Sunday, April 2, 2017

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ...


தாய்லாந்து செல்ல முடிவு செய்ததும் மனைவி Usharani Sridhar பஹ்ரைனிலிருந்தே Durga Ganapathi Subramanian உதவியுடன் சென்னையைச்சேர்ந்த டிராவல்ஸ் கம்பெனியுடன் தொடர்பு கொண்டு எங்கள் பிரயாணத்தை பிளான் செய்து பணத்தை முன்கூட்டியே அனுப்பிவிட, அழகான ஐடினெரரி அனுப்பி அதில் இன்னார் தான் உங்கள் கைடு, ஏர்போர்ட்டில் வரவேற்பார், இன்ன விடுதிகளில் உங்களுக்கு ஜாகை, காலை சிற்றுண்டி உண்டு, இன்னென்ன ஸ்தலங்கள் சுற்றிப்பார்ப்பீர்கள்.. இத்தினி மணிக்கு ஏர்போர்ட் ட்ராப் என அழகாக விபரங்கள்.
நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கு மேல் ஏற்றுமதி மூலமும் பத்து சதவீதம் சுற்றுலா மூலமும் தானாம். அதிலும் சமீபத்திய ராணுவ ஆட்சி கலவரங்கள் மற்றும் மன்னரது இறப்பும் சுற்றுலா வருமானத்தை சற்றே பின்னுக்குத்தள்ளியது உண்மை. உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் சுற்றுலாவிற்காக மக்கள் குவிந்தவன்னம் இருக்கிறார்கள்.
நாங்கள் பாங்க்காக் சுவர்ணபூமி ஏர்போர்ட் விட்டு வெளியே வரும்போது 'சீதாபதி ஶ்ரீதர்' பெயர் பொறித்த பதாகையுடன் நடுத்தர வயது பெண்மணி வரவேற்றார். 300 'தாய் பாட்' க்கு (ரூ 600) பேசும் நேரம் மற்றும் ஒரு மாத கால இன்டர்நெட் வசதியுடன் உள்ளூர் சிம் கார்டு ஒன்றையும் கையில் திணித்தார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் டொயோட்டா வேனில் பட்டாயா நகரின் ஹோட்டல் சென்றடைந்தோம். அங்கேயும் 'சீதாபதி ஶ்ரீதர்' பலகைப்பெண். அவளுக்கு ஆங்கில 'r' வரவில்லை...'ல' தான். 'டுமாலோ 10 ஓ க்ளாக்.. பீ லெடி' என்று சொல்லிவிட்டுக்கிளம்ப எத்தனித்தவளை நிறுத்தி 'இப்ப அஞ்சு மணி தானே! ராத்திரி வரைக்கும் சுத்தி பாக்க எதாவது 'ப்லொக்லாம்' கொடும்மா' என்றதும் டக்டக்கென போன் செய்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வேன் வரும் என்றாள்.
வேன் வருவதற்குள் ஹோட்டலை விட்டு கடை வீதிக்கு வந்தோம். ரோடெங்கும் ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள். நான், மனைவி உஷா, அவரது தங்கை மற்றும் கணவர். வீதியின் இரு பக்கமும் ஏராளமான மசாஜ் பார்லர்கள், கடைகள், உணவகங்கள், விடுதிகள். பெண்கள் கடை வாசலில் மசாஜ் விலை அட்டையுடன் நின்றபடி கஸ்டமர்களை அழைத்துக்கொண்டிருந்தார்கள். செறுப்பு, கண்ணாடி, பைகள், துணி வகைகள், பெல்ட், எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்போர்ட்ஸ் உடைகள் என வியாபாரம். விலையோ கொள்ளை மலிவு. அதிகம் பேரம் பேச அவசியமில்லாமல் நியாயமான விலை. பைகளில் நிரப்பிக்கொண்டு திரும்பி வரும்போது வண்டி காத்திருந்தது.
சுமார் ஒரு மணி நேர Alcazar show-தாய் நடனம் பார்த்தோம். எம்ஜியார் தாய்லாந்தில் மெட்டா ரூன்க்ரேட்டுடன் ஆடிக்களித்தபோது எம்எஸ்வி போட்ட அதே ட்யூன் பேக்ரௌண்டில் ஒலிக்க, சுற்றி சுற்றி வந்து அழகாக ஆடினார்கள் பொம்மை மாதிரியான தாய்ப்பெண்கள். ஆடிட்டொரியம் முழுக்க வட இந்தியர்கள் தான். நடன சத்தத்தையும் மீறி நம்மாட்கள் பேச்சு சத்தம்.
