Sunday, April 2, 2017

துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

வருடாந்திர விடுமுறைக்கு பத்து பதினைந்து நாள் சென்னை, திருச்சி மற்றும் தாய்லாந்து போய் வரலாம் என முடிவு செய்தவுடனே பரபரவென இயங்க ஆரம்பித்தேன்.
ஆபிஸ்பாய் லதீஃப் படு சமர்த்தன். தாய்லாந்து கரன்சி 'பாத்'தை அரை மணியில் வாங்கிக்கொண்டு வந்து எதிரே வைத்துவிட்டான். காலை பஹ்ரைன் இந்தியா எக்ஸ்சேஞ்சு கம்பெனி பொது மேலாளர் லக்ஷ்மி நரசிம்மன் போன் செய்து புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பஹ்ரைன் வந்துவிட்டதாக தகவல் கொடுக்க, உடனே லதீஃப் ஓடினான். மனாமாவிலிருந்து போன் செய்து 'சார்.. இங்க ரெண்டாயிரம் ரூபா நோட்டு இல்லியாம். ஏர்போர்ட் பிராஞ்ச்சுல இருக்காம்' என சொல்லி ஏர்போர்ட் விரைந்து புதிய ரூபாய் நோட்டுகளையும், கொஞ்சம் டாலர்களையும் கொண்டு வந்தான்.
மேசையின் மீது எதிரே இருந்த பச்சைச்தேநீர் ஆறிப்போக, சுலைமானி (சிகப்பு தேநீர்) கொண்டு வந்து வைத்த ஃபிலிப்பினோப்பெண் 'ஆறிப்போறதுக்குள்ள இதையாவது சாப்பிடுங்க' என சொல்லிவிட்டும் போனாள்.
எமிரேட்ஸ் விமான டிக்கெட்டை மெயில் பாக்ஸில் சேர்ச் செய்து பிரிண்ட் எடுத்து முடியும்போது 'do you have anything?' எனக்கேட்டு எதிரே நின்றார் எங்கள் சேர்மன் திரு. ஜெய்னல். மரியாதை நிமித்தம் நாம் எழுந்து நின்றால் அவருக்கு பிடிக்காது. 'sit down' என சொல்லி எதிரே நின்றவாரே ஐந்தாறு நிமிடங்கள் பேசிவிட்டு கடைசி வாய் டர்க்கிஷ் காபியை மடக்கென குடித்து விட்டு நகைச்சுவையாக ஏதோ சொல்லி 'மாசல்லாமா' என விடைபெற்றார்.
ஊருக்கு போகும் செக்லிஸ்ட் எதிரே திரையில். கரன்சி நோட்டுக்கள்- ஆச்சு.
ஷேவிங் ரேசர்-ஆச்சு. மருந்து மாத்திரை- ஆச்சு. கைப்பேசியின் பவர் பேங்க்- எடுத்துக்கனும். ரவுண்டு சீப்பு, கூலிங் கிளாஸ், ஹேர்டை, பல்துலக்க ப்ரஷ், பதஞ்சலி பேஸ்ட்- இதெல்லாம் பாக்கி. ஜட்டி பனியன்(ச்சீ.. இதை எழுதனுமா), சாக்ஸ், டவல், செறுப்பு, நேற்றே மடித்து வைத்திருந்த பாண்ட் சட்டை மற்றும் டீ-சர்ட்கள், பாங்க் பாஸ்புக், செக்புக், பான் கார்ட், ஏடிஎம் கார்டு, சென்ட்டு, இந்திய டிரைவிங் லைசென்ஸ்.. எல்லாம் ஆச்சு.
மதிய உணவிற்குப்பிறகு ஆபிஸ் வந்து இன்னும் மிச்சமிருந்த வேலைகள், நடுவே வாட்ஸப்புகள், ஃபேஸ்புக் கமென்ட்டுகள், லைக்குகள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு நான் ஆபிசில் இல்லையென்பதால் பட்ஜெட், MIS ரிப்போர்ட் என ஏராளமான பேப்பர்களுடன் எதிரே வந்தமர்ந்த CFO சோமனுடன் ஒரு மணிநேரம்.. இம்மாதக்கடைசியில் நான்கு துணை நிறுவனங்களின் போர்டு மீட்டிங்குகள் இருப்பதால் அது சார்ந்த அஜென்டா மற்றும் ரிப்போர்ட்டுகள் பார்த்து முடிக்க மணி மூன்று ஆனது.
க்ரெடிட் கார்டு பணத்தை ஆன்லைனில் கட்டி, இம்மாத டெலிபோன் பில்லையும் நெட்டில் கட்டி, நாளை செக்கின் செய்யப்போகும் தி.நகர் ஜியார்டி க்ராண்டு ஹோட்டலின் லொக்கேஷனை கூகிள் மேப் ஆஃப்லைனில் காப்பாற்றி, பாங்க்காக் மற்றும் பட்டாயா ஐடினெரரி பிரின்ட் எடுத்து... ஸ்ஸப்பாடா! மணி ஐந்து..
'நா கெளம்பறேன்.. உங்களுக்கு எதுனா வேணுமா?' எனக்கேட்ட ஃபிலிப்பினோ பெண்ணிடம் ஒரு சுலைமானி சொல்லியாயிற்று. மேசை டிராயரை திறந்து ரஸ்க் (மனக்கு அசிடிட்டி உந்தி காதா!)
