Sunday, April 2, 2017

கல்லுக்குழி ராமநாதன்


80களில் திருச்சி டிவியெஸ் டோல்கேட் பகுதி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் அரசு குடியிருப்பு காலனியில் சுமார் ஏழெட்டு வருடங்கள் குடியிருந்தோம். இரண்டு தளங்கள் உள்ள கட்டிடம் ஓவ்வொன்றிலும் விசாலமான 6 ஃப்ளாட்கள். சுவாரசியமான காலனி வாழ்க்கை. அங்கு பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர்.
அடுத்த ஃப்ளாட்டில் தொபேல் தொபேலென பசங்க அடி வாங்கும் சத்தம் இங்கே கேட்கும். பின்புற பால்கனி போனால் 'இந்த வீட்ல என்னை யாரு மதிக்கறாங்க' போன்ற கணவன் மனைவி சண்டை வசனங்கள் அப்பட்டமாக காதில் விழும். பால்கனியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினால் மேல் தளத்திலிருந்து சப்பிய மாங்கொட்டை நம் தலையில் விழுவது நிச்சயம். பனியனுடன் பின்பக்க பால்கனியில் அந்த வீட்டுக்காரர் ரொம்ப நேரம் நின்றுகொண்டிருந்தால் வீட்டுக்காரம்மாவுடன் சண்டையென அர்த்தம். அப்படி அவர் நின்றதை ரொம்ப நேரம் பால்கனியில் நின்று கவனித்தது எங்க நைனா என்பது கூடுதல் தகவல்.
பக்கத்தில் செங்குளம் காலனி தாண்டி கல்லுக்குழி. ராகவா காஃபி வொர்க்ஸ், காய்கறி கடைகள், அடுத்து மட்டன் ஸ்டால். மட்டன் ஸ்டால் கொட்டகை மூங்கிலில்தான் ஆங்கிலோ இந்தியன் ஒருவனை ஜட்டியுடன் கட்டிவைத்து மூன்று பேர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பகுதி மாணவி ஒருத்தியை பொன்மலையிலிருந்து சைட் அடிக்க வந்து மாட்டிக்கிட்டானாம். மடப்பய! சாமர்த்தியம் பத்தாது! அடித்து முடித்த பிறகு அவனை எச்சரித்து, கயிற்றை அவிழ்த்து விட்டதும் சர்வசாதரணமாக பக்கத்து கடையில் தம்மடித்துக்கொண்டு (அதே ஜட்டியுடன்) நின்றுகொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்ப்போம். அடுத்த வாரம் பொன்மலைப்பட்டி கல்கண்டார் கோட்டையில் அதே பெண்ணுடன் சைக்கிளில் டபுள்ஸ் போய்க்கொண்டிருந்தவனை மனதார வாழ்த்தத்தான் முதலில் நினைத்தோம். ஆனால் சைக்கிளுக்கு காரியர் இல்லாததைக்கண்டு வயிறெரிந்து போன கதை இப்ப எதுக்கு!
இப்ப கல்லுக்குழி ரெயில்வே காலனி... டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், அரிசிக்கடை, கல்லுக்குழி மாரியம்மன் கோவில் அடுத்து ரெயில்வே காலனி ஆரம்பம். காலனி நடுவே அனுமார் கோவிலை ஒட்டி இரும்பு தடுப்புக்கப்பால் தூரத்தில் ஜங்ஷன் தெரியும். 'பாஆஆஆம்..' என்ற சத்தத்துடன் தடக்..தடக் கென ஓடி மறையும் டீசல்/எலெக்ட்ரிக் இஞ்சின்களுக்கு நடுவே, ஒரு ஓரமாக ஈனஸ்வரத்தில் 'ஊ..உஸ்ஸ்ஸ்க்'கென ஷன்ட்டிங் அடிக்கும் பழைய நீராவி இஞ்சின்களை இனி பச்சை விளக்கு படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
விஷயத்துக்கு வருவோம். கோவிலுக்கு எதிரே ரயில்வே காலனி வீடுகளில் ஒன்று தான் 'கல்லுக்குழி ராமநாதன்' வீடு. ஓவியர் வினு வரைந்த மாதிரி அழகான முகம். கொஞ்சம் சொறுகுன மாதிரி கண்கள். பரந்த நெற்றிக்குப்பின் இளம் வழுக்கை வர ஏக சாத்தியங்கள் உள. நெற்றியில் விபூதி..முகத்தில் மீசையில்லாமல் தாடையில் மட்டும் தேவையில்லாமல் வளர்ந்த தாடி. அவனது பெற்றோர் நாமக்கல்லில் இருக்க, திருச்சியில் அத்தை மாமாவுடன் ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். ரயில்வே காலனியில் வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள். தட்டி போட்ட முன் அறை. மழை நீர் பாசம் பிடித்த ஈர சுவர்கள். சுவற்றில் காரை உதிர்ந்து அங்கங்கே பல்லிளிக்கும் செங்கல். மஞ்சள் சுண்ணாம்படித்து அலிபாபா படம் போல வீட்டுக்கதவில் எண்கள்.
