார். மனைவி, கைக்குழத்தைகளோடு சினிமா, பார்க் என உல்லாசமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளம் குடும்பங்களை எதற்காக வீட்டிற்கு அழைத்தார்?
வீட்டில் சுமார் 1000 காஸ்ஸெட்டுகள் வைத்திருந்தார். வாராவாரம் வெள்ளியன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு 'இசை' குறித்து தனக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லோருக்கும் விளக்க ஆரம்பித்தார். வாராவாரம் கூட்டம் இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது.
மேளகர்த்தா ராகங்கள், ஆரோகணம், ஆவரோகணம், தமிழ்ப்பாடல்கள், செய்யுள், இலக்கணம், திருக்குறள், உரைநடை, நாடகம், சினிமா..... பாடல்களின் ராகங்களை கண்டுபிடிப்பது என இவரது இலவச வகுப்புகள் களைகட்டின. எல்லா வாரங்களும் இவரது வீட்டை நோக்கி ஏராளமான நணபர்கள் படையெடுப்பு. சுடசுட பூரி, சமோசா காபி டிபனும் உண்டு.. ('ச..ப..ச..வுக்கப்பறம் சமோசாவா!' என யாரோ ஓரு குறும்புக்கார இளைஞன் பின்னாலிருந்து சொல்ல ஒரே சிரிப்பு).
காசெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா (தமிழ்ப்பாட்டல்ல.. தெலுங்கு), கிட்டப்பா, பி. லீலா போன்றவர்கள் பாடல்களை போட்டு குரல் யாருடையது என கண்டுபிடிக்க வேண்டும். கணிதத்துக்கும் (prime numbers) ராகங்களுக்கும் தொடர்பு இருப்பதை அழகாக விளக்கினார் மாமா. சாவேரிக்கு சாவே 'ரி' தான் என நடுநடுவே பிரவாகமெடுக்கும் நகைச்சுவை..
ருக்கு மாமிக்கு தனி ரசிகர் மன்றமே ஆரம்பிக்கும் அளவிற்கு ஜனங்கள். அடுத்த சில மாதங்களில் பஹ்ரைனில் இவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை..
சுமார் 30 பேரை வைத்து RS. மனோகர் ஸ்டைலில் ப்ரம்மாண்டமான 'தியாகய்யர்' நாடகம், ராகங்களின் அடிப்படையில் சங்கீத நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கதாகாலட்சேபம்,ராமர் பட்டாபிஷேக ஆண்மிக சொற்பொழிவு என பஹ்ரைனில் இதுவரை பார்த்திராத நிகழ்ச்சிகளை இவர் நடத்திக்காட்டினார்.
தெலுங்கு பேசுபவர் என்பதால் என்னைப்போன்ற நிறைய பேர் அவருடன் பழக வாய்ப்பு.. அறிமுகப்படுத்திய பால்ய நண்பன் Ganapathi Subramanian க்கு நன்றி..
அடுத்த ஒரிரு வருடங்களில் மறுபடியும் தன் பையன் மற்றும் பெண் பிள்ளைகளுடன் இருக்க இவர் அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயத்தால் பஹ்ரைனை விட்டுப்போனபோது சுமார் 500 பேருக்கு மேல் சேர்ந்து அவருக்கும் ருக்கு மாமிக்கும் பிரியா விடை கொடுத்தோம். பஹ்ரைனில் 20 வருடங்கள் முன் நடந்த பிரம்மாண்டமாக நடந்த விழா அது. அதிலும் டிராமா, பாடல்கள்,சிவகுமார் ( Sivakumar Nilakantan ) மாமாவின் நகைச்சுவைத்துணுக்கு.. நடுவே மாமா அவர்கள் உருவப்படம் வரைந்து அவருக்கு அளிக்கும் அதிர்ஷ்டமும் எனக்குக்கிடைத்தது.
தற்போது கோவையில் வசிக்கும் மாமாவின் சதாபிஷேகம் சமீபத்தில் விமரிசையாக நடந்தது. அதற்கு சில மாதங்கள் முன் மாமா உரையாற்றிய 'ராமர் பட்டாபிஷேகம்' வெகுவாக பாராட்டப்பட்டது.
சென்ற வருடம் கோவை சென்ற என் குடும்பத்துடன் மாமா மாமி ஒரு நாள் முழுவதும் எங்களுடன் கழித்து மாலை தன் காரிலேயே ஹோட்டலில் இறக்கி விட்டு மனதை நெகிழச்செய்தார்.
20 வருடங்களுக்கு முன் வரைந்து கொடுத்த படத்தை அப்படியே பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறார் மாமா.. அதனுடன் இரண்டு மணி நேரத்திற்கு முன் வரைந்த இந்த படத்துடன், மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும்...
(சீதாபதி ஶ்ரீதர்)
Image may contain: 3 people

No comments:

Post a Comment