Tuesday, June 2, 2015

அப்பாவின் பிறந்த நாள்



கரூர்,காரைக்குடி,புதுக்கோட்டை,சேத்தியாத்தோப்பு போன்ற ஊர்களுக்கு பாங்க் ஆடிட் போகும்போது காலை 4 மணிக்கு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சக CA நண்பர்கள்Ayyampillai Ponnusamy , Subramaniam ChidhambaramArunmozhi MurugesanSubramanian Rajaseharan எல்லோரும் கூடுவோம். அந்த விடிகாலை தனது ஹீரோ மெஜஸ்டிக் மொப்பெட்டில் என்னை ட்ராப் செய்ய அப்பா வருவார்.
'பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் முன்னாலேயே ட்ராப் பண்ணுங்க'என அப்பாவிடம் சொல்வேன், நண்பர்கள் அப்பாவை பார்ப்பது பிடிக்காமல்...
'இருக்கட்டும்டா... அங்கல்லாம் ஒரே இருட்டு'என அக்கரையுடன் சொல்பவரை அதட்டி வண்டியை நிறுத்தி செலவுக்கு அவரிடமிருந்து பணத்தையும் பிடுங்கிக்கொண்டு நண்பர்களை பார்க்க பஸ்ஸ்டாண்டுக்குள்ளே ஓடுவேன், திரும்ப அதே இருட்டில் அவர் பத்திரமாக வீடு போய்ச்சேருவாரா என கவலைப்படாமல். வயது அப்படி..
அடுத்த அரை மணியோ ஒரு மணியோ மற்ற எல்லா நண்பர்களுக்காகவும் காத்திருந்து டீ, பிஸ்கட்டெல்லம் சாப்பிட்டு, ஓஹோவென சப்தமாக சிரித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து, 'ஹலோ...உயிருள்ளவரை உஷா' போடுங்க என கண்டக்டரிடம் சொல்லி, பஸ் ஸ்டாண்டை விட்டு மெதுவாக வெளியே வரும் பஸ்ஸிலிருந்து பார்த்தால், தூரத்தில் எனக்குத்தெரியாமல் இன்னமும் தனது வண்டியுடன் அப்பா ஒரு மணி நேரத்துக்கு மேல் இருட்டில் காத்திருப்பது தெரியும். பஸ் போன பின் அவர் கிளம்புவார். 'ச்சே... அவருக்கும் ஒரு டீ வாங்கி கொடுத்து அனுப்பியிருக்கலாம்' என குற்ற உணர்ச்சி மெல்ல எழுந்தாலும் 'இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ' பாடல் சத்தத்தில் அப்பா என்பவர் சடுதியில் மறக்கப்படுவார்..
சில வருடங்கள் முன் திருச்சியில் எங்கள் வீட்டின் அருகேயுள்ள சலூனுக்கு போய் ' வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து அவருக்கு சவரம், மாசமொரு முறை தலைமுடி வெட்டனும்.. ஒரு வருஷத்துக்கான பணம் இப்பவே கொடுக்கறேன். நாங்க ஊருக்கு போயிட்டா அம்மாவைத்தவிர கூட பாத்துக்க யாருமில்ல' என கெஞ்சாத குறையுடன் கேட்டும் கடைக்காரர் ' வீட்டுக்கெல்லாம் வர மாட்டோம்.. அவரை மெதுவா யாராவது கடைக்கு கூட்டிக்கிட்டு வர்றதா இருந்தா பண்ணுவேன்' என பிடிவாதமாக சொல்லிவிட்டார். கடை எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே..
பார்க்கின்சன்ஸ் நோயால் கடைசி ஐந்து வருடம் அவதிப்பட்டு, வாயிலிருந்து சதா எச்சில் ஒழுகி முன் பக்கம் சட்டையைல்லாம் நனைந்து,பேச்சு குளறி, அவர் பேசுவது யாருக்கும் புரியாமல், 'சொல்றத கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன்' என சில முறை சலித்துக்கொண்ட எனக்கு இப்போதும் குற்ற உணர்ச்சியே..
கோ ஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவரது நேர்மையே நிறைய பேருக்கு சங்கடத்தை கொடுக்க வாழ்நாள் முழுவதும் சோதனை தான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பந்தாடப்படுவார்..வாடகை வீட்டிலேயே ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் ரிடையர் ஆன அதே நாளில் தன் பெண்ணின் (என் அக்கா) திருமணத்தை நடத்த, கோ ஆபரேடிவ் துறை அலுவலர்கள் நிறைய பேர் கோபத்தில் திருமணத்திற்கு வரவில்லை...(மனுஷன் தானும் சம்பாரிக்காம நம்பளையும் சம்பாரிக்க வுடல..)
கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஓடி விட்டது. கடைசி இரண்டு வருடங்கள் பேசுவதற்கு முயற்சிப்பதை விட்டு விட்டு மௌனமாகவே இருந்தார்.ரிடையர் ஆகும் வரை எங்களுக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்தவர் அடுத்த 20 வருடங்கள் எளிமையாகவே இருந்து நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணத்தையும் சேர்த்து திரும்ப எங்களுக்கே வைத்துவிட்டுப்போனார்.
அவருக்கு பலமே அம்மா தான்.. அவர் சட்டையில் ஒழுகும் எச்சிலையும், வாயையும் நொடிக்கொருமுறை முகம் கோணாமல் துடைக்கும் அம்மா....
இறைவனுக்கு நன்றி... அவர் 2011இல் இறக்கும் வரை அம்மாவுக்கு எந்த உடல் உபாதை இல்லாமல் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்தே அழைத்துக்கொண்டதற்கு...
அப்பாவின் பிறந்த நாள் மற்றும் பெற்றோரின் மண நாள் இரண்டும் சேர்ந்து வரும் இந்நாளில் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருப்பினும்.. எகிப்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு அப்பா அம்மாவின் அறிய புகைப்படம் அனுப்பிய என் சகோதரி மகள் Srikamya Badrinath க்கு நன்றி....

No comments:

Post a Comment