அது முடிந்து ஹோட்டலுக்கு பக்கத்திலேயே மதராஸ் தர்பாரில் அருமையான பொங்கல், தோசை இட்லி ஆயிற்று. இரவு பத்து மணி வாக்கில் புகழ்பெற்ற வாக்கிங் ஸ்ட்ரீட் நுழைந்தோம்...
'வாக்கிங் ஸ்ட்ரீட்'டில் வாகனங்கள் அனுமதி இல்லை. தீபாவளிக்கு முதல்நாள் திருச்சி பெரியக்கடை வீதி போல ஜனத்திறள். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கடைகள். எல்லாமே திறந்தவெளி சாராய (pub) விடுதிகள். எல்லா விடுதிகளிலும் பாடல்கள் (live band) ஒலித்துக்கொண்டிருக்க எங்கு பார்த்தாலும் மேற்கத்தியர்கள். 'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'ஐ ஷாட் தி ஷெரீஃப்', 'வாக் ஆஃப் லைஃப்', பீஜீஸின் 'சாட்டர்டே நைட் ஃபீவர்' போன்ற 90களின் பிரபல பாடல்களை பாண்ட் காரர்கள் பாட, மேற்கத்திய முதியவர்கள் ரசித்தபடி மொந்தை மொந்தையாய் கள்ளை நுரையுடன் வாயில் கவிழ்க்க, பெண்கள் ஓடிவந்து கின்னங்களை சீமைச்சாராயத்தால் நிரப்பினார்கள். தேவலோகம் போல புகை மண்டலம். ஏகத்துக்கும் சிகரெட், மது வாடை.
எல்லா கடை வாசலிலும் ஏழெட்டு பெண்கள். கையில் விலைப்பட்டில், காலில் அரை நிக்கர். 'சாரி.. வேண்டாங்க' என அவர்களைக்கடந்து சற்றே தலை நிமிர்த்தி பார்த்தால்..நாராயணா!. கடை பால்கனிகளில் ஆங்காங்கே 'பப்பி ஷேம்' பெண்கள். கண்களில் 'ரா..ரா.சரசுக்கு ரா..ரா'. தேகத்தில் உடை இருக்கிறதாவென சந்'தேகம். நல்ல வேளை.. இருந்தது.. ஆனால் சொச்சமாக. கூட்டம் அதிகம் என்பதால் உஷா என் கையை கெட்டியாக பிடித்து இழுத்துக்கொண்டு ரோட்டோரக்கடை ஒன்றில் நிலக்கடலை வாங்கினாள் (இப்ப ரொம்ப அவசியம்!).
சில பார்லர்களில் பெரிய மேசையைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கைகளில் மதுக்கோப்பைகளுடன் சம்பாஷனையிலிருக்க மேசையின் நடுவே நின்றபடி யுவதியொருத்தி களிநடம் புரியக்கண்டேன்.. சாரி.. டோம். நல்ல வேளை உடை அணிந்திருந்தாள். நாம் கழுத்தில் சுற்றிக்கொள்ளும் மஃப்ளரைக்கொண்டு இரண்டே சுற்றில் தன்னை மறைத்துக்கொண்டு ஷேமமாக இருந்தாள் அந்த ஏகவஸ்திரதாரினி (ஒரே பீஸ்). எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு அப்பப்ப படக்கென ரோட்டில் கல் இடறி கீழே விழ இருந்த என்னை உஷா கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.(ரோடுனி பாக சூசி நடுவண்டி!) இரவு பன்னிரண்டு மணி வாக்கில் ஹோட்டல் அறைக்கு திரும்பினோம்.
