Monday, February 21, 2022

கேப்டன் நீரஜ் ராஜகோபால்

 பஹ்ரைன் கல்ஃப் ஏர் விமானத்தில் இந்தியாவோ அல்லது ஐரோப்பா பகுதி பிரயாணம் செய்ய ஏறும்போது முதலில் நான் தேடுவது காக்பிட்டில் அன்றைய விமான ஓட்டி என் நண்பர்


கேப்டன்.நீராஜ் இருக்கிறாரா என.

மாதமொரு முறை சந்திக்கும்போது கூட அந்த மாதம் அவர் உலகின் எந்த பகுதி பறப்பார் என டூட்டி அட்டவனை பார்த்து சொல்வார். ச்சே! நாம் பெங்களூரோ துபாயோ பறக்கும்போது அவர் நம் பைலட்டாக வரக்கூடாதா என விரும்புவேன். நண்பர் என்பதால் அந்த காக்பிட் உள்ளே நம்மை கூட்டிச்சென்று காண்பிப்பார் என ஒரு குழந்தைத்தனமான ஆசை எனக்கு எப்போதும் உண்டு.
அரைக்கை வெள்ளை சட்டையுடன் கழுத்தில் டை, ஸ்டைலாக பைலட் தொப்பி, குறுந்தாடி, பைலட் பிரேம்நாத் போல தொப்பை இல்லாத ஆஜானுபாகு உடல் வாகு என அழகாக இருப்பார் நீரஜ். மற்ற நாட்களில் வீட்டில் அவரை பார்க்கும்போது ஜீன்ஸ் மற்றும் ஜிப்பாவில் சாந்தமா இருக்கும் இவரா அவ்வளவு பெரிய ராட்சத விமானத்தை ரன்வேயிலிருந்து சீராக மேலே எடுப்பதும், லாகவமாக ஓட்டி விமானத்தை கீழே இறக்குபவரா என வியப்பேன்.
விடியற்காலை கிளம்பி நாலைந்து மணி நேரம் துருக்கி நோக்கி பறந்து அன்று மாலை பஹ்ரைன் திரும்பி எங்கள் மாதாந்திர நிகழ்ச்சியில் புத்துணர்வுடன் கலந்து கொள்ளும் இவரை பார்க்க வியப்பு மேலிடும். ஏழெட்டு மணி நேரம் லண்டன் பறந்து அன்று நள்ளிரவோ மறுநாள் விடிகாலையோ நாஷ்டா துண்ண வீடு வந்து சேர்வார். 24 மணி நேரத்தில் எப்போது தூக்கம், எப்போது சாப்பாடு, எப்போது தன் மனைவி குழந்தைகளுடன்(2) செலவிடுவது எப்போது குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிடலாம் என துல்லியமாக திட்டம் செய்து மாறி மாறி வரும் காலச்சக்கரத்தை இலகுவாக மேற்கொள்ளக்கூடியவர். அப்படியும் வேலைப்பளு காரணமாக சில சமயம் அதிக மணி நேரங்கள் பறக்க வேண்டி வருமாம்.
15 ஆண்டுகள் மற்றும் 15000 மணி நேரத்திற்கும் மேல் வணிக விமானங்கள் ஓட்டிய அனுபவம் பெற்றவர். சில மாதங்கள் முன் டேபிள்டாப் ஓடுபாதையில் (காலிகட்) இருந்து சரிந்து விபத்துக்குள்ளான அந்த விமானத்தை இவரே சுமார் 20 முறை அதே ரன்வேயில் இயக்கியிருக்கிறாராம். ‘’அவசர நிலை ஏற்பட்டால் ஒரு கேப்டனுக்கு முதலில் தோன்றுவது மக்களை எப்படி காப்பாற்றலாம் என்றுதான். அவர் எடுத்த முடிவு சரியா, தவறா என்று பின்னர் விவாதங்கள் நடந்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்'' என்கிறார் கேப்டன் நீரஜ்.
