Tuesday, June 2, 2015

விபத்து

"உங்க வைஃப் உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிட்ருக்காங்க.. உங்க ஃபோன் சைலன்ட் மோட்ல இருக்கு போல... அவங்க கார் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சாம்"
முன் வரிசையில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் செமினார் ஒன்றிலிருந்தபோது நண்பர்ஓடி வந்து தன் போனை நீட்டினார். முன் வரிசையில் இருக்கக்காரணம் அடுத்து நான் மேடைக்குப் போக வேண்டும். சி.ஏ. சாப்டரின் தலைவர் நண்பர் Meenakshi Sundaram Hariharan வேறு எனக்கு சைகை காட்டி தயாராக இருக்கச்சொல்லிவிட்டார். அன்றைய பேச்சாளரை மேடையில் நான் கௌரவிக்க வேண்டும்.
மனைவி போனில் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாரென்றால் நிச்சயம் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என அர்த்தம.. ஒரு வேளை பாதி சுய நினைவில்....? ஐயோ..சுற்றியிருந்தவர்கள் பேச்சாளருக்கு கரவொலியெழுப்பிக்கொண்டிருக்க, தலையைக்குனிந்து மனைவிக்கு போன் செய்து கேட்டேன் 'are you injured?'.... அவள் ' not at all... but I'm on a highway with cops around me... actually what happened....' போனை அப்படியே கட் செய்து தலை நிமிரும்போது நிகழ்ச்சியை நடத்தும் Maheshkumar Narayan என் பெயரைச்சொல்லி அழைத்தார். ஓடிப்போய் மைக்கை பிடித்து ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சாளரை கௌரவித்து விட்டு, கரவொலி சப்தம் பின்னால் கேட்க, அநிச்சையாக லிஃப்ட்டை நோக்கி வெளியே ஓடினேன். மறுபடியும் மனைவிக்கு போன்.. வண்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டே போனில் விபரங்கள் தெரிந்துகொண்டேன். ஒன்றும் பயமில்லை, கார் தான் ஒருவழியாகிவிட்டதென அவள் சொன்னாலும் அங்கு போய்ச்சேரும் வரை கொஞ்சம் பயம் தான்.
சவுதி போகும் நெடுஞ்சாலையை பிடித்து பதட்டமில்லாமல் ' ஓம் பூர்புவஸ்வஹ... தத் சவிதுர் வரேன்யம்....' காயத்ரி மந்திரத்தை முனுமுனுத்துக்கொண்டு நெடுஞ்சாலையின் இடது ஓர பிரிவுக்கு (fast lane) மாறி, டிப்பரை அழுத்தவும் முன்னாலே போய்க்கொண்டிருந்த வண்டிகள் சடாரென ஒதுங்கி வழி விட காலை 120க்கு அழுத்தினேன்.
அடுத்த பத்தே நிமிடங்கள்... தூரத்தில் போலிஸ் வண்டிகளின் மின்மினுக்கும் விளக்குகளுக்கு நடுவே மனைவியின் கார்... எமெர்ஜென்ஸி விளக்கை போட்டு வண்டியை சற்றுத்தள்ளி நிறுத்தி காரை நெருங்க, உஷா டிரைவர் இருக்கையில் வழக்கம்போல் குளுகுளு கண்ணாடியுடன்...பக்கத்தில் அவளது நண்பி.. அவருக்கு இன்னும்பெரிய குளுகுளு கண்ணாடி.. காயத்ரி மந்திரம் கப்பென நின்றது. அப்பாடா...யாருக்கும் அடியில்லை. காரின் முன்புறம் ஒரு பாதி உள்ளுக்குள் போய்விட்டிருந்தது. எதிரே இடி வாங்கிய மற்றொரு கார்.. அதன் பின்புறம்...சுத்தம்... மனோபாலா நினைவுக்கு வந்தார்.