கடந்த மே மாதம் அனுப்பிய மெயில்களை அவுட்பாக்ஸில் ப்ரௌசி 'Sridhar-vacation' தலைப்பிட்ட மெயிலை வெளியே இழுத்து அதையே 'ரிப்ளை ஆல்' செய்து தேதிகளை மாற்றி 'நா.. இந்தா ரெண்டு வாரம்
ஊருக்கு போய்ட்டு வந்துடறேங்க.. அதுவரைக்கும் துணை பொது மேலாளர் சமீர் (அரபிக்காரர்) பாத்துப்பார்..ஹௌஎவர் இன் கேஸ் ஆஃப் அர்ஜன்ட்டுன்னா என்னை மொபைல் போனில் தொடர்பு கொள்ள இன்ன பஹ்ரைன்/இந்திய நம்பர்களுக்கு விளிக்கவும்' என பத்து இயக்குநர்கள் மற்றும் துணை நிறுவன மேலாளர்களுக்கு தட்டிவிட்ட மறு நிமிடம் 'சுகமான பத்திரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்' என சில பதில்கள்.
ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பி வந்து அவசரமாக சில சட்டைகளை அயர்ன் செய்து உள் அறைக்கு வந்தால் எனது பெட்டியின் மேல் மனைவி வைத்த குட்டி பவுச்சில் வாந்தி, வயித்த வலி, பேதி, தலைவலி , காவிஸ்கான், பான்டாப்ரொசல் மாத்திரைகள்.. மற்றும் 'மூவ்' ( ராத்திரில கால் கொடைச்சல் இருக்கில்ல!)
கப் நூடுல்ஸ், ஜூஸ் பாக்கெட்டுகள், ஸ்மோக்டு பாதாம் முந்திரி, கெட்டில், சின்ன டீ கப்புகள், டீ பைகள், சர்க்கரை, தி.நகரில் சின்னவனுடன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று வந்து கொடுத்தனுப்பிய ட்யோட்ரன்ட், சாக்லேட், ப்ரிங்கில்ஸ், வேஃபர்ஸ், கேக்.. எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு கட்டி முடிக்க.. மணி ஆறு..
செக்யூரிடி சகாதேவை கூப்பிட்டு வீட்டுச்சாவியை கொடுத்து இரண்டு நாளைக்கொருமுறை செடிகளுக்கு தண்ணீர் விட கேட்டுக்கொண்டார் மனைவி. சிறிலங்கன் மெய்டு பெண்மணிக்கு வீட்டை இரு நாளைக்கொருமுறை வந்து மாப் செய்ய உத்தரவிட்டு, கேஸ் அடுப்பின் குழாயை மூடி, வைஃபை, கீசர், டெலிபோன் ஸ்விட்சை அனைத்து, எல்லா அறைகளையும் பூட்டி, சாமான்களை காரில் சகாதேவ் எடுத்து வைக்க, கமகம் சென்ட் மணத்துடன் லதீஃப் வந்து சேர்ந்தான்.
அடுத்த இருபது நிமிடத்தில் விமான நிலையத்தில் சாமான்களோடு எங்களை இறங்கி விட்டு, அன்பளிப்பை வெட்கத்துடன் வாங்கிக்கொண்டு விடை பெற்றுக்கொண்டான் லதீஃப்.
இருபத்து நான்கு மணி நேரமும் என்னைப்போல், செக்யூரிட்டி சகாதேவ், மற்றும் லதீஃபைப்போல் நாம் எல்லோரும் இயங்கிக்கொண்டே இருக்கிறோம். இரண்டே வாரங்கள் பிரயாணம் செய்ய நாம் செய்யும் ப்ரிப்பரேஷன்கள், செக் லிஸ்ட்கள், அளப்பறைகள் ஏராளம்.
ஆனால் 68 வருடங்கள் நிரம்பிய ஒரு முதல்வரும் 82 வயது முடித்த ஒரு மூத்த பத்திரிக்கையாளரும் சட்டென இந்த மண்ணுலகை விட்டு மறையும்
போது எவ்வளவு பணிகளையும் கடமைகளையும் விட்டுச்செல்கிறார்கள்! இவர்களது செக்லிஸ்ட் எவ்வளவு பெரியது? நான் இல்லாத இந்த இரண்டு வாரத்தில் கம்பெனியை சமீர் பார்த்துக்கொள்வார் என நான் சொல்லிவிட்டுப்போவதைப்போல் இவர்களும் சொல்லிவிட்டுப்போக முடியாதே! ஜெ மற்றும் சோ போன்ற ஓரெழுத்துப்பிரபலங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யார் நிரப்புவது! அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனிதர்கள் என்கின்ற முறையில் இருவருமே நம்மை மலைக்க வைத்தவர்கள்... ஹரே கிருஷ்ணா!
பி.கு: துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

No comments:

Post a Comment