Monday, February 21, 2022

மஹாலய பித்ரு ஸ்ரார்த்தம்

 ‘ஶ்ரீதரா! நாளைக்கி தேதி 6, மஹாலயா அமாவாசை.. மறந்துடாத!’ என கணபதி சென்னையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப, பெங்களூரில் பித்ருக்களுக்கு எங்கே தர்ப்பணம் செய்வது என விஜாரிக்க ஆரம்பித்தேன்.

சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம். கருட புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தில் மகாளய பட்சத்தின் மகாத்மியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நம் மூதாதையர் நம்மை ஆசிர்வதிக்கவே பிதுர் லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வருவர் என்று நம்பப்படுகிறது. அச்சமயம் அவர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்து வணங்கி மரியாதை செலுத்தினால் அவர்களது ஆசீர்வாதம் கிட்டுவதோடு தோஷங்கள், தடைகள், நோய்கள் நீங்கி நன்மைகள் நடக்குமாம்.
சி.வி.ராமன் நகரில் எங்கள் கட்டிடத்திற்கு எதிரே சிவன் கோவில்.. பிரம்மாண்டமான சிவன் சிலை உண்டு. அங்கே குருக்கள் ஒருவரிடம் கேட்டேன். சுத்தமான சுந்தரத்தெலுங்கில் மாட்லாடின அவர், பக்கத்தில் HAL மார்க்கெட் ரகவேந்திரா மடம் மற்றும் ஹலசூர் ஏரி அருகே மஹா கணபதி ஆலயத்திலும் செய்கிறார்கள் என தகவல் அளிக்க, காலை 8 மணிக்கு ஹலசூர் கிளம்பினேன். துணைக்கு மனைவி உஷாராணி. ஒரே மழை வேறு.
பெங்களூர் பற்றி கொஞ்சம். பெங்களூர் ரோடுகள் முழுக்க பள்ளங்கள். தவிர, ரோட்டில் வண்டி ஓட்டும்போது நொடிக்கொரு தரம் பாம்.. பாம்.. கீ.. கீ… என ஹார்ன் அடிக்கனும் என காலையிலேயே சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள் போலும். பெங்களூர் வாசிகள் சதா சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எந்த சாகர் ஹோட்டலில் நுழைந்தாலும் பொடி தூவிய மசால் தோசை, உ.வடை, சௌசௌ பாத் & காரா பாத் (உப்புமா கேசரி), காபி என வட்ட மேசையை சுற்றி நின்றுகொண்டே மொஸ்க்குகிறார்கள். திண்டி இல்லாத நேரத்தில் பாம்.. பாம் என ஹார்ன் அடித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பறந்தால் அவன் பெங்களூர்க்காரன்.
மாறி மாறி காங்கிரசும் பாஜகவும் ஆட்சி செய்தும் பெங்களூரில் பாலங்கள் பற்றாக்குறை, சீரான சாலைகள் இல்லை, சரியான உள்கட்டமைக்கப்பட்ட நகரமாக இல்லாமல் பழைய ஏரிகளை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டிடங்கள். மார்வாடி, பஞ்சாபி, பிகாரி என எங்கு பார்த்தாலும் லெக்கீஸ் மற்றும் 3/4 பேண்ட் அணிந்த வட இந்தியர்கள். கூடவே சங்கிலியுடன் நாய் குட்டிகள். பாம்பே லஸ்ஸி, குல்ஃபி, தெருவுக்கு பத்து பேக்கரிகள், ஹாட் சிப்ஸ் கடைகள், கம்பியில் சுற்றும் செக்கச்செவேல் என சிக்கன் கிரில்லர்கள். பானி பூரி விற்றால் அடுத்த சில வருடங்களில் ஹோரமாவு பகுதியில் நிலம் வாங்கி விடலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நம் இஷ்டத்திற்கு எந்த மொழி பேசினாலும் அதே மொழியில் பதிலளிக்கிறார்கள் பெங்களூர்வாசிகள். phone மாடி, type மாடி, check மாடி, enquire மாடி என சுலபமாக நாம் கன்னடம் பேசலாம், மாடியை சேர்த்துக்கொண்டு.