மறுநாள் குளித்துவிட்டு விசைப்படகுச்சவாரி. சுமார் 80 கி.மீக்கும் சற்றே அதிக வேகம். ஆக்ரோஷமான அலைகளின் மேலே படகு ஓரடி உயரம் பறந்தபோது இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டோம். ஊவென எல்லோரும் அலறல். பத்து நிமிடத்தில் கடலின் நடுவே மிதக்கும் தளம் ஒன்று வந்து சேர்ந்தோம். 'பாரா க்ளைடர்' என நம்மை பாராசூட்டில் கட்டி விசைப்படகு இழுத்துச்செல்ல ஜிவ்வென வானில் பறப்போம். நாம் பறக்கும் பாராசூட்டின் கயிறு அறுந்து, அல்லது மற்றொரு பாராசூட்டுடனோ படகுடனோ மோதி, தலை நொறுங்கி, ஊருக்கு தகவல் அனுப்பி... போன்ற விபரீத எண்ணங்கள் எல்லாம் நமக்கு அப்பத்தானே வரும்! 'இருக்கட்டுங்க! அடுத்த வாட்டி பாத்துப்பம்' என ஒதுங்கிவிட்டேன். அடுத்து அன்டர் வாட்டர் வாக். ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டி நம்மை கடலுக்கடியில் தரையில் நடக்க வைப்பார்களாம். தண்ணீர் மட்டத்துக்கு மேலேயே ஒழுங்காக நடக்கும் ஆட்களா நாம்! மறுபடியும் சுரா மீன் கடித்தல், ஆக்ஜிஜன் தீர்த்து மூச்சுத்திணறி.. போன்ற நெகடிவ் தாட்ஸ்! 'விட்ருங்க சார்.. திரும்பிப்போக மறுபடியும் ஸ்பீட் போட்டா?' என பயந்துகொண்டே கேட்டோம். மதிய உணவு வாங்கிக்கொடுத்தார்கள். உள்ளூர் 'டுக் டுக்' எனப்படும் டெம்போவில் நின்றுகொண்டே பயணம் செய்தது நல்ல அனுபவம்.
மாலை மிதக்கும் சந்தை (floating market) அழைத்துச்சென்றார்கள். படகில் சவாரி செய்தபடியே சந்தையை சுற்றுவது, மீன் தொட்டியில் காலை விட்டு ஃபிஷ் ஸ்பாவாம்.. சீன அன்பர் ஒருவர் தட்டில் மோர் மிளகாய், வடாம் மாதிரி ஏதோ ஒரு வஸ்துவை வாயில் போட்டு மொறமொறவென ரசித்து சாப்பிட யாரோ அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். 'அவனுக்கு பிடிச்ச வடாம், வத்தல் சாப்பிடறான். இதுல வீடியோ எடுக்க என்ன இருக்கு! வெட்டிப்பசங்க! என்று சலித்துக்கொண்டே எட்டிப்பார்த்த எனக்கு வயிற்றை புரட்டியது. தேள், கரப்பான், வெட்டுக்கிளி, பட்டுப்புழு என மினி டிபன் கோம்போ பண்ணிக்கொண்டிருந்தார் அவர். சற்று தள்ளி ஒரு பெண் வாணலியில் எதையோ..அது முதலைக்கறி வறுவலாம். குமட்டிக்கொண்டு ஓடி வந்துவிட்டோம். மதராஸ் தர்பாரில் இரவு உணவு முடித்து நால்வரும் ரோட்டோர மசாஜ் பார்லரில் நுழைந்தோம்.
ஃபுட் மசாஜ், ஹெட் மசாஜ், ஃபேஸ் மசாஜ் மற்றும் ஃபுல் பாடி மசாஜ்.. என எல்லாவற்றிற்கும் ஒரு ரேட். நமக்கு ஃபுட் மசாஜ் போதுமென உஷா முடிவெடுக்க (நர நர..) சகலையும் நானும் கப்சிப். நால்வரையும் வரிசையாக ஈசி சேரில் அமர வைத்து எதிரே நான்கு பெண்கள். சுமார் ஒரு மணி நேரம் காலில் சொடக்கு, முழங்கால் வரை எண்ணெய் மசாஜ், ஏதோ குச்சியால் பாதங்களை குத்தி.. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. ஆச்சு என சொன்னவளிடம் 'சரிம்மா! இந்த தோள் பட்டை கொஞ்சம் வலிக்குதே!' என்ற என்னை மட்டும் சேரிலேயே அவள் இருக்கச்சொல்ல 'ஆ..மீக்கு மாத்ரம் ஸ்பெஷலா!' என உஷா அலறிவிட்டாள். அடுத்த நொடி அந்தப்பெண் என்னை ஒரு ஸ்டூலில் உட்காரச்சொல்லி குனியவைத்து பின் பக்கம் வந்து என் முதுகில் தன் முழங்காலை வைத்து ஒரே அழுத்து அழுத்தி, என் இரு தோள் பட்டையை இழுக்க 'படக்...படக்'கென எலும்பு அங்கங்கே நொறுங்கிய மாதிரி ஐந்தாறு சொடக்கு.. 'அடிப்பாவி! என்னா ஸ்ட்ரெந்த் உனக்கு!' என வியந்து அந்த பெண்ணை திரும்பிப்பார்த்தேன். மம்தா பாணர்ஜி மாதிரியே இருந்தாள். அதானே!. ஹோட்டல் அறைக்கு வந்தது படுத்தது தான்.. மறுநாள் காலை 9 மணிக்குத்தான் எழுந்தோம். அவ்வளவு அசதி.. உலகப்புகழ் பெற்ற தாய்லாந்து மசாஜ் என்பது பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சென்று வரலாம் குறைந்த செலவில். மற்றபடி தப்புத்தண்டாவெல்லாம் கிடையாது.