நான், ராமநாதன் மற்றும் ஶ்ரீரங்கம் காமாட்சி ( Venkat Kamatchinathan) மூவரும் ICWA பரிட்சைக்கு கணிதம் சேர்ந்து படித்தோம். அப்போதெல்லாம் CA மற்றும் ICWA படிப்புகளில் கணிதம் தான் மிகவும் கஷ்டமான பேப்பர். CA கும்பல் பூரா அந்த பேப்பருக்கு ஆண்டாதெரு குப்புசாமி சாரிடம் டியூஷன் போவார்கள். 'நானெல்லாம் B.Sc வரைக்கும் மேத்ஸ்ல எப்பவுமே சென்ட்டம் தான்' என பீற்றிக் கொண்டு, CA கணிதத்தில் 30க்கும் குறைவாக வாங்கி சில நாள் பேயறைந்த மாதிரி திரிந்தவர்கள் பலர்.
வீட்டு வாசல் வேப்ப மர நிழலில் வொயர் நாற்காலி போட்டு சாயங்கால வேளையில் அத்தையும் மாமாவும் உட்காந்துகொண்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நங்கள் உள்ளே முன் கூடத்தில் தரையில் பொஸ்தகங்களை பரப்பிக்கொண்டு படிப்போம்.
விதவிதமான கணக்குகள் போட சுவாரசியமாக இருக்கும். ஒரு ட்ரெப்பீசிய வடிவ தொட்டியின் நீள அகல ஆழம் இவ்வளவு..அதில் நிரம்பியுள்ள தண்ணீர் முழுவதையும் இன்ன அளவுள்ள போவினியால் (சொம்பால்) மொண்டு வெளியே கொட்ட மொத்தம் எத்தனை சொம்புகள் தேவை? (ஒரே சொம்பு போதுமே என கமென்ட் போடுபவர்களுக்கு, அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்படும் 😁😁).
ராமநாதன் பேப்பர் எதுவும் இல்லாமல் சிமென்டு தரையிலேயே சிலேட்டு குச்சியில் எழுதி கணக்கு போடுவான். அந்த கணக்கு முடிந்ததும் பலப்பத்துடன் பச்சக்கென அந்தப்பக்கம் தாவி, குனிந்து தரையில் அடுத்த கணக்கை ஆரம்பிப்பான். 'ஒரு செவ்வக வடிவ மூடப்பட்ட கூண்டின் ஒரு மூலையில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள குருவி அக்கூண்டின் எல்லா பகுதிகளுக்கும் பறக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் எவ்வளவு நீளமான கயிறு தேவை?' இது மாதிரி அடுத்த இரண்டு மூன்று கணக்குகள் முடிக்கும்போது ராமநாதன் பச்சக் பச்சக்கென இங்கும் அங்கும் குதித்து தரை முழுக்க கிறுக்கல்கள்.
'பாவம்... கஷ்டப்பட்டு படிக்கறான். தரைல எழுதி கணக்கு போட்டுத்தான் அவனுக்கு பழக்கம். அந்த பழக்கம் அவன வுட்டு போகமாட்டேங்குது. எனக்குத்தான் அதை அழிச்சு அலம்ப மனசே இல்லை' யென அத்தை சொல்வார்கள். அடுத்த சில மாதங்களில் நான் பம்பாய் போய்விட்டதும் ராமநாதனுடன் தொடர்பில்லாமல் போய்விட்டது.
