Monday, February 21, 2022

நடு வகிடு.. ரங்கு.. செம்பூர்

காலை 7 மணிக்கு விழித்து 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம். ஜன்னலுக்கு வெளியே மரங்கள், பறவைகள் சத்தம், இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. அப்ப 27, 28 வயதுதான் இருக்கும். மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம். அலுவலகத்தில் தினமும் நடக்கும் சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம் அது. இதெல்லாம் இயந்திர வாழ்க்கை பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? பம்பாயில் இயந்திர வாழ்க்கை என்பதெல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் நினைத்துக்கொள்வது தான்.

நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda நகரில் ஒரு தனி ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். எதிரே செம்பூர் முருகன் கோவில். பக்கத்தில் அங்கங்கே பால்கனியில் சிகரெட்டுடன் பாலக்காட்டு மாமாக்கள். எங்கள் வீட்டில் நண்பர்கள் பட்டாளம் எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன் 'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் காபியுடன் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.
யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். அவனுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம். எனக்கும் ஶ்ரீரங்கத்துக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் அங்கே குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ரங்கு வீட்டில் எனக்கு தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் நுனுக்கி நுனுக்கி டைப் செய்து அனுப்புவதிலிருந்து அவரின் சிக்கனம் தெரியும். உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பழங்கால G.ராமநாதன், SM சுப்பையா நாயுடு,KV மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர் இசையில் எனக்கு மிகுந்த நாட்டம். நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிப்பாரு' .. 'ஒரு மைனா மைனா' (உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே 'டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தக்கனையான கருடாழ்வார் நாசி. படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு.
வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், விதவிதமான காலணிகளுக்கும் செலவழிப்பவன் நான். தினத்திக்கும் நானே இஸ்திரி போட்டு, செர்ரி ப்ளாசம் ஷூ பாலிஷ் போட்டு ஹிந்தி நடிகர்கள் நீலம் கோட்டாரி மற்றும் கோவிந்தாவை ரசிப்பவன் நான். மிடுக்காக உடை உடுத்தும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பேக்காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன திருச்சிக்காரனான எனக்கு திருச்சியிலேயே ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம். சொல்லித்தான் வைப்பமே!).
ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி, இடது வகிடை மாற்றி நடு வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'இளம் நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் தன் நடுவகிடை பார்த்து தாங்கொனா மகிழ்ச்சியுடன் புளகாங்கிதமடைந்தான்.
அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா கேம்பிரிட்ஜ் மற்றும் பாந்திரா லிங்கிங் ரோடு பகுதிகளில் ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,லீ ஜீன்ஸ் பாண்ட், கொவாடிஸ் என ஒரே ஷாப்பிங் spree தான். சிறிய சீப்பை பாண்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் எடுத்து மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான். அடுத்த சில நாட்களில் ரங்கு நெற்றியில் கேசம் புரள நடு வகிட்டுடன் ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான்.
அவ்வளவுதான்.. மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்து பையன் இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி

சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களையும் T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். எல்லா பெண்களும் தங்களையே பார்ப்பதாக ஒரு நினைப்பை அவர்களுக்குள் வெற்றிகரமாக விதைத்தேன். தலைக்கு எண்ணெய் வைப்பது? ம்ஹூம்.. ப்டாது.. அது பெருங்குற்றம். பாண்ட்டில் சீப்பு இல்லையென்றால் அது தெய்வ குத்தம். நொடிக்கொருதரம் தலையை சிலுப்பி சீப்பால் வாரனும். 'டேய் நாமளா இது! என எல்லோரும் சிலாகித்தார்கள். காதல் வருகிறதோ இல்லையோ காதல் நமக்கு வரனும் என்கிற ஏக்கம் வரனும் என தத்துவம் பேசி செம்பூர் நகர வீதியில் கட்டிங் சாய் குடித்து வெட்டியாக உலாவினோம். நட்ராஜ் தியேட்டரில் 'maine pyar kiya' படத்தில் பாக்யஸ்ரீ ஒரு சீனில் சல்மான் கானை நினைத்துக்கொண்டு தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல சிரித்ததை நண்பன் ரங்கு ரசிக்க,மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே தியேட்டரில் ஆஜர். வாழ்கை இப்படியே
இனிமையாக
போனது..
நான் CA. அவன் ACS கம்பெனி செக்ரட்டரி. பங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் பாப் கட்டுடன் கீச்சு கீச்சென நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து சுவைத்து 'so pungent yaar!' என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat தான். 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்கா போய் நம்மள படுத்தறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்: "அதுக்கு தாண்டா நாம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?'
சுனிதா ராவத் என்றொரு பெண். (அழகான பெயர்களுடன் சேர்ந்து சகிக்காத குடும்ப பெயர்கள் எதற்கு! ராவத், மித்தல், தொத்தல் என..) குட்டியூன்டாக வடிவானவளாக இருப்பாள். குட்டையாக, நல்ல பூசின மேனியுடன் ஊத்துக்குளி வெண்ணெயை நினைவுக்கு கொண்டு வருவதே வாடிக்கை அவளுக்கு. நொடிக்கொரு முறை தன் அதரங்களை ஈரப்படுத்தி சிலிர்ப்பூட்டுவாள் கிராதகி. நமக்கு தான் பாழும் மனசு! அவள் என்னிடம் வந்து பேசினால் தூரத்தில் தன் க்யூபிக்கிளில் இருந்து தலையை தூக்கி பார்ப்பவன் ரங்கு. டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் நளினமாக நடந்து நமக்கு மிக மிக அருகே வந்து விகல்பமின்றி நம் கண்களை நேரே பார்த்து 'where is underwriting file ? என்று அவள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே அவனுக்கு மதியம் மாவா ஐஸ்கிரீம் வாங்கித்தருவேன்.
ஆபீசுக்கு போகும்போதும் வாசனை திரவியங்கள் பூசி, branded சட்டை, checkered பாண்ட், சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட், மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி, மறக்காமல் நடு வகிடு என ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்குவை இப்படி நான் மாற்றியது ரொம்ப சந்தோஷம். ஸ்ரீரங்கம் போனால் தட்டில் சீடை காபியுடன் நல்ல வரவேற்பு.
அதுசரி .. இதெல்லாம் செய்து ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். அதான் இல்லை.... ஆனால் பம்பாயிலேயே ஆச்சாரமான ஒரு அய்யர் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரன் Sridharan Rajaraman உம் என் நண்பர் குழாம் தான். நம்ம ரங்குவுக்கு தான் பயமே போய்டுச்சே! தைரியமாக போய் பேசி மணம் முடித்தான். இப்ப இரண்டு பெண்கள். பாம்பேயில் மிகப்பெரிய MNC யில் உயர் பதவியில் இருக்கிறான்.
நான் பஹ்ரைன் வந்த பின் ரங்குவுடன் சில வருடங்கள் தொடர்பு இல்லையெனினும், பிறகு பம்பாய் சென்றபோது அவனை பிடித்து விட்டேன். அதே நடு வகிடு. என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான், பல வருடங்களுக்கு முன்பு அவன் சிகையழகை நான் மாற்றி நடு வகிடு எடுக்க வைத்ததை நினைத்து. சென்ற வாரம் கூட வெகுநேரம் பம்பாய் நாட்களைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்தோம். அதே இளமை...அதே கடும் உழைப்பு.. Executive VP & கம்பெனி செக்ரடரி. நாரிமன் பாய்ன்ட் பகுதியில் கடல் காட்சியுடன் அலுவலகம். பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூத்த அதிகாரிகளுக்கு நிதி சார்ந்த வகுப்புகள் எடுக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ரங்குவின் கம்பெனி லா கட்டுரைகள் என பிரபலம்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடு வகிடு எடுத்து தலை சீவினா வாழ்க்கையில் இவ்வளவு உயர்வோமா?

No comments:

Post a Comment