சில சுவாரசியமான தகவல்கள்:
1.ரோட்டோர டீக்கடையில் தாய்ப்பெண் ஒருத்தி நம் ஊர் தேநீர் போலவே தாய் டீ போட்டுக்கொடுத்தாள். அத்துடன் நம்மூர் டீ சாப்பிடும் ஆசையும் போய்விடும்.
2.தாய் இளநீர் பதநீர் போலவே நல்ல ருசி.
3.மாடம் டுஸார் மியூசியத்தில் லண்டனைப்போலவே மெழுகுச்சிலைகள். மோதி, டயானா, மைக்கேல் ஜாக்சன் என எல்லா பிரபலங்களின் சிலைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டது அருமையான அனுபவம்.
4.மாலை என் அண்ணன் மகள் deepa Deepa Magesh வீட்டில் அருமையான இரவு சாப்பாடு. (அது பற்றி ஒரு வியாசமே எழுதியாயிற்று)
5.சிறிலங்கா போலவே இங்கும் புத்தர் கோயில், படுத்திருக்கும் புத்தர், மொட்டையடித்த (நம் மீது தண்ணீர் தெளித்து ஆசிர்வதிக்கும்) புத்த பிட்சுக்கள், மன்னர் அரண்மனை, விரைப்பான ராணுவ வீரர்கள், தரையின் கீழ் ரகசிய அறை..இத்யாதி.. விசேஷமாக எழுத ஒன்றுமில்லை.
6.சூட் தைக்க விரும்புபவர்களுக்கு: உலகத்தரம் வாய்ந்த சூட் பாங்க்காக்கில் 24 மணி நேரத்தில் தைத்து கொடுக்கிறார்கள். Custom suit-24 hours-120 dollars (get 1 free) என நிறைய விளம்பரங்கள். சுமார் 360 டாலர்களுக்கு 2 சூட் தைக்க காரில் வந்து அழைத்துச்சென்று அளவு எடுத்து, மறுநாள் ஏதோ ஒரு மாலில் இருந்த என்னிடம் நேரில் வந்து, ரெஸ்ட் ரூம் தள்ளிக் கொண்டு போய் அங்கேயே ட்ரையல் பார்த்து, அடுத்த ஒரு மணியில் எனது ஹோட்டல் லாபிக்கே அனுப்பி வைத்தார்கள்.
7.ரிவர் க்ரூஸ் எனப்படும் மிதக்கும் டின்னர் இங்கும் பிரபலம். மேற்கத்திய நாடுகள் போலவே இங்கும் பெரிய கப்பல் சைஸ் படகில் 600,700 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊரை சுற்றிக் காட்டியபடியே இரவு உணவு, 'ஷீலா கி ஜவானி' என ஆடல் பாடல்கள். வட இந்தியர்கள் 'போதும்மா..போதும்டாப்பா! தூங்க நேரமாச்சு.. ஆடறத நிறுத்திக்கோ!' என சொல்லும் வரை ஆடித்தீர்த்தார்கள்.
8.கடைசி நாள் வாங்கிய பொருட்களை அடைக்க புதிய பெட்டி வாங்க வேண்டியதாகிவிட்டது.
ஐடினெரரியில் சொன்ன மாதிரி டான் என ஆறு மணிக்கு டிரைவர் வந்து எங்களை விமான தளத்தில் இறக்கிவிட்டான். கொடுத்த டிப்ஸையும் தலையை சொறியாமல் வாங்கிக்கொண்டான்.
போர்டிங் பாஸ் வாங்கி பாஸ்போர்ட் கண்ட்ரோல் முடிந்து விமானம் ஏறும் முன் ஏர்போர்ட் லவுஞ்ச் போகும் வழியில் அந்த கடைசி சில நிமிடங்களில் ஏர்போர்ட் உள்ளேயும் 'தாய் மசாஜ் 600 பாட்' போர்ட் மாட்டியிருந்தார்கள்.

No comments:

Post a Comment