Tuesday, June 2, 2015

ஓவியர் நடனம்

கல்கி, சாவி பத்திரிக்கையென்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியர் நடனம் அவர்களின் கார்ட்டூன்கள் தான். வாராவாரம் தி.ம.கதிர், சாவி, குங்குமம், குமுதம் மற்றும் விகடன் படிக்கும் குடும்பம் எங்களுடையது. 60 களிலிருந்து படித்து வருகிறோம்.
ஸிம்ஹா, ஶ்ரீதர், கோபுலு, லதா, உமாபதி, மாயா போ
ன்ற பழம்பெரும் ஓவியர்கள் வரிசையில் இருப்பவர்...
இவரது வண்ண ஓவியங்களையோ, ம்யூரல் எனப்படும் சுவர் ஓவியங்களையோ நான் பார்த்ததே இல்லை.
கல்கியிலும் சாவியிலும் கோடுகளினால் வரையப்பட்ட இவரது கார்ட்டூன்கள் அக்காலத்தில் மிக பிரபலம். 'கடுகு'வின் நகைச்சுவை கட்டுரைகளுக்கும், ஜோக் துணுக்குகளுக்கும் இவர் வரைந்த படங்கள் ஏராளம்.
குறும்புக்கார வாண்டுகள், வயதான தாத்தாக்கள், மாமிகள் என் இவர் தனித்துவம் வாய்ந்த ஓவியங்கள் இவருடையது. மூக்கில் சரிந்திருக்கும் கண்ணாடி, காது மடல்களில் உள்ள முடி, வயதானவர்களின் தூக்கி வாரிய பாதி வழுக்கை முடி, கால்சராய் போட்ட சின்ன பசங்கள், பொடி போட்டே விடைத்துப்போன மூக்குடன் உள்ள முகங்கள், கைகளில் உள்ள மயிர்... என மிக நுனுக்கமான சமாசாரங்களையும் விடாமல் வரைந்தவர்.
கோபுலு அவர்கள் கார்ட்டூன்களில் பொதுவாக தனது காரெக்டர்களை தலை முதல் கால் முழுமையாக வரைந்திருப்பாரெனில், நடனம் அவர்கள் அப்படியல்ல.. ஓரிரண்டு கோடுகளை சுண்டியிழுத்து பாதியில் விட்டுவிட்டாலும் ஓவியம் உயிரோட்டத்துடன் ப்ரமாதமாக இருக்கும்.
உதாரணமாக:
தவழும் வேட்டி(இரண்டே கோடுகள்)...
சின்ன பையன்களின் டயர் வண்டி& குச்சி..
வெட்கப்படும் மருமகள்(நெற்றியில் சுருள்முடியுடன்)...
வெற்றுடம்பு மாப்பிள்ளை(பனியனுக்குப்பின்னால் நெஞ்சில் ரோமம்)...
ஈசி சேரில் பேப்பர் படிக்கும் தாத்தா( தலைக்குப்பின்னால் ஓரிரண்டு கோடுகளில் ஈசி சேர்)...
கருப்பு கோட்டு வக்கீல்கள், நீதிபதி...எதிரே ஓரிரண்டு கட்டங்களுக்குள் (கூண்டு) கைகட்டிய குற்றவாளி...
மடிசார் கட்டிய பாட்டியின் ஒரு தோள்பக்கம் முந்தானை வரைவதில்லாமல் மறு தோளில் பின்பக்கமிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் புடவைத்தலைப்பை ஒரே வரியில் வரைந்து அசத்துவார்...
முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பாவாக நடித்தாரென்பதும், முதன்முதலில் இவரை பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியது எழுத்தாளர் தி.ஜா. அவர்கள் என்பதும் இன்று தான் நான் தெரிந்துகொண்ட கூடுதல் தகவல்கள்.
நேற்று அமரரானார்....
முன்பொருமுறை தானே வரைந்த இவரது படத்தை இன்று கரிக்கட்டியால் வரைந்து ஆழ்ந்த இரங்கலுடன்....

No comments:

Post a Comment