ஹலசூர் ஏரி அருகே கார் நிறுத்தத்தில் காரை போட்டு விட்டு சாலையை கடந்து லேக் வ்யூ மஹாகணபதி கோயில் வந்தடைந்தோம். நல்ல கூட்டம். அரிசி மாவு, எள், புஷ்பம், பலம், மஞ்சள் குங்குமம் என 180 ரூபாய்க்கு ஒரு கூடை வாங்கி, கோவிலருகே மேடையில் உட்கார்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரிசி மாவில் நீர் விட்டு பிசைந்து எள் தெளித்து மஞ்சள் குங்குமம் தூவிய பிண்டங்களை வாழையிலையில் வைத்து வரிசையில் சேர்ந்துகொண்டோம். ‘மொத்தம் எத்தினி உருண்டைங்கோ என யாரோ கன்னட தமிழில் கேட்க, மற்றவர் மூனு பெருசு, மூனு சின்னது என விளக்க ‘ஆமாவா?’ என ஏக காலத்தில் மூன்று பேர் கத்தி அரிசி மாவை பிசைய ஆரம்பித்தார்கள். பிஸ்லேரி பாட்டிலில் தண்ணீர் பிடித்து ஒருவருக்கொருவர் தண்ணீர் பாட்டிலை பகிர்ந்து கொண்டு பிண்டங்கள் செய்ய, யாரோ ஒருவர் படாரென தண்ணீரை மாவில் கொட்டி தோசைக்கு மாவு கரைத்த மாதிரி… அசடு வழிந்தார்.
மொத்தம் 4 அந்தணர்கள் பெரிய மேடைகளில் அமர்ந்து மந்திரங்கள் சொல்ல, வரிசையில் வந்தவர்கள் ஒவ்வொருவராக எதிரே அவர் முன் உட்கார்ந்து சுமார் பத்து நிமிடங்களில் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தி தம் கடமை முடித்து வெளியேறினார்கள். அடுத்து எங்களது முறை. எங்களுக்கு முன்னே இருந்த ஒருவர் மந்திரத்தை கவனிக்காமல் வரிசையில் உள்ள மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும், தன் கடிகாரத்தை பார்த்துக்கொண்டும், வாத்தியார் ‘இங்க கவனிங்க.. கோத்ரம் சொல்லுங்கோ.. அப்பா இருக்காரா?’ என கேட்க, மேற்படி ஆசாமி ‘ம்..? என்னது?’ என விட்டேத்தியாக கேட்க, சூரீர் என வந்ததே கோபம் வாத்தியாருக்கு. ‘ நீங்கள்ளாம் எதுக்கு பித்ரு கார்யம் பண்ண வரனும்? பவித்ரத்த அந்த விரல்ல போடச்சொன்னா சுண்டு விரல்ல மாட்டி, பணம் கட்டுன ரசீதையும் பிண்டத்துக்குள்ள வச்சி உருட்டி, தாத்தா பேரே தெரீல..எங்கர்ந்து கொள்ளு பாட்டன் பேரு தெரீயப்போவுது’ என்றவுடன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவரசமாக தாத்தா, பாட்டி பேரெல்லாம் சொல்லி பார்த்துக்கொண்டேன்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’ என கணபதியை வணங்கிய பின் ஆசமனம் செய்து பவித்ரம் தரித்து ‘சுக்லாம்பரதம் விஷ்ணும்….’ என கடகடவென மந்திரங்கள் சொல்லி, ‘ஏ ஷாம் ந மாதா.. ந பிதா.. ந ப்ராதா.. ந சபாந்தவஹா’ என முன்னோர்களை நினைத்து கூடவே மந்திரம் சொல்லச்சொல்லி, பிண்டங்களில் ஜலம் தெளித்து, எள் இரைத்து முடித்து வைத்தார்.
கோவிலுக்கு வெளியே வந்து எதிரே ஏரியில் பிண்டங்களை கரைத்தோம். முனிசிபாலடி சிப்பந்திகள் நின்றுகொண்டு பிண்டங்களை மட்டும் நீரில் போடச்சொல்லி, மற்ற வாழையிலை, புஷ்பங்களை தனியாக ஒரு தொட்டியில் போடச்சொன்னர்கள்.
திருப்திகரமாக திதி தர்ப்பணம் முடிந்து எதிரே ஷாந்தி சாகரில் தோசை காபி வெட்டி விட்டு கன்னட ‘ராகி முத்தே’ (நம்மூர் களி) செய்யும் குக்கர் வங்க இந்திரா நகர் பக்கம் வண்டியை செலுத்தினோம்.
வருடந்தோறும் முன்னோர்களை மறவாது இக்கடமை ஆற்ற, வழிகாட்டலுடன் என்னை அறிவுறுத்தும் பால்ய நண்பன் கணபதிக்கு கோடானு கோடி நன்றி..

No comments:

Post a Comment