Monday, February 21, 2022

 1981. ஜிலுஜிலுவென காற்றுடன் மரங்களடர்ந்த திருச்சி பொன்மலை ரயில்வே காலனி. இரவு உணவு முடித்து நிறைய குடும்பங்கள் வீட்டுக்கு வெளியே ஈசி சேரில். நானும் கணபதியும் அவனது வீட்டு மூங்கில் தட்டி போட்ட திண்ணையில் உட்கார்ந்து கனமான அக்கவுண்ட்ஸ் புத்தகங்களுடன் பேசிக் கொண்டும் நடுநடுவே படித்துக் கொண்டிருப்போம். சுமார் 11 மணி வாக்கில் ‘அம்பீ!’ என அழைத்த படி அவனது அம்மா இரண்டு டம்ளர்களில் போர்ன்விட்டா ஆற்றிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். அம்பீ என்பது நம்ம கணபதி தான். இந்த தடவையாவது சிஏ பரீட்சைல பாஸ் முடிச்சிட்டீங்கன்னா நல்லா இருக்கும். எவ்ளோ படிச்சாலும் அந்த சீஏ பரிட்சைல மட்டும் ஏன் மார்க் போட மனசு வரமாட்டேங்குது அவங்களுக்கு என காலி டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே போவார்கள்.