அடுத்து விளக்குகள் மின்மினுக்க படகு போலிருந்த டாட்ஜ் சாலஞ்ஜரை நெருங்கினேன். உள்ளே இரண்டு போலீஸ்காரர்கள்..கண்ணாடியை இறக்கி எனது 'அஸ்ஸலாம் அலைக்கும்'க்கு பணிவாக 'வாலேக்கும் அசலாம்' சொல்லி கை கொடுத்தார்கள். 'எப்பிடி இருக்கீங்க?.. பாவம் நீங்க வர நேரமாகிவிட்டதோ!' என பதவிசாக விசாரித்தார்கள். மனைவி ஓட்டிய வண்டி என் பெயரில். அவர் எனது விசாவில் இருப்பதால் உள்ளூர்க்கார ஸ்பான்ஸர் ( அதாவது எங்கள் மனிதவள மேலாளர் ) அவ்விடத்திற்கு வந்து போலீஸ் ரிப்போர்ட் மற்றும் சில காகிதங்களில் கையொப்பமிடவேண்டுமாம். ஸ்பான்ஸர் வர முடியவில்லையென்றால் அவர் வரும் வரை மனைவி போலீஸ் காவலிலிருக்க வேண்டுமாம்.
நான் வரும்போதே ம.வ. மேலாளருக்கு தகவல் கொடுத்திருந்ததால் அவரும் உடனே வந்துவிட்டார். இதற்குள் மனோபாலா கார்க்காரர் என்னை நோக்கி வந்தார். தலையில் எம்பிராய்டரி துணித்தொப்பி, தேவர் மகன் நாசர் மீசை, அரபிகள் அணியும் வெள்ளை அங்கி.. பாகிஸ்தானியர் என சத்தியமாக முகம் சொன்னது. ' ப்ரதர்... பயப்படாதீங்க... உஷாவுக்கு அடி ஒன்றுமில்லை' என்றார். உஷாவா? ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன்.. அவரது வலது கை என் கைக்குள்.. ' உஷா மேல தப்பில்லை.. பச்சை விளக்கு இருக்குறப்பத்தான் அவங்க சிக்னலை நெருக்கினாங்க... ஆனா.. வண்டி சிக்னலை தாண்டும்போது மஞ்சள் வந்துருச்சு.. அவங்க தாண்டிப்போயிருக்கலாம். ஆனா ப்ரேக் போட்டு பாதியில் நிறுத்த, அதற்குள் சிவப்பு விளக்கு வந்து, பக்கவாட்டிலிருந்து திரும்பிய என் வண்டிய மோதிட்டாங்க. டிராஃபிக் விதிப்படி அவங்க மேல தப்பு தான்' என பொறுமையாக விளக்கமளித்தார்.
வண்டிகள் மோதிக்கொண்டவுடன் பாகிஸ்தானிய அன்பர் உஷாவிடம் ஓடி வந்து, ' முதலில் உங்களிருவருக்கும் அடி ஏதுமில்லையே,,, குடிக்க தண்ணீர் வேண்டுமா.. என பரிவாக விசாரித்தாராம். பிறகு வந்து சேர்ந்த போலீஸ்காரர்களும் ' உங்களுக்கு அடியேதும் பட்டிருந்தால் ஆம்புலன்ஸை கூப்பிடவா?' என விசாரித்து, உங்கள் கணவர் வரும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்... அதுவரை வண்டியை அந்தப் பக்கம் இருக்கும் எமர்ஜென்ஸி பார்க்கான மஞ்சள் பகுதியில் நிறுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம்.
போலீஸ் காட்டிய காகிதங்களில் சில கையொப்பங்கள்...முடிந்தவுடன், நாளை மறுநாள் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் வந்து அபராதம் கட்டி விட்டுப்போகச்சொன்னார்கள். சென்ற மாதம் முதல் போக்குவரத்து விதிமுறைகளுக்கான கெடுபிடிகள் அதிகரித்து அபராத்தொகையையும் கூட்டிவிட்டார்கள். சுமார் 200 தினார்கள் (ரூ.32 ஆயிரம்) கொண்டு வரவேண்டுமாம். அபராதம் எவ்வளவு என்பது பிறகு தான் தெரியுமாம். உங்க மனைவி வண்டியை நடுவில் நிறுத்தியதால் சிவப்பு விளக்கை கடந்த படம் காமிராவில் பதிவாகியுள்ளது என எங்களுக்கு விளக்கினார்கள். வண்டியை நிறுத்தாமல் போயிருந்தால் சிவப்பு விளக்கு வருமுன் கடந்திருக்கலாம். ஆனால் அந்த ஓரிரு நொடிகளில் எதுவும் நடக்கலாம். வேகமாக வரும் மற்றொரு வண்டி மீது மோதியிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அதற்கு வண்டியை நிறுத்தியதே மேல் எனச்சொல்லி, மறுபடியும் கை கொடுத்துவிட்டு, மற்றொரு
விபத்துப்பகுதிக்கு சைரன் ஒலியெழுப்பியவன்னம் கிளம்பிப்போனார்கள்.