அடுத்த லீவில் ஊருக்கு வரும்போது அவசரமாக கல்லுக்குழி போய் ராமநாதனின் வீட்டுக்கதவை தட்டினேன். 'பழைய பேப்பரா? ரெண்டு மாசங்கழிச்சு வா!' என வேறு ஒருத்தர் முறைத்தார். ராமநாதனின் மாமா ஜாகை இப்போ அங்கே இல்லை போல. அப்ப ராமநாதன்? குனிந்து பார்த்தேன். வீட்டுத்தரை சுத்தமாக இருந்தது.
பம்பாயில் நான் செம்பூரில் தங்கியிருந்தேன். CA படிப்புக்கு ஓரளவு நல்ல வேலை. பழைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. காமாட்சிநாதன் மற்றும் ராமநாதனைப்பற்றி தகவல் ஏதுமில்லை. நான் அடிக்கடி மாடுங்கா பகுதியில் சங்கர மடம் அருகே சிவன் கோவிலுக்கு போவதுண்டு. போதுபோகாமல் கோவில் வாசலில் நின்றுகொண்டிருப்போம். ஒருவர் தினமும் புல்லாங்குழல் வாசிப்பதை(யும்)வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
அப்போது தான் கல்லுக்குழி ராமநாதன் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து...அழகான மீசை. சீராக வளர்ந்த இரண்டு நாள் தாடி. ஒடிசலாக இருந்த ராமநாதனா இது! இப்ப சட்டை பட்டன்களுக்கிடையே பனியன் தெரியுதே!. அவனும் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலிருந்து பம்பாயில் புதிய வேலைக்கு வந்திருந்தான். பக்கத்தில் கன்செர்ன் அல்லது சொசைட்டியில் பாஞ்சு நிமிஷம் வரிசையில் காத்திருந்து நாலரை ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி (அவந்தான் கொடுத்தான்) இரவு சாப்பாடு சாப்பிட்டோம். 'வா.. வா.. பக்கத்துல தான் வீடு' என என்னை இழுத்துக்கொண்டு 'ஏவ்' என ஏப்பமிட்டபடி (புளித்த மோர்) நடந்தான்.
கிங்ஸ் சர்க்கிள் சமீபம் 'ஓகே கண்மணி' படத்தில் வருவது மாதிரி பழைய கட்டிடம். பெரிய உயர்ந்த கதவுகள். அங்கே தான் அவன் பேயிங் கெஸ்ட்டாம். வயதான பார்ஸி பெண்மணி நைட்டியுடன் கதவைத்திறக்க உள்ளே தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு நாரிமன் பாயின்ட் ரஹேஜா சென்டரில் ஆபிஸ். எனக்கு ரீஜென்ட் சேம்பர்ஸ். ரொம்ப பக்கம் தான். நிறைய நேரம் பேசிவிட்டு, மறுநாள் மதிய உணவு இடைவேளையில் சந்திப்பதாக முடிவு செய்து, விடை பெற்றுக்கொண்டு '8 லிமிடெட்' பிடித்து செம்பூர் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மதியம் 1 மணிக்கு அவனது ஆபிஸ் போனேன். 'பெஸ்ட் அன்டு க்ராம்ப்டன்' நிறுவனம். அதில் டெபுடி அக்கவுன்ட்ஸ் மானேஜராம். 'கஷ்டப்பட்டு படிச்சதனால நல்ல வேலைல நீ இருக்கறது ரொம்ப சந்தோஷம்பா' என அவனை வாழ்த்தி, அவனது ஆபிஸ் நம்பரை என் பாக்கெட் டைரியில் குறித்துக்கொண்டேன்.
'உன்னோட ஆபிஸ் நம்பரை சொல்லு' என பேனாவை எடுத்தவன் பேப்பர் ஏதுமில்லாத கிறுக்கல்கள் நிறைந்த சொறசொறப்பான மர மேசையின் மேற் பரப்பில் பச்சக்கென குனிந்து நம்பரை குறித்துக்கொண்டான். நல்ல வேளை தரையில் கார்பெட் போட்டிருந்தார்கள்...

No comments:

Post a Comment