அப்பாவிடம் கணபதிக்கு எப்போதுமே பயம் கலந்த மரியாதை. சுருக்கமாக ஓரிரு வார்த்தை மட்டும் அவரிடம் பேசுவான். அம்மாவிடம் தான் எல்லோரும் உரிமையாக பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் இருப்பார்கள். அப்பா கண்டிப்பானவர் என்பதால் அம்மாவிடமிருந்து நிறைய சலுகைகள் உண்டு.
பெரியவன் அண்ணா ரமணி RECயில் BE முடித்து BHELல் வேலை, மன்னி குழந்தைகளுடனும் கடைசிஅக்கா வாணியும் இருக்கும் அந்த வீட்டில் மூத்த பெண்கள் 3 பேருக்கு திருமணமாகி பம்பாய், சென்னை என செட்டிலாகி விட, அப்பாவும் ரிடையர் ஆனார்.
‘அம்பீ! அந்த நாடார் கடைக்கி செத்த போய்ட்டு வரியா’ என அம்மா கேட்க, பெயர் தெரியாத தன் ரோஸ் கலர் சைக்கிள் ஸ்டாண்டை படீரென உதைத்து கிளம்புவான் அம்பி. அந்த சமயத்தில் நான் எதிரே இருந்தால் வாடா என என்னையும் இழுத்துக்கொண்டு விசுக் விசுக் என பெடலை அழுத்துவான். ஆர்மரி கேட் எதிரே டீ குடித்துவிட்டு சாவகாசமாக கொஞ்சம் பேசிவிட்டு பொன்மலை அடிவாரத்திலிருக்கும் நாடார் கடைக்கு போவோம்.
வீட்டு நிர்வாகம் எல்லாம் அம்மாவினுடையது. அம்பி.. அம்பி.. என ஒரு நாளைக்கு நூறு தடவை கூப்பிடுவது வழக்கம். வாணிக்கு விமரிசையாக திருமணம் முடித்து அவர்களும் சென்னை பக்கம் போய்விட, கணபதியும் சீஏ பாஸ் செய்து பம்பாய் பக்கம் வந்து விட்டான். கூடவே நானும். அடுத்த சில வருடங்களில் (1989)அவனுக்கு பஹ்ரைனில் வேலை கிடைத்து இந்தப்பக்கம் வந்து விட, வழக்கம் போல அடுத்த சில வருடங்களில் நானும்.
1991ல் கணபதியின் அப்பா இறந்துவிட அறுபதே வயதில் தனித்து விடப்பட்ட அம்மா. ராணிப்பேட்டையில் பெரிய பையன் ரமணியுடனும், மற்றும் பெங்களூர், சென்னை என மகள்களுடனும் வசிக்கத்தொடங்கினார். 2001இல் குழந்தைகளின் மேற்படிப்பு (IIT coaching), அம்மாவின் தனிமை போன்றவைகளை மனதில் கொண்டு பஹ்ரைனை விட்டு கிளம்பினான் கணபதி. பஹ்ரைனை மட்டுமல்ல, கொழிக்கும் சம்பளத்துடனான வேலை, நிஸ்ஸான் கார், கம்பெனி ஃப்ளாட், வேலையாட்கள், என்னைப்போன்ற நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குறிக்கோளுடன் மயிலாப்பூரில் செட்டில் ஆனான் அம்பி. அம்மாவிற்கும் ஒரே சந்தோஷம். சென்னை, ராணிப்பேட்டை என மாறி மாறி இருக்க ஆரம்பித்தார்கள்.
பேரன் பேத்திகள் ஒவ்வொருவராக வளர்ந்து அவர்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பாட்டியின் ஆசீர்வாதத்தோடு நடந்தேறின. ஆயிற்று அடுத்த அடுத்த இருபது வருடங்கள். வாழ்க்கையில் பெரியதாக ஆசைகள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் நலனுக்காகவே தன்னை முழுவதும் அற்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலிருக்கும் எந்தெந்த பேரன் பேத்தியிடம் என்ன விஷயங்கள் பேசினால் சுவாரசியமாக இருக்கும் போன்ற சூட்சுமங்களை தெரிந்து கொண்டு அவர்களுடன் மணிக்கணக்காக சம்பாஷனை செய்வார்.
அவ்வப்போது தனக்கு பிடித்த சில டிவி நிகழ்ச்சிகள் பார்க்கும் போது மட்டும் ஐபிஎல் மேட்ச் பார்க்கும் பேரனிடம் செல்லமாக சண்டை. ஐ.ஐ.டி விடுமுறையில் பாட்டி.. பாட்டி என பின்னால் சுற்றும் பேரன் விக்னேஷ் (கணபதியின் மூத்த பையன்) Vignesh Ganapathi Subramanian அமெரிக்காவில் டாக்டரேட் படித்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அவனது திருமணத்தையும் முன்னின்று நடந்தி மகிழ்ந்தார். கணபதியின் மனைவி துர்கா இவரை தன் அம்மாவைப்போல பார்த்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக எனக்கு அவர்களது குடும்பத்துடன் பழக்கம் என்பதால் என்னிடம் தனி பாசம் உண்டு. உஷாவிடம் அவ்வப்போது குழந்தைகள் நலம் விசாரிப்பார். சென்னை செல்லும் போதெல்லாம் நான் அவருடன் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். சென்ற மாதம் அவரது பிறந்த நாளன்று இரவு 9 மணிக்கு பஹ்ரைனிலிருந்து போன் செய்து அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
‘ஆச்சு.. அம்மா 90 டச் பண்ணிட்டாங்க. இப்பவும் ஆக்டிவா இருக்காங்க. இப்பிடியே இருக்கனும்!’ என கணபதி சொல்லும்போதே ‘அவர் ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ நானும் உஷாவும் வேண்டிக் கொண்டோம். எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டும், நன்றாக பேசிக் கொண்டும், எல்லா உணவு வகைகளையும் மிக குறைந்த அளவோடு உண்டும், கண்பார்வை மங்காமல், ஆரோக்கியமான கை கால்களுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக மட்டும் கொஞ்சம் அசதியாக இருப்பதால் கடைசி பெண் வாணி துணைக்கு இருக்க வேண்டியதாயிற்று.
அப்படியும் முந்தாநாள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் மூச்சு விட சற்று சிரமம் இருப்பதாக சொல்லி, கணபதியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் அப்படியே சாய்ந்து விட்டார்.
நாள் முழுவதும் உட்கார்ந்து ராமஜெயம் எழுதி எழுதி முடிக்கப்பட்டு அறையில் கிடக்கும் நோட்டு புத்தகங்களும், தினமும் போடும் தினசரியின் குறுக்கெழுத்து (crossword) பக்கங்களும் அம்மா இன்னும் நம்முடனே இருப்பதை காட்டுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பேரன் பேத்திகளின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் பாட்டியிடம் தங்களுக்கிருந்த அன்பின் ஆழத்தை காட்டும்..
‘She spoke like one of us! Our moms seemed outdated!’
‘The story teller, the diplomat, the best chef, the defender, the coolest, the patient and adorable Paati, we did not expect to lose you!’
‘She was so cute with her wiggly belly and arms. She was peaceful when she left just as how she lived!’
‘She is such a spirited person who had knowledge about the current trend more than our parents’
‘She has touched many of our lives and we will miss her’
கடந்த வருடம் விக்னேஷின் தம்பி ஹேரம்ப குமாருடன்

பாட்டியின் சம்பாஷணை:
‘நீ சி.ஏ பாஸ் பண்ணினதுக்கப்பறம் தான் நான் சாகனும்பா’
‘அப்பன்னா இப்போதைக்கி நீ சாக மாட்டே பாட்டி! கவலைப்படாத’
சீஏ பரிட்சை எவ்வளவு கஷ்டமானது என்பதை அப்போது நகைச்சுவையுடன் சொன்ன ஹேரம்பா கடந்த ஜனவரி மாதம் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆனான். பாட்டியும் தான் சொன்னபடியே...

No comments:

Post a Comment