‘மணிக்கணக்கா பறக்கறீங்களே! அப்பல்லாம் உங்க மனநலை எப்பிடி இருக்கும் நீரஜ்!’ என வெள்ளந்தியாக கேட்கும் என்னிடம் ‘பழகிப்போச்சு ஶ்ரீதர்! நீங்க கார் ஓட்ற மாதிரியும் டிராயிங் வரையிற மாதிரி தான் நாங்களும் அனிச்சையாக விமானத்தை ஓட்டுவோம். ஆனா ரொம்ப கூடுதல் கவனத்தோட’ என சர்வ சாதாரணமாக சொல்லி பூரியை பிய்த்து சன்னாவில் முக்கி வாயில் தள்ளுகிறார்.
நெடுநெடுவென ஆறடி உயரம்.. எங்கள் நண்பர்களின் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் மைக் பிடித்து மேடையேறினால் அசத்தலாக பாடுவார். SPB, ரஃபி சார் மற்றும் கிஷோர்தா பாடல்கள் அல்லது மனைவி பவித்ராவுடன் நல்ல கன்னட டூயட் பாட்டு பாடுவார். பவித்ராவும் கன்னடம், ஹிந்தி, தமிழ் என
அருமையாக
பாடக்கூடியவர். அம்மாவிடமே ஒட்டிக்கொள்ளும் இரண்டு வயது மகள் அழுதால் சட்டென குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே மற்றொரு கையில் மைக்குடன் பாடுவார் பவித்ரா. நீரஜ் ஸ்மியூலில் தனிப்பாடல்கள் பாடி மற்றவர்களுக்கும் அழைப்பு விடுவார். பஹ்ரைன் க்ரௌவுன் ப்ளாசா ஹோட்டலிலும் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் பாடக்கூடியவர். தம் பிடித்து உச்ச ஸ்தாயியிலும், மாறும் வித்தியாசமான ஸ்கேல்களையும் அசால்டாடாக பாடக்கூடியவர் நீரஜ். இவரது அப்பா சினிமா பிண்ணனிப்பாடகர். சென்ற வருடம் பஹ்ரைன் வந்திருந்தபோது எங்கள் நண்பர்கள் மத்தியில் பாடினார். யப்பா! என்ன குரல்வளம்! என்னா எனர்ஜி! கிஷோர் குமார் பாடல்களை அசாத்தியமாக பாடிய இவர் ஒரு பேங்கர். ‘டெல்லி கிஷோர் குமார்’ என டெல்லியில் பிரபலமாம்.
சென்னை பறக்கும்போதெல்லாம் விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி ரோட்டில் ஏதோ ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நள்றிரவு இறக்கி விடப்பட்டு ஐந்தாறு மணி நேரங்கள் தூங்கி மறுபடியும் விமான நிலையம் செல்ல வண்டி வந்து விடுமாம். அரக்க பறக்க, சென்னையிலிருக்கும் அப்பா அம்மாவிற்கு போன் போட்டு பேசக்கூட நேரமில்லாமல் ஓடுவாராம் நீரஜ்.
அதுசரி அப்பா அம்மா என்றேனே! இருவரும் நமக்கு தெரிந்த பிரபலங்கள் தான். அப்பா திரு.KS. ராஜகோபால் (Raju Satnagari) இளையராஜா அவர்களின் இசையில் பாடிய பிண்ணனிப்பாடகர். அம்மா பிரபல செய்தி அறிவிப்பாளர் திருமதி. சந்தியா ராஜகோபால் அவர்கள்.
நேரில் பார்க்கும்போதெல்லாம் முகநூலில் எனது ஓவியத்தையும் பதிவுகளையும் ரசித்து பாராட்டும் கேப்டன் நீரஜ்! இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
ப்ரோ..! நீரஜ் ராஜகோபால்

No comments:

Post a Comment