அப்பளம் மாதிரி நொறுங்கிய தன் வண்டியைப்பற்றிக்கவலைப்படாமல் தன் வண்டி மீது மோதிய பெண்களை அந்த நேரத்திலும் கவனித்து, விசாரித்து நான் வரும்வரை பொறுமையுடன் காத்திருந்த பாகிஸ்தானிய அன்பருக்கு என் நன்றியைத்தெரிவித்தேன். 'அர்ரே... விடுங்க ஜனாப்...இந்த காடி, பைஸா, தௌலத்..இதெல்லாம் மறுபடியும் கரீத் சக்தா ஹெ (சம்பாரிச்சுக்கலாம்)... உயிர் திரும்ப கிடைக்குமா.. எல்லாம் அவர் கருணை! '... ஆகாசத்தை நோக்கி கையை தூக்கிக்காட்டி, உருதுவில் சொல்லி தன் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு, தன் காரை இழுத்துச்செல்லும் டோவர் பின்னால் நண்பரின் வண்டியில் போய்விட்டார். சர்ரென்று வந்து பக்கத்தில் வண்டியை நிறுத்தி மற்றொரு பஹ்ரைனி அன்பர் தண்ணீர் போத்தலுடன் ஓடி வந்து ' யாருக்கும் அடிகிடி இல்லையே' என விசாரித்துவிட்டுப்போனார்.
நான் வந்து அடுத்த பத்தே நிமிடங்களில் மேலே சொன்னதெல்லாம் நடந்து முடிய, உஷா தன் தோழியுடன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார். அடுத்த பதினைந்தே நிமிடங்களில் நான் மீண்டும் எங்கள் சி.ஏ. செமினாருக்குத்திரும்பிய போது, நிகழ்ச்சி முடிந்திருந்து மதிய உணவில் கலந்துகொண்டேன்.
கிரிக்கட் மேட்சில் பாகிஸ்தான் தோற்றுவிட்டால் டீவியை போட்டு அவர்கள் உடைப்பதை ஊடகங்கள் தான் பெரிதாகக்காட்டுகின்றன. ஆனால் இங்குள்ள பாகிஸ்தானியர்கள் அதிகம் இந்திய-பாக் அரசியல் பேசுவதில்லை. நம்மிடம் சகோதரர்கள் போல் பழகுகிறார்கள்.அரபு நாடுகளில் உள்நாட்டுக்கலவரங்கள் நடக்கும்போது நமக்கு ஆபத்து என பயந்தாலும், உண்மையில் அவர்களது கோபம் இந்தியர்கள் மீதல்ல. வளைகுடா நாடுகளிலேயே பஹ்ரைனிகள் தான் மிகவும் மரியாதை தெரிந்தவர்களாம். அந்த பாகிஸ்தானியரும் பஹ்ரைனி போலீஸ்காரர்களும் பாராட்டுக்குறியவர்கள்.
அது சரி.. நான் கௌரவித்த அந்த நபர் யார்? நான் வரைந்த அவரது உருவப் படத்தை என்னிடமிருந்து மேடையில் பெற்றுக்கொண்ட அவர், உலகப்புகழ் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் நிறுவனர். உலகின் தலைசிறந்த 12 தொழிலதிபர்களில் ஒருவர், இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்... அமெரிக்காவையே வியந்து பார்க்க வைத்தவர்..அவரது ஓவியம் நாளை மறுநாள்..

No comments:

Post a Comment