Sunday, April 2, 2017

வெங்கட் & சுகன்யா

'ஶ்ரீதர்! சாயங்காலம் வீட்டுக்கு சாப்பிட வத்துடுங்க..' என் இவர் என் ஆபிசுக்கு போன் செய்ததும் மனம் குதூகலிக்கும். மாலை நண்பன் சந்துரு Balasubramaniam Chandrasekaranனுடன் செம்பூரிலிருந்து கிளம்புவேன். இவரை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே சந்துரு தான். நாங்கள் எல்லோரும் குடும்ப சூழ்நிலை காரணமாக CA, ACS போன்ற படிப்புகள் முடிக்கும் முன்பே பம்பாய்க்கு வேலை தேடி வந்தவர்கள். வீட்டிற்கு பணம் அனுப்பி வேலையிலிருந்துகொண்டே கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்தோம். தக்கலை பத்மநாபன் மற்றும் ஶ்ரீரங்கம் ரங்குவும் கூட இருப்பவர்கள். திடீரென ஒருநாள் இவரோ சந்துருவோ 'டேய்.. நா ACS முடிச்சுட்டேன்' என வந்து நிற்பார்கள். அடுத்து ஹோட்டலில் ட்ரீட், ஆபிசில் பதவி உயர்வு.. திருமணம் என நல்ல பல மாற்றங்கள்.
கம்பெனி செக்ரட்டரி என பெருமையுடன் கையில் சிறிய ப்ரீஃப் கேசுடன் பம்பாய் VT ஸ்டேஷனிலிருந்து ஹோமி மோடி தெரு வழியாக இவர் தினமும் நடந்து போவார்.
JM Bakxi எனப்படும் கப்பல் நிறுவனத்தில் இவருக்கு வேலை. ஃபோர்ட் பகுதியில் மிகப்பழைய கட்டிடத்தில் இவரது ஆபிஸ். இந்தியாவில் துறைமுகங்கள் உள்ள பல நகரங்களில் உள்ள இவர்களது கிளை அலுவலகங்களுக்கு இவர் ஆடிட் செய்ய அடிக்கடி விமானப்பயணம் செய்வார். இவரைச்சுற்றிலும் நிறைய நண்பர்கள். 'வேலை மாறனுமா! உங்க சீவியை குடுங்க.. நம்ப ஃப்ரெண்டு ஒருத்தன் இன்ன கம்பெனியில வைஸ் பிரெசிடென்ட்.. அவன்ட்ட சொல்லி அடுத்த வாரம் ஆஃபர் லெட்டர் வாங்கித்தறேன்' என அடித்துச்சொல்வார்.
மாலை சந்துருவும் நானும் செம்பூரிலிருந்து ரயில் பிடித்து மான்குர்ட் ஸ்டேஷனில் இறங்கி பஸ் பிடிப்போம். அடுத்த அரை மணி நேரம் கடல் தாண்டி பம்பாய் நகரை விட்டு சுமார் 15 கிமீ.ல் வாஷி நகரம். வாஷி பிரம்மச்சாரிகளின் வாஷிங்டன். பழைய அழுக்கு கட்டிடங்கள், கூட்டம் நிறைந்த காந்தா பட்டாட்டா காய்கறி மார்க்கெட், இட்லி தோசை புரோட்டா நெல்லை அண்ணாச்சி கடைகள். காலை 7 மணிக்கு தலைகுளித்த ஈரம் சொட்ட சுடிதார் அணிந்த தமிழ்ப்பெண்கள் வாஷியில் பஸ் பிடித்து நாரிமன் பாயின்ட்டில் ஏதோ ஒரு ரஹேஜா அடுக்குமாடி கட்டிடத்தின் 25ஆம் தளத்தில் எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர் முன் வேலை செய்து இரவு 8 மணிக்கு வாஷியில் இறங்கி ஷேர் ஆட்டோ பிடித்து ஓடும்போதும் அதே பளிச்சென்ற முகம். 'டேய்! இவ பன்னீர் புஷ்பங்கள் சாந்தி மாதிரி இருக்கால்ல!' பஸ் பிடிக்கும் அவசரத்திலும் நாங்கள் ஜொள் விடும் சந்தர்ப்பங்கள்.
வாஷியிலிருந்து அடுத்த அரை மணி நேரப்பயணம்.. நாம் வந்து சேரும் இடம் CBD பேலாப்பூர். பம்பாயிலிருந்து 40 கிமீ தூரம். காலனி மாதிரி அழகான ஒரே மாதிரியான கட்டிடங்கள். பாதி பஞ்சாபி..மீதி தமிழ்/மலையாள குடும்பங்கள். ஒரு/இரு படுக்கையறை ஃப்ளாட்டுகள். டர்பனில்லாத சர்தார்ஜி அப்பாக்கள் தலைமுடியை விரித்துப்போட்டு அழகிய மகள்களுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி இரவு பத்து மணிக்கு ரோட்டில் உலாத்துவதை நாங்கள் அதிசயமாக பார்ப்போம். 'டேய்.. அப்பிடியே லட்டு மாதிரி இருக்கா பாரு அவம்பொண்ணு!' சந்துருவின் கமென்ட்..என்னுடையதல்ல..
சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் ஒன்றில் இவர், இவரது தம்பி குமார், இவரது மனைவி, அவரது தங்கை சுஜாதா மற்றும் கணவர் பாஸ்கர் Bhaskaran Krishnamoorthy , பேச்சலர் நண்பர்கள் என எல்லோரும் வட்டமாக உட்காரந்து பத்து மணிக்கு மேல் இரவு உணவு. எக்கச்சக்கமாக தேங்காய் துருவிப்போட்ட கோசுப்பொறியல், மிளகு வாசனையுடன் ஒரு கூட்டு, மணக்கும் சாம்பார், பருப்பு ரசம், ஆரே பாலில் தோய்த்த கட்டித்தயிர், ஏரோப்ளேன் ஊறுகாய். 'ஶ்ரீதர்! மிச்சம் வைக்காதீங்க.. அந்த சாம்பாரை நன்னா தயிர் சாதத்தில் விட்டுக்கோங்கோ என சொன்ன கையோடு கடாயோடு சாம்பாரை நம் தட்டில் கவிழ்ப்பார் இவர். திவ்யமான சாப்பாடு முடிந்து 'கோரா ஔர் காலா' என ஏதோ ஒரு பாடாவதி ஹிந்திப்படத்தை டெக்கில் போட்டு 'தீரே தீரே போல் கொய் சுன்னா லே' பாடும் ராஜேந்திர குமாரை செம்மையாக கலாய்த்து, ஏகத்தும் சிரித்து அரட்டையடித்து நள்ளிரவில் பஸ் பிடித்து நானும் சந்துருவும் செம்பூர் வந்து சேர்வோம்.
இவர் வெங்கட்.. மனைவி Sukanya Venkataraman. 30 வருடங்கள் கழித்தும் இன்னும் அதே இளம் தம்பதியாகத்தான் என் கண்களுக்குத்தெரிகிறார்கள். சுகன்யாவும் அவரது சகோதரி சுஜாதாவும் Sujatha Bhaskaran சிறப்புக்குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தில் அறப்பணி செய்பவர்கள்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வெங்கட் & சுகன்யா..

No comments:

Post a Comment