Tuesday, June 2, 2015

இவளே எங்கள் அன்னை



கிளினிக்கிலிருந்து இரவு பத்து மணிக்கு மேல் வரும் மூத்த பெண்ணுக்காக கவலையுடன் காத்திருப்பாள்.
அடுத்து, கணவன் தனது ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கடைசி நோயாளியை பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு மேல் வரும் வரை அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்து விழித்திருப்பாள்.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்து டிக்காஷனை போட்டு,குளித்து, அவசரம் அவசரமாக சமையலை முடித்து, கணவன் மற்றும் பெண்களை எழுப்பி காபி சப்ளை செய்து, Ellebee(நாய்)க்கு தயிரசாதம் வைத்து, காலை டிபன் எல்லோருக்கும் தயார் செய்து, டப்பாக்கள் கட்டி, அரைகுறையாக தானும் சாப்பிட்டு, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி அவசரமாக ஸ்கூலுக்கு ஒடுவாள்.
ஸ்கூலுக்கு ஓடும் முன் மறக்காமல் கீழ் போர்ஷனில் இருக்கும் தன்(என்) அம்மாவிற்கு டிபன் கொண்டு போய் கொடுத்து, அம்மா தரும் டீயையும் அவசரமாக குடித்துவிட்டு ஒடுவாள்.
நடுவே நான் (பஹ்ரைன்), என் தம்பி (மஸ்கட்) அண்ணன் பாம்பேயிலிருந்தும் குடும்ப சகிதம் லீவுக்கு திருச்சி போயிருக்கும்போது எட்டரை மணிக்கு ஸ்கூல் கிளம்பும் முன் எல்லோருக்கும் இரண்டு வகை டிபன், மதிய உணவுக்கு சூப்பர் மோர் குழம்பு, ரைஸ் புலாவ் என வெரைட்டியாக எங்களுக்கு சமைத்து வைத்துவிட்டு ஸ்கூலுக்கு ஓடுவாள் (இரண்டாவது காபியும் கொடுத்துவிட்டு).
எங்கள் மூத்த சகோதரி புற்றுநோயால் சில வருடங்கள் முன் இறக்க, பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவளது பெண்ணை தன் மூன்றாவது பெண்ணாக வளர்த்து எம்.பி.ஏ படிக்க வைத்து, கல்யாணம் செய்து வைத்து( அவளும் பஹ்ரைன்) , அவளது பிரசவத்தையும் பஹ்ரைன் வந்து பார்த்துக்கெண்டவள்.
மாலை ஐந்து மணிக்கு வீடு வந்ததும் மூத்த பெண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து பணிக்கர் ஜோஸியர் மற்றும் செகண்டு ஒபீனியனுக்கு இன்னொரு ஜோசிரியரிடமும் ஓடி, வரும் வழியே உறையூர் வெக்காளியம்மன் கோவில், அவ்வப்போது மெமோக்ராஃபி, பாப்ஸ்மியர் என பெண்களுக்கே உள்ள பிரச்சினைகளுடன் தனது டாக்டர் கணவரை கூட தொந்திரவு செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு ஒடுவாள்.
' என்னடா ஶ்ரீதர்! இவளுக்கு ஸ்கூட்டி வேணுமாமே... பயமாயிருக்கே' என போனில் என்னிடம் கேட்பாள், சென்னையில் தனியாக தங்கிக்கொண்டு ஃபைனல் சி.ஏ. படித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது பெண் பற்றி பேசும்போது..
கிடைத்த கல்லூரி உதவி பேராசிரியர் பணியை உதறித்தள்ளிவிட்டு எம்.காம்., எம்.எட்., எம். ஃபில் படிப்புடன் ஸ்கூல் உத்தியோகத்தில் உள்ளூரிலேயே இருந்தாள்.(சீதா லட்சுமி ராமசாமி பள்ளி/கல்லூரி)
இவ்வளவு வேலைகளுக்கும் நடுவிலும் பேப்பர் திருத்த பதினைந்து நாட்கள் தஞ்சாவூர் தினமும் போய் வருவாள்..
அம்மாவுக்கு சோடியம் imbalance ஆகி மேலும் சிறுநீர் குழாய் இன்ஃபெக்‌ஷன் (UTI) வந்து உடம்பு முடியாமல் போக, தன்னுடன் வைத்துக்கொண்டு, பாத்ரூமில் மயங்கி விழுந்தவரை தனியாகவே ஹாலுக்கு இழுத்து வந்து பிறகு கணவருக்கு போன் செய்து ரொம்ப கஷ்டப்பட்டவள்....
82 வயதில் கர்ப்பப்பை புற்றுநோயால் வாடிய அம்மாவின் ஆபரேஷனுக்கு கணவரின் உதவியுடன் டாக்டர் ரவி அய்யங்கார், டாக்டர் பூங்கோதை போன்றவர்களிடம் ஓடி அடுத்த ஒரு மாதம் ரேடியேஷன் தெரபி இத்யாதிகளுக்கு தினமும் அலைந்து சிரமப்பட்டு அம்மாவை காப்பாற்றியவள்.
ரேடியேஷன் தெரபி முடிந்ததும் கொல்லுப்பேரன் பிறப்பதை பாட்டி பார்த்துவிட வேண்டுமென அம்மாவை தனியாக பஹ்ரைன் கூட்டி வந்து என் மூத்த சகோதரி மகள் பிரசவத்திற்கு நான்கு மாதங்கள் இருந்து பார்த்தவள்.
திரும்ப ஊருக்கு போய் மறுபடியும் தனியாக வலியால் அம்மா துடிக்க, சத்தம் கேட்டு யாரோ இவள் ஸ்கூலுக்கு போன் செய்து, வீட்டுக்கு ஓடி வந்து அம்மாவை அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி ஒடி, இரவு 2 மணிக்கு எங்களுக்கு போன் செய்து 'எல்லாம் வேஸ்ட்டுடா.. வயிறு, லிவரெல்லாம் பரவீடுச்சாம்' என மெதுவாக விசும்பல்...
தன்னை இவ்வளவு அருமையாக பார்த்துக்கொண்ட இவள் மீது உயிரையே வைத்திருந்த எங்கள் அம்மா, ஆஸ்பத்திரியில் இறக்கும் முன் அந்த ஒரு சில நிமிடங்கள் லேசாக புத்தி சுவாதீனமிழந்து
இவளையே கன்னா பின்னாவென திட்டியபடியே கண்ணை மூடியதை அழுதுகொண்டே பொறுமையாக ஏற்றுக்கொண்டவள்..
கோபமென்பது துளிகூட அறியாதவள். பொறுமையா பொறுமை...அவரும் அப்படியே. இரண்டு பெண்களையும் ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்யக்கூடியவள். டீவி சீரியல், சினிமா என எதுவுமே அறியாதவள்...
கடந்த ஆறேழு வருடங்களில் குடும்பத்திலேற்பட்ட நான்கு இறப்புக்களால் இவள் பட்ட கஷ்டங்கள் சொல்லிலடங்கா.
என்னை விட இரண்டே வயது மூத்த 56 வயதான இவள்( hemalatha ma) , சகோதரர்கள் எங்கள் மூவருக்கும் தாயானவள்..
இனி வாழ்க்கையில் ஒருபோதும் கஷ்டப்படாமல்
இவளை காக்க இறைவனை வேண்டி, அன்னையர் தினமான இன்று எங்கள் அன்னையாக இவளை நினைத்து போற்றுகிறேன்....

No comments:

Post a Comment